Saturday, July 06, 2024

அறிக்கைபண்ணக்கூடிய வாழ்க்கை

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,251       💚 ஜூலை 13, 2024 💚 சனிக்கிழமை 💚


"மனுஷர் முன்பாக என்னை அறிக்கைபண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைபண்ணுவேன்." ( மத்தேயு 10 : 32 )

இன்றைய தியான வசனம் நம் எல்லோரும் அடிக்கடி வாசித்துக் கேட்ட வசனமாகும். இந்த வசனம் அறிக்கைபண்ணுதல் எனும் வார்த்தையை வலியறுத்துகின்றது. பொதுவாக எல்லோரும் வாயினால் இயேசுவை விசுவசிக்கிறேன் என்று கூறுவதும் இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவன் என்று கூறுவதும்தான் அறிக்கையிடுதல் என்று எண்ணிக்கொள்கின்றனர். சிலர் இதனை எல்லோரும் அறிய மக்கள் முன்னால் கூறுவது என எண்ணிக்கொள்கின்றனர். 

ஆனால், அறிக்கைபண்ணுதல் என்பது நமது வாழ்க்கையால் நாம் கிறிஸ்துவின் வசனத்தின்படி வாழ்வதைக் குறிக்கின்றது. காரணம், இயேசு கிறிஸ்துவே இரட்சகர் என்று கூறும் பலரும், போதிக்கும் பலரும் வாழ்க்கையில் சாட்சியற்ற வாழ்க்கை வாழும்போது கிறிஸ்துவை அவமதிக்கின்றோம். குறிப்பாக கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்கிறேன் என்று கூறிக்கொள்ளும் பலரது செயல்கள் கிறிஸ்துவை அறியாத மற்ற மக்களிடம் கிறிஸ்தவத்தைக் குறித்துத் தவறான ஒரு கண்ணோட்டத்தையே கொடுக்கின்றது. 

மனுஷர் முன்பாக கிறிஸ்துவை  அறிக்கைபண்ணுகிற சாட்சி வாழ்க்கை வாழும்போது அவர்களைக்குறித்து நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைபண்ணுவேன் என்கின்றார் கிறிஸ்து. அதாவது, வாழ்க்கையால் நாம் கிறிஸ்துவைப் பிரதிபலிப்பவர்களாக வாழவேண்டியது அவசியம்.

ஒரு மிகப்பெரிய வேலைக்கு நாம் விண்ணப்பித்து நேர்காணுதலுக்காக நிற்கும்போது அங்கு அந்த கம்பெனி இயக்குனருக்கு  அருகில் அவருக்கு அடுத்த நிலையிலிருக்கும் நமது ஊரைச்சார்ந்த ஒருவர் நின்றுகொண்டு, "ஐயா, இவரை எனக்கு நன்கு தெரியும். நல்ல மனிதர், திறமையாளர், இந்த வேலைக்குப் பொருத்தமானவர், இவருக்கு இந்த வேலையைக் கொடுக்கலாம்" என்று நமக்காக பரிந்து பேசுவாரானால் அது நம்மைக்குறித்து அவர் அறிக்கையிடுதலாகும். 

நாம் மேலே பார்த்த உதாரணத்தில் நம்மைப் பரிந்துரைசெய்த அந்த  நபர் அவரை நாம் ஊரில் மற்றவர்கள்முன் புகழ்ந்து பேசியதால் நம்மைப் பரிந்துரை செய்யவில்லை. மாறாக, நமது செயல்பாடுகளை அவர் அறிந்திருந்தாலும் நமது தனிப்பட்ட குணங்களை அறிந்திருந்தாலும் நமக்காகப் பரிந்து பேசினார்.  

இதுபோலவே  நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பரலோகத்திலிருக்கும் பிதாவுக்கு முன்பாக நம்மைக்குறித்து அறிக்கையிடுவேன் என்கின்றார். அன்பானவர்களே, இதனால்தான் நாம் தேவனுக்குகேற்ற சாட்சி வாழவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. இன்றைய தியான வசனத்தைத்த தொடர்ந்து இயேசு கிறிஸ்து கூறுகின்றார், "மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன்." ( மத்தேயு 10 : 33 )

அதாவது சாட்சியற்ற வாழ்க்கை வாழ்பவர்கள் பிதாவின்முன்னால் நிற்கும்போது அவர், "ஐயோ, இவரை எனக்குத் தெரியவே தெரியாது" என்பார். 

"அப்பொழுது நீங்கள்: உம்முடைய சமுகத்தில் போஜனபானம்பண்ணினோமே, நீர் எங்கள் வீதிகளில் போதகம்பண்ணினீரே என்று சொல்லுவீர்கள். ஆனாலும் அவர்: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன், அக்கிரமக்காரராகிய நீங்களெல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று சொல்லுவார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( லுூக்கா 13 : 26, 27 )

கிறிஸ்துவால் நம்மைக்குறித்து நல்ல அறிக்கைபண்ணக்கூடிய வாழ்க்கை வாழ முயலுவோம்; அவருக்கு நம்மை ஒப்புக்கொடுப்போம்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்

Friday, July 05, 2024

இயேசுகிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு நம்மை அழைத்த தேவன்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,250       💚 ஜூலை 12, 2024 💚 வெள்ளிக்கிழமை 💚


"தம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்." ( 1 கொரிந்தியர் 1 : 9 )

பிதாவாகிய தேவன் எதற்காக நம்மைத் தேர்ந்துகொண்டாரென்றால் அவரது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவோடு நாம் ஐக்கியமாக இருப்பதற்காக என்று இன்றைய தியான வசனம் நமக்குக் கூறுகின்றது. அப்படி கிறிஸ்துவோடு ஐக்கியமாகும்போது நாம் பிதாவாகிய தேவனோடும் ஐக்கியமாகின்றோம். 

இதனையே இயேசு கிறிஸ்துவும்  "அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்." ( யோவான் 17 : 21 ) என்று ஜெபித்தார்.

மனிதர்கள் பரிசுத்தமுள்ள பிதாவாகிய தேவனிடம் தங்களாகச் சேரமுடியாது. காரணம் நமது பாவங்கள். பாவமனிதன் பரிசுத்தமான தேவனிடம் சேரமுடியாது. அந்தப் பாவங்கள் மன்னிக்கப்படும்போது மட்டுமே நாம் பிதாவாகிய தேவனிடம் பேசமுடியும். இதற்காகவே தேவன் தனது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை நியமித்தார். 

நமது பாவங்களுக்கான பரிகாரி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துதான். அவரே சிலுவையில் நமக்காகப் பாடுகளை ஏற்றுக்கொண்டு நித்திய மீட்பினை ஏற்படுத்தினார். எனவேதான் அப்போஸ்தலரான பவுல், "சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது." ( 1 கொரிந்தியர் 1 : 18 ) என்று கூறினார்.

ஆம் அன்பானவர்களே, சிலுவையைப்பற்றிய உபதேசமில்லாமல் மக்கள் மீட்படைய முடியாது. அதன்மூலம் மட்டுமே நாம் பிதாவோடும் அவரது குமாரனும் நம்முடைய கர்த்தருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருக்க முடியும். அப்படி நாம் ஐக்கியமாக இருப்பதற்கு நம்மை அழைத்த பிதாவாகிய தேவன் உண்மையுள்ளவர் என்று இன்றைய வசனம் கூறுகின்றது. "நாம் உண்மையில்லாதவர்களாயிருந்தாலும், அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார்; அவர் தம்மைத்தாம் மறுதலிக்கமாட்டார்." ( 2 தீமோத்தேயு 2 : 13 ) என்று கூறுகின்றார் அப்போஸ்தலரான பவுல். அதாவது அவர் கூறியுள்ள தமது வார்த்தையை மாற்றமாட்டார் என்று பொருள்.

எனவேதான் நாம் சிலுவையைப்பற்றி மேன்மை பாராட்டுகின்றோம். ஆனால் பாவங்கள் மன்னிக்கப்பட விரும்பாமல், பாவங்களோடு தொடர்நது வாழ விரும்புகின்றவர்கள் சிலுவையை ஏற்றுக்கொள்வதில்லை. அவர்கள் கிறிஸ்துவுக்கு எதிர்த்து நிற்கின்றனர். ஆனால், அப்படி எதிர்த்து நிற்பவர்கள் தேவனால் ஆக்கினைத் தீர்ப்படைவார்கள் என்று வேதம் எச்சரிக்கின்றது. "ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாய் இருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது." ( யோவான் 3 : 19 )

