Sunday, March 19, 2023

நாம் விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது.

ஆதவன் 🌞 783🌻 மார்ச் 21,  2023 செவ்வாய்க்கிழமை

மனுஷனைப்பார்க்கிலும் அவருடைய முகப்பார்வையும், மனுபுத்திரரைப்பார்க்கிலும் அவருடைய ரூபமும், இவ்வளவு அந்தக்கேடு அடைந்தபடியினாலே, அவரைக்கண்ட அநேகர் பிரமிப்படைந்தார்கள். ( ஏசாயா 52:14)

உலகின் மிகச் சிறந்த ஓவியரான லியானார்டோ டாவின்சி அவர்கள் 1490 களில் வரைந்த ஓவியங்களில் மிகப் பிரபலமான ஓவியம் கிறிஸ்துவின் இறுதி இரா உணவு ஓவியமாகும். இந்த ஓவியத்தை வரைவதற்கு இயேசு கிறிஸ்துவுக்கு மாடலாக கிறிஸ்துவின் முக அமைப்புக்கு ஏற்ற ஒரு முகமுள்ள மனிதனைப் பல ஆண்டுகளாகத்  தேடி  இறுதியில் அப்படி அழகும் கனிவுமான முக அமைப்புள்ள ஒரு மனிதனைக் கண்டுபிடித்து அவனைக் கிறிஸ்துவாக வரைந்தார். பின் எல்லா அப்போஸ்தலர்கள் படத்தையும் வரைந்தார். இறுதியில் யூதாஸ் இஸ்காரியோத் முகத்தை வரைந்திட அதற்கேற்ற முக அமைப்புள்ள ஒரு மனிதனைத் தேடி அலைந்து இறுதியில் ஒருவரைக் கண்டுபிடித்தார்.  

தனது ஓவிய அறையில் அவர் அவனை நிறுத்தி அவனது முகத்தைப் பார்த்து யூதாஸின் முகத்தை வரைந்தார். அப்போது அந்த மனிதன் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது. டாவின்சி அவனிடம், "ஏன் அழுகின்றாய்" என்று கேட்டார். அவன் கூறினான், "ஐயா ஒரு சில ஆண்டுகளுக்குமுன் என்னைத்தான் நீங்கள் கிறிஸ்துவுக்கு மாடலாக நிறுத்தி வரைந்தீர்கள்; இப்போது என்னையே யூதாஸாக வரைகின்றீர்கள்.....எனது பாவப் பழக்கம் என் முகத்தையே அந்தகாரப்படுத்திவிட்டது " என்றான்.  ஆம், பாவம் மனிதனது ஆத்துமாவை மட்டுமல்ல, உடலையும் கெடுக்கின்றது. 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைக்குறித்து "அவர் முற்றிலும் அழகுள்ளவர்" ( உன்னதப்பாட்டு 5 : 16 ) என வாசிக்கின்றோம். அப்படி முற்றிலும் அழகுள்ளவர்மேல் மனுக்குலத்தின் ஒட்டுமொத்தப் பாவங்கள் சுமத்தப்பட்டதால் அவர் தனது அழகை இழந்தார்; அந்தகாரமடைந்தார். அவரது தோற்றத்தைத் தரிசனமாகக் கண்ட ஏசாயா, "அவருக்கு அழகுமில்லை, சௌந்தரியமுமில்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது." (ஏசாயா 53:2) என்று எழுதுகின்றார். 

"மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்" (ஏசாயா  53:4)

முற்றிலும் அழகுள்ள இயேசு  கிறிஸ்து நமக்காக பாவியானபோது தனது அழகினை இழந்தார்.  இது கிறிஸ்து நமக்காக எவ்வளவு அன்பு வைராக்கியம் பாராட்டுகின்றார் என்பதை நமக்கு உணர்த்துவதுடன் பாவப் பழக்கம் நம்மை எப்படி உடல்ரீதியாகவும் கெடுக்கின்றது, நம்மை அலங்கோலப்படுத்துகின்றது என்பதனை உணர்த்துகின்றது. நமது ஊரில்கூட அழகானத் தோற்றமுள்ள சிலர் பாவப் பழக்கங்களால் அலங்கோலமடைந்து நம் கண்முன் வாழ்வதை நாம் பார்த்திருக்கலாம். 

கிறிஸ்து நமக்காக தன்னையே இழந்து  பலியாக்கின அன்பதனை எண்ணிப்பார்ப்போம். அவருக்கு நம்மை முற்றிலும் ஒப்புக்கொடுப்போம். நாம் நமது மனதினில் எண்ணுவதற்கும் மேலாக பரிசுத்தமாய் வாழ நமக்கு உதவிசெய்ய அவர் வல்லவராய் இருக்கின்றார்.  தனது அழகு, அந்தஸ்து, தெய்வீகம் அனைத்தையும் நமக்காக இழந்தவர் நம்மைக் கைவிடுவாரா?
 
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Saturday, March 18, 2023

தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்

ஆதவன் 🌞 782🌻 மார்ச் 20,  2023 திங்கள்கிழமை


"நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்." ( 1 யோவான்  5 : 14 )

நம்மில்  பலரும் நீண்ட விண்ணப்பப் பட்டியலுடன் ஆலயங்களில் வேண்டுதல் செய்கின்றோம்.  பொதுவாக இந்த விண்ணப்பங்களில் தொண்ணூறு நூறு சதவிகிதமும் நமது உலக ஆசைகளை நிறைவேற்றிட வேண்டியே இருக்கின்றன. இயேசுவிடம் கேட்டால் எல்லாம் கிடைக்கும் என்று பலரும் பிரசங்கிக்கின்றனர்; மக்களும் அப்படியே நம்புகின்றனர்.  ஆனால் இது வேத அடிப்படையில் சரியானதுதானா என்று நாம் எண்ணுவதில்லை. 

எந்தத் தகப்பனும் தாயும் தனது பிள்ளைகள் கேட்பதையெல்லாம் உடனேயே  கொடுப்பதில்லை. நமது பிள்ளைக்கு இப்போதைக்கு இது தேவைதானா ? இது நமது பிள்ளைக்கு ஏற்றதாக இருக்குமா? என்பதையெல்லாம் எண்ணிப்பார்த்து, தகுந்ததானால் மட்டுமே அதனைக் கொடுக்கின்றனர்.  அப்படி இருக்கும்போது நமது வானகத்  தந்தைக்கு எது நமக்கு எப்போது தேவை என்பது தெரியாதா? பின் எப்படி கேட்பதையெல்லாம் கொடுப்பார்?   

நாம் உலக காணோட்டத்துடனேயே வேதாகமத்தைப் படிக்கின்றோம். "கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கண்டடைவீர்கள்"  என்று இயேசு கிறிஸ்து கூறியதை நம்பி இந்த வார்த்தைகளைச் சொல்லி ஜெபிக்கின்றோம். ஆனால் இயேசு கிறிஸ்து இந்த வசனத்தை உலக காரியங்களை கேட்பதையும், தேடுவதையும், தட்டுவதையும் பற்றி கூறவில்லை. மாறாக, பரிசுத்த ஆவியைப் பெறுவதற்கு நாம் முயற்சியெடுத்து வேண்டுவதையே குறிப்பிடுகின்றார்.  இந்த வசனத்தின் இறுதியில் இயேசு கூறுகின்றார்,  "பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?." ( லுூக்கா 11 : 13 )

மேலும், நாம் நமது குழந்தைகள்  கீழ்படிதலுள்ளவர்களாக இருக்கவேண்டுமென்றும் விரும்புகின்றோம். தாய் தகப்பனுக்கு விருப்பமில்லாத காரியங்களில் ஈடுபட்டு தறுதலைகளாக அலையும் குழந்தைகளுக்கு அவர்கள் விருப்புவதைக் கொடுக்க நாம் தயங்குகின்றோம். இயேசு கிறிஸ்து கூறினார், "நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்." ( யோவான் 15 : 7 ) ஆம், கிறிஸ்துவிடம் நாம் கேட்பது நிறைவேறவேண்டுமென்றால் நாம் அவரிலும் அவரது வார்த்தைகள் நம்மிலும் நிலைத்திருக்கவேண்டியது அவசியம். 

உலக காரியங்களைவிட ஆவிக்குரிய காரியங்களுக்கே நாம் முக்கியத்துவம் கொடுத்து வேண்டுதல் செய்யவேண்டியது அவசியம். உலக ஆசைகளை நிறைவேற்றவே வேண்டுதல்கள் செய்துகொண்டிருந்தோமானால் நமது வேண்டுதல்கள் தேவனால் அங்கீகரிக்கப்படாது. "நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம்பண்ணுகிறபடியினால், பெற்றுக் கொள்ளாம லிருக்கிறீர்கள்." ( யாக்கோபு 4 : 3 ) என்கின்றார் அப்போஸ்தலரான யாக்கோபு. 

முதலில் தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்போது மற்றவையெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.  எனும் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளில் அசையாத நம்பிக்கைக் கொண்டவர்களாக நாம் இருந்தால் மட்டுமே  நமது வேண்டுதல்கள் வித்தியாசமானதாக, தேவனுக்கு ஏற்புடையதாக இருக்கும். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

துன்பங்கள்

 ஆதவன் 🌞 781🌻 மார்ச் 19,  2023 ஞாயிற்றுக்கிழமை 

"இமைப்பொழுது உன்னைக் கைவிட்டேன்; ஆனாலும் உருக்கமான இரக்கங்களால் உன்னைச் சேர்த்துக்கொள்வேன்" (ஏசாயா 54: 7)

இந்த உலகத்தில் துன்பங்கள் சோதனைகளை அனைவருக்கும் பொதுவானவை. கிறிஸ்துவினிடம் நம்பிக்கைக் கொண்டுள்ளதால் நமக்குத் துன்பங்கள் வராது என்று நாம் சொல்ல முடியாது. மிகக் கடுமையான துன்பங்கள், உலக மனிதர்கள் அடையாத துன்பங்கள் ஆவிக்குரிய மக்களுக்கு ஏற்படலாம். 

பக்தனான யோபு இப்படித் துன்பத்தை அனுபவித்தவர்தான். ஆனால் அவரது துன்பம் கர்த்தரால் அனுமதிக்கப்பட்டத்  துன்பம். அவரைப் பொன்னைப்போல மாற்றிட அனுப்பப்பட்டத்  துன்பம். இதுபோலவே ஆவிக்குரிய வாழ்க்கை வாழும் நமக்கும் வாழ்க்கையில் துன்பங்கள் ஏற்படலாம். அவை நம்மைத் தேவன் புடமிட்டு தனக்கு ஏற்புடையவராகத் தெரிந்துகொள்ளவேண்டிய துன்பமாக இருக்கலாம். "இதோ, உன்னைப் புடமிட்டேன்; ஆனாலும் வெள்ளியைப்போலல்ல, உபத்திரவத்தின் குகையிலே உன்னைத் தெரிந்துகொண்டேன்." ( ஏசாயா 48 : 10 ) என்கின்றார் கர்த்தர். 

தனக்கு ஏற்புடையவர்களாக வாழ்பவர்களைத் தேவன் அப்படியே துன்பத்தில் கைவிட்டுவிடுபவரல்ல. இன்றைய வசனம் கூறுகின்றது, "இமைப்பொழுது உன்னைக் கைவிட்டேன்" என்று. அதாவது ஒரு கண் இமைக்கும் அளவுக்கு மட்டுமே அவர் நம்மைக் கைவிடுகின்றார்.  நமது காலக்கணக்குக்கும் தேவனது காலக்கணக்குக்கும்  வித்தியாசம் உண்டு. நமக்கு நமது துன்பங்கள் நீண்டகாலம் தொடர்வதுபோலத் தெரியலாம். ஆனால், தேவனுக்கு அது ஒரு இமை நொடிபொழுதுதான். ஆம், கர்த்தருக்கு ஒரு நாள் ஆயிரம் ஆண்டுகள்போலவும் ஆயிரம் ஆண்டுகள் ஒரு நாள் போலவும் இருக்கின்றது. (2 பேதுரு 3:8)

சில வேளைகளில் குழந்தைகள் தவறு செய்யும்போது தாய், "நான் உன்னுடன் பேச மாட்டேன் போ" என்கின்றாள், அல்லது சிறிதாகத் தண்டிக்கின்றாள். ஆனால் மறுநிமிடமே அந்தக் குழந்தையினை அணைத்துக்கொள்கின்றாள்.  நமது தேவனும் இதுபோலவே இருக்கின்றார். 

அன்பானவர்களே, இன்றைய வசனத்தில், "உருக்கமான இரக்கங்களால் உன்னைச் சேர்த்துக்கொள்வேன்" என்று கர்த்தர் கூறுகின்றார். அவரது இரக்கம் அளவிடமுடியாதது. அவர் என்றுமே கோபமாய் இருப்பதில்லை; நம்மை அவர் அழித்துவிடுவதில்லை. அவருடைய கிருபையால் நம்மைச் சேர்த்துக்கொள்வார். ஆம்,  "நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை." ( புலம்பல் 3 : 22 )

எனவே அன்பானவர்களே, துன்பங்களைக்கண்டு சோர்ந்துபோகவேண்டாம். நம்மை அவர் கைவிட்டுவிடுவதுபோலத் தெரிந்தாலும் அது ஒரு இமைப் பொழுதுதான். நம்மை அவர் மீண்டும் சேர்த்துக்கொள்வார். துன்பநேரங்களில் கர்த்தரை மகிழ்ச்சியாய்த் துதிப்போம். பவுலும் சீலாவும் சிறையில் துதித்தபோது கட்டுகள் அறுக்கப்பட்டு விடுதலையாகவில்லையா? (அப்போஸ்தலர்பணி - 16:25,26) கர்த்தர்மேலுள்ள விசுவாசத்தைக் காத்துகொண்டு துன்பங்களை எதிர்கொள்வோம். 

"சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்." ( யாக்கோபு 1 : 12 )

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Thursday, March 16, 2023

விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்

ஆதவன் 🌞 780🌻 மார்ச் 18,  2023 சனிக்கிழமை 

"ஒன்றைமாத்திரம் உங்களிடத்தில் அறிய விரும்புகிறேன்; நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலேயோ, விசுவாசக் கேள்வியினாலேயோ, எதனாலே ஆவியைப் பெற்றீர்கள்? ஆவியினாலே ஆரம்பம்பண்ணின நீங்கள் இப்பொழுது மாம்சத்தினாலே முடிவுபெறப்போகிறீர்களோ? நீங்கள் இத்தனை புத்தியீனரா? (கலாத்தியர் 3:2,3) 

காலாத்திய சபையில் அப்போஸ்தலரான பவுலின் உபதேசத்தைக்கேட்டு விசுவாசிகளானவர்களிடம் சில ஊழியர்கள் வந்து பல்வேறு யூத பாரம்பரியங்களைப் பின்பற்றவேண்டுமென்று கற்பித்தனர். மோசேயின் நியாயப்பிரமாணக் கட்டளைகளை அவர்கள் மேன்மையாக எண்ணிக்கொண்டனர். 

இன்றும் இதுபோலவே பல கிறிஸ்தவர்கள் இருக்கின்றனர். பத்துக் கட்டளைகளுக்கு எதிரான பாவம் நான் செய்யவில்லை என்று கூறித் தங்களைத்  தாங்களே ஏமாற்றிக்கொண்டு வாழ்கின்றனர். அன்பானவர்களே, கட்டளைகளுக்குக் கீழ்படிவந்தால் மட்டும் எவரும் தேவனுக்குமுன் நீதிமானாவதில்லை. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான கிருபையின் பிரமாணம் நியாயப்பிரமாணக் கட்டளைகளைவிட வேலானது. ஆம், இயேசு கிறிஸ்து பத்துக் கட்டளைகளைவிட மேலான கட்டளைகளை நமக்குத் தந்துள்ளார். அவற்றுக்குக் கீழ்படியும்போதே நாம் தேவனுக்கு ஏற்புடையவர்கள் ஆகின்றோம்.  எனவேதான் அப்போஸ்தலரான பவுல்,  "நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே எந்த மனுஷனும் நீதிமானாக்கப்படுவதில்லையே." (கலாத்தியர் 2 : 16 ) என்று கூறுகின்றார். 

மேலும், மோசேயின் கட்டளைகளே போதுமென்றால் இயேசு கிறிஸ்து உலகத்துக்கு வந்திருக்கவேண்டிய அவசியமேயில்லை. அவர் பாடுபட்டு மரித்ததும் வீண். கட்டளைகள் பெலனற்றுப் போனதாலேயே இயேசு கிறிஸ்து உலகினில் வந்து  பாடுகள் பட்டு நித்திய மீட்பினை ஏற்படுத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதனையே, "நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமானால் கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே." ( கலாத்தியர் 2 : 21 ) என்று அப்போஸ்தலரான பவுல் அடிகள் எழுதுகின்றார். 

நாம் பாவங்கள் மன்னிக்கப்பட்டு மீட்பு அனுபவத்தைப் பெறும்போது புதிய மனிதர்கள் ஆகின்றோம்.  ஆவிக்குரிய மனிதர்கள் ஆகின்றோம். அதே ஆவிக்குரிய நிலையில் நாம் தொடர்ந்து பயணிக்கவேண்டும். காலத்திய சபையினர் தவறான உபதேசத்தால் ஆவிக்குரிய வழியைவிட்டுத் தடம் மாறினார்கள். எனவேதான் அப்போஸ்தலரான பவுல், கட்டளைகளுக்குக் கீழ்படிந்ததினாலா அல்லது விசுவாசத்தினாலா, எதனாலே ஆவியைப் பெற்றீர்கள்? ஆவியினாலே ஆரம்பம்பண்ணின நீங்கள் இப்பொழுது மாம்சத்தினாலே முடிவுபெறப்போகிறீர்களோ? நீங்கள் இத்தனை புத்தியீனரா? என்று கேட்கின்றார். 

"நியாயப்பிரமாணமானது (கட்டளைகள்) ஒன்றையும் பூரணப்படுத்தவில்லை, அதிக நன்மையான நம்பிக்கையை வருவிப்பதோ பூரணப்படுத்துகிறது; அந்த நம்பிக்கையினாலே (விசுவாசத்தினாலே) தேவனிடத்தில் சேருகிறோம்." ( எபிரெயர் 7 : 19 )

கட்டளைகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை கிறிஸ்துவின்மேல் வைக்கும் விசுவாசத்துக்கு நாம் மொடுக்கவேண்டும். அப்போது கிறிஸ்துவின் ஆவியானவர் நம்மை ஆவிக்குரிய மேலான வழியில் நடத்துவார்.  "நியாயப்பிரமாணத்தினாலே (சட்டம் சார்ந்த செயல்களால்)  ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறதில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது. ஏனெனில் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே." ( கலாத்தியர் 3 : 11 )

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Wednesday, March 15, 2023

கிறிஸ்துவின் வசனத்தின்படி வாழ்ந்துகொண்டு கிறிஸ்துவை அறிவிக்கவேண்டும்.

ஆதவன் 🌞 779🌻 மார்ச் 17,  2023 வெள்ளிக்கிழமை 

"விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்." ( ரோமர் 10 : 17 )

"So then faith cometh by hearing, and hearing by the word of God." ( Romans 10 : 17 )

இன்றைய தியானத்துக்குரிய வசனம் சற்று குழப்பமான வசனம்போலத் தெரிந்தாலும் பொது மொழிபெயர்ப்பு வேதாகமத்தில் பின்வருமாறு தெளிவாக உள்ளது.  "ஆகவே, அறிவிப்பைக் கேட்டால்தான் நம்பிக்கை உண்டாகும்; கிறிஸ்துவைப்பற்றிய செய்தி அறிவிக்கப்பட்டால்தான் அதைக் கேட்க வாய்ப்புண்டு". அதாவது ஒருவருக்கு கிறிஸ்துவின்மேல் விசுவாசம் ஏற்படவேண்டுமானால் முதலில் கிறிஸ்துவைப்பற்றிய செய்தி அறிவிக்கப்படவேண்டியதும் அவர் அதனைக் கேட்கவேண்டியதும்  அவசியம். 

கிறிஸ்துவைப்பற்றிய செய்தியை ஊழியர்கள் மட்டும்தான் அறிவிக்கவேண்டுமென்று அவசியமில்லை. கிறிஸ்துவின் அன்பை ருசித்த அனைவருக்குமே அதனைப் பிறருக்கு அறிவிக்கவேண்டிய கட்டாயம் உண்டு. 

நான் கம்யூனிச சிந்தனைகொண்டு கடவுள் நம்பிக்கை இல்லாமல் வாழ்ந்தபோது என்னைவிட சுமார் 10 வயது இளையவரான ஒரு சகோதரன் எனக்குக் கிறிஸ்துவை அறிவித்தார்.  பாரம்பரிய கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்து சுமார் முப்பத்தியாறு ஆண்டுகள் கடந்தபின்னர் - இரண்டு குழந்தைகளுக்குத் தகப்பன் ஆனபின்னரே நான் கிறிஸ்துவை அறிந்துகொண்டேன். அதுவரை ஆலயங்களில் பல்வேறு பிரசங்கங்களைக் கேட்டிருந்தாலும் நான் கிறிஸ்துவை அறியாதவனாகவே இருந்தேன். 

கிறிஸ்துவைப்பற்றிய செய்தி அறிவிக்கப்பட்டால்தான் அதைக் கேட்க வாய்ப்புண்டு; விசுவாசம் வளர வாய்ப்புண்டு என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. அப்படியானால் எனது முப்பத்தியாறு வயதுவரை எனக்குக் கிறிஸ்துவைப்பற்றிய செய்தி முறையாகச் சரியாக அறிவிக்கப்படவில்லை என்றுதானே பொருள்? 

எனவே நாம் ஒவ்வொருவருமே கிறிஸ்துவை அறியாதவர்களுக்கும் மீட்பு அனுபவம் பெறாத கிறிஸ்தவர்களுக்கும் கிறிஸ்துவை முறையாக அறிவிக்கவேண்டியது அவசியம். அதாவது நாம் கூறும் செய்தியை பிறர் ஏற்றுக்கொள்ளவேண்டுமானால் நம் முதலில் கிறிஸ்துவுக்கேற்ற வாழ்க்கை வாழவேண்டும். அவரது வசனம் நமது வாழ்வில் நிலைகொண்டிருக்கவேண்டும். அப்போது மட்டுமே நாம் கூறும் கிறிஸ்துவின் செய்தி மற்றவர்களது விசுவாசத்தை வளர்க்க உதவும். 

இதனையே அப்போஸ்தலரான பவுல் தனது சீடன் தீமோத்தேயுவுக்குப் பின்வருமாறு  எழுதுகின்றார்:- "உன்னைக்குறித்தும் உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாயிரு, இவைகளில் நிலைகொண்டிரு, இப்படிச் செய்வாயானால், உன்னையும் உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய்." ( 1 தீமோத்தேயு 4 : 16 ). ஆம், கிறிஸ்துவின் வசனத்தின்படி வாழ்ந்துகொண்டு நாம் கிறிஸ்துவை பிறருக்கு அறிவிக்கவேண்டும்.

அன்பானவர்களே, கிறிஸ்துவைப்பற்றிய செய்தி அறிவிக்கப்பட்டால்தான் அதைக் கேட்க வாய்ப்புண்டு. ஆனால், அப்படி அறிவிக்குமுன் நாமே நமது வாழ்க்கையினை கிறிஸ்துவுக்கேற்ற வாழ்க்கையாக மாற்றிக்கொள்வோம். அப்போது நம்மையும் நம் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்வோம்.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Tuesday, March 14, 2023

பெற்றோருக்கு எல்லாவிதத்திலும் கீழ்படிய வேண்டுமா?

ஆதவன் 🌞 778🌻 மார்ச் 16,  2023 வியாழக்கிழமை 

"பிள்ளைகளே, உங்கள் பெற்றோருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம்." ( எபேசியர் 6 : 1 )


தாய் தகப்பனை மதித்து நடக்கவேண்டியது நமது கடமை. ஆனால், அப்படி நாம் மதித்து நடப்பதிலும் கர்த்தருக்கே முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்று இன்றைய தியான வசனம் நமக்கு அறிவுறுத்துகின்றது.  

மோசேமூலம் தேவன் அளித்த பத்துக் கட்டளைகளில் ஒன்று,  "உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக." ( யாத்திராகமம் 20 : 12 ) என்பது. அதாவது, நாம் தாய் தகப்பனை மதித்து அவர்களை கனம் பண்ணும்போது நமது வாழ்நாள் அதிகரிக்கும். 

ஆனால், நமது தாய் தகப்பன் தேவனுக்கு ஏற்பில்லாத அல்லது பாவமான காரியங்களில் நம்மை ஈடுபடச் செய்யும்போது அல்லது சொல்லும்போது நாம் அவர்களுக்கு கீழ்ப்படிய வேண்டிய அவசியமில்லை. அதனையே இன்றைய வசனத்தில்,  "உங்கள் பெற்றோருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம்." என்று கூறப்பட்டுள்ளது. 

கர்த்தருக்குள் கீழ்ப்படிதல் என்பது கர்த்தர் பாவம் என்று விலக்கியுள்ள காரியங்களைத் தவிர்த்து மற்ற காரியங்களில் மட்டும் அவர்களது சொல்லைக் கேட்பது.  சில தகப்பன்மார் தங்களது பிள்ளைகளையே மது வாங்கிவர கடைகளுக்கு அனுப்புகின்றனர். அல்லது முக்கியமான சில காரியங்களில் உலக நன்மைகளை பெறுவதற்காக பிள்ளைகளை பொய்ச்சொல்லச் சொல்லி வற்புறுத்துகின்றனர்.  மேலும் சில பத்திரிகை செய்திகளில் தாயும் தகப்பனுமே தங்கள் பெண் குழந்தைகளை விபச்சாரம் செய்யத் தூண்டும செய்திகளை நாம் வாசிக்கின்றோம். இத்தகைய காரியங்களில் நாம் பெற்றோருக்குக் கீழ்படியவேண்டிய அவசியமில்லை.  

சில குடும்பங்களில் சொத்துத் தகராறுகள் ஏற்படும்போது அல்லது பிறரது சொத்துக்களை அநியாயமாக அபகரிக்க முயலும் சில தகப்பன்மார் தங்களது திருமணமான மகன் அல்லது மகள்களை தங்களுக்குச் சாதகமாக பொய்கூறும்படி வற்புறுத்துவதுண்டு.

அன்பானவர்களே, நாம்  பெற்றோரை மதிக்கவேண்டும், அவர்களைப் பராமரிக்கவேண்டும் இது கட்டாயம். ஆனால் அவர்கள் கர்த்தருக்கு ஏற்பில்லாத பாவ காரியங்களைச் செய்யும்படி நம்மைத் தூண்டும்போது   நாம் அவர்களுக்குக் கீழ்படியவேண்டிய அவசியமில்லை. 

குறிப்பாக, எந்த காரியத்தை நம் பெற்றோர்கள் நம்மை செய்யச்சொல்லி கேட்டுக்கொண்டாலும் நாம் கர்த்தருக்கே முன்னுரிமை கொடுக்கவேண்டும். அதாவது அவர்கள் நம்மைச் செய்யச்சொல்லும் காரியம் கர்த்தரின்முன் நியாயமாக இருக்குமா என்று சிந்தித்து அப்படி நியாயமாய் இருந்தால் மட்டுமே நாம் செய்யவேண்டும். 

வயது எத்தனை ஏறினாலும் சிலர் திருந்தாத ஜடங்களாகவும் அல்லது மனிதநேயமற்றவர்களாகவும் இருக்கின்றனர். அத்தகைய பெற்றோரை, நம் பெற்றோர் என்பதால்  வீட்டில் ஏற்றுக்கொள்வோம்; அவர்களைப் பராமரிப்போம். ஆனால் அவர்களது அநியாய சிந்தனைக்கும் அறிவுரைக்கும் கீழ்படியாமலிருப்போம். நமது  பெற்றோருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படிவோம், இது நியாயம்.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

பின்மாறிடாமல் நமது உரிமைப்பேறை காத்துக்கொள்வோம்.

ஆதவன் 🌞 777🌻 மார்ச் 15,  2023 புதன்கிழமை 

"சகோதரரே, நாம் ஈசாக்கைப்போல வாக்குத்தத்தத்துப் பிள்ளைகளாயிருக்கிறோம்." ( கலாத்தியர் 4 : 28 )

இன்றைய தியானத்துக்குரிய வசனத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்ட மக்களைப்பார்த்து  வாக்குத்தத்தத்தின் பிள்ளைகள் என்று குறிப்பிடுகின்றார். 

கர்த்தரால் மீட்கப்பட்ட மக்கள் கிறிஸ்துவைப்போல வாக்குறுதியின் பிள்ளைகள். வேதத்தின் வாக்குத்தத்தங்கள் அவர்களுக்கே உரிமையானவை. மீட்பு அனுபவம் பெறாதவர்களை அடிமையின் பிள்ளைகள். அவர்கள் இன்னும் நியாயப்பிரமாண கட்டளைகளுக்கே அடிமைகளாகவும் ஆவியானவரின் வழிநடத்துதலுக்கு உட்படாதவர்களுமாவார்கள்.. 

"ஆபிரகாமுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள் என்று எழுதியிருக்கிறது; ஒருவன் அடிமையானவளிடத்தில் பிறந்தவன் ஒருவன் சுயாதீனமுள்ளவளிடத்தில் (உரிமைப் பெண்ணிடம்) பிறந்தவன்." ( கலாத்தியர் 4 : 22 ) 

தேவன் அளித்த வாக்குத்தத்தத்தின்படி பிறந்தவனே ஈசாக்கு. ஆனால் ஆகார் எனும் ஆபிரகாமின் அடிமைப்பெண்ணிடம் பிறந்தவன் இஸ்மவேல் (இஸ்மாயில்). வாக்குத்தத்தத்தின்படி பிறந்தவனே ஆசீர்வாதத்தைப் பெறமுடியும்.  இது குறித்து ஆதியாகமத்தில் ஆபிரகாமின் மனைவியாகிய சாராள் கூறுவது கவனிக்கத்தக்கது. அவள் ஆபிரகாமை நோக்கி: "இந்த அடிமைப்பெண்ணையும் அவள் மகனையும் புறம்பே தள்ளும்; இந்த அடிமைப்பெண்ணின் மகன் என் குமாரனாகிய ஈசாக்கோடே சுதந்திரவாளியாயிருப்பதில்லை என்றாள்." ( ஆதியாகமம் 21 : 10 )

ஆபிரகாமுக்கு இது வருத்தமாக் இருந்தது. ஆனால் தேவன் சாராள் சொல்லியதையே அங்கீகரித்தார். 

"அப்பொழுது தேவன் ஆபிரகாமை நோக்கி: அந்தப் பிள்ளையையும், உன் அடிமைப்பெண்ணையும் குறித்துச் சொல்லப்பட்டது உனக்குத் துக்கமாயிருக்க வேண்டாம்; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்; ஆதலால் சாராள் உனக்குச் சொல்வதெல்லாவற்றையும் கேள்." ( ஆதியாகமம் 21 : 12 ) என்றார். ஆம், அடிமையின் மகன் மேலான ஆசீர்வாதத்தினைப் பெறத்  தகுதியற்றவன் ஆகிவிட்டான். 

அன்பானவர்களே, நாம் பாரம்பரிய சடங்கு சம்பிரதாயங்கள்,  வழிபாட்டு முறைமைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்துக்கொண்டிருப்போமானால் நாம் அடிமையான ஆகாரின் பிள்ளையைப்போலவே இருப்போம். கிறிஸ்தவ பெற்றோருக்கு பிள்ளைகளாகப் பிறந்துவிட்டதால் மட்டுமே நாம் அவருக்கு உரியவர்கள் ஆக முடியாது. அவரது சந்ததி ஆகிடமுடியாது. 

கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்படும்போது மட்டுமே அவரோடு நெருங்கிய உறவுகொண்டு வாக்குத்தத்தத்தின்  பிள்ளைகளாகின்றோம். அதாவது, அவரோடு மகன், மகள் உறவைப் பெறுகின்றோம். "அதெப்படியென்றால், மாம்சத்தின்படி பிள்ளைகளானவர்கள் தேவனுடைய பிள்ளைகளல்ல, வாக்குத்தத்தத்தின்படி பிள்ளைகளானவர்களே அந்தச் சந்ததி என்றெண்ணப்படுகிறார்கள்." ( ரோமர் 9 : 8 ) என்கின்றார் பவுல்  அடிகள். 

ஆம் அன்பானவர்களே, கிறிஸ்துவால் மீட்கப்பட்ட நாமே உரிமைப்பெண்ணின் பிள்ளைகள். மகன், மகளுக்குள்ள உரிமை நமக்கே உண்டு. "இப்படியிருக்க, சகோதரரே, நாம் அடிமையானவளுக்குப் பிள்ளைகளாயிராமல், சுயாதீனமுள்ளவளுக்கே (உரிமைப் பெண்ணின்)  பிள்ளைகளாயிருக்கிறோம்." ( கலாத்தியர் 4 : 31 ) கிறிஸ்துவைவிட்டு பின்மாறிடாமல் நமது உரிமைப்பேறை காத்துக்கொள்வோம். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - லுூக்கா 1 : 50 / Luke 1:50

  " ஆதவன் " தியானம் - 1979 ஜூலை 09, வியாழன் 2026       "அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுற...