Sunday, February 19, 2023

நாம் நமது ஆலோசனைகளை அவரிடம் திணிக்க முடியாது.

ஆதவன் 🌞 755 🌻 பிப்ருவரி 21,  2023 செவ்வாய்க்கிழமை 


"என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்." ( ஏசாயா 55 : 8 )

மனிதர்கள் நமது அறிவு குறைவுள்ளது; காலம், இடம் இவைகளுக்குக் கட்டுப்பட்டது. நாம் நமது அறிவுக்கும் காலத்துக்கும் இடத்துக்கும் ஏற்பவே சிந்திக்கின்றோம், முடிவுகள் எடுக்கின்றோம். ஆனால் சர்வ வல்லவரான தேவனோ அனைத்தையும் கடந்தவர். எனவே, அவரே நமக்கு ஆலோசனைகளையும்,  அறிவையும் வழியையும் காண்பிக்க  முடியும். மனிதர்கள் நாம் நமது ஆலோசனைகளை அவரிடம் திணிக்க முடியாது. எனவேதான் அப்போஸ்தலரான பவுல் அடிகள்,  "கர்த்தருடைய சிந்தையை அறிந்தவன் யார்? அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்தவன் யார்?" ( ரோமர் 11 : 34 ) என்கின்றார். 

நாம் நமது மனதில் பல ஆசைகளையும் எதிர்காலத்துக்குரிய திட்டங்களையும் வைத்திருக்கலாம். இந்த ஆசைகளும் திட்டங்களும் நமது மன விருப்பத்தின் அடிப்படையிலானவைகள். ஆனால், தேவ சித்தம் என்று ஒன்றும் உள்ளது என்பதை நம்மில் பெரும்பாலானவர்கள் சிந்திப்பதில்லை.  நமது எண்ணங்களும் திட்டங்களும் நடைபெறாமல் போகும்போது பலரும் கடவுள்மேல் பழிபோடுகின்றார்கள். நமது எண்ணங்கள், செயல்கள்  தேவனுக்கு உகந்தனவா என்று பலரும் எண்ணிப் பார்ப்பதில்லை. 

ஆனால், நாம் தேவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழும்போதும் நமக்கு எதிராகச் சில பல காரியங்கள் நடக்குமானால் நாம் பயப்படத் தேவையில்லை. தேவன் நமக்காக  வேறு ஏதோ திட்டம் வைத்துள்ளார் என்று நாம் அந்த நல்ல நாளை எதிர்பார்த்துப் பொறுமையோடு காத்திருப்பதே நல்லது. காரணம், "அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்." ( ரோமர் 8 : 28 ) என்று வேத வசனம் கூறுகின்றது.

கல்லூரிப்  பேராசிரியராகவேண்டுமென்று ஆசைப்பட்டு முயன்று அந்த முயற்சியில் தோல்வியுற்ற ஒருவருக்கு வேறு நல்ல வேலை எதுவும் கிடைக்கவில்லை. ஒரு தனியார் நிறுவனத்தில் சிறிய வேலையில் சேர்ந்து மனக் கவலையோடு உண்மையாய்ப் பணியாற்றிவந்தார். அவர் தேவ அன்பை ருசித்தவர் ஆதலால் கர்த்தர் தனக்காக ஏதோ திட்டம் வைத்துள்ளார் என்பதில் உறுதியாக நம்பிக்கையாக இருந்து ஜெபித்துவந்தார். 

இவர் பணியாற்றிய அந்த சிறு நிறுவனத்தின் உரிமையாளருக்கு ஒரு பெரிய தொழிலதிபர் நண்பராக இருந்தார். அவர் ஒரு கல்லூரி ஆரபிக்க முயற்சி செய்து வந்தார். அவர் கல்லூரி ஆரபித்தபோது தேவ பக்தியுள்ள இந்த நபரைத் தனது புதிய கல்லூரிக்கு முதல்வராக்கினார்.  அந்தக் கல்லூரி விரைவில் பல்கலைக்கழகமாக உயர்வடைந்தது. இவரே அந்தப் பல்கலைக்கழத்தின் வேந்தரானார். ஆம் அன்பானவர்களே, வெறும் கல்லூரிப் பேராசிரியராக வேண்டுமென்று ஆசைப்பட்ட தனது அடியானை தேவன் பல்கலைக்கழக வேந்தராக்கி பல நூறு பேராசிரியர்கள் அவருக்கு கீழ் பணியாற்றுமளவுக்கு உயர்த்தினார். 

"பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது."( ஏசாயா 55 : 9 ) என்கின்றார் பரிசுத்தரான கர்த்தர். நம்மை அவருக்கு ஒப்புக்கொடுத்து பொறுமையாகக் காத்திருப்போம். ஏற்றகாலத்தில் கர்த்தர் நமக்கு ஏற்புடையவற்றைச் செய்வார். நாம் பரவசமடைவோம். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

நன்மையே செய்யத்தக்க நீதிமான் பூமியிலில்லை.

ஆதவன் 🌞 754 🌻 பிப்ருவரி 20,  2023 திங்கள்கிழமை 

"அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 4 : 12 )

ஒருமுறை கடவுள் நம்பிக்கை இல்லாத எனது நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது இயேசு கிறிஸ்துவின் இரட்சிப்பின் மேன்மை பற்றிக் கூறியபோது அவர், "அது என்ன கடவுளுக்கு அவ்வளவு சுயநலமா? தன்னைத்தவிர வேறு  எவரையும் வணங்கக்கூடாது; தன்னால் மட்டுமே இரட்சிப்பு என்று எப்படி ஒருவர் கூற  முடியும்? அப்படிக் கூறுவதே அவர் ஒரு சுயநலம் பிடித்தவர் என்றுதானே  பொருள்" என்றார். 

நான் அவருக்குக் கூறினேன், "அது சுய நலம் அல்ல; இதுவே உண்மை. நீங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் எல்லாம் விஞ்ஞானபூர்வமாக எல்லாவற்றையும் நிரூபிக்கவேண்டும் என்று எண்ணுகின்றீர்கள்.  அப்படியே ஏற்றுக்கொண்டாலும், நீங்கள் கூறும் விஞ்ஞான விதிகள் அனைத்தும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டே இருக்கின்றன. உதாரணமாக தண்ணீரைப் பெறவேண்டுமென்றால் ஆக்சிஜனும் நைட்ரஜனும் குறிப்பிட்ட விகிதத்தில் (H2O) ஒனறு சேர்க்கப்படவேண்டும். இதுதான் விஞ்ஞானவிதி இதற்கு மாறுபட்டுச் செயல்பட்டுக்கொண்டு தண்ணீரைப் பெற முடியாது.

இதுபோலவே தேவன் தனது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை உபத்திரவத்தை பாதையில் நடத்தி, அவரை இரத்தம் சிந்தவைத்து நித்திய மீட்பினை உண்டுபண்ணியிருக்கின்றார். எனவே மீட்பு பெறவேண்டுமென்றால் அவரைத்தான் அண்டிக்கொள்ளவேண்டும். வேறு எவரும் மக்களது பாவங்களைப் போக்குவதற்கு தனது இரத்தத்தைச் சிந்தவில்லை. மேலும் நீங்கள் மீட்பு என்றால் என்ன என்பது தெரியாமல் பேசுகின்றிர்கள். எப்படி தண்ணீரைப் பெறுவதற்கு விஞ்ஞானம் விதி வைத்துள்ளதோ அதுபோல இரட்சிப்பு பெறுவதற்கும் விதி உள்ளது. 

முதலில் நமது மனச்சாட்சியில் நாம் செய்யும் குறிப்பிட்டத் தவறான  செயல் பாவம் என்று தெரியவேண்டும். மனசாட்சியே இல்லாதவன் இப்படித் தனது பாவத்தை உணரவும் முடியாது; அதற்காக வருந்தவும் முடியாது. "நான் என்ன பாவம் செய்தேன்?" என்று நீங்கள்  கூறிக்கொள்கின்றீர்கள். நான் கேட்கின்றேன், "பின் ஏன் உங்களுக்கு மன நிம்மதி இல்லை? ஏன் கடவுளோடு தொடர்பு இல்லை.? நீங்கள் உண்மையிலேயே பாவம் செய்யாதவர்கள் என்றால் கடவுள் தன்னை உங்களுக்கு வெளிப்படுத்தியிருப்பார் அல்லவா?  "இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்." ( மத்தேயு 5 : 8 ) என்று வேதம் கூறுகின்றதே? என்றேன். 

"நான் கடவுளே இல்லை என்கிறேன், நீங்கள் அவரைத் தரிசிப்பார்கள் என்கிறீர்களே என்றார்." அவர். கடவுள் நம்பிக்கை உள்ள பலரும்கூட (கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் பலர் கூட) இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை விசுவாசிப்பதும் நம்புவதும் இல்லை. எனவேதான் எல்லா மதங்களும் ஒரே கடலைச் சேரும்  தண்ணீர்போல ஒரே கடவுளைச் சேர்கின்றன என்று கூறிக்கொண்டு இருக்கின்றனர். 

"அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை." எனும் வசனத்தை விசுவாசித்து ஏற்றுக்கொள்ளும்போது மட்டுமே இரட்சிப்பு அனுபவத்தைப் பெறமுடியும்; அவரை அறியமுடியும். "நான் என்ன பாவம் செய்தேன்" என்று எவரும் கூறிக்கொள்ளமுடியாது. 

"ஒரு பாவமும் செய்யாமல், நன்மையே செய்யத்தக்க நீதிமான் பூமியிலில்லை." ( பிரசங்கி 7 : 20 )

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Friday, February 17, 2023

காரியம் மாறுதலாய் முடியும்.

ஆதவன் 🌞 753 🌻 பிப்ருவரி 19,  2023 ஞாயிற்றுக்கிழமை 


"ஆதார் மாதம் என்கிற பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாந்தேதியிலே, யூதரின் பகைஞர் அவர்களை மேற்கொள்ளலாம் என்று நம்பினார்களே; அந்நாளிலேதானே, யூதரானவர்கள் தங்கள் பகைஞரை மேற்கொள்ளும்படிக்குக் காரியம் மாறுதலாய் முடிந்தது." ( எஸ்தர் 9 : 1 )

நமது தேவன், "காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவர்; ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறவர்; ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர்." ( தானியேல் 2 : 21 ) அவரது சித்தமில்லாமல் அவருக்கு எதிராகவும் அவரை விசுவாசிக்கும் மக்களுக்கு எதிராகவும் ஒருவரும் எதுவும் செய்துவிட முடியாது. 

யூதர்களை மண்ணில் இல்லாமல் அழித்து ஒழிக்க ஆமான் திட்டம்போட்டான். ஆனால் தேவனோ மொர்தெகாயின் அறிவுரையின்படி எஸ்தரை நடத்தி ஆமானது திட்டத்தை அவனுக்கும் அவனது ஆதரவு மக்களுக்கும் எதிராகத் திருப்பினார். அன்பானவர்களே, வேதாகமத்திலுள்ள எஸ்தர் புத்தகத்தை வாசித்துப்பார்த்தால் அவருக்கு உகந்தவர்களை தேவன் எப்படிப் பாதுகாக்கின்றார், தேவனது அளப்பரிய செயல்பாடு எப்படி தனது மக்களுக்கு ஆதரவாக இருக்கின்றது என்பதனை அறிந்துகொள்ளலாம். 

இன்றைய காலகட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான தந்திரமான செயல்பாடுகள் அதிகரித்துள்ளன.  அவர்கள் தங்களை ஞானிகள் என்று எண்ணிக்கொண்டு தந்திரமான உபாயங்களைக் கைக்கொண்டு நமக்கு எதிராகச் செயல்படுகின்றார்கள். ஆனால் வேதம் சொல்கின்றது, " ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறார் " ( 1 கொரிந்தியர் 3 : 19 )

மொர்தெகாயை தூக்கில் மாட்டிக் கொலை செய்ய முயன்ற ஆமானின் தந்திரத்தைத் தேவன் அவனுக்கு எதிராகவே மாற்றி, மொர்தெகாவைத் தூக்கில் ஏற்ற அவன் செய்த அதே தூக்குமரத்தில் ஆமானைத் தொங்கவைத்தார்.  

அன்பானவர்களே, மொர்தெகாவும் எஸ்தரும் உபவாசமிருந்து ஜெபித்து தங்களுக்கு எதிரான காரியத்தை முறியடித்தார்கள். இது ஏதோ அன்று நடந்த ஒரு சம்பவமல்ல, தேவனது வல்லமையின் வெளிப்பாடு. நேற்றும் இன்றும் என்றும் மாறாதவாயிருக்கின்ற நமது தேவன் இதே அற்புதத்தை இன்றும் செய்ய வல்லவாராயிருக்கின்றார். 

மேலும், நமது ஆவிக்குரிய வாழ்வில் எதிரிகளாக இருப்பவை நமது சரீர இச்சைகளும், ஆசைகளும் பாவ எண்ணங்களும். பாவம் நம்மை மேற்கொண்டு துஷ்ட ஆமானைப்போல நம்மை அழிக்கத் தயாராக இருக்கின்றது. யூதரானவர்கள் தங்கள் பகைஞரை மேற்கொள்ளும்படிக்குக் காரியம் மாறுதலாய் முடிந்தது என்று இன்றைய வசனம் கூறுவதுபோல ஆவிக்குரிய யூதர்களாகிய நமது பாவ எண்ணங்கள், செயல்கள் போன்ற பகைவரை மேற்கொள்ளும்படி நமது வாழ்விலும் மாறுதலாய் முடியும்.  இதனை நாம் விசுவாசிக்கவேண்டும். எஸ்தரைபோலவும் மொர்தெகாவைப்போலவும் ஜெபிக்கவேண்டும். அப்போது நமது உலகப் பகைவர்களையும் ஆவிக்குரிய பகைஞர்களையும்  மேற்கொள்ளும்படிக்குக் காரியம் மாறுதலாய் முடியும். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

வசனத்தை உறுதிப்படுத்தும் அடையாளங்களைக் கிறிஸ்துச் செய்யுமாறு ஜெபிப்போம்.

ஆதவன் 🌞 752 🌻 பிப்ருவரி 18,  2023 சனிக்கிழமை 

"அவர்கள் புறப்பட்டுப்போய், எங்கும் பிரசங்கம்பண்ணினார்கள். கர்த்தர் அவர்களுடனேகூடக் கிரியையை நடப்பித்து, அவர்களால் நடந்த அடையாளங்களினாலே வசனத்தை உறுதிப்படுத்தினார்." ( மாற்கு 16 : 20 )

இன்று நாம் அனைவருமே நமது ஆவிக்குரிய வாழ்க்கையினை ஆய்வு செய்து பார்க்கவேண்டியதும், ஆவிக்குரிய வாழ்க்கையில் பலப்படவேண்டியதும், ஜெபிக்கவேண்டியதுமான முக்கிய காரியத்தை இன்றைய வசனம் கூறுகின்றது. அதாவது ஆதி அப்போஸ்தலர்களது அனுபவம் நமக்கு வேண்டும் என்பதே அது. 

இன்றைய வசனம் கூறுகின்றது, அவர்கள் பிரசங்கம் பண்ணும்போது, கர்த்தர் அவர்களோடுகூட கிரியை நடப்பித்து அவர்களால் பல அற்புத அடையாளங்களை நடப்பித்து தனது வசனத்தை உறுதிப்படுத்தினார் என்று. அதாவது, அவர்கள் பிரசங்கம் மட்டும்செய்யவில்லை கிறிஸ்து செய்ததுபோல பல அதிசயங்களைச்  செய்தார்கள். 

இயேசு கிறிஸ்து அற்புதம் செய்ய ஒரு முக்கிய காரணம், தான் சொல்வதை மக்கள் நம்பவேண்டும் என்பதற்காகவே. இயேசு கிறிஸ்து மக்கள்மேல்கொண்ட தனது மன உருக்கத்தினாலும் சில வேளைகளில் அதிசயங்கள் செய்தார். தீராத  நோய்களைக் குணமாக்கினார். இது தவிர, வெற்று வாய்ச்சவடால் பேசிக்கொண்டிருந்தால் எவரும் தான் சொல்வதை நம்பமாட்டார்கள் என்றும்  இயேசு கிறிஸ்துவுக்குத் தெரியும். இதுவும் இயேசு கிறிஸ்து அற்புதங்கள் செய்திட ஒரு காரணம். இதனையே  இயேசு கிறிஸ்து, " என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள்." ( யோவான் 14 : 11 ) என்று தெரிவித்தார். 
  
பிதா தன்னை அனுப்பினார் என்று மக்களை நம்பவைத்திட இயேசு கிறிஸ்துவுக்கு அற்புதங்கள் செய்யவேண்டியிருந்தது. அதுபோல, கிறிஸ்துவே நம்மை அனுப்பினார் என்று மக்களுக்கு  வெளிப்டையாகத் தெரியவைத்திட நம்மைக்கொண்டும் அற்புதங்கள் நடைபெறவேண்டியது அவசியம் என்பது தெளிவு.  நாம் பேசக்கூடிய,  எழுதக்கூடிய வார்த்தைகள் கிறிஸ்துவை அறியாத மக்களிடம் செயல்புரியவேண்டும்.  அதற்கு நம்மைக்கொண்டு அடையாளங்கள் நடைபெறவேண்டும். 

நாம் கிறிஸ்தவர்களாக இருந்து பிரசங்கம்  செய்துதான் கிறிஸ்துவை அறிவிக்கவேண்டும் என்று அவசியமில்லை. நமது வாழ்க்கை கிறிஸ்துவை அறிவிக்கும் நிருபமாக மாறினாலே போதும்; மாறிடவேண்டியதும் அவசியம்.  அப்படி மாறும்போது நாம் போதிக்காமல் நமது செயல்களைக்கண்டே மற்றவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வார்கள், பிரமிக்கத்தக்க அற்புதங்களும்  நடைபெறும். அண்மையில் வடஇந்தியாவில்  மிஷனெரியாகப்  பணியாற்றும் ஒரு சகோதரனைச் சந்தித்தேன். அவரது பணியின்மூலமும் அவர்மூலம்  கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட மக்கள்மூலமும் அங்கு நடைபெறும் பல அதிசயங்களைக் கூறினார். அவற்றைப்பார்த்து பலர் கிறிஸ்துவிடம் திரும்புகின்றனர் என்றார்.

அன்பானவர்களே, நமது வாழ்க்கையிலும் நமது இடங்களிலும் கிறிஸ்து இப்படி அவரது வசனத்தை உறுதிப்படுத்தும் அடையாளங்களைச் செய்யுமாறு ஜெபிப்போம். முதலில் நாமும் நமது வாழ்க்கையினையும் அதற்கேற்ப மாற்றிட நம்மை கிறிஸ்துவுக்கு  ஒப்புக்கொடும்போம். நம்மைக்கொண்டு அற்புதங்கள் நடைபெறும்போது கிறிஸ்துவுக்கு எதிராகச் செயல்படுபவர்கள் தானாகவே கிறிஸ்துவின் பக்கம் வருவார்கள். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Wednesday, February 15, 2023

ஆவியானவரைத் துக்கப்படுத்தும் காரியங்கள் நம்மிடமுள்ளதா ?

ஆதவன் 🌞 751 🌻 பிப்ருவரி 17,  2023 வெள்ளிக்கிழமை 

"நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்." ( எபேசியர் 4 : 30 )

பரிசுத்த ஆவியானவரைப்பற்றி கிறிஸ்தவர்களுக்குளேயே பல சந்தேகங்களும் தெளிவின்மையும் உள்ளன. "ஆவி" என்று சொல்வதால் அவரை ஏதோ ஆவி என்று எண்ணிக்கொள்கின்றனர். ஆனால் பரிசுத்த ஆவியானவர் பிதா, குமாரனைப்போல தனி ஆள் தத்துவம் உள்ளவர். இதனை இயேசு கிறிஸ்து கூறும் வார்த்தைகள் மூலம் அறியலாம். 

"சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றவாளனை அவர் உங்களுக்குத் தருவார் "  (யோவான் 14:16)

பரிசுத்த ஆவியாகிய தேற்றவாளன் எல்லாவற்றையும் உங்களுக்குப் போதிப்பார்" (யோவான் 14:26) 

"சத்திய ஆவியாகிய  தேற்றவாளன் வரும்போது அவர் என்னைக்குறித்துச் சாட்சி கொடுப்பார்" (யோவான் 15:26)

"நான் போகாதிருந்தால் தேற்றவாளன் உங்களிடத்தில் வரார்"  (யோவான் 16:7)

நாம் நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு இரட்சிப்பு அனுபவம் பெறும்போது நமக்குப் பரிசுத்த ஆவியானவர் அருளப்படுகின்றார். இதனையே, "மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப்பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவி" என்று இன்றைய வசனம் கூறுகின்றது.  நமக்குள் வரும் ஆவியானவர் இப்படி ஆள் தத்துவம் உள்ளவராகையால் ஆவியானவரும் மன மகிழ்ச்சி, துக்கம் போன்ற உணர்வுள்ளவராக இருக்கின்றார். இந்த கிருபையின் நாட்களில் அவரே நம்மை வழிநடத்துகின்ற "வழிநடத்தும் ஆவியானவராக" இருக்கின்றார். 

அவரது வழிநடத்துதலை நாம் புறக்கணிக்கும்போது ஆவியானவர் துக்கப்படுகின்றார். அப்படி நாம் புறக்கணித்துச் செய்யும் செயல்களே துற்செயல்கள் என்று பவுல் அடிகள் கூறுகின்றார். இதனையே தொடர்ந்துவரும் வசனத்தில், "சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது." ( எபேசியர் 4 : 31 ) என்று கூறுகின்றார். 

அதாவது, மற்றவர்கள்மேலுள்ள கசப்புகள், கோபம், மூர்க்க எண்ணங்கள்,  மற்றவர்களை எதிர்த்து கூக்குரலிடுதல், தூஷணம் இவைபோன்றவை ஆவியானாவரைத் துக்கப்படுத்துகின்றன. பீடி, சிகரெட், வெற்றிலை பழக்கங்களைவிட இத்தகைய குணங்களே கேடானவைகல். 

அன்பானவர்களே எனவே, ஆவியானவரைத் துக்கப்படுத்தும் காரியங்கள் நம்மிடமுள்ளதா என்று நிதானித்து அறிந்து அத்தகைய குணங்களை நம்மைவிட்டு அகற்றுவோம். தேவனோடு எப்போதும் ஜெப உறவில் தரித்திருந்தால் ஆவியானவரின் வழிநடத்துதலை நாம் நமது அன்றாட வாழ்வில் உணரமுடியும்.  

முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருபோமாக.!!

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Monday, February 13, 2023

சாத்தானின் வீழ்ச்சி

ஆதவன் 🌞 750 🌻 பிப்ருவரி 16,  2023 வியாழக்கிழமை 

"அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே!" ( ஏசாயா 14 : 12 )

சாத்தானின் வீழ்ச்சி குறித்து இன்றைய வசனம் கூறுகின்றது. லூசிபர் தனது பெருமையால் விண்ணக மகிமையினை இழந்து நரகத்தில் தள்ளப்பட்டான். இந்த வீழ்ச்சிக்குக் காரணம், தேவனுக்கு நிகராக தன்னை அவன் உயர்த்தும் விதமாக முயன்றதே. ஆம், பெருமையே அவன் அழிவுக்குக் காரணமாக அமைந்தது. இதனை நாம் தொடர்ந்து வரும் வசனங்களில் பின்வருமாறு வாசிக்கின்றோம். 

"நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும், நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே." ( ஏசாயா 14 : 13, 14 )

ஆனால் பெருமையினால் லூசிபரும் அவனது ஆதரவு தூதர்களும் இழந்த விண்ணக மகிமையினை தேவன் தாழ்மையாய்த் தன்னைப் பின்பற்றும் மனிதர்களுக்குக்  கொடுக்க விரும்புகின்றார். எனவேதான் தான் ஆசைப்பட்டதும் இழந்துபோனதுமான  மகிமையினை மனிதர்கள் பெற்றுவிடக்கூடாது  எனும் எண்ணத்தில் சாத்தான் மனிதர்களைப் பாவத்தில் தள்ள முயலுகின்றான். 

சாத்தான் ஆசைப்பட்டதுபோல பிதாவானவரோடு நாமும் மகிமையில்  இருக்க முடியும். ஆனால் அது சாத்தான் பெருமையால் முயன்றதுபோல முயல்வதால் அல்ல; மாறாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு நம்மை ஐக்கியப்படுத்திக்கொள்வதன் மூலம்.  இதனை இயேசு கிறிஸ்து பிதாவிடம் ஜெபித்தபோது கூறுகின்றார். நாம் ஒவ்வொருவரும் இந்த மகிமையை அடைந்திடவேண்டுமென்று நம் ஒவ்வொருவருக்காகவும் இயேசு கிறிஸ்து ஜெபித்துள்ளார். 

இயேசு கிறிஸ்துவிடம் இருந்த அதே அன்பை பிதா நமக்கும் தரும்படி இயேசு பின்வருமாறு வேண்டினார்:-

"நான் இவர்களுக்காக (தனது சீடர்களுக்காக) வேண்டிகொள்கிறதுமல்லாமல் இவர்களது வார்த்தையினால் என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும் (அதாவது சீடர்களது வார்த்தையினை விசுவாசித்து அவரை விசுவாசிக்கும் நமக்காகவும்) வேண்டிக்கொள்கிறேன். ( யோவான் 17 : 20 )   "நீர் என்னில் அன்பாயிருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாயிருக்கிறதையும் உலகம் அறியும்படிக்கும், நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்." ( யோவான் 17 : 23 )

"பிதாவே, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்." ( யோவான் 17 : 21 )

அன்பானவர்களே, கிறிஸ்துவின் கிருபையின் மேன்மையைப் பாருங்கள். விண்ணகத்தின் மகிமையினை இழந்த சாத்தானது வீழ்ச்சிக்குக் காரணம் பெருமை. ஆனால் அந்த மகிமையினை நாம் கிறிஸ்துவை தேவனது குமாரன் என்று விசுவாசிப்பதனாலும்  நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு தாழ்ச்சியுள்ள வாழ்க்கை வாழ்வதன் மூலமும் பெற முடியும்.  எனவே சாத்தானின் தந்திரங்களினால் நாம் மயங்கிவிடாமல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துக் காட்டிய வழியில் நடந்து நமது பரிசுத்தத்தைக் காத்துக்கொள்வோம். அப்போது சாத்தான் பார்த்து வெட்கப்படுமளவுக்கு நாம் அவரோடு ஆளுகைசெய்வோம்.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

கிறிஸ்துவின் கிருபையினை வீணாக்காமல் காத்துக்கொள்வோம்.

ஆதவன் 🌞 749 🌻 பிப்ருவரி 15,  2023 புதன்கிழமை 

"அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார்." ( சங்கீதம் 103 : 10 )

நாம் எல்லோருமே பாவம் செய்கின்றோம். அதாவது தேவனது சித்தத்துக்கு எதிராகப் பல வேளைகளில் செயல்படுகின்றோம்.  ஆனால் தேவன் உடனேயே அவற்றுக்கான தண்டனையை நமக்குத் தருவதில்லை. 

இதுவே தேவன் நம்மை அன்பு செய்கின்றார் என்பதற்கு ஒரு அடையாளம். இது நமது குடும்பங்களில் நாம் குழந்தைகளிடம் நடந்துகொள்வதற்கு ஒப்பாக இருக்கின்றது. நமது குழந்தைகள் எப்போதும் நமது சொல்படி கேட்டு நடப்பதில்லை. பலவேளைகளில் நமது அறிவுரைகளை அசட்டை செய்கின்றனர். உடனடியாக நாம் அவர்களைக் கடுமையாகத் தண்டித்துவிடுவதில்லை. காரணம் நாம் அவர்கள்மேல் கொண்டுள்ள அன்பு. இதுபோலவே தேவனும் இருக்கின்றார்.  

பழைய ஏற்பாட்டுக்காலத்தில் பாவங்களுக்கு பலவிதத் தண்டனைகளை மோசே வழியாகத்  தேவன் கற்பித்திருந்தார். குறிப்பாகக் கண்ணுக்கு கண் பல்லுக்குப் பல் பழிவாங்கவேண்டும் என்பதே தண்டனை. இவைதவிர, கல்லெறிந்து கொல்லுதல், சவுக்கடி, சிலுவையில் அறைதல், கழுவிலேற்றுதல்  போன்ற தண்டனைகளும் இருந்தன.  

ஆனால் இன்றைய புதிய ஏற்பாட்டுக்காலத்தில் இந்தத் தண்டனைகளை தேவன் கிருபையின் பிரமாணத்தால் மாற்றியுள்ளார். இதனை, "உங்கள் பொல்லாத வழிகளுக்குத்தக்கதாகவும், உங்கள் கெட்ட கிரியைகளுக்குத்தக்கதாகவும் நான் உங்களுக்குச் செய்யாமல், என் நாமத்தினிமித்தம் உங்களுக்குக் கிருபைசெய்யும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்." ( எசேக்கியேல் 20 : 44 ) என்று கூறப்பட்டுள்ளது. 

ஆம், கிறிஸ்து இயேசுவின் கிருபையால் "அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார்." காரணம் தண்டனைகொடுத்து அழிப்பதற்கல்ல, பாவிகளை நீதிமானாகவே கிறிஸ்து இயேசு உலகினில் வந்தார். நமது மனம் திரும்புதலுக்காக அவர் காத்துக்கொண்டிருக்கின்றார். நாம் நித்திய ஜீவனை அடைந்திடவேண்டும் என்பதற்காகவே அவர் அப்படிச் செய்கின்றார். 

கிறிஸ்துவின் இந்தக் கிருபையைக்குறித்து அப்போஸ்தலரான பவுல் அடிகளும், "பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று. ஆதலால் பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்தியஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது." ( ரோமர் 5 : 20, 21 ) என்று எழுதுகின்றார். 

கிறிஸ்து தனது உயிரைத் தியாகம் செய்து தனது இரத்ததால் உண்டாக்கிய இந்தக் கிருபையினை நாம் வீணாக்கிடக்கூடாது. நாம் நித்திய ஜீவனுக்குத் தகுதியுள்ளவர்கள் ஆகவேண்டும் என்பதற்காகவே கிறிஸ்து இப்படிச் செய்கின்றார். பரிசுத்த வாழ்க்கைக்கு நம்மை ஒப்புக்கொடுப்போம்.  நமது தேவனை பரிசுத்தர் என்று வேதம் சொல்கின்றது. ஆனால் நாம் அதுபோல பரிசுத்தர்களாக இருக்கவேண்டுமென்றே தேவன் விரும்புகின்றார். எனவே உடனடி தண்டனை தந்து நம்மை அழிக்காமல் கிருபையால்  மனம் திரும்பிட வாய்ப்பளிக்கின்றார்.  கிறிஸ்துவின் கிருபையினை வீணாக்காமலும் அற்பமாக எண்ணாமல் காத்துக்கொண்டு நம்மையும் பரிசுத்தர்களாகக் காத்துக்கொள்வோம்.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - லுூக்கா 1 : 50 / Luke 1:50

  " ஆதவன் " தியானம் - 1979 ஜூலை 09, வியாழன் 2026       "அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுற...