'ஆதவன்' 💚பிப்ருவரி 07, 2025. 💚வெள்ளிக்கிழமை
"நீங்கள் பிழைக்கும்படிக்குத் தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள்; அப்பொழுது நீங்கள் சொல்லுகிறபடியே சேனைகளின் தேவனாகிய கர்த்தர் உங்களோடே இருப்பார்." (ஆமோஸ் 5:14)
இன்று பெரும்பாலான நற்செய்திக் கூட்டங்களில் ஆசீர்வாத உபதேசங்களே போதிக்கப்படுகின்றன. "ஆசீர்வாத உபவாசக் கூட்டம்" என்று விளம்பரப்படுத்தி மக்களை வரவழைத்து, தங்களது கூட்டங்களில் கலந்துகொள்ளும் எல்லோரும் ஆசீர்வதிக்கப்படுவதாக பல ஊழியர்களும் கூறிக்கொள்கின்றனர். ஆனால் இன்றைய தியான வசனம் இது தவறு என்பதை நமக்கு எடுத்துக் கூறுகின்றது.
ஊழியர்கள் நடத்தும் நற்செய்திக் கூட்டங்களில் கலந்து கொள்வதால் மட்டுமே நாம் தேவனிடமிருந்து நன்மைகளைப் பெற்றுக்கொள்ளமுடியாது. உபவாசம் என உணவு உண்ணாமல் இருப்பதால் தேவன் நம்மை ஆசீர்வதிக்க முடியாது. "ஆதவன்" வேதாகத் தியானத்தைப்போன்ற தியானப் பிரசங்கக் கட்டுரைகளை வாசிப்பதால் மட்டுமே ஒருவர் தேவனது ஆசீர்வாதத்தினைப் பெறமுடியாது. வேதாகமத்தை வாசிப்பதாலோ, தியான கூட்டங்களில் கலந்துகொள்வதாலோ ஒருவர் தேவ ஆசீர்வாத்தினைப் பெற்றுக்கொள்ளமுடியாது.
ஆம் அன்பானவர்களே, இன்றைய தியான வசனம் கூறுவதன்படி "நீங்கள் பிழைக்கும்படிக்குத் தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள்; அப்பொழுது நீங்கள் சொல்லுகிறபடியே சேனைகளின் தேவனாகிய கர்த்தர் உங்களோடே இருப்பார்." ஆலய வழிபாடுகளிலும் நற்செய்திக் கூட்டங்களிலும் கலந்துகொண்டு தேவனை ஆராதித்துவிட்டு தனிப்பட்ட முறையில் நம்மை மாற்றிக்கொள்ளாமல் தீமையான வழிகளிலேயே தொடர்ந்து நடப்போமானால் தேவன் நம்மோடு இருந்து செயல்பட முடியாது.
அப்போஸ்தலரான பவுலும் இதனால்தான் நாம் வெற்று ஆராதனை செய்பவர்களாக அல்ல, புத்தியுள்ள ஆராதனை செய்பவர்களாக வாழவேண்டும் என்று நமக்கு அறிவுறுத்துகின்றார். முதலில் நாம் நம்மைத் தேவனுக்கு ஏற்ற ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டியது அவசியம். "அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ளஆராதனை." ( ரோமர் 12: 1)
இப்படித் தங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுத்து புத்தியுள்ள ஆராதனைச் செய்யாமல் இருந்துகொண்டும் ஒருவர் பல்வேறு பக்திக் செயல்பாடுகளில் ஈடுபடலாம். ஆலயங்களுக்குத் தவறாமல் செல்வதையும், ஜெபிப்பதையும், வேதம் வாசிப்பதையும் மேன்மையாகக் கருதிக்கொண்டு, இத்தகையச் செயல்களில் தாங்கள் ஈடுபட்டுள்ளதால் தேவன் தங்களோடு இருப்பதாக எண்ணிக்கொண்டு வாழ்வது தவறு. "நன்மையைத் தேடுங்கள்; அப்பொழுது நீங்கள் சொல்லுகிறபடியே சேனைகளின் தேவனாகிய கர்த்தர் உங்களோடே இருப்பார்." என்று இன்றைய தியான வசனம் வழியாக தேவன் நம்மோடு பேசுகின்றார்.
தேவன் நம்மோடு இருக்கவேண்டுமானால், நம்மை நாமே நிதானித்துப் பார்ப்போம். தேவனுக்குமுன் நமது வாழ்க்கை எப்படி இருக்கின்றது? தனிப்பட்ட நமது செயல்பாடுகள் எத்தகையவை? நமது தவறான செயல்பாடுகளை முதலில் திருத்த முயலுவோம். தவறுகளுக்குத் தேவனிடம் மனம் வருந்தி மன்னிப்பை வேண்டுவோம். அப்பொழுது நாம் எண்ணுகிறபடியும் சொல்லுகிறபடியும் சேனைகளின் தேவனாகிய கர்த்தர் நம்மோடு இருப்பார்.
வேதாகமத் தியானம் - எண்:- 1,462
'ஆதவன்' 💚பிப்ருவரி 08, 2025. 💚சனிக்கிழமை
"இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்." ( ஏசாயா 60:2)
இந்த உலகத்தில் நாம் தேவனுக்கு ஏற்புடைய வாழ்வு வாழ்வோமானால் இக்கட்டுக்காலங்களில் நிச்சயமாக அவர் நமக்கு உதவிசெய்திடுவார். இந்த மொத்த உலகமும் இருளான நிலைக்குச் சென்றாலும் தேவபிள்ளைகளுக்கு மகிமையான ஒளியான வாழ்க்கை உண்டு. அதனையே, "இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்." என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது.
இந்த உலகத்தில் செழிப்புடன் வாழும் சிலரை நாம் ஆவிக்குரிய கண்களோடு பார்க்கும்போது அவர்களது ஏழ்மைநிலை நமக்கு விளங்கும். அதுபோல, உலக வாழ்க்கையில் செழிப்பு இல்லாத வாழ்க்கை வாழ்வதுபோலத் தெரியும் ஆவிக்குரிய மக்கள் உண்மையில் செழிப்பானவர்களாக இருப்பதையும் நாம் உணர்ந்துகொள்ளலாம். இதனை நாம் குறிப்பாகத் துன்ப காலங்களில் அறிந்துகொள்ளலாம்.
எகித்திலிருந்து விடுதலையான இஸ்ரவேல் மக்களை மோசே கானானை நோக்கி வழிநடத்தியபோது பார்வோனின் குதிரை வீரர்கள் அவர்களை அழிப்பதற்காகப் பின்தொடர்ந்து வந்தனர். இஸ்ரவேல் மக்கள் அற்பமானவர்களாக இருந்தனர். அவர்களுக்குப் போர்ப் பயிற்சியோ போர்செய்ய ஆயுதங்களோ இல்லை. ஆனால் தேவன் அவர்களோடு இருந்தார். அப்போது தேவனுடைய தூதன் அக்கினித்தூணாகவும் மேகத் தூணாகவும் இருந்து இஸ்ரவேல் மக்களைக் காவல்காத்தார். எகிப்தியர் இஸ்ரவேலரை நெருங்கியபோது கர்த்தருடைய தூதன் இஸ்ரவேல் மக்களுக்குப் பின்னாக வந்து நின்று அவர்களைக் காத்துக்கொண்டார்.
இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார் எனும் வார்த்தையின்படி, "அது எகிப்தியரின் சேனையும் இஸ்ரவேலரின் சேனையும் இராமுழுவதும் ஒன்றோடொன்று சேராதபடி அவைகள் நடுவில் வந்தது; எகிப்தியருக்கு அது மேகமும் அந்தகாரமுமாய் இருந்தது, இஸ்ரவேலருக்கோ அது இரவை வெளிச்சமாக்கிற்று." ( யாத்திராகமம் 14: 20) ஆம், எகிப்தியருக்கு இருளாக இருந்தபோது தேவனுடைய மக்கள் வெளிச்சத்தில் நடந்தனர்.
ஆம் அன்பானவர்களே, தேவன் தனது பிள்ளைகளை எப்போதும் கைவிடுவதில்லை. காரிருள்போல வாழ்க்கைத் தெரிந்தாலும் இஸ்ரவேலரைக் காப்பாற்ற அக்கினித்தூணாக நின்று தேவனுடைய தூதன் காத்ததுபோல நம்மையும் காத்துக்கொள்வார். எனவே, தேவனுக்குமுன் உத்தமமாக நடக்கும்போது நாம் அச்சப்படாத தேவையில்லை.
இதுபோல, ஈசாக்கை அற்பமாக எண்ணிய அபிமெலெக்கும் அவனோடிருந்தவர்களும் ஈசாக்கினிடம் வந்து, "நிச்சயமாய் கர்த்தர் உம்மோடேகூட இருக்கிறார் என்று கண்டோம்; ஆகையால் எங்களுக்கும் உமக்கும் ஒரு ஆணை ஏற்பாடு உண்டாகவேண்டும் என்று நாங்கள் நிர்ணயம் பண்ணினோம்." ( ஆதியாகமம் 26: 28) என்று கூறுமளவுக்கு தேவன் தான் தெரிந்துகொண்ட ஈசாக்கை ஆசீர்வதித்தார். ஆம், உண்மையான உத்தமமான வாழ்க்கை வாழும்போது நம்மோடு தேவன் இருப்பதை ஒருநாள் உலகம் கண்டுகொள்ளும்.
தேவனுக்கு உகந்த வாழ்க்கை வாழும்படி நம்மை ஒப்புக்கொடுப்போம். அப்போது, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடினாலும் நம்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை நம்மேல் காணப்படும்.
வேதாகமத் தியானம் - எண்:- 1,463
'ஆதவன்' 💚பிப்ருவரி 09, 2025. 💚ஞாயிற்றுக்கிழமை
"நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவோம். நாம் நம்முடைய கைகளோடுங்கூட நம்முடைய இருதயத்தையும் பரலோகத்திலிருக்கிற தேவனிடத்திற்கு ஏறெடுக்கக்கடவோம்." ( புலம்பல் 3: 40, 41)
மனம்திரும்பிய வாழ்வு வாழ இன்றைய தியான வசனம் நமக்கு அறிவுறுத்துகின்றது. நாம் வெறுமனே ஜெபித்துக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை முதலில் நமது இருதயம் தேவனுக்கு நேராகத் திருப்பப்படவேண்டியது அவசியம். இதனையே, "நாம் நம்முடைய கைகளோடுங்கூட நம்முடைய இருதயத்தையும் பரலோகத்திலிருக்கிற தேவனிடத்திற்கு ஏறெடுக்கக்கடவோம்." என்று கூறப்பட்டுள்ளது. கைகளை விரித்து ஜெபிப்பதுடன் நமது இருதயமும் தேவனுக்கு நேராக உயர்த்தப்படவேண்டியது அவசியம்.
இன்று மக்களில் பலரும் தாங்கள் சார்ந்துள்ள கிறிஸ்தவ சபைப்பிரிவினைக்குறித்து பெருமைகொள்பவர்களாக, அது குறித்து வைராக்கியம் பாராட்டுபவர்களாக இருக்கின்றனர். ஆனால் தேவனுக்கு அது முக்கியமல்ல, மனம்திரும்பிய ஒரு வாழ்க்கையும் கனிகொடுக்கும் கிறிஸ்தவ வாழ்வையும் அவர் நம்மிடம் எதிர்பார்க்கின்றார்.
கிறிஸ்துவின் காலத்து யூதர்களுக்குத் தங்களை ஆபிரகாமின் சந்ததியினர் என்று கூறிக்கொள்வதில் ஒருவித பெருமை இருந்தது. இது தவறு, மனம்திரும்புதல்தான் முக்கியம் என்பதனை அவர்களுக்கு உணர்த்த யோவான் ஸ்நானகன் அவர்களைப்பார்த்துக் கூறினார்:- "மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்; ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லத்தொடங்காதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( லுூக்கா 3: 8)
ஆம் அன்பானவர்களே, "நான் ரோமன் கத்தோலிக்கன், நான் சி .எஸ்.ஐ. சபையில் வைராக்யமுள்ளவன், நான் பெந்தேகோஸ்தே சபையில் ஆவிக்குரிய ஆராதனை செய்கிறேன், நான் சால்வேஷன் ஆர்மி.... நான் லுத்தரன் சபை..." என்பதுபோல நாம் கூறிக்கொள்வதில் நமக்கு எந்தப் பெருமையும் இல்லை. கற்களிலிருந்தும் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிற தேவனால் அதுபோலவே கற்களிலிருந்தும் இதுபோல பல்வேறு சபை மக்களை உருவாக்க முடியும்.