ஆம் அன்பானவர்களே, தேவனுடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு நாம் நம்மை அவருக்கு ஒப்புக்கொடுத்து பிதாவாகிய தேவனோடு ஐக்கியமாக இருக்கவே அழைக்கப்பட்டுள்ளோம்.  அப்படி நம்மை அழைத்த தேவன் உண்மையுள்ளவர். எனவே நமது பாவங்களை கிறிஸ்து இயேசுவிடம் அறிக்கையிட்டு அவை கழுவப்பட மன்றாடுவோம்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

Thursday, July 04, 2024

சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து உயர்த்துகிறார்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,249     💚 ஜூலை 11, 2024 💚 வியாழக்கிழமை 💚

"அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார்...." ( 1 சாமுவேல் 2 : 8 ) மற்றும் (சங்கீதம் 113:7, 8)

அன்பானவர்களே, நமது தேவன் பல்வேறு நிலைகளில் மனிதர்களை வாழவைத்திருந்தாலும் அவர் எப்போதும் எளியவர்களை நோக்கிப்பார்ப்பவராகவும் அவர்களுக்கு உதவுபவராகவும் இருக்கின்றார். எளியவர்கள் என்று கூறுவதால் நாம் பொருளாதார எளிமையை மட்டும் எண்ணிவிடக்கூடாது; மாறாக, ஆவிக்குரிய, மனதின் உள்ளார்ந்த எளிமையையே இன்றைய தியான வசனம்  குறிக்கின்றது. அப்போஸ்தலரான யாக்கோபு இதனை, "கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்." ( யாக்கோபு 4 : 10 ) என்று கூறுகின்றார்.

அன்னை மரியாள் இதனை உணர்ந்திருந்தால் கூறுகின்றார், "அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப்பார்த்தார்...."( லுூக்கா 1 : 48 ) என்று. ஆம் அன்பானவர்களே, எளிய அடிமை மனநிலையுள்ளவர்களை தேவன் நோக்கிப்பார்க்கின்றார். 

இப்படியே நாம் தாவீதையும் பார்க்கின்றோம். அற்பமாக ஆடு மேய்பவராக இருந்த தாவீதைத் தேவன் அவனது எளிய மனதினைக்கண்டு உயர்த்தினார். இதனையே இன்றைய தியான வசனத்தில் நாம் "சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார்...." என்று வாசிக்கின்றோம்.

அவர் அப்படி எளியவர்களை நோக்கிப்பார்ப்பது மட்டுமல்ல, அவர்களைத் துன்மார்க்கரின் கைகளுக்குத் தப்புவிக்கிறவராகவும் இருக்கின்றார். தாவீதைப் பல்வேறு முறை பல்வேறு வழிகளில் இப்படித் தேவன் தப்புவித்தார்.  மேலும், எளியவர்களின் சந்ததியையும் தேவன் ஆசீர்வதிக்கின்றார். "எளியவனையோ சிறுமையினின்று எடுத்து, உயர்ந்த அடைக்கலத்திலே வைத்து, அவன் வம்சங்களை மந்தையைப்போலாக்குகிறார்." ( சங்கீதம் 107 : 41 )

தேவன் இப்படி ஏன் எளியவர்களை நோக்கிப்பார்க்கின்றார் என்றால் அப்படி எளியவர்களுக்கு அதிகமான தேவ கிருபையை அளிக்கவே. பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்பதால் அவர்கள் தேவ கிருபையினை அனுபவிப்பதில்லை. "அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது." ( யாக்கோபு 4 : 6 )

இதனை கொலோசெய சபையினருக்கு உணர்த்தவே அப்போஸ்தலரான பவுல் அவர்களுக்கு எழுதும்போது, நீங்கள் தயவையும், மனத்தாழ்மையையும் சாந்தத்தையும், பொறுமையையும்    தரித்துக்கொள்ளுங்கள் என்கின்றார்.  "ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு....." ( கொலோசெயர் 3 : 12 ) என்று வாசிக்கின்றோம். 

ஆம், நாம் ஆவியில் எளிமையுள்ளவர்களாக வாழும்போது நிச்சயமாக தேவன் நமது தாழ்நிலையிலிருந்து உயர்த்துவார். மட்டுமல்ல, பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுவார். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்           

Wednesday, July 03, 2024

தேவன் நம்மைத் தண்டிக்க விரும்பவில்லை

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,248       💚 ஜூலை 10, 2024 💚 புதன்கிழமை 💚

 

"தேவன் நம்மைக் கோபாக்கினைக்கென்று நியமிக்காமல், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் இரட்சிப்படைவதற்கென்று நியமித்தார்." ( 1 தெசலோனிக்கேயர் 5 : 9 )

இந்த உலகத்திலுள்ள எந்த ஆத்துமாவும் அழிந்து பாதாளத்துக்குப் போகவேண்டுமென்பது தேவனது சித்தமல்ல; மாறாக, எல்லோரும் நித்தியஜீவனுக்குள் பிரவேசிக்கவேண்டுமென்பதே அவரது சித்தம். "தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்." ( யோவான் 3 : 16 ) என்று கூறப்பட்டுள்ளது. 

அப்போஸ்தலரான பேதுருவும் இதனை, "...........ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்." ( 2 பேதுரு 3 : 9 ) என்று குறிப்பிடுகின்றார். 

ஆம் அன்பானவர்களே, தேவன் நமது தவறான பாவச் செயல்களைக்கண்டு கோபம்கொண்டு  நம்மைத் தண்டிக்கவேண்டுமென்று விரும்பாமல்  நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் நாம் இரட்சிப்படைய வேண்டுமென்று விரும்புகின்றார். எனவேதான் கிறிஸ்து இயேசுவை உலகில் அனுப்பினார். 

"உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று." ( யோவான் 3 : 17, 18 )

தேவன் நம்மைத்  தமது கோபத்திலிருந்து தப்புவிக்க இயேசு கிறிஸ்து எனும் ஒரே வழியைத்தான்  நியமித்துள்ளார். எனவே, அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படமாட்டான். ஆனால் அவரது பெயரில்  விசுவாசமில்லாதபடி வாழ்பவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று. விசுவாசிக்கிறேன் என்று நாம் வாயினால் சொன்னால் போதாது; மாறாக, இருதயத்தில் விசுவாசித்து மனப்பூர்வமாக அவரது இரத்தத்தால் கழுவப்படும் அனுபவத்தைப் பெறவேண்டும். 

"கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்." ( ரோமர் 10 : 9, 10 )

இயேசு கிறிஸ்துத் தன்னைத் தேவனுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்து அவரது பூரண சித்தம் நிறைவேற தன்னை ஒப்புக்கொடுத்ததால் மனிதர்களது பாவங்களை மன்னிக்கும் இந்த மேலான மகிமையைப் பெற்றுள்ளார். எனவே அன்பானவர்களே, நாம் இதுவரை பாவத்தில் வாழ்ந்திருந்தால் நமது பாவ வாழ்கையினைக்குறித்துக் கவலைகொள்ளாமல் கிறிஸ்துவிடம் திரும்புவோம். அவரது இரத்தத்தால் கழுவப்படுமாறு மன்னிப்புவேண்டி  நம்மை அவருக்கு  ஒப்புக்கொடுப்போம். தேவன் நம்மைக் கோபாக்கினைக்கென்று நியமிக்காமல், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் இரட்சிப்படைவதற்கென்றுதான்  நியமித்துள்ளார். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்    

Tuesday, July 02, 2024

படுக்கையில் அமர்ந்து தேவனோடு பேசுவோம்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,247       💚 ஜூலை 09, 2024 💚 செவ்வாய்க்கிழமை 💚

     
"நானோ உம்முடைய வல்லமையைப் பாடி, காலையிலே உம்முடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவேன்; எனக்கு நெருக்கமுண்டான நாளிலே நீர் எனக்குத் தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமானீர்." ( சங்கீதம் 59 : 16 )

இன்றைய தியான சங்கீத வசனம்,  தாவீதைக் கொல்வதற்கு சவுல் ஆட்களை அனுப்பியபோது அதுகுறித்து அறிந்த தாவீது பாடியது என்று வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. "எனக்கு நெருக்கமுண்டான நாளிலே நீர் எனக்குத் தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமானீர்." என்று தாவீது இதில் குறிப்பிடுகின்றார். 

மட்டுமல்ல, இந்த நெருக்கடியிலும், "நானோ உம்முடைய வல்லமையைப் பாடி, காலையிலே உம்முடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவேன்" என்று கூறுகின்றார்.  தேவன் வல்லமையான காரியங்கள் தனக்குச் செய்வார் என்று தாவீது உறுதியாக நம்பினார். எனவே உயிர்போகக்கூடிய சூழ்நிலையான இக்கட்டான நிலையிலும்  காலையிலேயே  தேவனுடைய வல்லமையினைப் புகழ்ந்து பாடுவேன் என்று குறிப்பிடுகின்றார். 

நமக்கு இது மிகவும் கடினமான காரியம். காரணம், நமது வீட்டில் சில இக்கட்டான சூழ்நிலை ஏற்படும்போது நம்மால் துணிந்து விசுவாசமாக ஜெபிக்கவோ மகிழ்ச்சியாக தேவனைப் புகழ்ந்து பாடவோ முடிவதில்லை. ஆனால் தாவீது தனது இருதயத்தை இதற்குப் பக்குவப்படுத்தியிருந்தார். 

புதிய ஏற்பாட்டில் பவுலும் சீலாவும் சிறையில் அடைக்கப்பட்டு கால்கள் தொழுமரத்தில் கட்டப்பட்ட நிலையிலும் தேவனைப் புகழ்ந்து பாடியது இதுபோன்ற அனுபவதால்தான். ஆனால், தேவன் அவர்களை அதிசயமாகத் தப்புவித்தார். 

எனவே அன்பானவர்களே, நாம் நம்மால் முடிந்த மட்டும் இதனை பயிற்சியெடுப்போம். தாவீதைப்போல, பவுலைப்போல  நம்மால் இப்படித் தேவனைப் புகழ முடியவில்லையென்றாலும் நாம் விசுவாசத்துடன் அமைதியாக இருந்தாலே போதும். எந்தச் சூழ்நிலையிலும் நாம் தேவனுக்கு எதிராக கோபம்கொண்டு முறுமுறுக்காமல் இருக்கப் பழகுவோம். தேவனுக்கு எதிராக முறுமுறுத்து பாவம் செய்துவிடக்கூடாது. "நீங்கள் கோபங்கொண்டாலும், பாவஞ் செய்யாதிருங்கள்; உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் பேசிக்கொண்டு அமர்ந்திருங்கள்" ( சங்கீதம் 4 : 4 )

படுக்கையில் அமர்ந்து தேவனோடு பேசும் அனுபவம் நம்மைப் பல இக்கட்டுகளுக்கு நீங்கலாக்கும். மன அமைதியும், தேவன்மேல் விசுவாசமும் அதிகரிக்கும்.  எனவே அன்பானவர்களே, இக்கட்டு, துன்பங்கள் நம்மை நெருக்கும்போது வாயினால் துதித்துப் பாடமுடியவில்லையானாலும்  நாம் தேவனது வல்லமையைப் இருதயத்தில்  பாடி, காலையிலே அவரது கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவோம்; ஆம் அன்பானவர்களே, நமக்கு நெருக்கமுண்டாகும் நாளிலே அவரே நமக்குத் தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமாவார்.                                                                                                    
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ் 

வேஷமாகவே மனிதன் அலைகிறான்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,246     💚 ஜூலை 08, 2024 💚 திங்கள்கிழமை 💚


"நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்." ( ரோமர் 12 : 2 )

"இந்த உலகத்துக்கு ஒத்த வேடம் அணியாமல் இருங்கள்" என்று இன்றைய வசனம் நமக்கு அறிவுறுத்துகின்றது. அதாவது உலக மக்கள் எல்லோரும் எப்படி நடக்கின்றார்களோ அதுபோலவே நீங்களும் நடக்காமலிருங்கள் என்று கூறுகின்றது. நடப்பது என்பது காலினால் நடப்பதையல்ல, மாறாக நமது செயல்பாடுகளைக் குறிக்கின்றது. 

உதாரணமாக, ஒரு காரியம் நடைபெற சக  மனிதர்கள் குறுக்குவழிகளான லஞ்சம், ஏமாற்று, பொய், பித்தலாட்டம் போன்ற காரியங்களில் ஈடுபடுவதுபோல ஆவிக்குரிய மக்கள் என்று கூறிக்கொள்ளும் நாம் ஈடுபடக்கூடாது என்று கூறுகின்றது.  இதனை இந்த வசனம் ஏன் வேஷம் என்று கூறுகின்றது? அதாவது ஆவிக்குரிய மக்கள் என்று தங்களைக் கூறிக்கொண்டு  ஆவிக்குரிய ஆராதனைகளில் பங்கெடுத்து தங்களை மேலான ஆவிக்குரிய அனுபவம் உள்ளவர்கள் என்று கூறிக்கொண்டு இப்படிக் குறுக்கு வழியிலும் முயல்வதால் வேஷம் என்று கூறுகின்றது. 

இப்படி வேஷம் போடாமல், "தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்." என்று கூறப்பட்டுள்ளது. அதாவது ஒரு காரியம் நமக்கு விரும்பியும் நடைபெறவில்லையானால், தேவ சித்தம் அது என்று நாம் பகுத்தறியும் அறிவு நமக்கு வேண்டும். மற்றவர்களைப்போல் தேவ சித்தமறியாமல் குறுக்கு வழிகளில் முயலக்கூடாது என்று  பொருள். 

இதற்கு நாம் என்னச் செய்யவேண்டும் என்பதனை இதே அதிகாரத்தில் அப்போஸ்தலரான பவுல் தொடர்ந்து எழுதும்போது கூறுகின்றார். "நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்." ( ரோமர் 12 : 12 ) அதாவது, தேவன்மேலுள்ள நம்பிக்கையில் மகிழ்ச்சியாக இருந்து, பொறுமையுடன் ஜெபத்தில் காத்திருக்கவேண்டும் என்கின்றார். 

இந்த உண்மையை தாவீது ராஜாவும் உணர்ந்திருந்தார். இப்படி வேஷம் போடும் மனிதர்களையும் அவர் பார்த்திருந்தார். எனவே அவர் கூறுகின்றார், "வேஷமாகவே மனுஷன் திரிகிறான்; விருதாவாகவே சஞ்சலப்படுகிறான்; ஆஸ்தியைச் சேர்க்கிறான். யார் அதை வாரிக்கொள்ளுவான் என்று அறியான்." ( சங்கீதம் 39 : 6 ) அதாவது, மனிதன் இந்த வேஷம் போடக்காரணம் சொத்து சுகங்களைச் சேர்ப்பதற்குத்தான். ஆனால், இப்படிச்  சேர்க்கும் சொத்துச்  சுகங்களை பலவேளைகளில் அவனும் அனுபவிப்பதில்லை அவற்றை யார் அனுபவிக்கின்றார்கள் என்பதனையும் அவர்கள் அறிவதில்லை.

எனவே அன்பானவர்களே, நாம் நமது வாழ்வில்  இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, நமது மனதைப் புதிதாக்கி மறுரூபமாவோம். மேலும், இப்படி நாம் வேடம் போடுவது கிறிஸ்துவை அவமதிப்பதாகும் என்பதனையும் நாம் உணர்ந்துகொள்ளவேண்டும். காரணம், நமது ஆவிக்குரிய பக்தி காரியங்களை உலகம் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றது; நமது வேடமிடுதலையும் பார்க்கின்றது. எனவே இப்படி நாம் வேடமிடுவது கிறிஸ்துவுக்கு நாம் நமது நடக்கையால் செய்யும் அவமானமாகும்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்        

Friday, June 28, 2024

தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கின்ற செயல்கள்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,245      💚 ஜூலை 07, 2024 💚 ஞாயிற்றுக்கிழமை 💚


"உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்." ( ரோமர் 8 : 39 )

தேவனிடம் அளவற்ற விசுவாசம் உள்ளவர்களாக வாழ்ந்தாலும் சிலர் தங்களது வாழ்வில் உயர்வு வரும்போது அவரைச் சற்று ஒதுக்கிவிடுவதுண்டு. உதாரணமாக,  வறுமை நிலையிலிருக்கும்போது தங்கள் முழு விசுவாசத்தையும் தேவன்மேல் வைத்து வாழும் பலர் தங்கள் வாழ்வில் பொருளாதார உயர்வு ஏற்படும்போது தேவனை மறந்துவிடுகின்றனர். தங்களது உயர்வு தங்கள் உழைப்பால் கிடைத்தது என்று எண்ணிக்கொள்கின்றனர். இப்படி எண்ணுவதும் பேசுவதும் தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கின்ற செயல். 

இப்படி வாழ்வில் உயர்வு வரும்போது நாம் தேவனை மறந்துவிடக்கூடாது என்று மோசே இஸ்ரவேல் மக்களுக்கு அறிவுறுத்துவதை நாம் உபாகமத்தில் வாசிக்கலாம். "என் சாமர்த்தியமும் என் கைப்பெலனும் இந்த ஐசுவரியத்தை எனக்குச் சம்பாதித்தது என்று நீ உன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளாமலும் இருக்க எச்சரிக்கையாயிருந்து," ( உபாகமம் 8 : 17 ) என்கின்றார் அவர். வெளியில் யாரிடமும் சொல்லாவிட்டாலும், உன் இருதயத்தில்கூட அப்படி நினையாதே என்று இந்த வசனம் கூறுகின்றது. 

இதுபோலவே சிலர் நோய்வாய்ப்படும்போது தேவனை நோக்கி ஜெபித்துவிட்டு, நோய் குணமானதும், "அந்த மருத்துவமனையில் நல்ல டிரீட்மெண்ட் கொடுத்து கவனித்துக்கொண்டார்கள் அதுவும் குணம்பெற ஒரு காரணம்" என்பார்கள். இதுவும் முழு விசுவாசத்தையும் அவர்கள் தேவன்மேல் வைக்கவில்லை என்பதனையே காட்டுகின்றது. எனவே,  இப்படிப் பேசுவதும் தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கின்ற செயல்தான். 

கிறிஸ்தவர்களில் சிலர்கூட, "நன்றாகப் படித்ததால் நான் மருத்துவர் அல்லது  ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரி ஆனேன்"  என்று கூறுவார்கள். ஆனால் ஒன்றினை இவர்கள் மறந்துவிடுகின்றனர்; அதாவது இப்படிக் கூறும் இவர்களைவிட நன்றாகப்  படித்த பலரும் அறிவுள்ளவர்களும்  இந்தத் தகுதியைப் பெறவில்லையே ஏன்? 

இன்றைய தியான வசனத்துக்கு முந்தின வசனத்தில் அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார், "மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும் நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும்," ( ரோமர் 8 : 38 ) கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன் என்கின்றார்.

தாங்கள் அன்புசெய்தவர்களின் மரணம் ஏற்பட்டதாலும், தங்களுக்குத் தேவதூதர்கள் காட்சியளித்ததாலோ அல்லது "நான் காட்சிக்கண்டேன்" என்று பிறர் கூறுவதைக் கேட்டும் சிலர் தேவனைவிட்டு பின்மாறுவார்கள். எனவே, "அந்தத் தீர்க்கதரிசியாகிலும், அந்தச் சொப்பனக்காரனாகிலும் சொல்லுகிறவைகளைக் கேளாதிருப்பீர்களாக; உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்புகூருகிறீர்களோ இல்லையோ என்று அறியும்படிக்கு உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சோதிக்கிறார்." ( உபாகமம் 13 : 3 ) என மோசே இஸ்ரவேல் மக்களை எச்சரிப்பதைப் பார்க்கின்றோம். 

எனவே, இப்படி உலக அதிகாரங்கள், பதவிகள் நமக்குக் கிடைக்கும்போதும், வேறு தெய்வங்கள், தூதர்கள் மூலம் தாங்கள் அடைந்த பலன்கள் குறித்துச் சிலர் சாட்சி கூறும்போதும்,  வல்லமை மிக்கச்  செயல்கள் புரியும் ஆற்றல் பெறும்போதும், நமது வாழ்வில் நிகழ்ந்துகொண்டிருக்கும் நல்ல அல்லது கெட்டக்  காரியங்களின்போதும் கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நாம் பிரிந்துவிடக்கூடாது என்கின்றார் பவுல் அப்போஸ்தலர். எல்லா மகிமையும் கனமும் கிறிஸ்து இயேசு மூலம் தேவனுக்கே உரியது.   

இப்படிக் கிறிஸ்துவின்மேல் உறுதியான விசுவாசம் உள்ளவர்களாக வாழும்போதுதான் நாம் அவரை அன்புசெய்கின்றோம் என்பது உறுதியாகும்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்    

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - லுூக்கா 11 : 13 / Luke 11:13

" ஆதவன் " தியானம் - 1981 ஜூலை 11, சனி  2026       "பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந...