Sunday, February 26, 2023

நாம் மெய்யாகவே கிறிஸ்தவர்களா?

ஆதவன் 🌞 762🌻 பிப்ருவரி 28,  2023 செவ்வாய்க்கிழமை 

"தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட் பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல." ( ரோமர் 8 : 9 )


இன்றைய தியானத்துக்குரிய வசனம் என்னை அதிகமாய்ச் சிந்திக்கவைத்தது. கிறிஸ்தவ பெற்றோருக்குப் பிறந்ததினாலும் ஆலயங்களுக்குச் செல்வதாலும், கிறிஸ்தவ சடங்குகளைப் பின்பற்றுவதாலும் நம்மை நாம் கிறிஸ்தவர்கள் என்று எண்ணிக்கொள்கின்றோம். கிறிஸ்தவர்களில் தங்களை ஒருபடி மேலானவர்களாக எண்ணிக்கொள்ளும் ஆவிக்குரிய சபை எனும் சபைகளுக்குச் செல்பவர்கள்  தாங்களே மெய்யான கிறிஸ்தவர்கள் என்று எண்ணிக்கொள்கின்றனர். குறிப்பாக பெந்தெகொஸ்தே சபை அனுதாபிகள் தங்கள் சபை மக்களைத்தவிர மற்றவர்களைக் கிறிஸ்தவர்கள் என்று ஏற்றுக்கொள்வதில்லை. 

ஆனால் இன்றைய வசனம் "கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல."  என்று அதிரடியாக அறிவிக்கின்றது. மத வழிபாடுகளைப் பின்பற்றுவதாலோ, ஆராதனைகளில் கலந்துகொள்வதாலோ, மூழ்கி ஞானஸ்நானம் எடுப்பதாலேயோ மட்டுமே ஒருவன் கிறிஸ்தவன் ஆகிவிடுவதில்லை. மாறாக, கிறிஸ்துவின் ஆவி ஒருவனில் செயல்படவேண்டும். அவனே கிறிஸ்தவன் அல்லது கிறிஸ்தவள். 

மனதில் நூறு சதவிகித உலக ஆசைகளை வைத்துக்கொண்டு அந்த ஆசைகளை நிறைவேற்றவேண்டி மன்றாடவே ஆலயங்களுக்குச் சென்று வழிபாடுகளில் கலந்துகொண்டு, தான் செல்லும் ஆலய வழிபாடே மெய்யானது மற்றவர்களது வழிபாட்டு முறைகள் பொய்யானவை என்று தர்க்கம்செய்துகொண்டு வாழும் மனிதர்கள் சிந்திக்கவேண்டிய வசனம் இது. 

"தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட் பட்டவர்களாயிருப்பீர்கள்." என்று தெளிவாகக் கூறுகின்றது இன்றைய வசனம். அதாவது நமது உள்ளத்தில் கிறிஸ்துவின் ஆவி இருக்குமானால் நமது சிந்தனை, செயல்கள் ஆவிக்குரிய செயல்பாடாக மாறும். அதாவது உலக ஆசைகள் குறைத்து கிறிஸ்துவின்மேலுள்ள ஆசைகள் அதிகரிக்கும். கிறிஸ்து விரும்பும் செயல்பாடுகளை செய்யவேண்டும் எனும் ஆர்வம் நமக்குள் ஏற்படும். அப்படியானால்மட்டுமே நமக்குள் தேவனுடைய ஆவியானவர் இருக்கின்றார் என்று பொருள். 

அன்பானவர்களே, நாம் இந்த நிலைக்கு உடனடியாக வந்துவிடமுடியாது. ஆனால், இந்த நிலைக்கு வரவேண்டும் எனும்ஆர்வம் நமக்குள் இருக்கவேண்டும். அப்படி இருக்கும்போது அதனைச் செயல்படுத்த கிறிஸ்து  உதவுவார்.  "பலவீனத்தில் என் பலம் பூரணமாய் விளங்கும்" என்று கூறியுள்ளாரே? (2 கொரிந்தியர் 12:9) இந்த விஷயத்தில் நமது பலவீனத்தை நாம் ஒத்துக்கொண்டு அவரது துணையை  வேண்டும்போது தேவன் நமக்கு உதவிசெய்வார்.  

ஆண்டவரே, நான் மாம்சத்துட்பட்டவனாய் இராமல் ஆவிக்குட்பட்டவனாக வாழ விரும்புகின்றேன். ஆனால் என்னால் அது முடியவில்லை. எனக்கு உதவும். "தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட் பட்டவர்களாயிருப்பீர்கள்." எனும் வார்த்தைகள் என்னில் செயல்பட உதவிசெய்யும் என வேண்டுவோம். 

"கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல." எனும் வார்த்தைகள் நம்மை பயமுறுத்தத் துவங்கிவிட்டால் நாம் இன்னும் கிறிஸ்தவர்கள் ஆகவில்லை என்று உணருவோம். அப்படி உணரும்போது நாம் ஆவிக்குரிய வாழ்வின் முதல்படியை அடைந்துவிட்டோம் என்று பொருள். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Saturday, February 25, 2023

இருதயத்தை மாற்றிடா வழிபாடுகள் அர்த்தமிழந்தவை

ஆதவன் 🌞 761🌻 பிப்ருவரி 27,  2023 திங்கள்கிழமை 

"என்னிடத்தில் திரும்புங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; அப்பொழுது நான் உங்களிடத்துக்குத் திரும்புவேன்."  ( சகரியா 1 : 3 )

மனிதர்கள் பலரும் கடவுள் தங்கள் விண்ணப்பிக்கும் அனைத்துக் காரியங்களையும் நிறைவேற்றித் தரவேண்டும் என்று எண்ணுகின்றனர். ஆலயங்களில் பெரிய விண்ணப்பப் பட்டியலுடன் ஜெபிக்கின்றனர். தேவன் தனது அளவில்லா கிருபையினால் மனிதர்களது விண்ணப்பங்களை நிறைவேற்றிக்கொடுக்கின்றார். ஆனால் இத்துடன் நாம் திருப்தி அடைவோமென்றால் நாம் தேவனை அறியாதக் குருடர்களாகவே இருப்போம். கிறிஸ்தவம் காட்டும்  ஆன்மீகத்துக்கும் இந்தவித ஜெபங்களுக்கும் அர்த்தமே இல்லாமல் போய்விடும். 

நாம் பொதுவாக கடவுளை நம்மிடம் திருப்ப முயலுகின்றோம்  அனைத்து மத வழிபாடுகளும் இதனையே முயலுகின்றன. மனித அறிவால்  சிந்திக்கப்பட்ட இந்த வழிபாட்டு முறைமைகளும் இதனையே காட்டுகின்றன. இப்படிச் செய்தால் கடவுள் நம்மிடம் அன்பாய் இருப்பார் என எண்ணிக்கொண்டு சில காரியங்களை மனிதர்கள்  செய்கின்றனர்.  

மனிதர்கள்  மற்றவர்களது புகழ்ச்சியையும், பாராட்டையும் மாலை மரியாதையையும் எதிர்பார்த்து அவைகளால் மயங்குவார்கள். எனவே, தேவனும் இவற்றால் மயங்குவார் என எண்ணுவது மனித சிந்தனையே. மதச் சடங்குகள் இவற்றையே செய்கின்றன. ஆனால் நமது தேவன் இருதயத்தையே நோக்கிப்பார்க்கின்றார். எனவேதான் இயேசு கிறிஸ்து, "இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்" (மத்தேயு - 5:8)  என்று கூறினார். 

அன்பானவர்களே, நாம் தேவனை நம்மிடம் திருப்ப உலக மனிதர்களைத் திருப்திப்படுத்த முயல்வதுபோன்ற முயற்சிகள் செய்வதைவிட நாம் அவரிடம் திரும்பவேண்டும். நமது இருதயம் அவருக்கு ஏற்புடையதாக மாறவேண்டியது  அவசியம். இருதயத்தை அழுக்கடைந்த சாக்கடையாக வைத்துக்கொண்டு நாம் செய்யும் வழிபாட்டு முயற்சிகள் அர்த்தமற்றவையே. "நீங்கள் அக்கிரமத்தோடே ஆசரிக்கிற மாதப்பிறப்பையும், ஓய்வு நாளையும், சபைக்கூட்டத்தையும் நான் இனிச்சகிக்கமாட்டேன்." ( ஏசாயா 1 : 13 ) என்று ஏசாயா மூலம் கர்த்தர் கூறவில்லையா?

"உங்களைக் கழுவிச் சுத்திகரியுங்கள்; உங்கள் கிரியைகளின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு, தீமைசெய்தலை விட்டு ஓயுங்கள்." ( ஏசாயா 1 : 16 ) என்கின்றார் பரிசுத்தர். 

நாம் உலக மனிதர்களைப்போல வழிபாடுகளுக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்துவிட்டு  நமது இருதயத்தை அவருக்கு ஏற்புடையதாக மாற்றிடாமல் இருப்போமானால் நமது வழிபாடுகள் அர்த்தமிழந்தவைகளாகவே இருக்கும். எனவேதான், "என்னிடத்தில் திரும்புங்கள் அப்பொழுது நான் உங்களிடத்துக்குத் திரும்புவேன்."  ( சகரியா 1 : 3 ) என்று  கூறுகின்றார் கர்த்தராகிய ஆண்டவர்.

நமது இருதயங்களை அவருக்கு ஏற்புடையதாக மாற்றுவோம்; அப்போது மட்டுமே நாம் அவரை அறிய முடியும்; அவரது வழிகாட்டுதலையும் அவரது உடனிருப்பையும் நமது வாழ்வில் உணர முடியும். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Friday, February 24, 2023

எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளி

ஆதவன் 🌞 760🌻 பிப்ருவரி 26,  2023 ஞாயிற்றுக்கிழமை 

"அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது." ( யோவான் 1 : 4 )

இயேசு கிறிஸ்துவுக்கு வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு பெயர் "மெய்யான ஒளி". கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தன்னைக் குறித்துப் பேசும்போதும் இதனைத் தெளிவுபடுத்தி, "நான் உலகத்துக்கு ஒளியாயிருக்கிறேன்" (யோவான் 8:12) என்று கூறினார். இதுபோல, "நானே, வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்" என்றார்.   (யோவான் 14:6)

ஆம், அவருக்குள் இருந்த ஜீவன்தான் மனிதருக்கு ஒளியாக இருந்தது. 

மத்தேயு நற்செய்தியாளரும், "இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது.." (மத்தேயு 4:15) என்று எழுதுகின்றார். ஆம், பாவ இருளில் மூழ்கி இருந்த மக்கள் இயேசு கிறிஸ்துவின் மூலம் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள். நித்திய ஜீவனான அவரே மனிதர்களுக்கு ஒளியாக இருக்கின்றார். 

மனித இருதயங்கள் பாவ இருளில் மூழ்கி இருந்தன. இருளான அந்த இருதயங்களைப் பிரகாசிக்கச் செய்யவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மனிதனானார். ஆதியில் உலகத்தின்மேல் இருள் இருந்தது.(ஆதியாகமம் 1:2) தேவன் ஒளி உண்டாகுக என்று கூறவே ஒளி உண்டாயிற்று. இதுபோலவே மனித மனங்களிலுள்ள இருளைக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நீக்குகின்றார். இதனை,  "இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசு கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்." (2 கொரிந்தியர் 4:6) என்கின்றார் பவுல் அடிகள். 

