Thursday, June 27, 2024

இடறுதற்கான கல்லில் இடறியவர்கள்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,244       💚 ஜூலை 06, 2024 💚 சனிக்கிழமை 💚

 
"என்னத்தினாலென்றால், அவர்கள் விசுவாசத்தினாலே அதைத் தேடாமல், நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேடினபடியால் அதை அடையவில்லை; இடறுதற்கான கல்லில் இடறினார்கள்." ( ரோமர் 9 : 32 )

இந்த உலகத்தில் நீதியுள்ள வாழ்க்கை வாழும் பலர் எல்லா மதங்களிலும் இருக்கின்றனர். நியாயப்பிரமாணம் கூறும் பல கட்டளைகளை அவர்களும் நிறைவேற்றுகின்றார்கள். இதுபோலவே அன்றைய யூதர்களும் இருந்தனர். அவர்கள் நியாயப்பிரமாணக்   கட்டளைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அந்தக் கட்டளைகளைக்  கடைபிடித்தனர். ஆனால் அப்படிக் கடைப்பிடித்தும் அவர்களால் கிறிஸ்துவின் நீதிப்பிரமாணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, இன்றுவரை யூதர்கள் மேசியா இனிதான் வரப்போகின்றார் என எண்ணிக்கொண்டிருக்கின்றனர். இதனால்தான் கிறிஸ்துவை விசுவாசியாத பலரும்,  பல மதத்தினரும் மெய்யான தேவனை அறிந்துகொள்ள முடியவில்லை. 

இன்றும் கிறிஸ்தவர்களில் பலரும்  இப்படியே இருக்கின்றனர். அவர்கள் பல தேவ கட்டளைகளை நிறைவேற்றுவதில் முன்னுரிமை கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்களால் கிறிஸ்து அனுபவத்தை வாழ்வில் அனுபவிக்க முடியவில்லை. ஆவிக்குரிய மேலான காரியங்களை அவர்களால் உணர்ந்துகொள்ள முடியவில்லை. காரணம், அவர்கள் யூதர்களைப்போல தங்களது நீதிச் செயல்களுக்கும்  பக்திக்  காரியங்களுக்கும்தான் முன்னுரிமை கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். "எப்படியென்றால், அவர்கள் தேவநீதியை அறியாமல், தங்கள் சுயநீதியை நிலைநிறுத்தத் தேடுகிறபடியால் தேவநீதிக்குக் கீழ்ப்படியாதிருக்கிறார்கள்." ( ரோமர் 10 : 3 )

ஆலய வழிபாடுகள் நமக்குத் தேவைதான்; ஆனால் தேவனை அறிந்து தேவ அனுபவங்களுடன் வழிபாடுகளில் கலந்து கொள்ளும்போது தான் அது அர்த்தமுள்ளதாக இருக்கமுடியும். தேவன்மேல் முழு விசுவாசம் கொள்ளாமல் நமது சுய பக்தி, நமது ஆலய பணிவிடைகள் இவைகளுக்கே முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருப்போமானால் நாம் யூதர்களைப்போல இடறுதற்கேதுவான கல்லில் இடறியவர்களாகவே இருப்போம். 

"விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது." ( எபிரெயர் 11 : 1 ) என்று வாசிக்கின்றோம். அதாவது, ஒரு கிறிஸ்தவன் என்பவன் கிறிஸ்து நமது பாவங்களுக்காக மரித்தார், அவரது இரத்தத்தினால்தான்  பாவ மன்னிப்பும் பாவத்திலிருந்து விடுதலையும்  நமக்கு உண்டு என்பதை நூறு சதவிகிதம் நம்புபவனாகவும் அந்த நம்பிக்கையின்படி பாவங்கள் கழுவப்பட்ட நிச்சயம் உள்ளவனாகவும் இருக்கவேண்டும். 

மேலும், நாம் இதுவரைக் காணாத வேதம் கூறும் காணப்படாத சத்தியங்களாகிய பரலோகம், நித்திய ஜீவன், நரகம் போன்ற காரியங்களைக் குறித்த நிச்சயம் உள்ளவனாக இருக்கவேண்டும். இந்த நிச்சயங்கள் இல்லாமல் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனைத் தேடினபடியால் யூதர்கள் அதை அடையவில்லை; இடறுதற்கான கல்லில் இடறினார்கள்.

அவர்களுக்கு கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்ட நிச்சயம் இல்லாமலிருந்தது. காரணம், அவர்கள் கிறிஸ்துவை மேசியாவாக ஏற்றுக்கொள்ளவில்லை. அன்பானவர்களே, கிறிஸ்துவின் இரத்தத்தால் பாவங்கள் கழுவப்பட்ட நிச்சயம் இல்லாமல் ஒருவருக்கு   பரலோகம், நித்திய ஜீவன், நரகம் போன்ற காரியங்களைக் குறித்த நிச்சயம் ஏற்படாது. வெறும் வாயளவில் மட்டும் இவைகளைக்குறித்துக் கூறிக்கொண்டிருக்கலாம். 

எனவே, இன்றும் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொண்டு நாம் இப்படியே இருக்கக்கூடாது. வெறும் வெறுமனே  கட்டளைகளைகளையும் வழிபாடுகளையும்  நிறைவேற்றுவதற்கு மட்டும்  முன்னுரிமை கொடுத்து கிறிஸ்து அனுபவத்தை வாழ்வில் அனுபவிக்காதவர்களாக வாழக்கூடாது. கிறிஸ்துவைத் தனிப்பட்ட வாழ்வில் உணர்ந்தவர்களாக -  ஆவிக்குரிய மேலான காரியங்களை உணர்ந்தவர்களாக வாழவேண்டியது அவசியம். இதனால்தான், "நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே (கட்டளைகளை நிறைவேற்றுவதால் மட்டும்) எந்த மனுஷனும் நீதிமானாக்கப்படுவதில்லையே." ( கலாத்தியர் 2 : 16 ) என்று வேதம் கூறுகின்றது. 

வேதாகமம் கூறும் முறைமையின்படி கிறிஸ்துவின்மேல் கொள்ளும் விசுவாசத்தினாலே மட்டுமே நாம் நீதிப்பிரமாணத்தைக் கண்டுபிடிக்கவும் கடைபிடிக்கவும்  முடியும். அப்போது யூதர்களைப்போல  இடறுதற்கான கல்லில் இடறமாட்டோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்

மற்றவர்களோடு நம்மை ஒப்பிட வேண்டாம்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,244      💚 ஜூலை 05, 2024 💚 வெள்ளிக்கிழமை 💚

 
"மிதிபட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்துக்கும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்துக்கும் பண்ணுகிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ?" ( ரோமர் 9 : 21 )

மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டுப்பார்த்து அவர்களுக்குள்ள திறமை, அழகு, செல்வம், புகழ் போன்றவை நமக்கில்லையே என்று நாம் எண்ணி வாழ்வில் சோர்ந்துபோய்விடக்கூடாது. ஏனெனில், தேவன் ஒவ்வொருவரையும் ஒரு நோக்கத்திற்காக உருவாக்கியுள்ளார். நம்மை அற்பமாக உருவாக்கியுள்ளார் என்றால் அப்படி அவர் நம்மை உருவாக்க என்ன நோக்கம் என்று உணர்ந்து அவரது சித்தம் நம்மால் நிறைவேற வாழவேண்டியதுதான் நாம் செய்யவேண்டியது. 

இதனை விளக்கவே அப்போஸ்தலரான பவுல் இன்றைய தியான வசனம் மூலம் ஒரு உவமையைக் கூறுகின்றார். தேவன் ஒரு பரம குயவன். அவரிடமுள்ள களிமண்போன்றவன்தான் மனிதன். ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்துக்கும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்துக்கும் பண்ணுகிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் உள்ளது. அதுபோல உரிமை அவருக்கு இருப்பதால் அவரது சித்தப்படி நம்மை ஒருவிதமாகவும் இன்னொருவரை வேறுவிதமாகவும் படைத்துள்ளார். 

உலகிலுள்ள அனைவருக்கும் ஒரேவித பதவி, செல்வம், புகழ் இருக்குமானால் யாரும் எவரையும் மதிக்கமாட்டார்கள், கீழ்ப்படியமாட்டார்கள்;   இந்த உலகமும் இயங்காது. எனவே இப்படிச் செய்துள்ளார் தேவன். இதனை நமது உடலைக்கொண்டே அப்போஸ்தலரான பவுல் கொரிந்தியருக்கு எழுதிய நிருபத்தில் கூறுகின்றார். உடலில் பல உறுப்புக்கள் இருப்பதுபோலவே இதுவும். "அவையெல்லாம் ஒரே அவயவமாயிருந்தால், சரீரம் எங்கே? அவயவங்கள் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றே.' ( 1 கொரிந்தியர் 12 : 19, 20 )

இன்று ஒருவேளை நமது ஊரில், சமூகத்தில் நாம் பலவீனர்களாக, ஒதுக்கப்பட்டவர்களாக இருக்கலாம். ஆனால் தேவன் அப்படி உலக மனிதர்கள் பார்ப்பதுபோல நம்மைப்  பார்ப்பவரல்ல. மதிப்புக் குறைவாகக் காணப்படும் உடல் உறுப்புகளுக்கே நாம் அதிக முக்கியத்துவம் கொடுப்பதுபோல தேவனும் கொடுக்கின்றார். அற்பமான நம்மை அவர் உயர்வாக எண்ணுகின்றார்.

ஆம், "சரீர அவயவங்களில் பலவீனமுள்ளவைகளாய்க் காணப்படுகிறவைகளே மிகவும் வேண்டியவைகளாயிருக்கிறது. மேலும், சரீர அவயவங்களில் கனவீனமாய்க் காணப்படுகிறவைகளுக்கே அதிக கனத்தைக் கொடுக்கிறோம்; நம்மில் இலட்சணமில்லாதவைகளே அதிக அலங்காரம் பெறும்" ( 1 கொரிந்தியர் 12 : 22, 23 )

எனவேதான், மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டுப்பார்த்து அவர்களுக்குள்ள திறமை, அழகு, செல்வம், புகழ் போன்றவை நமக்கில்லையே என்று நாம் எண்ணி வாழ்வில் சோர்ந்துபோய்விடக்கூடாது. தேவனே மிதிபட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் செய்வதுபோல பல்வேறு வித பாத்திரங்களாய் நம்மை உருவாக்கியுள்ளார். நாம் உருவாக்கப்பட்ட நோக்கத்தை உணர்ந்துகொள்வோமானால் மற்றவர்களோடு நம்மை ஒப்பிடமாட்டோம். அப்போது நாம் நம்மை இப்படி உருவாக்கிய தேவனுக்கு நன்றி கூறுபவர்களாக இருப்போம். 

என்னோடு படித்த மற்றும் ஊரிலுள்ள மற்ற நண்பர்களைப்போல எனக்கு நல்ல உலகவேலை இல்லாமலிருந்தது. அப்போது அது எனக்கு மனவேதனையைக் கொடுத்தாலும் அது தேவ சித்தம் என்று உணர்ந்துகொண்டபின் எனது மனம் புத்துணர்ச்சி பெற்றது. இன்று மற்றவர்களைவிட எந்த நிலையிலும் குறைந்து போகாமல் தேவன் நடத்திக்கொண்டிருக்கின்றார். 

ஆம் அன்பானவர்களே, மற்றவர்களோடு நம்மை ஒப்பிடாமல், நம்மைக்குறித்த தேவ சித்தம் அறிந்து செயல்படுவோம். அப்போது வீணான மனக்கவலைகள் நம்மைவிட்டு வெளியேறிவிடும். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்         

Wednesday, June 26, 2024

சகோதர / சகோதரிகளுடைய ஐக்கியம்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,240     💚 ஜூலை 01, 2024 💚 திங்கள்கிழமை 💚

"உங்களிலும் என்னிலுமுள்ள விசுவாசத்தினால் உங்களோடுகூட நானும் ஆறுதலடையும்படிக்கும், உங்களைக் காண வாஞ்சையாயிருக்கிறபடியினாலே," ( ரோமர் 1 : 11 )

கிறிஸ்தவ விசுவாசிகளுக்குள் இருக்கவேண்டிய ஐக்கியத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் இன்றைய தியான வசனம் நமக்கு விளக்குகின்றது. "உங்களிலும் என்னிலுமுள்ள விசுவாசத்தினால் உங்களோடுகூட நானும் ஆறுதலடையும்படிக்கும்" என இதனையே அப்போஸ்தலரான பவுல் ரோமாபுரியிலுள்ள விசுவாசிகளுக்கு எழுதுகின்றார்.

அதாவது, என்னிடம் விசுவாசம் இருக்கின்றது; உங்களிடமும் விசுவாசம் இருக்கின்றது. இந்த விசுவாசம் நமக்குள் இருப்பதனால் நாம் இருவரும் சேரும்போது இருவருக்கும் ஆறுதல் கிடைக்கின்றது என்று பொருள். 

சிலவேளைகளில் ஆவிக்குரிய வாழ்வில் சோதனைகள் வரும்போது நாம் சோர்ந்து போகின்றோம். ஆனால் அத்தகைய வேளைகளில் நம்மைப்போன்ற ஆவிக்குரிய நண்பர் ஒருவர் நமக்கு இருப்பாரானால் அவரிடம் நமது துன்பங்களைப்  பகிர்த்துக்கொள்ளும்போது மன ஆறுதல் கிடைக்கும். எனவேதான் ஆவிக்குரிய ஐக்கியம் நமக்குத் தேவையாக இருக்கின்றது. 

நமது சோகங்களையும் துன்பங்களையும் உலக நண்பர்களிடம் கூறும்போது நமக்கு ஏற்ற ஆறுதல் கிடைப்பதில்லை. காரணம் அவர்கள் ஆவிக்குரிய நிலையிலிருந்து பிரச்சனைகளைப்  பார்ப்பதில்லை. வெறும் உலகப்பிரகாரமான ஆறுதல் வார்த்தைகளைக்கூறி நம்மைத் தேற்றுவார்கள். மட்டுமல்ல, சிலவேளைகளில் அவர்களிடம் நாம் கூறிய காரியங்களை மற்றவர்களிடமும் கூறிவிடுவார்கள். 

ஆவிக்குரிய ஐக்கியம் என்று கூறியதும் நாம் செல்லும் சபையினரோடு உள்ள  ஐக்கியத்தை எண்ணிவிடக்கூடாது. மாறாக, தனிப்பட்ட முறையில் நமக்கு இருக்கும் ஆவிக்குரிய நண்பர்களின் ஐக்கியத்தை நான் குறிப்பிடுகின்றேன். அது அதிகமானவர்கள் கொண்டதாக இருக்கவேண்டுமென்று அவசியமில்லை. ஒன்றோ இரண்டோ ஆவிக்குரிய நண்பர்களோடு நாம் நெருங்கிய உறவினை வளர்த்துக்கொண்டாலே  போதும். இதன் காரணமாகவே இயேசு கிறிஸ்துத் தனது சீடர்களை ஊழியத்துக்கு அனுப்பும்போது இருவர் இருவராக அனுப்பினார். 

"ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்; அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பலனுண்டாகும். ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்; ஒண்டியாயிருந்து விழுகிறவனுக்கு ஐயோ, அவனைத் தூக்கிவிடத் துணையில்லையே.' ( பிரசங்கி 4 : 9,10 ) என்று வாசிக்கின்றோம். 

மேலும், "இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது? அது ஆரோனுடைய சிரசின்மேல் ஊற்றப்பட்டு, அவனுடைய தாடியிலே வடிகிறதும், அவனுடைய அங்கிகளின்மேல் இறங்குகிறதுமான நல்ல தைலத்துக்கும், எர்மோன்மேலும், சீயோன் பர்வதங்கள்மேலும் இறங்கும் பனிக்கும் ஒப்பாயிருக்கிறது; அங்கே கர்த்தர் என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடுகிறார்." ( சங்கீதம் 133 : 1-3 )

ஆம், சகோதரர்கள் ஒருமித்து வாழ்வதே ஒரு ஆசீர்வாதம்தான். ஆவிக்குரிய வாழ்வில் நாம் சிறப்படையவும்  கர்த்தர் என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடவும் நமக்கென சகோதர / சகோதரிகளுடைய ஐக்கியத்தை உருவாக்கிக்கொள்வோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

நீதிக்கு அடிமையாக உங்களை ஒப்புக்கொடுங்கள்

  'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,241     💚 ஜூலை 02, 2024 💚 செவ்வாய்க்கிழமை 💚


".....அக்கிரமத்தை நடப்பிக்கும்படி முன்னே நீங்கள் உங்கள் அவயவங்களை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல, இப்பொழுது பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமையாக ஒப்புக்கொடுங்கள்." ( ரோமர் 6 : 19 )

"தேவனுக்கு நம்மை ஒப்புக்கொடுப்பது என்று அடிக்கடி கூறுகின்றிர்களே அது எப்படி?"  என்று நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார். நான் அவருக்கு, "நீங்கள் உங்கள் அப்பா அல்லது அம்மாவுக்கு எப்படிக் கீழ்ப்படிந்து நடப்பீர்களோ அப்படி தேவனுக்கு கீழ்ப்படிந்து நடப்பதுதான் ஒப்புக்கொடுத்தல்" என்று கூறினேன். அவர் கூறினார், "நான் எனது அப்பா அம்மாவுக்கு பொதுவாக எந்த விஷயத்திலும் கீழ்ப்படிவதில்லை".  

ஒப்புக்கொடுத்தல் என்பது ஒரு அடிமையைப்போல ஆதலாகும். ஒரு அடிமைக்கு எந்த உரிமையும் கிடையாது. அவனது உரிமையாளன் என்னக்  கூறுகிறானோ அதனைச் செய்து முடிப்பதுதான் அடிமையின் வேலை. அதாவது சுய சித்தமில்லாமல் அனைத்தையும் விட்டுவிடுதல் அல்லது இழத்தல். தேவனுக்கு நம்மை ஒப்புக்கொடுத்தல் என்பது நம்மை முற்றிலும் அவருக்கு ஒப்புக்கொடுத்து அவர் நம்மை ஆளும்படி கையளிப்பது. 

இதனையே இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான பவுல் புதிய உதாரணத்தோடு விளக்குகின்றார். அதாவது, "முன்னே நீங்கள் உங்கள் அவயவங்களை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல" என்கின்றார். பொறாமை, காய்மகாரம், வஞ்சனை, பொய், கபடம், ஏமாற்று, மற்றவர்களைக் குறித்து அபாண்டமான பேசுதல், காம எண்ணங்கள், பெருமை, மனமேட்டிமை போன்ற பல குணங்கள் முன்பு நமக்கு இருந்திருக்குமானால் நாம் அவற்றுக்கு முன்பு அடிமைகளாக இருந்துள்ளோம் என்று பொருள். 

அப்படி அவற்றுக்கு அடிமைகளாக இருந்து அவற்றையே செய்துகொண்டிருந்ததுபோல "இப்பொழுது பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமையாக ஒப்புக்கொடுங்கள்." அதாவது, முன்பு தேவையில்லாத மேற்படிச் செயல்களைச் செய்ததுபோல இனி நீதிக்குரிய செயல்களைச் செய்யுங்கள் என்று கூறுகின்றார். இதுவே தேவனுக்கு நம்மை ஒப்புக்கொடுத்தல். 

மட்டுமல்ல, இப்படிச் செய்வதே அறிவுள்ளவர்கள் செய்யும் ஆராதனையாகும் என்றும் அப்போஸ்தலரான பவுல் ரோமர் 12ஆம் அதிகாரத்தில் கூறுகின்றார்.  "அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ளஆராதனை." ( ரோமர் 12 : 1 )

அதாவது, இப்படி நம்மைத் தேவனுக்கு  ஒப்புக்கொடுக்காமல் செய்யும் ஆராதனைகள் அனைத்தும் புத்திகெட்ட ஆராதனைகள் என்று பொருள். எனவே, அக்கிரமத்தை நடப்பிக்கும்படி முன்னே நாம் நமது அவயவங்களை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல, இனி பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி நமது அவயவங்களை நீதிக்கு அடிமையாக ஒப்புக்கொடுப்போம். தேவனுக்கேற்ற புத்தியுள்ள ஆராதனை செய்பவர்களாக வாழ்வோம்.  

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                   

பாடுகள் இனி வரும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்ல.

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,242      💚 ஜூலை 03, 2024 💚 புதன்கிழமை 💚


"ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்." ( ரோமர் 8 : 18 )

இந்த உலகத்தில் ஆவிக்குரிய வாழ்வு வாழும்போதும் நமக்குச் சில துன்பங்கள் தொடர்கின்றன. ஆனால் அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார், "இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்." அதாவது நமக்கு மகிமையான எதிர்கால வாழ்வு  ஒன்று உள்ளது. அந்த மகிமைக்குமுன் நாம் இப்போது அனுபவிக்கும் பாடுகள் ஒன்றுமில்லாதவையே. 

இதற்கான காரணத்தை இன்றைய வசனத்துக்கு முந்தின வசனத்தில் அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார். "நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்." ( ரோமர் 8 : 17 )

அதாவது, இக்காலத்தில் நாம் அனுபவிக்கும் பாடுகள் எதிர்காலத்தில் நம்மை தேவனது பிள்ளைகளும் அவரது மகிமையின் சுதந்திரவாளிகளுமாக மாற்றுகின்றது. தேவ மகிமை அடையும் உரிமை நமக்கு எதிர்காலத்தில் உள்ளது. எனவே, இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்ல என்கின்றார் பவுல். 

உதாரணமாக, இந்த உலகத்தில் மருத்துவ படிப்பை எடுத்துக்கொள்வோம். ஒருவர் மருத்துவராகி சமூகத்தில் அங்கீகாரமும் மகிமையும் அடையவேண்டுமானால் அவர் ஐந்து ஆண்டுகள் கடுமையான படிப்பை மேற்கொள்ளவேண்டும். பல்வேறு பயிற்சிகள், செயல்முறைத் தேர்வுகள் இவைகளை மேற்கொள்ளவேண்டும். இவைகள் படிக்கும் மாணவர்களுக்குத் துன்பம் தருவதாகவே இருக்கும்.  

இந்த மாணவர்கள், வீட்டைவிட்டு, நண்பர்களைவிட்டு, சாதாரண படிப்புப்  படிக்கும் தங்கள் வயது மாணவர்கள் அனுபவிக்கும் சில சுதந்திரங்கள் இல்லாமல் இருக்கவேண்டியிருக்கும். ஆம், இத்தகைய பயிற்சிகள், தேர்வுகள் இவற்றைக் கடக்கும்போது மருத்துவர் எனும் பட்டமும் சமூகத்தில் ஒரு அங்கீகாரமும் கிடைக்கின்றது. அதாவது அந்த மாணவன் இதுவரை அனுபவித்தத் துன்பங்கள்  இந்த மகிமையை அவர்களுக்குக் கொண்டுவந்தது. 

ஆம் அன்பானவர்களே, இந்த உலகத்தின் மகிமை இப்படி இருக்குமானால் பரலோக மகிமை எப்படிப்பட்டதாக இருக்குமென்று எண்ணிப்பாருங்கள். "ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்" என்று கூறுகின்றார் அப்போஸ்தலரான பவுல். நாம் தேவனது பிள்ளைகளும் சுதந்தரருமாக, கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாக கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படுவோம். ஆம், அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்.

எனவே நாம் இந்த உலகத்துப் பாடுகள், துன்பங்களை கிறிஸ்துச் சகித்ததுபோல சகித்து வாழ அழைக்கப்பட்டுள்ளோம். தேவனுக்கு ஒப்பான அவர்  "தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்." (பிலிப்பியர் 2:7,8) எனும்போது அவர் எத்தனை பெரிய துன்பங்களைச் சகிக்கவேண்டியிருந்திருக்கும்!!! எனவே தேவன் அவரை எல்லாவற்றுக்கும் மேலாக உயர்த்தி, எல்லோருடைய முழங்கால்களும் அவருக்குமுன் முடங்கும்படியான மகிமையினைக் கொடுத்தார். 

எனவே துன்பங்களை சகித்து வாழ தேவவரம் வேண்டுவோம். நமது இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்ல.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்               

தேவன் மோசேயோடே இருந்ததுபோல, நம்மோடும் இருப்பார்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,243       💚 ஜூலை 04, 2024 💚 வியாழக்கிழமை 💚

"நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை." ( யோசுவா 1 : 5 )

யோசுவாவைத் திடப்படுத்தத் தேவன் இன்றைய தியான வசனத்தைக் கூறுகின்றார். மோசேயுடன் தேவன் செயல்பட்ட விதம், மோசே தேவனோடு கொண்டிருந்த ஐக்கியம் இவற்றை யோசுவா நன்கு அறிந்திருந்தார். மோசே ஆசாரிப்புக் கூடாரத்தில் பணி  செய்யும்போது யோசுவா அவரோடே இருந்து வந்தார். 

"ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார்;..............நூனின் குமாரனாகிய யோசுவா என்னும் அவனுடைய பணிவிடைக்காரனாகிய வாலிபன் ஆசரிப்புக் கூடாரத்தை விட்டுப் பிரியாதிருந்தான்.' ( யாத்திராகமம் 33 : 11 ) என்று வாசிக்கின்றோம். எனவே, மோசேயைப்பற்றி யோசுவா அதிகம் அறிந்திருந்தார். 

மோசேயோடு தேவன் திடீரென்று வந்து விடவில்லை. மோசே பிறந்ததுமுதலே தேவன் மோசேயோடு இருந்தார். அதனால் பிரசவத்தின்போது எகிப்திய மருத்துவச்சிகள் அவன்மேல் இரக்கம் வைத்துக் கொல்லாமல் காப்பாற்றினார்கள். நாணல் பெட்டியில் வைத்து நதிக்கரையில் அனாதையாக விடப்பட்டபோதும்  தேவன் அவனோடேகூட இருந்து பார்வோனின் மகள் கண்களில் தயவு கிடைக்கும்படிச் செய்தார்; மேலும், அந்த இக்கட்டிலும் ஆச்சரியமாகச்   சொந்த தாயே பாலூட்டும் வாய்ப்பை ஏற்படுத்தினார்; அரண்மனை வாழ்க்கைமூலம் பல துறைகளில் வித்தகனாகக்  கிருபைசெய்தார். ஆம்,  மோசே பிறந்தது முதல் தேவன் அவனோடு இருந்தார்.

இப்படிப் பலத் திறமைகளில் தகுதிபெறச் செய்து பின்னர் பார்வோனிடம் மோசேயைத் தேவன் அனுப்பினார். இந்த மோசேதான் பல்வேறு அற்புதங்களையும்  அதிசயங்களையும் மக்கள் கண்முன் செய்து அவர்களைக் கானானுக்கு நேராக வழிநடத்தினார். 

இப்படி மோசேயை வழிநடத்தியவர் இன்று நம்மைப் பார்த்தும் கூறுகின்றார், "நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை." என்று. இதனை வாசிக்கும் அன்புச் சகோதரனே சகோதரியே, தேவனுக்கு ஏற்புடைய ஒரு வாழ்க்கை வாழ்வோமானால் யோசுவாவுடன் தேவன் கூறிய இந்த வார்த்தைகள் நமக்கும் சொந்தம்தான். காரணம், தேவன் ஆள்பார்த்துச் செயல்படுபவரல்ல. 

நமது வாழ்வின் குறிப்பிட்டச் சில நாட்களுக்கு மட்டுமல்ல, "நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம்" என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. அதாவது, நமது இறுதி  மூச்சு உள்ளவரை தேவன் நம்மைக் கைவிடமாட்டார்  என்று பொருள். மரித்தபின்னரும் மோசேயைத் தேவன் கைவிடவில்லை. இதனை, "அப்படியே கர்த்தரின் தாசனாகிய மோசே மோவாப் தேசமான அவ்விடத்திலே கர்த்தருடைய வார்த்தையின்படியே மரித்தான். அவர் அவனை மோவாப் தேசத்திலுள்ள பெத்பேயோருக்கு எதிரான பள்ளத்தாக்கிலே அடக்கம் பண்ணினார்." ( உபாகமம் 34 : 5, 6 ) என்று வாசிக்கின்றோம். 

ஆம், தேவனுக்கேற்ற வாழ்க்கை வாழும்போது, நாம் உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவரும், எந்த உலகப் பிரச்சனைகளும்  நமக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; தேவன் மோசேயோடே இருந்ததுபோல, நம்மோடும் இருப்பார் ; நம்மைவிட்டு அவர் விலகுவதுமில்லை, நம்மைக் கைவிடுவதுமில்லை.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

Tuesday, June 25, 2024

வெற்றிபெறுபவன் அனைத்தையும் பெற்றுக்கொள்வான்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,237     💚 ஜூன் 28, 2024 💚 வெள்ளிக்கிழமை 💚

"ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக் கொள்ளுவான்; நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான்." ( வெளிப்படுத்தின விசேஷம் 21 : 7 )

ஒரு மகனுக்குத் தகப்பனுடைய அனைத்துச் சொத்து சுகங்களின்மேலும் முழு அதிகாரம் உண்டு. இதுபோலவே நாம் தேவனுக்கு ஏற்புடையவர்களாக வாழ்ந்து அவருக்குக் குமாரனாகும்  தகுதிபெறும்போது  அந்தத் தகப்பனுக்குள்ள  அதிகாரங்கள் நமக்குக் கிடைக்கின்றது. அதற்கு நாம் ஆவிக்குரிய வாழ்வில் வெற்றிபெற்றவர்களாக வாழவேண்டியது அவசியம். இதனையே "ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக் கொள்ளுவான்; நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான்." என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. 

வேதாகமத்தில் லேவியராகமம் முதல் பல்வேறு இடங்களில் நாம் "நான் உங்கள் நடுவிலே உலாவி, உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்." ( லேவியராகமம் 26 : 12 ) எனும் வசனத்தைக் காணலாம். 

தேவன் எப்போதும் நம்மோடு தங்கி நம்மோடு இருக்கவே விரும்புகின்றார். அதற்குத் தகுகியுள்ளவர்களாக நாம் வாழ வேண்டியதே முக்கியம். இன்றைய தியான வசனம் கூறும் வார்த்தைகளைப்போன்று  வேதத்தில் பல்வேறு இடங்களிலும்  நாம் வாசிக்கலாம். (உதாரணமாக,  எரேமியா- 7:23, 11:3, 30:22, 31:1, 32:38 இன்னும் பல) 
 
ஆனால் ஒரே ஒரு வேறுபாடு என்னவென்றால் பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ள இந்த வசனங்கள் அனைத்திலும்,  "நான் உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்." என்று கூறப்பட்டுள்ளது.  ஆனால் புதிய ஏற்பாட்டில் தேவனை நாம் தகப்பனாக அறிந்து அவரோடு சேர்வதால்,  "நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான்." என்று கூறப்பட்டுள்ளது. அதாவது அவருக்கு ஏற்ற வாழ்க்கை வாழும் அனைவருமே அவரது குமாரனும் குமாரத்திகளும்தான். 

இப்படி நாம் அவரது குமாரனும் குமாரத்திகளுமாக இருக்கவேண்டுமானால் முதலில் அவரது வார்த்தைகளுக்குச் செவிகொடுக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. "என் வாக்குக்குச் செவிகொடுங்கள், அப்பொழுது நான் உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்; நான் உங்களுக்குக் கற்பிக்கும் எல்லாவழியிலும், நீங்கள் உங்களுக்கு நன்மையுண்டாகும்படிக்கு நடவுங்கள் என்கிற விசேஷத்தையே அவர்களுக்குச் சொல்லிக் கட்டளையிட்டேன்." ( எரேமியா 7 : 23 )

மேலும் இன்றைய தியான வசனத்தினைத் தொடர்ந்து நாம் வாசிக்கின்றோம், "பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள்." ( வெளிப்படுத்தின விசேஷம் 21 : 8 ) 

அதாவது, தேவன் காட்டிய வழிகளில் நடவாதவர்கள் மேற்படி வசனம் கூறுவதுபோல பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யருமாக இருக்கின்றனர். அத்தகையவர்கள் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. 

எனவே அன்பானவர்களே, நாம் ஜெயம்கொள்ளும் ஒரு வாழ்க்கை வாழவே அழைக்கப்பட்டுள்ளோம். நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அதற்கான வழிகளை நமக்குத் திறந்து வைத்துள்ளார். அந்த வழியாகிய கிறிஸ்துவை நாம் ஏற்றுக்கொண்டு அவர் காட்டிய வழியில் வாழும்போது மட்டுமே நாம் வெற்றியுள்ள வாழ்க்கை வாழ முடியும். அப்போது, இன்றைய வசனம் கூறுவதுபோல நாம் எல்லாவற்றையும் சுதந்தரித்துக் கொள்ளுவோம். அவர் நமது தேவனாயிருப்பார்; நாம் அவர்  குமாரனாக குமாரத்திகளாக இருப்போம்.  

தேவ செய்தி:- சகோ. எம். ஜியோ பிரகாஷ் 

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - லுூக்கா 11 : 13 / Luke 11:13

" ஆதவன் " தியானம் - 1981 ஜூலை 11, சனி  2026       "பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந...