இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Wednesday, April 17, 2024

பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,166      💚 ஏப்ரல் 19, 2024 💚 வெள்ளிக்கிழமை 💚

"நான் உங்கள் பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்து வந்த நாளிலேதகனபலியைக்குறித்தும்மற்றப் பலிகளைக் குறித்தும் நான் அவர்களோடே பேசினதையும் கட்டளையிட்டதையும் பார்க்கிலும்என் வாக்குக்குச் செவிகொடுங்கள்அப்பொழுதுநான் உங்கள் தேவனாயிருப்பேன்நீங்கள் என்  ஜனமாயிருப்பீர்கள்;" ( எரேமியா 7 : 22, 23 )

பழைய ஏற்பாட்டுக்காலத்தில் தேவன் பல்வேறு பலிகளையும்  நியமங்களையும் மக்களுக்கு நியமித்திருந்தார்அதன்படி  பலிகள் செலுத்தி வாழ்வதுதான் தேவனுக்கு ஏற்புடைய செயல்  என்று மக்கள் நினைத்திருந்தனர்ஆனால் அவர்கள் தேவனுடையவாக்குக்குச் செவிகொடுக்கவில்லைஅதாவது அவர்கள்  கட்டளையைக் கட்டளையாகப் பார்த்தனரேத்தவிர தேவன்  விரும்பும் அன்பையும்இரக்கத்தையும் நீதியையும்  விட்டுவிட்டனர்பலியிடுவது சம்பந்தமான கட்டளையை  நிறைவேற்றுவதில் காட்டிய ஆர்வத்தை மனிதநேயத்திலும்  பிறரை அன்பு செய்வதில் காட்டவில்லை.

எனவேதான் இயேசு கிறிஸ்துக் கூறினார், "பலியையல்லஇரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுகொள்ளுங்கள்நீதிமான்களையல்ல,பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன்." ( மத்தேயு 9 : 13 )

பலியையல்லஇரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுகொள்ளுங்கள் என்று கூறிய இயேசு கிறிஸ்து இன்னுமொரு இடத்தில் "பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதன் கருத்து இன்னதென்று நீங்கள் அறிந்தீர்களானால்குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்தமாட்டீர்கள்." ( மத்தேயு 12 : 7 ) என்று கூறுகின்றார்.

இன்றும் இயேசு கிறிஸ்துவின் காலத்து நிலைதான்  தொடர்கின்றதுபல ஊழியர்கள் வறட்டுத்தனமான  போதனைகளை  போதிக்கின்றனரேத் தவிர இயேசு கிறிஸ்து கூறிய அன்பையும் இரக்கத்தையும் விட்டுவிட்டனர்தசமபாக போதனை இதற்கு ஒரு உதாரணம்அன்புஇரக்கம்நீதி இவற்றைப்பற்றி மக்களுக்கு எடுத்துரைப்பதைவிட வருமானத்தில் பத்தில் ஒன்று காணிக்கைக் கொடுப்பதுதான்  வலியுறுத்தப்படுகின்றது.

பலியையல்லஇரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுகொள்ளுங்கள் என்று இயேசு  கிறிஸ்து கூறுவது வேதாகமக் கல்லூரியில் சென்று  கற்றுக்கொள்ள அல்லமாறாக பரிசுத்த ஆவியானவர்  உங்களுக்கு கற்றுத்தர இடம்கொடுங்கள் என்று பொருள்உங்கள் பொருளாசையையும் பண வெறியையும் விட்டுவிடீர்களானால் ஆவியானவர் உங்களை வழிநடத்துவார்கற்றுத்தருவார் என்று பொருள்

பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதன் கருத்து  இன்னதென்று நீங்கள் அறிந்தீர்களானால்குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்த மாட்டீர்கள்;  ஆராதனைகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை பிறரை அன்பு செய்வதற்கும் கொடுப்பீர்கள் என்று பொருள். ஆவிக்குரிய சபைகள் என்று  தங்களைக் கூறிக்கொள்ளும் சபைகளில் காணிகைக் கொடுக்காதவர்களை சபிப்பதும் சாபங்களைக் கூறும் வசனங்களை அவர்களுக்கு எச்சரிக்கையாகக் கூறுவதும் உண்டு. பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதன் கருத்தை உணர்ந்திருந்தால் இப்படிச் செய்யமாட்டார்கள். 

என் வாக்குக்குச் செவிகொடுங்கள்அப்பொழுது நான் உங்கள்  தேவனாயிருப்பேன்நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள் என தேவன் கூறுவது நாம் அனைவருக்கும் ஒரு அறிவுரையாக இருக்கட்டும்அவர் இரண்டே இரண்டு கட்டளைகளைத்தான் கூறினார்ஒன்று  எல்லாவற்றுக்கும் மேலாக தேவனை நேசிப்பதுஇரண்டாவது  தன்னைத்தான் நேசிப்பதுபோல பிறரை நேசிப்பதுஇதற்கு  முரணான வாழ்க்கைஅன்பற்ற போதனைகள் நாம் தேவ  ஜனமாக இருக்கத் தடையானவைகள்.

ஆம் அன்பானவர்களேபலியையல்ல இரக்கத்தையே  விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று நாம் அறிந்துகொண்டால் பிறரைக் குற்றப்படுத்தமாட்டோம்தேவன் காட்டிய அன்பு வழியில் நடப்போம்அதுவே கிறிஸ்துவுக்கு ஏற்புடைய வழி

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                   

Tuesday, April 16, 2024

தவறான போதகர்களை இனம்கண்டு......

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,165     💚 ஏப்ரல் 18, 2024 💚 வியாழக்கிழமை 💚



"கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல, கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்." ( 2 யோவான்  1 : 9 )

கிறிஸ்துவின் உபதேசம் என்ன? அது அவரது இரத்தத்தால் உண்டாகும் பாவ மன்னிப்பு, இரட்சிப்பு, நித்தியஜீவன் எனும் நிலைவாழ்வு அல்லது முடிவில்லா வாழ்வு  பற்றியது. கிறிஸ்துவின் இரத்தத்தால் நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு நாம் கழுவப்படும்போது அவரோடு இணைக்கப்படுகின்றோம். அப்படி இணைக்கப்பட்ட நாம் அவரது ஐக்கியத்தில் தொடர்ந்து வாழும்போது இரட்சிக்கப்படுகின்றோம். இரட்சிப்பு என்பது ஒருநாள் அனுபவமல்ல; மாறாக, ஆவிக்குரிய வாழ்வின் முடிவுவரை நாம் அதில் நிலைத்திருக்கவேண்டும். இதனையே, "முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்." ( மத்தேயு 24 : 13 ) என்றார் இயேசு கிறிஸ்து. 

இன்றைய வசனம் கூறுகின்றது, "கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல, கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்" என்று. இந்த வசனத்தின்படி வெறும் ஆசீர்வாதங்களையே சுவிசேஷமாக போதித்துக்கொண்டு, மாயாஜாலக்காரன்போல அற்புதம் அதிசயம் என்று கூறிக்கொண்டிருப்பவன் கிறிஸ்துவின் உபதேசத்தை மீறி நடக்கின்றான்.  அத்தகையவன் பிதாவையும் குமாரனையும் உடையவன் அல்ல என்பது தெளிவு. 

மட்டுமல்ல, விசுவாசி என்று கூறிக்கொண்டு கிறிஸ்துவின் போதனைகளின்படி வாழாதவனும் கிறிஸ்துவை உடையவனல்ல. கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருந்து வாழ்பவனும் சத்தியத்தை போதிப்பவனுமே அவரில் நிலைத்திருப்பவன். அவனே பிதாவையும் குமாரனையும் உடையவன். அவனே கிறிஸ்துவுக்கேற்ற வாழ்க்கை வாழவும் மற்றவர்களை கிறிஸ்துவுக்கு நேராக வழிநடத்தவும்  முடியும். 

அன்பானவர்களே, கிறிஸ்துவின் மெய்யான சுவிசேஷத்தையும் அவர் சிந்திய இரத்தத்தின் மகிமையையும் அதனால் உண்டாகும் ஆத்தும இரட்சிப்பையும் பற்றி கவலைப்படாமல் வாழ்பவனும்  அதுபற்றி போதிக்காமல் வெற்றுப்  போதனை செய்பவனும் நமது மரியாதைக்குரியவனல்ல. அத்தகையோரை நமது வீடுகளில் ஏற்றுக்கொள்ளவும் கூடாது என்று கூறுகின்றார் அப்போஸ்தலரான யோவான். "ஒருவன் உங்களிடத்தில் வந்து இந்த உபதேசத்தைக் கொண்டுவராமலிருந்தால், அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள்." ( 2 யோவான்  1 : 10 )

இயேசு கிறிஸ்துவை  அதிகம் அன்பு செய்தவர்தான் யோவான் அப்போஸ்தலர்.  கிறிஸ்துவின் பாடுகளும் மரணமும் யோவானின் மனதினை மிகவும் வதைத்தன. நமது பாவங்களுக்காக கிறிஸ்து பட்டப்  பாடுகள்  எத்தனை மேலானவை என்பதனை யோவான் அறிந்திருந்தார். எனவே, அவற்றைப் போதித்து மக்களை மீட்பின் பாதையில் நடத்தாமல் தவறான போதனைகளைக் கொடுப்பவர்களை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அத்தகையவர்கள் கிறிஸ்துவை அவமதிக்கின்றார்கள் என்பதனை அவர் உணர்ந்ததால் இன்றைய வசனத்தைக் கூறுகின்றார். 

ஆம் அன்பானவர்களே, கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல. அப்படியானால் பின் வேறு யாருக்கு அவன் உடையவன் என்பதனை நாம் புரிந்துகொள்ளவேண்டும். எனவேதான், "அவர்களை உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள்." என்று கூறுகின்றார்.

நாம் கிறிஸ்துவின் போதனைகளின்படி வாழ்ந்துகொண்டு இத்தகைய தவறான போதகர்களை இனம்கண்டு அவர்களது வழியைவிட்டு விலகிக்கொள்வதே விவேகம். ஏனெனில் அத்தகையவர்களின் போதனைகள் பெரும்பாலும் கிறிஸ்துவை அறியாத மற்ற மக்கள் மத்தியில் கிறிஸ்துவை அவமானப்படுத்துவதாகவே இருக்கும். அதற்கு நாம் உடன்படாமல் தப்பித்துக்கொள்ளவேண்டும். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

தேவனுடைய ராஜ்ஜியமும், பரலோக ராஜ்ஜியமும்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,164      💚 ஏப்ரல் 17, 2024 💚 புதன்கிழமை 💚



"தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்ல, பெலத்திலே உண்டாயிருக்கிறது." ( 1 கொரிந்தியர் 4 : 20 )

தேவனுடைய ராஜ்ஜியம், பரலோக ராஜ்ஜியம் எனும் இரு அரசாங்கங்களைக் குறித்து நாம் வேதாகமத்தில் வாசிக்கின்றோம். பரலோக ராஜ்ஜியம் என்பது பிதாவின் ராஜ்ஜியம்; அவரது அரசாங்கம். மரித்த பரிசுத்தவான்கள் நுழைந்து வாழக்கூடிய மறுவுலக ராஜ்ஜியம். ஆனால் தேவனுடைய ராஜ்ஜியம் என்பது இந்த உலகத்தில் தேவன் நம்முள்வந்து ஆட்சிசெய்கின்ற ராஜ்ஜியம். 

"தேவனுடைய ராஜ்யம் எப்பொழுது வருமென்று, பரிசேயர் அவரிடத்தில் கேட்டபொழுது, அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: தேவனுடைய ராஜ்யம் பிரத்தியட்சமாய் வராது. இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது; இதோ, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே என்றார்." ( லுூக்கா 17 : 20, 21 ) என்று வாசிக்கின்றோம். ஆம், நமக்குள் தேவனுடைய ஆவியானவர் இருந்து செயல்படுவதே தேவனுடைய ராஜ்ஜியம்.

பவுல் அப்போஸ்தலர் காலத்தில் தேவனுடைய ராஜ்ஜியம் என்று கூறியவுடன் பலரும் தேவனுடைய ராஜ்ஜியம் வந்துவிட்டால் நாம் உண்பதற்கும், உடுத்துவதற்கும் இந்த உலக வாழ்வை சுகமாக அனுபவித்து மகிழ்வதற்கும்  அந்தத் தேவனுடைய ராஜ்ஜியம் உதவிடும் என்று எண்ணிக்கொண்டனர். ஆனால் அவையல்ல, மாறாக நீதி, சமாதானம்,  பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷம் இவையே தேவனுடைய ராஜ்யத்தின் அளவுகோல் என்கின்றார் பவுல் அப்போஸ்தலர். "தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது." ( ரோமர் 14 : 17 )

தேவனுடைய ராஜ்யமானது தேவனைக்குறித்து பேசிக் கொண்டிருப்பதாலோ அவருக்கு ஆராதனைகள் செய்து கொண்டிருப்பதாலோ வராது. மாறாக, பரிசுத்த ஆவியானவரின் பலத்தால், அவர் நம்முள் வந்து செயலாற்றுவதால் நம்முள் வருகின்றது. இதனையே இன்றைய தியான வசனம், "தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்ல, பெலத்திலே உண்டாயிருக்கிறது." என்று கூறுகின்றது. 

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் தனது சீடர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஜெபத்தில், "உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக." ( மத்தேயு 6 : 10 ) என்று ஜெபிக்கச் சொல்லிக்கொடுத்தார். அதாவது புசிப்பும் குடிப்புமற்ற நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமான தேவனுடைய ராஜ்ஜியம் பூமியில் வருவதாக என்று ஜெபிக்கச் சொல்லிக்கொடுத்தார். 

நமது பக்திப் பேச்சுகளாலும் செயல்பாடுகளாலுமல்ல, மாறாக தேவனுடைய பரிசுத்த ஆவியானவரின் பலத்தால் தேவனுடைய ராஜ்யம் நம்மில் உருவாக ஜெபிப்போம்; செயல்படுவோம்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                   

Monday, April 15, 2024

"கர்த்தரைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்"

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,163       💚 ஏப்ரல் 16, 2024 💚 செவ்வாய்க்கிழமை 💚

"கர்த்தரை விட்டுப் பின்வாங்குகிறவர்களையும், கர்த்தரைத் தேடாமலும், அவரைக்குறித்து விசாரியாமலு மிருக்கிறவர்களையும், இவ்விடத்தில் இராதபடிக்குச் சங்காரம்பண்ணுவேன்." ( செப்பனியா 1 : 6 )


இன்றைய தியான வசனம் எவை நமக்கு சாபமாயிருக்கும் என்று மூன்று காரியங்களைக்குறித்து  பேசுகின்றது. 

1. கர்த்தரைவிட்டுப் பின்வாங்குவது  

2. கர்த்தரைத் தேடாமல் வாழ்வது.

3. அவரைக்குறித்து விசாரியாமல் வாழ்வது.

இந்த மூன்றுவகையினரும் கர்த்தரால் ஆசீர்வாதத்தைப் பெறமுடியாது என்கின்றது இன்றைய வசனம். 

சிலர் ஆவிக்குரிய வாழ்வில் சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருப்பார்கள். ஆனால் சில, பல எதிர்மறையான காரியங்கள் வாழ்க்கையில் ஏற்பட்டவுடனோ அல்லது பழைய பாவ நாட்டங்கள் இருதயத்தைத் தூண்டுவதாலோ கர்த்தரைவிட்டுப் பின்வாங்கிப்போவார்கள்.  இப்படி "கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளில் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும்." ( 2 பேதுரு 2 : 20 ) என்கின்றார் அப்போஸ்தலரான பேதுரு. 

மட்டுமல்ல, "அவர்கள் நீதியின் மார்க்கத்தை அறிந்தபின்பு தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட பரிசுத்த கற்பனையை விட்டு விலகுவதைப்பார்க்கிலும் அதை அறியாதிருந்தார்களானால் அவர்களுக்கு நலமாயிருக்கும்." ( 2 பேதுரு 2 : 21 ) என்கின்றார். "நாய் தான் கக்கினதைத் தின்னவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது என்று சொல்லப்பட்ட மெய்யான பழமொழியின்படியே அவர்களுக்குச் சம்பவித்தது." ( 2 பேதுரு 2 : 22 ) என்று வாசிக்கின்றோம்.

இன்னொரு பிரிவினர் கர்த்தரை வாழ்வில் தேடாமலேயே வாழ்பவர்கள். அதாவது இவர்கள் ஆராதனைக் கிறிஸ்தவர்கள். கர்த்தரைத் தேடாமல் உலக ஆசீர்வாதங்களுக்காக ஜெபித்துக்கொண்டிருப்பவர்கள். அவர்களைப் பார்த்து ஆமோஸ் தீர்க்கதரிசி கூறுகின்றார், "கர்த்தரைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்" ( ஆமோஸ் 5 : 6 ) ஆம் அன்பானவர்களே, நாம் வெறுமனே ஆலய ஆராதனைகளில் கலந்துகொண்டால் மட்டும் போதாது, தனிப்பட்ட முறையில் தேவனோடு தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள ஆர்வமுடையவர்களாக இருக்கவேண்டியது அவசியம். அப்படிக் கர்த்தரைத் தேடுபவர்கள் பிழைப்பார்கள். அதாவது அவர்கள் பாவ மரண சூழ்நிலைகளுக்குத் தப்புவார்கள். 

நம்மில் பெரும்பாலானவர்கள் இரண்டாம் வகையினர்தான். கடவுளை நம்புகின்றோம், ஆலய ஆராதனைகளில் கலந்துகொள்கின்றோம் ஆனால் கர்த்தரை வாழ்வில் தனிப்பட்ட முறையில் அறியாதவர்களாகவே இருக்கின்றோம். 

மூன்றாவது வகையினர், அவரைக்குறித்து விசாரியாமல் வாழ்பவர்கள். கடவுள் நம்பிக்கையற்றவர்கள். "கடவுள் என ஒருவர் இருந்தால் ஏன் மறைந்துகொண்டிருக்கிறார்? என் முன்னால் வரட்டும் நான் நம்புகின்றேன்" என்பார்கள் இவர்கள்.  வெட்டியாக இருந்து வம்பு பேசுவதைவிட்டு இவர்கள் கடவுளைத் தேடினால் அவரைக் கண்டுபிடிக்கமுடியும். "கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்" ( மத்தேயு 7 : 7 )

அன்பானவர்களே, நம்மை நாமே நிதானித்துப் பார்ப்போம்.  கார்த்தரைவிட்டுப் பின்வாங்கியிருந்தால் அவரிடம் மன்னிப்பு வேண்டி அவரோடு ஒப்புரவாவோம்; இரண்டாவது வகையினராக இருந்தால் ஆலய ஆராதனைகள் மட்டுமே போதுமென்று எண்ணாமல் தேவனோடு தனிப்பட்ட உறவினை வளர்க்க முயலுவோம். கடவுள் நம்பிக்கையற்றவர்கள் என்றால்  அப்படி ஒருவர் உண்டுமா என்று தேடியாவது பார்ப்போம்; உண்மையாகத் தேடினால் நிச்சயம் அவர் தென்படுவார்.  

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                   

Sunday, April 14, 2024

விதைப்பதையே அறுப்போம்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,162      💚 ஏப்ரல் 15, 2024 💚 திங்கள்கிழமை 💚

"...........மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்." ( கலாத்தியர் 6 : 7, 8 )

நெல் விதைத்துவிட்டு கோதுமையை அறுவடை செய்ய முடியாதுஇது நாம் எல்லோரும் அறிந்ததே. நாம் விதைப்பதையே அறுப்போம். இதே இயற்கையின் விதிதான் மனிதர்களது  வாழ்க்கைக்கும் பொருந்தும். இயற்கையிலிருந்து இந்தச் சத்தியத்தை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

இந்த உலகத்திலேயே சிலவேளைகளில் அப்பட்டமாக இது வெளிப்படும்ஒரு முறை ஒரு சம்பவம் குறித்துக் கேள்விப்பட்டேன்ஒரு குறிப்பிட்ட நகரத்தில் சாலை ஓரம் ஒரு முதியவர் பல நாட்களாக வசித்து வந்தார்அவர் சொந்த குடும்பத்தால் கைவிடப்பட்டு  அவலமான நிலையில் இருந்தார்ஆனால் அவரது முகத்தில் ஒரு சிரிப்பு இருக்கும்தர்மம் கொடுப்பவர்களை வாழ்த்துவார்.

நகரத் தூய்மை பணிக்காக சாலை ஒர மக்களை  அப்புறப்படுத்தினர் அதிகாரிகள்அப்போது ஒரு முரட்டு அதிகாரிகோபத்துடன்,"பிச்சைக்கார பயலேஇங்கிருந்து ஓடுடா.." என்றும்,கெட்டவார்த்தைகள் பேசியதுமல்லாமல்  தனது காலால் அந்த  முதியவரையும் அவரது உடைமைகளையும் மிதித்துத் தள்ளினார்சரியாக மூன்றாம் நாள் அதே இடத்தில் நடந்த ஒரு விபத்தில் அந்த அதிகாரியின் கால் பேருந்து சக்கரத்தில் சிக்கி நசுங்கித் துண்டானதுஇதனைப் பார்த்தப் பலரும் , "ஆணடவன் உண்மையிலேயே இருக்காரு...." என மனித  முறைமையில் சொல்லிக்கொண்டனர்

"சிலருடைய பாவங்கள் வெளியரங்கமாயிருந்துநியாயத்தீர்ப்புக்கு முந்திக்கொள்ளும்சிலருடைய பாவங்கள் அவர்களைப் பின்தொடரும்." ( 1 தீமோத்தேயு 5 : 24 ) என்கின்றார் அப்போஸ்தலரான பவுல். சிலருடைய பாவங்கள் என்று கூறப்பட்டுள்ளதால் எப்போதுமே இப்படி நடைபெறும் என்று சொல்லமுடியாது என்பது தெளிவு

மேலும் மாம்சத்துக்கென்று விதைத்தல் என்பது நமது  உலகக் காரியங்களுக்காகவே நமது உழைப்பைச் செலவழித்துக் கொண்டிருப்பதைக்  குறிக்கும்.  அதாவது, எந்தவித ஆவிக்குரிய சிந்தனையோ செயல்பாடோ இல்லாமல் முழுக்க முழுக்க நமது இவ்வுலக வாழ்க்கைக்காக ஓடிக்கொண்டிருப்பதைக் குறிக்கும்.  இப்படி வாழும் மனிதர்கள் நித்திய ஜீவனை இழந்து தங்கள் ஆத்துமாவையும்  இழப்பார்கள்.  

இதற்கு மாறாக, "ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்." இந்த உலக வாழ்க்கைக்குப்பின் முடிவில்லா நித்திய வாழ்வு ஒன்று இருக்கின்றது.  வேதாகமம் அதற்கு வழிகாட்டுகின்றது. இயேசு கிறிஸ்துவும், "நானே வழி" என்று கூறி தன்னைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தினார். எனவே அவரது கட்டளைகளின்படி நடப்பதே ஆவிக்கென்று விதைத்தல்.  எனவே அன்பானவர்களேநாம் இந்த குறுகிய உலக வாழ்க்கைக்கு முன்னுரிமை கொடுத்து நித்திய ஜீவன் எனும்  முடிவில்லா வாழ்க்கையினை இழந்துவிடக் கூடாது

நாம் எதை விதைக்கின்றோமோ அதையே அறுப்போம்  எனும்  உண்மையினை உணர்ந்துகொண்டோமானால் நமது வாழ்க்கை வித்தியாசமானதாக மாறும்குறுகிய உலக ஆசைகளுக்காகப்  பாவ காரியங்களில் ஈடுபடமாட்டோம்.  இந்தச் சிந்தனை இல்லாததால் இன்று துன்மார்க்கமான பதவி, பணவெறிகொண்டு கொலைகளும் பல்வேறு அவலட்சணமான காரியங்களும், அற்பத்தனமான அரசியல் செயல்பாடுகளும் நடந்துகொண்டிருக்கின்றன. ஆனால் பொதுவாக எல்லோரும் கடவுள் நம்பிக்கை இருப்பதாகக் கூறிக்கொள்கின்றனர். அதாவது இவர்கள் கடவுளைத் தங்களைப்போன்ற ஒரு அற்பத்தனமானவராக எண்ணிக்கொண்டு செயல்படுகின்றனர். 

எனவே அன்பானவர்களே, நாம் எச்சரிக்கையாகச் செயல்படுவோம்.  மாம்சத்திற்கென்று விதைத்து அழிவை அடைந்திடாமல் ஆவிக்கென்று விதைத்து ஆவியினாலே நித்தியஜீவனைப் பெற்றுக்கொள்ள முயலுவோம். 


தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்