இப்படி ஒளியாக வந்த இயேசு கிறிஸ்து குறிப்பிட்டச் சிலருக்கு மட்டும் ஒளி கொடுப்பவரல்ல. அவரால் எந்த மனிதனையும் பிரகாசிக்கச் செய்ய முடியும். "உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி." ( யோவான் 1 : 9 )

எல்லாவிதத்திலும் நம்மை அவர் ஒளிர்விக்க முடியும். அன்பானவர்களே, இதனை வாசிக்கும் நீங்கள் ஒருவேளை பல்வேறு பாவப் பழக்கவழக்கங்கள்,  துன்பங்கள், நோய்கள், கடன் தொல்லைகள், பிரச்சனைகளால் சிக்குண்டு தவிக்கக்கூடும். ஆனால், எந்த விதத் துன்பம் இருந்தாலும் மெய்யான ஒளியாகிய அவரிடம் சரணடைந்துகொள்ளுங்கள்.  "ஆண்டவரே, இருளான எனது வாழ்வை ஒளிமிக்கதாக மாற்றிட உம்மால் கூடும் என நான் நம்புகின்றேன். என்மேல் உமது ஒளிக்கதிர்களை வீசி என்னை ஒளிரவிடும் என்று அவரை அண்டிக்கொள்ளுங்கள். 

கிறிஸ்தவத்தில் நாம் பரிசுத்தர்களாக, புனிதர்களாக மதிக்கும் பலரும் பாவ இருளில் வாழ்ந்தவர்களே. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஒளியால் இன்று அவர்கள் ஜொலித்துக்கொண்டிருக்கிறார்கள்.  நம்மை அவருக்கு ஒப்புக்கொடுப்போம். தேவன் இயேசு கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் நமது இருதயங்களிலே பிரகாசிக்கச்செய்வார். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Thursday, February 23, 2023

பாவத்தில் மரித்துப்போயிருக்கும் மனிதர்களையும் பரிசுத்தவான்களாக மாற்றமுடியும்.

ஆதவன் 🌞 759🌻 பிப்ருவரி 25,  2023 சனிக்கிழமை 

"தேவன் மரித்தோரை எழுப்புகிறது நம்பக்கூடாத  காரியமென்று நீங்கள் எண்ணுகிறதென்ன?" ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 26 : 8 )

தேவன்மேல் நாம் அசைக்கமுடியாத விசுவாசமுள்ளவர்களாய் இருக்கவேண்டும். வெறுமனே "விசுவாசிக்கிறேன்" என்று கூறுவதல்ல, அவரால் எல்லாம் செய்ய முடியும் என்று விசுவாசிக்கவேண்டும். தேவன் அபிராமுக்குத் தரிசனமானபோது தன்னை சர்வ வல்லமையுள்ள தேவன் என்றே அறிமுகப்படுத்திக்கொண்டார். "ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு." ( ஆதியாகமம் 17 : 1 ) என்றார் என்று வாசிக்கின்றோம். 

சர்வ வல்லமை என்பது எதனையும் செய்யக்கூடிய வல்லமை. இல்லாதவைகளை இருக்கின்றவைகளாக  செய்யத்தக்க வல்லமை.  "அநேக ஜாதிகளுக்கு உன்னைத் தகப்பனாக ஏற்படுத்தினேன் என்று எழுதியிருக்கிறபடி, அவன் தான் விசுவாசித்தவருமாய், மரித்தோரை உயிர்ப்பித்து, இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கிறவருமாயிருக்கிற தேவனுக்கு முன்பாக நம்மெல்லாருக்கும் தகப்பனானான்." (ரோமர் 4:17) என்று வாசிக்கின்றோம்.

நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வாழ்ந்தபோது மரித்த பலரை உயிரோடு எழுப்பினார். அவற்றில் உச்சக்கட்ட அதிசயம் மரித்து நான்கு நாட்களுக்குப்பின் கல்லறையில் சென்று மரித்த லாசரை உயிரோடு எழுப்பியது. அவரது சீடர்கள் மட்டுமல்ல, "அன்றியும் அவருடனேகூட இருந்த ஜனங்கள் அவர் லாசருவைக் கல்லறையிலிருந்து வெளியே வரவழைத்து, அவனை உயிரோடே எழுப்பினாரென்று சாட்சி கொடுத்தார்கள்." ( யோவான் 12 : 17 )

ஆனால் யூதர்கள் பலரும் அதிகாரிகளும் இதனை நம்பவில்லை. நம்பிய சிலரும் இதற்குச் சாட்சி இல்லாமல் போகவேண்டும் என்று லாசருவையும் கொலைசெய்ய எண்ணினார்கள். ஆம், அவர்கள் மேசியா வருவார் என நம்பினார்கள் ஆனால் வந்த மேசியாவை அடையாளம் காணவில்லை. 

எனவே தான் உறுதியான விசுவாசம் நமக்குத் தேவைப்படுகின்றது. இயேசு கிறிஸ்துவை சர்வ வல்லவர் என்று விசுவாசிக்கும்போதுதான் அவரால் நம்மை பாவத்திலிருந்து விடுவிக்கமுடியுமென்று விசுவாசிக்கமுடியும். இல்லையானால் சில உலக மனிதர்கள் கூறுவதுபோல, "நாம் மனிதர்கள்தானே எனவே இந்தப் பாவங்கள் நமக்கு இயற்கையாகவே உள்ளவை; இவைகளை மேற்கொள்ளமுடியாது" என்று கூறிக்கொண்டு தொடர்ந்து குடியிலும், விபச்சாரத்தில், பொய்யிலும், பொறாமையிலும், வஞ்சகத்திலும் வாழ்ந்துகொண்டிருப்போம்.  

ஆம் அன்பானவர்களே, மரித்தவர்களை உயிரோடு எழுப்ப வல்ல தேவனுக்கு பாவத்தில் மரித்துப்போயிருக்கும் மனிதர்களையும் பரிசுத்தவான்களாக மாற்றமுடியும். பல புனிதர்களது வாழ்க்கை வரலாறுகள் இதற்குச் சாட்சிகூறுகின்றன. நமக்கு உண்மையிலேயே ஒரு தூய வாழ்வு வாழவேண்டுமெனும் எண்ணமும் ஆசையும் இருந்தால் தேவனிடம் நமது விருப்பதைத் தெரிவிக்கும்போது நமக்கு உதவுவார். 

அகிரிப்பா ராஜாவைநோக்கிக் கேட்ட அதே கேள்வியை அப்போஸ்தலரான பவுல் நம்மைப்பார்த்தும் கேட்கின்றார், "தேவன் மரித்தோரை எழுப்புகிறது நம்பப்கூடாத  காரியமென்று நீங்கள் எண்ணுகிறதென்ன?" 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Wednesday, February 22, 2023

அவருக்குமுன் தைரியமாக நிற்கத்தக்கதாக....

ஆதவன் 🌞 758 🌻 பிப்ருவரி 24,  2023 வெள்ளிக்கிழமை 

"இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், கோபமூட்டுதலில் நடந்ததுபோல உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள் என்று சொல்லியிருக்கிறதே." ( எபிரெயர் 3 : 15 )

தேவன் தனது  அடியார்களிடம் பல்வேறு வழிகளில் இடைபடுகின்றார், பேசுகின்றார். நாம் வேதாகமத்தை வாசிக்கும்போது, நல்ல ஒரு பிரசங்கத்தைக் கேட்கும்போது, அல்லது சில மனிதர்கள் பேசும் பேச்சுகள்மூலம் நம்மிடம் பேசுகின்றார். இதனைக் கேட்குமளவு நமது இருதயம் பக்குவப்படவேண்டும். இவற்றுக்கும் மேலான வழிகளிலும் தேவன் மனிதர்களிடம் பேசுகின்றார். கனவுகள்மூலம், தரிசனங்கள்மூலம், மனிதர்கள் பேசுவதுபோல தெளிவான குரல்மூலம் தேவன் பேசுகின்றார். 

இன்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலம் பேசும் தேவன்  பழைய ஏற்பாட்டுக்காலத்தில் தீர்க்கதரிசிகள்மூலம்  பல்வேறு வகைகளில் பேசினார்.   இதனை நாம், "பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்." ( எபிரெயர் 1 : 1, 2 ) என்று வாசிக்கின்றோம். 

ஆனால், இப்படி தேவன் பேசியும், மோசேமூலம் பல்வேறு அதிசயங்கள் மூலம் தன்னை வெளிப்படுத்தியும் தேவனது குரலை மக்கள் கேட்டுக் கீழ்ப்படியவில்லை. இதனையே சங்கீதம் 95 இல் நாம் வாசிக்கின்றோம். அதனையே இன்றைய தியானத்துக்குரிய வசனமாக நாம் எபிரெயர் நிருபத்தில் வாசிக்கின்றோம். நாற்பது வருடங்கள் தேவன் அவர்களை பல்வேறு முறைகளில் தண்டித்து திருத்த முயன்றும் அவர்கள் திருந்தவில்லை. அப்படிக் கீழ்படியாததினால் தேவ கோபத்தினால் அவர்கள் அனைவரும் அழிக்கப்பட்டனர். 

"கேட்டவர்களில் கோபமூட்டினவர்கள் யார்? மோசேயினால் எகிப்திலிருந்து புறப்பட்ட யாவரும் அப்படிச் செய்தார்களல்லவா?மேலும், அவர் நாற்பது வருஷமாய் யாரை அரோசித்தார்? பாவஞ்செய்தவர்களையல்லவா? அவர்களுடைய சவங்கள் வனாந்தரத்தில் விழுந்துபோயிற்றே." ( எபிரெயர் 3 : 16, 17 )

அன்பானவர்களே, இதனையே எபிரெய நிறுத்து ஆசிரியர் நமக்கு இன்று ஒரு எச்சரிக்கையாக எழுதுகின்றார், "கோபமூட்டுதலில் நடந்ததுபோல உங்கள் இருதயங்களைக் கடினப் படுத்தாதிருங்கள்"  என்று. எனவே நாம் தேவ குரலைக் கேட்கும் அனுபவமும் அதற்குக் கீழ்ப்படிந்து வாழும் தன்மையும் நமக்கு வேண்டும். 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கிருபையும் இரக்கமும் அன்பும் உள்ளவர்தான். ஆனால், நியாயத் தீர்ப்பு நாளில் அவர் உண்மையுள்ள நியாயாதிபதியாக வந்து நியாயம் தீர்ப்பார். அந்த நியாயத் தீர்ப்பில் அவருக்குமுன் தைரியமாக நிற்கத்தக்கதாக நமது வாழ்க்கையினை அமைத்துக்கொள்ள முயலுவோம். கர்த்தர்தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக. 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

உலக மனிதர்களைப்போல போராடுவது தேவ சித்தமல்ல.

ஆதவன் 🌞 757 🌻 பிப்ருவரி 23,  2023 வியாழக்கிழமை 

"யாவருக்கும் செலுத்தவேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள்; எவனுக்கு வரியைச் செலுத்தவேண்டியதோ அவனுக்கு வரியையும், எவனுக்குத் தீர்வையைச் செலுத்தவேண்டியதோ அவனுக்குத் தீர்வையையும் செலுத்துங்கள்; எவனுக்குப் பயப்படவேண்டியதோ அவனுக்குப் பயப்படுங்கள்; எவனைக் கனம்பண்ணவேண்டியதோ அவனைக் கனம்பண்ணுங்கள்." (ரோமர் 13:7)

கிறிஸ்தவர்களாகிய நாம் விண்ணுலக வாழ்க்கைக்கு அழைக்கப்பட்டிருந்தாலும் இந்த உலகத்தில் வாழும் நாட்களில் நாம் வாழும் நாட்டின் அரசியல் சட்டத்துக்கும், இதர சட்டங்களுக்கும் அதிகாரிகளுக்கும் ஆளுவோருக்கும் கட்டுப்பட்டு நடக்கவேண்டும், சட்டங்களையும் அதிகாரிகளையும் ஆளுவோரையும் மதிக்கவேண்டும்.

சில கிறிஸ்தவ பிரிவினர் தங்கள் ஏதோ இன்னொரு உலகத்திலிருந்து வந்தவர்கள்போல பேசுவார்கள். நாம் கர்த்தர் ஒருவரையே கனம் பண்ணவேண்டும் என்பார்கள் ஆனால், தங்களுக்கு உலகினில் ஏதாவது காரியம் நிறைவேறவேண்டுமானால் அதிகாரிகளையும்  அரசியல்வாதிகளையும் தேடி ஓடுவார்கள்.

அப்போஸ்தலரான பவுல் அடிகள் உலக அதிகாரிகளும் தேவ ஊழியர்களாக இருக்கிறார்கள் என்கின்றார். அதாவது அவர்களது அதிகாரம் தேவனால் உண்டாயிருக்கிறது.  "எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது." (ரோமர் 13:1)

மேலும், "உனக்கு நன்மை உண்டாகும்பொருட்டு, அவன் தேவஊழியக்காரனாயிருக்கிறான். நீ தீமைசெய்தால் பயந்திரு; பட்டயத்தை அவன் விருதாவாய்ப் பிடித்திருக்கவில்லை; தீமைசெய்கிறவன்மேல் கோபாக்கினை வரப்பண்ணும்படி, அவன் நீதியைச் செலுத்துகிற தேவஊழியக்காரனாயிருக்கிறானே." (ரோமர் 13:4)

இந்த உலக அரசாங்கங்கள் மக்களிடம் வரி வசூலிக்கின்றன. அந்த வரிப்பணம் அரசாங்கத்தின் இத்தகைய செலவினங்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றது. ஆம், " இதற்காகவே நீங்கள் வரியையும் கொடுக்கிறீர்கள். அவர்கள் இந்த வேலையைப் பார்த்துவருகிற தேவஊழியக்காரராயிருக்கிறார்களே." (ரோமர் 13:6) 

"எவனுக்குப் பயப்படவேண்டியதோ அவனுக்குப் பயப்படுங்கள்; எவனைக் கனம்பண்ணவேண்டியதோ அவனைக் கனம்பண்ணுங்கள்." என்று இன்றைய வசனம் கூறுகின்றது. நாம் கர்த்தருக்குப் பயப்பட்டு அவரைக் கனம் பண்ணவேண்டியது அவசியம். அது முக்கியமானது. ஆனால் உலக காரியங்களில் அதிகாரம்பெற்ற மனிதர்களுக்குப் பயப்படவேண்டியதும் அவர்களைக் கனம்பண்ணவேண்டியதும் அவசியம்.   

நமக்குப் பிடிக்காத அரசியல் கட்சியும் தலைவர்களும் நம்மை ஆளலாம். அவர்கள் துன்மார்க்கர்களாக இருக்கலாம். ஆனால் நாம் அதனைப் பார்க்கவேண்டிய அவசியமில்லை. தேர்தலில் அவர்களுக்கு எதிராக வாக்களிக்கவேண்டுமே தவிர  உலக மனிதர்களைப்போல போராடுவது தேவ சித்தமல்ல. அவர்களுக்காக  ஜெபிக்கவே வேதம் நமக்கு அறிவுறுத்துகின்றது. 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Tuesday, February 21, 2023

ஆவிக்குரிய காரியங்களுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும்.

ஆதவன் 🌞 756 🌻 பிப்ருவரி 22,  2023 புதன்கிழமை 

"சரீர முயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது." (1 தீமோத்தேயு 4:8) 

இந்த உலகத்தில் மனிதர்கள் தங்கள் உடலைப் பேணுவதற்குப் பல முயற்சிகளை எடுக்கின்றனர். மருத்துவர்களும் உடலைப் பேணுவதற்கு பல்வேறு உணவு முறைமைகளையும் உடற்பயிற்சிகளையும் செய்யும்படி அறிவுறுத்துகின்றனர். இதனைப் பலரும் தவறாமல் கடைபிடிக்கின்றனர். இவை தேவையே. ஏனெனில் நாம் நமது உடலைப் பேணவேண்டியது அவசியம். அது பரிசுத்த ஆவியானவரின் ஆலயமாயிருக்கின்றது. (1 கொரிந்தியர் 6:19). ஆனால் இப்படி உடலைப் பேணுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாம் அதனைவிட ஆவிக்குரிய காரியங்களுக்கு முன்னுரிமைகொடுக்கவேண்டியது அவசியம். 

இங்கு பவுல் அடிகள் குறிப்பிடும் சரீர முயற்சி என்பது தேவனது அன்பினைப்பெறுவதற்கு என ஆலய பணிகளுக்காக அயராது ஓடியாடி உழைப்பதைக் குறிக்கின்றது. இந்த உழைப்பை ஒருவர் சாதாரண வாழ்க்கை வாழ்ந்துகொண்டும் அல்லது பாவ வாழ்க்கை வாழ்ந்துகொண்டும்கூடச் செய்யலாம். இப்படி உடல் உழைப்பின்மூலம் தேவ அன்பினைப்பெறுவதற்கு முயல்வது அற்ப பிரயோஜனையுள்ளது. இவற்றைவிட நமது தனிப்பட்ட ஆவிக்குரிய வளர்ச்சிக்கே முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். 

மேலும், சரீரமா ஆவியா என வரும்போது நாம் ஆவிக்குரிய காரியங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். காரணம், "சரீர முயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது." 

இந்த உலக வாழ்க்கையுடன் நாம் சரீரத்துடனான தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்டுவிடுகின்றோம். ஆனால் அழிவில்லாத ஆத்துமா நித்திய நித்திய காலமாய் கர்த்தரோடு இருக்கப்போகின்றது. எனவே நாம் நமது ஆத்துமாவை அதற்குத் தகுதிப்படுத்தவேண்டியது அவசியம். 

அதிகாலையில் எழுந்து நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்வதுடன் ஆவிக்குரிய காரியங்களுக்கும் நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும். நாம் நமது அதிகாலை நேரத்தை தேவனோடு செலவழிக்கும்போது அந்த நாளுக்குரிய கிருபையையும், தேவனோடு நெருங்கிய தொடர்பையும் நாம் உறுதிப்படுத்துகின்றோம். மேலும் ஒவ்வொரு நாளும் இந்த உலகத்தில் நாம் பல்வேறு பாவச் சூழ்நிலையில் விழக்கூடிய வாய்ப்புகள் வரக்கூடும். ஜெப வீரர்களாக நாம் இருக்கும்போது நாம் நமது ஆத்துமாவைக் காத்துக்கொள்கின்றோம். 

அன்பானவர்களே, நாம் பல்வேறு உடல் உழைப்புகள் மூலம் ஆலயங்களுக்கு உதவலாம்; அது நல்லதுதான். ஆனால் அதனைவிட நமது உடலைப் பாவமில்லாமல் பேணி நமது ஆவிக்குரிய வாழ்க்கையினை கட்டி எழுப்புவதே முக்கியம். 

நாம் இங்கு அறியவேண்டியது இரெண்டு காரியங்கள். ஒன்று ,  நமது  உடலைப் பேணவேண்டியது அவசியம் ; ஆனால் அதனைவிட ஆவிக்குரிய காரியங்களுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும். 

இரண்டாவது, நமது சரீர முயற்சி மூலம் தேவனுக்கு உகந்தவர்கள் ஆக முடியாது; அது அற்பமானது. முதலில் நமது சரீரத்தை பாவமில்லாமல் பரிசுத்தமாக காத்துத் தேவனுக்கு  உகந்ததாக்கிக்கொண்டு ஆவிக்குரிய காரியங்களிலும் ஈடுபடவேண்டும். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - லுூக்கா 1 : 50 / Luke 1:50

  " ஆதவன் " தியானம் - 1979 ஜூலை 09, வியாழன் 2026       "அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுற...