Thursday, August 08, 2024

கிதியோன் பெயர் பொறித்த மட்பாண்டஓடு

கிர்பெட் எர்-ராயின் இந்த ஆஸ்ட்ராகான் எழுத்து ஜெருபால் (Jerubbaal) என்ற பெயரைக் கொண்டுள்ளது, விவிலிய நியாயாதிபதி கிதியோனுக்கு வழங்கப்பட்ட அதே புனைப்பெயர். (புகைப்படம்: Dafna Gazit / இஸ்ரேல் தொல்பொருள் ஆணையம்)

பழங்கால நகரமான லாச்சிஷுக்கு அருகில் அமைந்துள்ள கிர்பத் எர்-ராயில் யெருபாகால் (ஜெருபால்) என்ற பெயரைக் கொண்ட ஒரு ஆஸ்ட்ராகான் எழுத்து கொண்ட  மட்பாண்ட ஓடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. யெருபாகால் என்பது பாகாலின் பலிபீடத்தை அழித்தபின் கிதியோனுக்கு வழங்கப்பட்ட புனைப்பெயர் (நியாயாதிபதிகள் 6:32). ரேடியோகார்பன் டேட்டிங் அடிப்படையில் அது கண்டுபிடிக்கப்பட்ட அதே தொல்பொருள் அடுக்கில் இருந்து எடுக்கப்பட்ட கரிம மாதிரிகள் சோதிக்கப்பட்டதில் இவை வேதாகமம் கூறும் காலத்துக்கு ஒத்தவையாக உள்ளன. யெருபாகால் என்ற பெயர் வேதாகமத்தில் கிதியோனுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.  மேலும் இது தொல்பொருள் சூழலில் முதல் கண்டுபிடிப்பு ஆகும். பெயரின் தனித்தன்மை மற்றும் அரிதான தன்மை காரணமாக, சில அறிஞர்கள் இது கிதியோனைக் குறிப்பதாக நம்புகின்றனர். மற்றவர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர். ஆனால் இந்தக்  கண்டுபிடிப்பு குறிப்பிடத்தக்கது, இது வேதாகமம் விவரிக்கும் காலத்தில் யெருபாகால் என்ற பெயர் பயன்படுத்தப்பட்டது என்பதை உறுதிப்படுத்துகிறது.

திருவசனமாகிய ஞானப்பால்

 'ஆதவன்' 💚ஆகஸ்ட் 17, 2025. 💚சனிக்கிழமை 💚     வேதாகமத் தியானம் - எண்:- 1,286   


"நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்." ( 1 பேதுரு 2 : 3 )

சிறு குழந்தைகள் பாலைத்தவிர வேறு எதனையும் உணவாக உட்கொள்வதில்லை. ஆனால் அப்படிப் பாலை உட்கொண்டுதான் அவை வளர்கின்றன. தேவனை அறியும் அறிவில் வளருவதும் இப்படித்தான். நாம் ஆவிக்குரிய வாழ்வில் வளரவேண்டுமானால் தேவனுடைய வார்த்தைகளை நாளும் உட்கொள்பவர்களாக இருக்கவேண்டும். 

"புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்." என்கின்றார் அப்போஸ்தலராகிய பேதுரு. திருவசனத்தை களங்கமில்லாத ஞானப்பால் என்று குறிப்பிடுகின்றார். வசனம்தான் பாலேத்தவிர வசனத்துக்கு அளிக்கப்படும் எல்லா விளக்கங்களும் பால் என்று நாம் கொள்ளமுடியாது. 

ஆனால் இன்று திருவசனமாகிய இந்த ஞானப்பாலினை விசுவாசிகள் உட்கொள்ளாதபடி பல உண்மையில்லாத ஊழியர்களைச் சாத்தான் பயன்படுத்துகின்றான்.  எனவே அவர்கள் தேவ வார்த்தைகள் கூறும் மெய்யான பொருளை மக்களுக்குப் போதிக்காமல் அனைத்து வேத வசனங்களுக்கும் உலக ஆசீர்வாத பொருள்கொண்டு விசுவாசிகளை வஞ்சித்து வைத்துள்ளார்கள்.

ஆதவன் தினசரி தியானத்தில் நான் அடிக்கடி வலியுறுத்துவது என்னவென்றால் ஆலய ஆராதனைகளில் கலந்துகொண்டு அங்கு அளிக்கப்படும் செய்திகளை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டாம் என்பதுதான். ஆதவன் செய்திகளைக்கூட நீங்கள் அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று நான் கூறுவதில்லை. யார் என்ன சொன்னாலும் அதனை வேத வெளிச்சத்தில் ஆவியானவரின் துணையோடு ஆராய்ந்துபாருங்கள். தேவையில்லாத, வேதத்துக்குப் புறம்பான போதனைகளை யார் சொன்னாலும் அவைகளை விட்டு விலகுங்கள்.  

இன்று அதிக கூட்டம் சேர்க்கும் பிரபல ஊழியர்கள் பலரும் வேத வசனங்களுக்கு மெய்யான பொருளைக் கூறுவதுமில்லை மக்களை சத்தியத்துக்கு நேராக நடத்துவதுமில்லை. எனவே அத்தகைய ஊழியர்களைப் பின்பற்றும் பலரும் ஆவிக்குரிய எந்த வளர்ச்சியுமின்றி சாதாரண உலக மனிதர்களைப்போலவே இருக்கின்றனர். 

திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருக்கும் மனிதர்கள் இயல்பிலேயே சத்தியத்தைத் தேடுபவர்களாக இருப்பார்கள்.  அவர்கள் ஆவிக்குரிய வாழ்வில்  வளருவார்கள். மற்றவர்களோ, எதெற்கெடுத்தாலும், "எங்கள் பாஸ்டர் சொன்னார்.... கன்வென்சன் கூட்டத்தில் பேசக் கேட்டேன் .." என்று கூறிக்கொண்டு தேவனுக்கும் தங்களுக்கும் தனிப்பட்டத் தொடர்பின்றி வாழ்பவர்களாக இருப்பார்கள். 

ஆம் அன்பானவர்களே, நாம் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையுள்ளவர்களாக இருக்கவேண்டியது அவசியம். அப்போதுதான்  வேதாகமத்தை நாம் வாசிக்கும்போது ஆவியானவர் நம்மோடு பேசுவதையும் பல ஆவிக்குரிய சத்தியங்களை நமக்கு உணர்த்துவதையும் நாம் அனுபவிக்கமுடியும். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

இயேசு குழந்தைப்பருவத்தில் செய்த அற்புதம்

ல நூறு ஆண்டுகளாக பாப்பிரஸ் துண்டு ஒன்று 1011 ஹாம்பர்க் கார்ல் வான் ஒசிட்ஸ்கி மாநிலம் மற்றும் பல்கலைக்கழக நூலகத்தின் காப்பகத்தில்  கவனிக்கப்படாமல் கிடந்தது. இந்த பாப்பிரஸ் துண்டு சமீபத்தில் ஹம்போல்ட்-யுனிவர்சிட்டாட் ஜூ பெர்லினில் இருந்து பாப்பிராலஜிஸ்டுகள் டாக்டர் லாஜோஸ் பெர்க்ஸ் மற்றும் பெல்ஜியத்தின் லீஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் கேப்ரியல் நொச்சி மாசிடோ ஆகியோரால் புனித தாமஸின் நற்செய்தியின் ஆரம்பகால நகல் என அடையாளம் காணப்பட்டது.

கி.பி 2 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட புனித தாமஸின் நற்செய்தி, பைபிள் அபோக்ரிபாவின் ஒரு பகுதியாகும், இது நியமன பைபிளில் சேர்க்கப்படாத நூல்களின் தொகுப்பாகும். 

ஹம்போல்ட்-யுனிவர்சிட்டட்டில் உள்ள இறையியல் சங்கத்தின் விரிவுரையாளரான டாக்டர் பெர்க்ஸ் கூறுகையில், "இந்த பாப்பிரஸ் துண்டு ஆராய்ச்சிக்கு அசாதாரண ஆர்வத்தை கொண்டுள்ளது. இந்த துண்டு 4 முதல் 5 ஆம் நூற்றாண்டுக்கு முன்னுள்ளது. கிரேக்க மொழியில் எழுதப்பட்ட அசல் உரையுடன் அதன் சீரமைப்பு ஒத்துபோகின்றது. இது நற்செய்தியின் ஆரம்பகால இருப்பு மற்றும் பரவல் பற்றிய முக்கிய ஆதாரங்களை வழங்குகின்றது, இந்த கண்டுபிடிப்பு புனித தாமஸின் நற்செய்தி முதலில் கிரேக்க மொழியில் எழுதப்பட்டது என்ற தற்போதைய அறிவார்ந்த மதிப்பீட்டை ஆதரிக்கிறது.

உத்தேசமாக 11 x 5 சென்டிமீட்டர்கள் (4.3 x 2 அங்குலம்) அளவுள்ள இந்த பாப்பிரஸ் துண்டு, ஒரு வரிக்கு பத்து எழுத்துக்களைக் கொண்ட பதின்மூன்று வரிகள் கிரேக்க உரையைக் கொண்டுள்ளது. இது பழங்கால எகிப்தின் பிற்பகுதியில் உருவானது மற்றும் அதன் உள்ளடக்கம் முக்கியமற்றதாகத் தோன்றியதால் (ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்ட ஆவணத்தின் ஒரு பகுதியாகத் தோன்றியதால்) ஆரம்பத்தில் கவனிக்கப்படவில்லை.

"இது ஒரு தனிப்பட்ட கடிதம் போன்ற அன்றாட ஆவணத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது, ஏனெனில் கையெழுத்து மிகவும் விகாரமாக தெரிகிறது," என்று டாக்டர் பெர்க்ஸ் விளக்குகிறார்.

"இயேசு" என்ற வார்த்தை உரையில் அடையாளம் காணப்பட்டபோது திருப்புமுனை ஏற்பட்டது. மேலும் எண்ணற்ற டிஜிட்டல் பாப்பிரிகளுடன் ஒப்பிடுகையில், ஆராய்ச்சியாளர்கள்  அதன் உண்மையான தன்மையை வெளிப்படுத்தினர். இதில் குறிப்பிடப்பட்டுள்ள "கூவுதல்" மற்றும் "கிளை" போன்ற முக்கிய சொற்களைப் பயன்படுத்தி, அவர்கள் பிற ஆரம்பகால கிறிஸ்தவ நூல்களை குறுக்கு-குறிப்பிட்டு, இதனை புனித தாமஸின் நற்செய்தியின் நகலாக உறுதிப்படுத்தினர். 

இந்தப் பாப்பிரஸ்  துண்டின் உள்ளடக்கம் புனித தாமஸின் நற்செய்தியில் விவரிக்கப்பட்டுள்ள இயேசுவின் குழந்தைப் பருவத்திலிருந்து ஒரு அத்தியாயத்தைச் சுட்டிக்காட்டுகிறது. குறிப்பாக, அவரது நற்செய்தியில் இரண்டாவது அதிசயமாகக் கருதப்படும் "சிட்டுக்குருவிகளின் உயிர்ப்பித்தல்" தொடக்கத்தை இது விவரிக்கிறது. இந்த அத்தியாயத்தில், இளம் இயேசு களிமண்ணிலிருந்து பன்னிரண்டு சிட்டுக்குருவிகள் வடிவமைத்து, ஒரு ஓடையின் அருகே விளையாடுகிறார். ஓய்வுநாளில் இதைச் செய்ததற்காக அவருடைய தந்தை ஜோசப் அவரைக் கண்டித்தபோது, ​​இயேசு கைதட்டி களிமண் உருவங்களை உயிர்ப்பிக்கிறார்.

விகாரமான கையெழுத்து மற்றும் ஒழுங்கற்ற கோடுகள் காரணமாக, இந்த நற்செய்தி நகல் ஒரு பள்ளி அல்லது மடாலயத்தில் எழுதும் பயிற்சிக்காக உருவாக்கப்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இத்தகைய நடைமுறைகள் கல்வி நோக்கங்களுக்காக பழங்காலத்தில் பொதுவானவை, இந்த துண்டு மத முக்கியத்துவத்தை வைத்திருப்பது மட்டுமல்லாமல், அந்தக் காலத்தின் கற்பித்தல் முறைகளைப் பற்றிய ஒரு பார்வையையும் வழங்குகிறது.

இந்த பாப்பிரஸ் துண்டின் கண்டுபிடிப்பு விவிலிய அறிஞர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்களுக்கு ஒரு மைல்கல் ஆகும், இது கிறிஸ்தவ நூல்களைச் சுற்றியுள்ள ஆரம்பகால பரிமாற்றம் மற்றும் கல்வி நடைமுறைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இது ஆரம்பகால கிறிஸ்தவ இலக்கியத்தின் ஆற்றல்மிக்க தன்மையையும் பல்வேறு பகுதிகள் மற்றும் காலகட்டங்களில் அதன் பரவலையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

Wednesday, August 07, 2024

"தேவன் நம்மை பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார்."

 'ஆதவன்' ஆகஸ்ட் 16, 2024. வெள்ளிக்கிழமை 💚        வேதாகமத் தியானம் - எண்:- 1,285   

"நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. அந்தப்படி, நீங்கள் வேசிமார்க்கத்துக்கு விலகியிருந்து....." ( 1 தெசலோனிக்கேயர் 4 : 3 )

தேவன் நம்மை உலகத்தில் படைத்தது வெற்று வாழ்க்கை வாழ்வதற்கல்ல; மாறாக அவரைப்போல நாமும் பரிசுத்தராக வாழவேண்டும் என்பதற்காகவே.  உலக உதாரணம்கொண்டு இதனை நாம் புரிந்துகொள்ளலாம். ஒரு புகழ் பெற்ற மருத்துவர் ஒருவர் இருக்கின்றார் என்று வைத்துக்கொள்வோம். அவர் தனது மகனும் தன்னைப்போல ஒரு சிறந்த மருத்துவராகவேண்டும் என்றுதான் விரும்புவார். அந்த மகனுக்காகப்  பல முன்னேற்பாடுகளைச்  செய்துவைப்பார்.   

அதுபோலவே தேவனும் தன்னைப்போன்ற பரிசுத்தமுள்ளவர்களாக நாம் மாறவேண்டும் என்று விரும்புகின்றார். நாம் பரிசுத்தமாய் வாழ்வதற்கு உதவியாக பரிசுத்த ஆவியானவரை ஏற்பாடுசெய்துள்ளார். ஆம் அன்பானவர்களே, "தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார்." ( 1 தெசலோனிக்கேயர் 4 : 7 )

நாம் தொடர்ந்து ஆவியானவரின் விருப்பத்துக்கு எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருப்போமானால் நாம் அவரை அசட்டைப் பண்ணுகின்றோம் என்று பொருள். எனவே தான் அப்போஸ்தலரான பவுல்,   "ஆகையால் அசட்டைபண்ணுகிறவன் மனுஷரை அல்ல, தமது பரிசுத்த ஆவியை நமக்குத் தந்தருளின தேவனையே அசட்டைபண்ணுகிறான்." ( 1 தெசலோனிக்கேயர் 4 : 8 ) என்று கூறுகின்றார். 

ஆம் அன்பானவர்களே, நாம் பரிசுத்தக் கேடான வாழ்க்கை வாழும்போது "நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது..." எனும் வசனத்தை நாம் மீறுபவர்களாக இருப்போம்; தேவ சித்தத்தை மீறுகின்றவர்களாக இருப்போம். 

இன்றைய தியான வசனம்,  "அந்தப்படி, நீங்கள் வேசிமார்க்கத்துக்கு விலகியிருந்து....." என்று கூறுகின்றது.  அதாவது விபச்சார பாவத்தையே பரிசுத்தக் கேட்டுக்கு ஒரு உதாரணமாக இந்த வசனம் கூறுகின்றது. தேவன் அருவருக்கும் இரண்டு பாவங்கள் விபச்சாரம் மற்றும் விக்கிரக ஆராதனை.  விக்கிரக ஆராதனை என்பது சிலைகளை வணங்குவது மட்டுமல்ல, தேவனுக்கு அளிக்கும் முன்னுரிமையை உலகப் பொருட்களுக்குக் கொடுப்பதும் விக்கிரக ஆராதனையே. 

எனவே நாம் இவற்றுக்கு முன்னுரிமை கொடுக்கும் போது பரிசுத்தத்தை மீறுகின்றோம் என்று பொருள். எனவேதான் அப்போஸ்தலரான பவுல், "விபச்சாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரகாராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே."( எபேசியர் 5 : 5 ) என்று எச்சரித்துக் கூறுகின்றார். தேவன் விரும்பும் பரிசுத்தத்தைக் காத்துக்கொள்வோம்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்            

சுதந்திரம்

'ஆதவன்' 💚ஆகஸ்ட் 15, 2024. வியாழக்கிழமை 💚     வேதாகமத் தியானம் - எண்:- 1,284


"கர்த்தர் என் சுதந்தரமும் என் பாத்திரத்தின் பங்குமானவர்; என் சுதந்தரத்தை தேவரீர் காப்பாற்றுகிறீர்." ( சங்கீதம் 16 : 5 )

அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துக்களைக் கூறிக்கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.  

சுதந்திரம் என்பதற்குப் பலரும் பல்வேறு பொருள் கொள்ளலாம். பொதுவாக நாம் எண்ணியத்தைச் செய்யும் உரிமை நமக்கு இருக்குமானால் அதுவே சுதந்திரம் என்று பலரும் கூறுவார்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்தியக் குடிமக்களுக்குப் பல்வேறு உரிமைகளைக் கொடுத்துள்ளது. அந்த உரிமைகளில் பல நாம் ஆங்கிலேயரது ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றதால் நமக்கு உரிமையானவை. 

அதுபோலவே ஆவிக்குரிய வாழ்விலும் நமக்குச் சில சுதந்திரங்கள் உண்டு. இன்றைய தியான வசனத்தில் தாவீது ராஜா, "கர்த்தர் என் சுதந்தரமும் என் பாத்திரத்தின் பங்குமானவர்." என்று கூறுகின்றார். அதாவது, நமது வீட்டில் நாம் அனுபவிப்பதுபோல கர்த்தரும் நம்மோடு இருந்து நம்மில் சுதந்திரமாகச் செயல்படுபவர் என்று பொருள். பாத்திரத்தின் பங்கு என்று கூறும்போது,  ஒரே வீட்டில் குடியிருப்போர் ஒரே பாத்திரத்தில் சமைத்துப் பங்கிட்டு உண்பதுபோல அனைத்துக் காரியங்களிலும் கர்த்தர் நம்மோடு குடியிருக்கும் குடும்ப உறுப்பினர் போன்றவர் என்று பொருள். 

தாவீது கூறுவதுபோல நாம் கர்த்தரை நமது சுதந்திரத்தைக் காப்பவராகவும் நம்மோடு நமது வீட்டில் வசிப்பவராகவும் கருதிச் செயல்படுகின்றோமா?  சிந்தித்துப்பார்ப்போம். அப்படி இல்லையானால் இனியாவது அப்படி இருக்க முயற்சிச் செய்வோம். 

அடுத்து, "என் சுதந்தரத்தை தேவரீர் காப்பாற்றுகிறீர்" என்று கூறப்பட்டுள்ளது. ஆம் நமது நாட்டில் நமக்குள்ள உரிமைகளை தேவனே காப்பாற்றுகின்றார்.  கிறிஸ்தவர்களுக்கு எதிராக எழும்பியுள்ள பல்வேறு அமைப்புகளும் மக்களும் எந்த நாளைவிடவும் இப்போது அதிகம். ஆனால் அவர்களால் நமக்கு எதிராக முற்றிலுமாகச் செயல்படமுடிவதில்லை. காரணம், நமது சுதந்தரத்தை தேவனே காப்பாற்றுகின்றார். 

ஆம் அன்பானவர்களே, இப்போது மட்டுமல்ல கிறிஸ்தவத்தின் ஆரம்ப நாட்கள் முதல் பல்வேறு அரசுக்கள், ராஜாக்கள் கிறிஸ்தவத்தை அழிக்க முயன்று ஆழிந்துபோயுள்ளனர். வேறு எந்த மதத்தையும்விட கிறிஸ்தவ மார்க்கத்துக்கு எதிரிகள் அதிகம். ஆனாலும் இன்றும் கிறிஸ்தவம் வளர்ந்துகொண்டிருக்கிறது. காரணம், கர்த்தர்  நம் சுதந்தரத்தை காப்பாற்றுகிறார் என்பதால்தான். 

மேலும், பாவ அடிமைத்தனத்திலிருந்து விடுதலை அடைவதே வேதாகம அடிப்படையில் நாம் அடையும் ஆவிக்குரிய சுதந்திரம்.  நாம் பாவம் செய்யும்போது பாவத்துக்கு அடிமைகளாகின்றோம். பாவத்திலிருந்து முழு விடுதலை அளிக்கத்   தேவனது ஆவியினால்தான் முடியும். ஆம், "கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு." ( 2 கொரிந்தியர் 3 : 17 )

நாம் யாரை நம்முன்  வைத்துள்ளோம்? நமது குடும்பத்தில் கர்த்தரை ஒரு உறுப்பினராகக் கொண்டுள்ளோமா? பாவ அடிமைத்தனத்திலிருந்து விடுபட பரிசுத்த ஆவியானவர் நம்மில்  செயல்பட அனுமதிக்கின்றோமா? சிந்திப்போம்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

Tuesday, August 06, 2024

போரடிக்கிற புதிதும் கூர்மையுமான இயந்திரம்

 ✉'ஆதவன்' 💚ஆகஸ்ட் 14, 2024. 💚புதன்கிழமை 💚 வேதாகமத் தியானம் - எண்:- 1,283   

"உன்னோடே போராடினவர்களைத் தேடியும் காணாதிருப்பாய்; உன்னோடே யுத்தம்பண்ணின மனுஷர் ஒன்றுமில்லாமல் இல்பொருளாவார்கள்." ( ஏசாயா 41 : 12 )

பழைய ஏற்பாட்டுக்கும் புதிய ஏற்பாட்டுக்கும் அதிக வித்தியாசம் உண்டு. இன்றைய வசனத்துக்கு நாம் பழைய ஏற்பாட்டு முறையில் பொருள்கொண்டு நம்மை எதிர்த்தவர்கள் எல்லோரும் அழிந்துபோகவேண்டும் என்று எண்ணுவோமானால் நாம் மெய்யான கிறிஸ்தவர்கள் அல்ல. 

ஏனெனில், நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எதிரிகளுக்காகவும், நம்மை அவமதிப்பவர்களுக்காகவும் வேண்டுதல்செய்ய நமக்கு அறிவுறுத்தியுள்ளார். மட்டுமல்ல, அவரே தனது பாடுகளின்போது அதனையே செய்தார். "பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே" ( லுூக்கா 23 : 34 ) என்று தன்னைச் சிலுவையில் அறைந்தவர்களுக்காக பிதாவிடம் மன்னிப்பு வேண்டினார். 

எனவே இன்றைய தியான வசனம் நம்மோடு போராடுபவர்கள் யுத்தம் செய்பவர்கள் என்று கூறுவது நம்மைப் பாவத்தில் விழவைக்கும்  சத்துருவானவனையே. ஆம் அன்பானவர்களே, நாம் பாவத்தை எதிர்த்து போராடி அதனை மேற்கொள்வதுதான் ஆவிக்குரிய வளர்ச்சி. அப்படி உன்னோடே போராடின பாவக் காரியங்களைத்  தேடியும் காணாதிருப்பாய்; உன்னோடே யுத்தம்பண்ணின பழைய பாவங்கள் அனைத்தும் ஒன்றுமில்லாமல் இல்பொருளாகும் என்கிறார் தேவனாகிய கர்த்தர். 

அப்படிப் பாவத்தை மேற்கொள்ள "உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன்." ( ஏசாயா 41 : 13 ) என்கிறார் கர்த்தர். 

இப்படிப் பாவங்களை நாம் மேற்கொள்ளம்போது தான் தேவன் நம்மைப் பயன்படுத்த முடியும். "இதோ, போரடிக்கிறதற்கு நான் உன்னைப் புதிதும் கூர்மையுமான பற்களுள்ள இயந்தரமாக்குகிறேன்; நீ மலைகளை மிதித்து நொறுக்கி, குன்றுகளைப் பதருக்கு ஒப்பாக்கிவிடுவாய்." ( ஏசாயா 41 : 15 ) என்று இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து கூறப்பட்டுள்ளது. 

ஆம்  அன்பானவர்களே, நமது சுய பலத்தால் பாவங்களை நாம் மேற்கொள்ள முடியாது. தேவனது ஒத்துழைப்பு நமக்குத் தேவையாயிருக்கிறது. தேவனிடம் உண்மையான விருப்பத்தோடு வேண்டுவோமானால் தேற்றரவாளரான பரிசுத்த ஆவியானவரை அவர் நமக்குத் தருவார். "அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்". ( யோவான் 16 : 8 ) இப்படி உணர்த்தி நம்மைப் பாவத்தை மேற்கொள்ளச் செய்வார். 

அப்போதுதான் நாமும் இதுவரை நம்மை அடிமையாக்கி வைத்திருந்த மலைபோன்ற பாவங்களை மிதித்து நொறுக்கி, அவைகளை பதருக்கு ஒப்பாக்கி போரடிக்கிறதற்கு உதவும் புதிதும் கூர்மையுமான பற்களுள்ள இயந்தரமாக்கப்பட்டு கர்த்தருக்கென்று பயன்படமுடியும். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்        

Monday, August 05, 2024

இழந்துபோனதைத் தேட வந்தவர்

 ✉'ஆதவன்' ஆகஸ்ட் 13, 2024. செவ்வாய்க்கிழமை 💚 வேதாகமத் தியானம் - எண்:- 1,282   

"இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார்" (லூக்கா 19:10)

கடவுள் என்றால் அவர் தீயவர்களை அழித்து நல்லவர்களை வாழவைப்பவர் என்று நம்மில் பலரும் எண்ணிக்கொண்டிருக்கின்றோம். காரணம், மனிதர்களாகிய நாம் அத்தகைய குணம் உள்ளவர்களாக இருப்பதால்தான். நம்மை அன்பு செய்பவர்களை மட்டும் நாமும் அன்பு செய்கிறோம்; நமக்கு நன்மை செய்பவர்களுக்கு மட்டும் நாமும் நன்மை செய்கின்றோம். 

ஆனால் தேவன் இப்படிக் குறுகிய எண்ணம் உள்ளவரல்ல; மாறாக அவர் தீயவர்களையும் பாவிகளையும் அன்பு செய்கின்றார். காரணம், இந்த உலக வாழ்க்கைக்  குறுகியது. இந்த உலகமே பெரிதென வாழ்ந்து எதிர்காலத்தில் முடிவில்லா அக்கினியில் ஆத்துமாக்கள் அழிந்துபோவது தேவனுக்குச் சித்தமல்ல. எனவேதான் தேவன் பாவிகளை உடனேயே அழித்து ஒழிக்காமல் விட்டுவைக்கின்றார். அவர்கள் மனம்திரும்ப சந்தர்ப்பம் அளிக்கின்றார்.

"தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக் குறித்துத் தாமதமாயிராமல்;  ஒருவரும்  கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்." (2 பேதுரு 3:9) என்று நாம் வாசிக்கின்றோம். ஒரு ஆத்துமாகூட அழிவது தேவனுக்குச் சித்தமல்ல. எல்லோரும் மனம்திரும்பவேண்டும் என்று அவர் விரும்புகின்றார். ஆம் அவர் எதிலும் 100% எதிர்பார்ப்பவர். 

அன்று பாவி என்று கருதப்பட்ட சகேயு வீட்டில் இயேசு தங்கச் சென்றபோது யூதர்கள் மனித முறைமையின்படி சிந்தித்ததால், " இவர் பாவியான மனுஷனிடத்தில் தங்கும்படி போனார் என்று முறுமுறுத்தார்கள்."  (லூக்கா 19:7) ஆனால் இயேசு சகேயுவின் ஆத்துமாவைப் பார்த்தார். அது பாவத்துக்கு வருந்தும் தன்மை உள்ள ஆத்துமாவாக இருந்ததை அவர் அறிந்திருந்தார். 

அதுபோலவே "சகேயு நின்று, கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்றான். இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே." (லூக்கா 19: 8, 7) என்றார். 

ஆம் அன்பானவர்களே, இழந்துபோனதை தேடுவதற்கே இயேசு கிறிஸ்து உலகினில் வந்தார். சகேயுவைபோல பாவத்துக்கு வருந்தி பரிகாரம்செய்யும் குணம் நமக்கு இருக்குமானால் நாம் அவருக்குத் தொலைவில் இல்லை. இழந்துபோன நம்மை தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரனான கிறிஸ்து உலகினில்  வந்திருக்கிறார். அவரிடம் நமது பாவங்களை அறிக்கையிட்டு நம்மை ஒப்புக்கொடுப்போம்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்         

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - லுூக்கா 11 : 13 / Luke 11:13

" ஆதவன் " தியானம் - 1981 ஜூலை 11, சனி  2026       "பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந...