இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Friday, April 23, 2021

கிறிஸ்துவுக்காக கிறிஸ்துவை அன்புசெய்வோம்

                                                            - சகோ. எம் . ஜியோ பிரகாஷ்  


கிறிஸ்தவ ஆன்மீகம் என்பது இன்று சுயம் சார்ந்த ஒன்றாக; அதாவது, விசுவாசிகள் என்று தங்களைக் கூறிக்கொள்வோர் தங்களது சுய ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள மட்டுமே தேவனைத் தேடுவதாக இருக்கின்றது. தேவனைத் தேடுபவர்களைப்போல பலரும் ஆலயங்களுக்குச் சென்றாலும் அவர்கள் தேடுவதோ உலகப் பொருட்களையும் உலக ஆசீர்வாதங்களையுமே.   எனவேதான் அந்த உலக ஆசீர்வாதங்களை எப்படியாவது பெற்றிட வேண்டி காணிக்கைகளையும் இன்னும் பல்வேறு ஆவிக்குரிய காரியங்களையும் செய்கின்றனர். மற்றபடி அவர்களுக்கு கிறிஸ்து இயேசுவின்மேல் எந்தத் தனிப்பட்ட அன்போ பாசமோ இருப்பதாகத் தெரியவில்லை. 


பெரும்பாலான கிறிஸ்தவ ஊழியர்களும்கூட மக்களை இதுபற்றி தெளிவுபடுத்துவதோ, மெய்யான ஆன்மீகத்துக்கு நேராக மக்களை வழி  நடத்துவதோ இல்லை. காரணம் அவர்களும் உலக இச்சைகளிலும் பண ஆசையிலும் மூழ்கிப்போய் உள்ளனர். பிரபல ஊழியர்கள் மட்டுமல்ல, சிறிய அளவில் ஊழியம்செய்யும் ஊழியர்கள்கூட இப்படியே இருக்கின்றனர்.


இதற்கு முக்கிய காரணம், இன்று ஊழியம் செய்யும் பலரும் ஊழிய அழைப்பைப் பெற்றவர்களல்ல. அவர்களில் பலரும் கடமைக்காக ஊழியம் செய்பவர்களாகவே இருக்கின்றனர். வேறு வேலை கிடைக்காததால் ஊழியத்துக்கு வந்தவர்கள், பெற்றோரின் நிர்ப்பந்தத்தால் (ஊழியத்துக்கு எனது மகனை ஒப்புக்கொடுப்பேன் என பொருத்தனை செய்துவிட்டதால்)  ஊழியத்துக்கு வந்தவர்கள், சுய மன ஆசையால் ஊழியத்துக்கு வந்தவர்கள், நல்ல வேலையில் இருந்து பணி நிறைவுபெற்றபின் பொழுதுபோக்க ஊழியம் செய்பவர்கள் எனப் பல்வேறு வித ஊழியர்கள் உள்ளனர்.


இதுபோலவே விசுவாசிகளும் இருக்கின்றனர். இன்று விசுவாசிகள் என்று கூறிக்கொள்வோர் எதற்காக தேவனைத் தேடுகிறார்கள் என்று பார்ப்போமானால் அவர்களது பதில் வித்தியாசமாக இருக்கும். நான் சிலரிடம் பேச்சுவாக்கில் இந்தக் கேள்விகளைக் கேட்பதுண்டு. "நீங்கள் எதற்காகக்  கோவிலுக்குப் போகிறீர்கள் ? " அல்லது நீங்கள் தேவனிடம் என்ன வேண்டுவீர்கள்?"


இந்தக் கேள்விகளுக்கு பெரும்பாலோனோர் கூறிய பதில்கள் :- 

* கோவிலுக்குச் செல்வது கிறிஸ்தவ கடமை என்று வேதம் கூறுகின்றது, அதனால் செல்கிறேன்

* சிறுவயதுமுதல் கோவிலுக்குச் சென்று பழகிவிட்டதால் போகவில்லையானால் மனது உறுத்தும் அதனால் போகிறேன்.

*  எனது தேவைகளை ஆண்டவரிடம் கேட்பதற்குச் செல்கிறேன் 

* நோய்கள் , கடன் பிரச்சனைகள், பிள்ளைகளின் திருமண காரியங்கள், வேலை வாய்ப்பு கிடைக்க, தேர்வில் வெற்றிபெற, நல்ல மதிப்பெண் கிடைக்க......இப்படியே தொடரும் அவர்களது பதில்கள். 


இதற்கு  மேல் ஒருவர்கூட என்னிடம் வேறு பதில்கள் கூறவில்லை. அதாவது அனைவரும் தேவனைவிட தேவன் தரும் ஆசீர்வாதத்தையே விரும்புகின்றனர் என்பது தெளிவாக தெரிந்தது.  தேவனே நம்மிடம் வருவது   எவ்வளவு பெரிய ஆசீர்வாதம் என்று ஒருவர்கூட நினைக்கவில்லை. எனவே தேவனே நீர் எனக்கு வேண்டுமென்றோ  நீர் எப்போதும் என்னோடுகூட இருக்கவேண்டுமென்றோ வேண்டியதில்லை.


ஏதேனில் ஆதாம் ஏவாள் இப்படியே இருந்தனர். அவர்கள் தேவனைவிட தேவனால் படைக்கபட்டக் கனியையே அதிகம் விரும்பினர். எனவே, தேவ கட்டளையைப் புறக்கணித்து விலக்கபட்டக் கனியைப் புசித்தனர். 

  

பவுல் அடிகள் தனது சீடனான தீமோத்தேயு குறித்துக் கூறும்போது  "மற்றவர்களெல்லாரும் (தீமோத்தேயு தவிர மற்ற எல்லோரும்) கிறிஸ்து இயேசுவுக்குரியவைகளைத் தேடாமல், தங்களுக்குரியவைகளையே தேடுகிறார்கள்." (  பிலிப்பியர் 2 : 21 ) என்று கூறுகிறார். அன்பானவர்களே இதுவே இன்றும் தொடர்கிறது.

 

இப்படி தேவனைப் புறக்கணித்து தேவனால் படைக்கப்பட்டப் பொருட்கள்மேல் ஆசைகொள்வதுகுறித்து வேதம் பின்வருமாறு கூறுகின்றது. "தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென். இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சைரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்; " (  ரோமர் 1 : 25, 26 )


தேவனைவிட தேவனால் படைக்கபட்டப் பொருட்கள்மேல் ஆசைகொண்டு அவைகளை அடைந்திட வேண்டுவது சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவிப்பதே என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.


"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது. என் ஆத்துமா தேவன்மேல், ஜீவனுள்ள தேவன்மேலேயே தாகமாயிருக்கிறது; நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்?" (  சங்கீதம் 42 : 1 , 2 ) கோடைகாலத்தில் தண்ணீர் தாகத்தால் தவிக்கும் மான் எப்படி தாகம் தீர்க்கும் நீரோடையை நாடி வாஞ்சித்து கதறுகிறதோ அதுபோல ஜீவனுள்ள தேவன்மேல் எனது இருதயம் தாகமாயிருக்கிறது என்று தாவீது ராஜா கூறுகிறார்.

 

ராஜாவாகிய அவருக்கும் பல உலகத் தேவைகள் இருந்தன. ஆனால் அவற்றைவிட அவரது மனமானது தேவனையே தேடியது. மட்டுமல்ல, நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்? என ஏங்கினார் அவர். எனவேதான் தேவன் தாவீதைத் தனது இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டார்.  இந்த ஆசை நமக்கு இல்லையானால் நமது ஆன்மீக பக்தி முயற்சிகள் அனைத்துமே வீணானவைகளே.


அன்பானவர்களே நமக்குப்  பலப்  பிரச்சனைகள் தேவைகள் இருக்கலாம். ஆனால் பிரச்சனைகளுக்கு மூல தீர்வான தேவனைத் தேடுவதை  விட்டுவிட்டு அவரிடமிருந்து பெறவேண்டியவைகளையே பலரும் தேடுகிறோம். 


ஆனால் இயேசு கிறிஸ்துக் கூறினார், "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்." (  மத்தேயு 6 : 33 ) 


இயேசு கிறிஸ்து கூறிய வார்த்தைகளின்மேல் விசுவாசமில்லாததாலேயே பலரும் இப்படி இருக்கின்றனர். அன்பானவர்களே, இப்படியே இருப்போமானால் ஒருவேளை நாம் இந்த உலகினில் விரும்பியதைப் பெறலாம். ஆனால் கிறிஸ்துவை வாழ்வில் அறியாதவர்களாகவே மரிக்கவேண்டியிருக்கும். நமது  வாழ்வில் கிறிஸ்துவை  சுவைக்கும் அனுபவம் இல்லையானால் நாம் மரித்தபின்னும் அதனை சுவைக்கமுடியாது. நித்திய பேரின்பத்தையும் அடையமுடியாது. 


கிறிஸ்துவுக்காக கிறிஸ்துவை அன்புசெய்யும் மேலான நிலையினை வேண்டுவோம். அதுவே மெய்யான இறை அனுபவத்தை நமக்குக்  கொடுக்கும். 

Tuesday, April 20, 2021

 <meta name="google-site-verification" content="QTUFsZRnSfd5L4XwjczTpnoQ9aNvunXX_g08OvPBBCg" />

Thursday, April 08, 2021

எப்போதும் சந்தோசமாய் இருப்பது எப்படி?

                                           - எம். ஜியோ பிரகாஷ்


லகத்தில் நமக்கு பாடுகளும்,வேதனைகளும் தொடரத்தான் செய்யும். அதனால் நமது மனம் துவண்டு வேதனைப் படுவதுண்டு. கஷ்டமான சூழ்நிலையில் மகிழ்ச்சியாய் சந்தோசமாய் நாம் இருக்க முடியாதுதான். மிகப்பெரிய இழப்போ  நமக்கு வேண்டியவரது மரணமோ ஏற்படும்போது நாம் மகிழ்ச்சியாய் இருக்க முடியாதுதான். இயேசு கிறிஸ்து கூட தனது சிநேகிதன் லாசர் மரித்ததைக் கேள்விப்பட்டு கண்ணீர் சிந்தினார் என நாம் வேதத்தில் வாசிக்கின்றோம். ஆனால் அப்போஸ்தலரான பவுல் அடிகள், "கர்த்தருக்குள் எப்போதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்கிறேன் " (பிலிப்பியர் -4:4) எனக் கூறுகின்றார்.


அப்போஸ்தலரான பவுல் ஏன் இப்படிக் கூறுகின்றார் என்று இந்த வசனத்தைச் சரியாகக் கவனித்தால் புரியும். அவர் கூறுகின்றார், "கர்த்தருக்குள் எப்போதும் சந்தோஷமாயிருங்கள் ". என்று. உலக சந்தோசம் என்பது வேறு ஆவிக்குரிய சந்தோசம் என்பது வேறு. பவுல் அடிகள் இங்குக் கூறுவது ஆவிக்குரிய சந்தோசம் குறித்து. அதனைத்தான் "கர்த்தருக்குள்" என்ற அடைமொழியுடன் கூறுகின்றார். இந்த உலகத்தில் நமக்குப் பாடுகள், வேதனைகள், பிரச்சனைகள் எல்லாம் உண்டு ஆனால் கர்த்தரை விட்டு பின்மாறிடாமல், பிரச்னை வந்தவுடன் தேவனை முறுமுறுக்காமல், ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது? நான் தேவனிடம் எவ்வளவோ நம்பிக்கையாய் இருந்தேன், என் நம்பிக்கை பொய்த்துவிட்டது.....என்பன போன்ற எண்ணங்கள் நமது தேவன் மீதான நம்பிக்கையை சேதப்படுத்த விடாமல் வாழ்வது. இதுவே கர்த்தருக்குள் சந்தோஷமாய் இருப்பது.


இப்படி ஒரு மனநிலை இருந்ததால்தான் பவுல் அடிகள், "நான் எந்த நிலையில் இருந்தாலும் மன ரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன். தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும் வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும் ." (பிலிப்பியர் -4:11,12) எனக் கூறுகின்றார்.


யோபுவின் வாழ்க்கையைப் பாருங்கள். அவர் துன்பப்பட்டபோது அரற்றினார், புலம்பினார். அது அவரது மனித மனநிலை. ஆனால் அவர் தேவனோடு ஆவிக்குரிய உறவில் இருந்ததால் மகிழ்ச்சியோடு கூறினார், " என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசி நாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். இந்த என் தோல் முதலானவை அழுகிப்போன பின்பு நான் என் மாம்சத்திலிருந்து தேவனைப் பார்ப்பேன் " (யோபு-19:25,26) இதுவே கர்த்தருக்குள் சந்தோசமாய் இருப்பது.


எந்த நேரத்திலும், பிரச்சனையிலும் தேவனை விட்டுப் பின் மாறிடாமல் இருப்பது. இரத்த சாட்சிகளது வாழ்க்கை இப்படித்தான் இருந்தது. முதல் இரத்த சாட்சியான ஸ்தேவான் ஒரு உதாரணம். அவரைக் கல் எறிந்து கொல்வதற்கு கொண்டு செல்லும்போதும் அவர் மனம் கலங்கவில்லை. தேவனது மகிமையைக்  கண்டு களிகூர்ந்தார்இன்று நமக்குப் பாடுகளும் துன்பங்களும் வரும்போது  யோபுவைப் போலும், பவுலைப்போலும், ஸ்தேவானைப் போலும் நம்மால் இருக்க முடியாவிட்டாலும் தேவனை முறுமுறுக்காமலாவது இருப்போம்.


தேவனோடு அதிக ஜெப வாழ்வில் நெருங்கி நாம் வாழும்போது தேவன் இந்த பலத்தை நமக்குத் தருவார். ஆனால் நாம் உலக நாட்டங்களுக்காக மட்டும் தேவனைத் தேடாமல் அன்போடு, "தேவன் எனக்கு வேண்டும்" எனும் அன்பு உணர்வோடு தேவனைத் தேடவேண்டும். அப்படித் தேடும்போது உலக ஆசீர்வாதங்கள் நமக்குக் கிடைக்காமல் போனாலும் அது நம்மை சோர்வுக்குள்ளாக்காது.


எபிரேயர் நிருபத்தில் பல விசுவாச வீரர்களைக் குறித்து வாசிக்கின்றோம். ஆனால் அவர்கள் எல்லோரும் தாங்கள் விசுவாசித்ததை இந்த உலகத்தில் அடையவில்லை. ஆனால் மகிழ்ச்சியோடு மரித்தனர். "இவர்களெல்லாரும், வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவைகளை அடையாமல், தூரத்திலே அவைகளைக் கண்டு, நம்பி அணைத்துக்கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு, விசுவாசத்தோடே மரித்தார்கள்." ( எபிரெயர் 11 : 13 )


துன்பங்கள் நம்மை மேற்கொள்ளாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது அவசியம். அதாவது துன்பங்களே இல்லாத வாழ்வை தேவன் நமக்கு வாக்களிக்கவில்லை என்ற உணர்வு நமக்கு வேண்டும். "உலகத்திலே உங்களுக்கு உபத்திரவம் உண்டு" என்றுதான் இயேசு கிறிஸ்துக் கூறினார்.


யோபுவைவிட பெரிய துன்பம் ஒன்றும் நமக்கு வந்துவிடவில்லை. எனவே  கர்த்தருக்குள் சந்தோஷமாயிருங்கள்.

Wednesday, April 07, 2021

படைத்த தேவனா ? படைக்கபட்ட உலகப் பொருளா?

                                                   - எம் . ஜியோ பிரகாஷ் 

 "தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள்.....இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சை ரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்..." (ரோமர்- 1:25,26)


படைத்தவரை சேவிப்பது, படைக்கப்பட்ட பொருட்களை சேவிப்பது என இரு வேறு நிலைகளை பவுல் அடிகள் இங்கு விளக்குகின்றார். அதாவது படைத்தத் தேவனுக்குரிய மகிமையை அவருக்குக் கொடுக்காமல் படைக்கப்பட்டப் பொருட்களுக்குக் கொடுப்பது. இது இன்று நேற்று ஆரம்பித்த நிலையல்ல, தேவன் மனிதனைப் படைத்த ஆரம்ப காலத்திலேயே ஆரம்பித்துவிட்டது.

அன்று ஏதேனில் ஆதாமும் ஏவாளும் தங்களைப் படைத்தத் தேவனது கட்டளையை மீறி தேவன் தடை செய்த படைக்கப்பட்ட பொருளான கனியின்மேல் ஆசைகொண்டார்கள். அதனால் தேவனது சாபத்துக்கு உள்ளானார்கள்இன்றும் மனிதன் இதையே செய்கின்றான். தேவனைவிட உலகப் பொருட்கள்மேல் ஆசை கொள்வது சிருஷ்டியை தொழுது சேவிப்பதுதான். பணம், பதவி, சொத்து சுகங்களுக்கு ஆசைப்பட்டு இன்று மனிதர்கள் தேவனுக்கு விரோதமான செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.

இப்படி தேவனை விட்டு தேவனால் படைக்கப்பட்ட பொருள்மேல் ஆசை கொள்வதால்தான் இழிவான "இச்சை" மனிதனில் பிறக்கின்றது என இந்த வசனம் சொல்கிறதுதேவனுக்கு ஒப்பானது உலகினில் எதுவுமே இல்லை. ஆனால் இன்று மனிதர்கள் பணம், பதவி , பெண் ஆசை, மண்ணாசை என  இழிவான இச்சைகளில் சிக்கி தேவனது சாபத்துக்கு உள்ளாகின்றார்கள். எப்படியாவது உலகினில் நினைததைச் சாதித்துவிடவேண்டுமென்றும் மக்களது மதிப்பினைப் பெற்றுவிடவேண்டுமென்றும் தரம்தாழ்ந்த செயல்பாடுகளில் மனிதர்கள் ஈடுபடுகின்றனர்.

மட்டுமல்ல, இப்படி இழிவான இச்சைகளில் சிக்கி இருப்போர் "அவைகளை செய்கின்ற மற்றவர்களிடத்தில் பிரியப்படுகிறவர்களுமாய் இருக்கிறார்கள்." (ரோமர் -1;32) உலகினில் நடக்கும் காரியங்களை நாம் கவனித்துப் பார்த்தாலே இது புரியும். அவலட்சணமான காரியங்களைச் செய்யும் அரசியல்வாதிகளுக்குப் பின்னால் மக்கள்கூட்டம் ஓடுவது இதனால்தான். அவர்கள் இந்தமாதிரி மோசமான காரியங்களில் ஈடுபடுவோரையே விரும்புகின்றனர். இந்த உலகத்திலேயே துன்மார்க்கத்தில் ஈடுபடும் மனிதனுக்கு அமைதியாக நல்லசெயல்பாடுகளைச் செய்யும் மனிதர்களோடு ஒத்துபோகமுடியவில்லை. அப்படியானால் இவர்கள் எப்படி பரிசுத்தவான்கள் கூட்டத்தில் சந்தோஷமடைய முடியும்?

அன்பானவர்களே, மனிதனது வேசித்தன செயல்பாடுகளுக்கு காரணமும் இச்சையே. இதன்பொருட்டே உலகம் இன்று விலை கொடுத்துக்கொண்டு இருக்கிறது. ஆம் இவை அனைத்துக்கும் காரணம் தேவனை விட்டு தேவனால் படைக்கப்பட்ட பொருட்கள்மேல் ஆசைகொள்வதே. அப்போஸ்தலரான பவுல் இப்படி படைத்தவரைவிட்டு படைக்கப்பட்டப் பொருட்கள்மேல் ஆசைகொள்வதால் வரும் கேடுகளைப்பற்றி ரோமர் நிருபத்தில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

"இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சைரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்; அந்தப்படியே அவர்களுடைய பெண்கள் சுபாவ அநுபோகத்தைச் சுபாவத்துக்கு விரோதமான அநுபோகமாக மாற்றினார்கள். அப்படியே ஆண்களும் பெண்களைச் சுபாவப்படி அநுபவியாமல், ஒருவர்மேலொருவர் விரகதாபத்தினாலே பொங்கி, ஆணோடே ஆண் அவலட்சணமானதை நடப்பித்து தங்கள் தப்பிதத்திற்குத் தகுதியான பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள்." ( ரோமர் 1 : 26, 27 )

மனிதர்களுக்கு தேவனை அறியவேண்டுமெனும் ஆசை இல்லை. எனவேதான் அவர்கள் படைக்கபட்டப் பொருட்களை நாடி தேவனைப் புறக்கணிக்கின்றனர். இதுவே மனிதனது கேடான சிந்தைகளுக்குக் காரணமாகின்றது. "தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்." (  ரோமர் 1 : 28 )

அன்பானவர்களே, உலக பொருட்கள்மேல் ஆசைகொண்டு தேவனை மறந்து வாழ்வோமெனில் நமது நித்தியம் நரக அக்கினியிலேயே இருக்கும். உலகப் பொருட்களை தேவைக்கு அனுபவிப்போம்; இச்சைகொண்டு அலைந்து அவைகளைப்பெற துன்மார்க்கச்செயல்பாடுகளில் ஈடுபட்டு நமது ஒரே வாழ்வைத் தொலைத்துவிடவேண்டாம். அப்படியே இருப்போமெனில் இம்மையிலும் மறுமையிலும் நமக்கு நிம்மதியென்பது இருக்காது.


Tuesday, April 06, 2021

ஆதவன் - ஏப்ரல் 07, 2021 - புதன்கிழமை

 நல்லது செய்து ஒருவன் தேவனது முன்னிலையில் நல்லவன் ஆக முடியாது.

ஆதவன் - ஏப்ரல் 07, 2021 - புதன்கிழமை          இன்றைய  வேதாகம சிறுசெய்தி - 281

"என்னிடத்தில், அதாவது, என் மாம்சத்தில், நன்மை வாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்; நன்மைசெய்யவேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது, நன்மைசெய்வதோ என்னிடத்திலில்லை." ( ரோமர் 7 : 18 )

பொதுவாக மனிதர்கள் நல்லதுசெய்து தங்களை நல்லவர்களாகக் காட்டிக்கொள்ள விரும்புகின்றார்கள். ஆனால் நல்லது செய்பவர்களெல்லாம் நல்லவர்களல்ல. உதாரணமாக நாம் பல அரசியல் தலைவர்களைப் பார்க்கின்றோம். அவர்களில் பலரும் பல நல்ல செயல்களைச் செய்கின்றனர். ஆனால் அவர்கள் அப்படி நல்ல செயல்களைச் செய்வதன் நோக்கம் தங்கள் சுய லாபம்; பதவிவெறி. இது ஒரு உதாரணம் மட்டுமே.

இப்படியே அனைத்துச் செயல்களும் இருக்கின்றன. நமது குடும்பத்தில், நண்பர்கள் மத்தியில் நாம் செய்யும் சில நல்ல செயல்கள், தர்ம காரியங்களுக்கு உதவுதல், ஆலய காரியங்களில் நாம் செயல்படுவது என அனைத்துக் காரியங்களிலும் மனிதனது சுயம் உள்ளே அமுங்கி இருக்கும். எனவே நல்லது செய்து ஒருவன் தேவனது முன்னிலையில் நல்லவன் ஆக முடியாது.

எனவேதான் அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார், நன்மைசெய்யவேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது, நன்மைசெய்வதோ என்னிடத்திலில்லை. அதாவது நாம் நல்லது செய்யவேண்டுமானால் முதலில் கிறிஸ்து இயேசு நம்முள் உருவாக வேண்டும். கிறிஸ்துவின் ஆவி நம்முள் வரும்போது மட்டுமே நம்மால் நன்மை செய்ய முடியும். அப்போதுதான் நமது சுயம் சாகும்.

கிறிஸ்து நம்முள் இல்லாமல் நாம் செய்யும் நல்ல செயல்கள் தீமையாகவே முடியும். காரணம் மனித சுயம் எப்படியாவது அதில் கலந்திருக்கும். அப்படி கலந்திருப்பதே தீமையாயிருக்கிறது. "ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன்."( ரோமர் 7 : 19 ) என்கின்றார் பவுல் அடிகள்.

இதற்குத் தீர்வுதான் என்ன? அது பரிசுத்த வழிநடத்தலுக்கு நம்மை முற்றிலும் ஒப்படைப்பது; சில வேளைகளில் நாம் நமது மன விருப்பப்படிச் செய்யும் சில செயல்கள் தேவனுக்குப் பிரியமானதாக இருக்காது. எனவேதான் ஆவியின் வழிநடத்துதலின்படி வாழ்வதும் செயல்படுவதும் ஆவிக்குரிய வாழ்வில் முக்கியமானதாக இருக்கிறது. இப்படி ஆவிக்குரிய வழி நடத்துதலோடு நடப்பவர்களே தேவனுக்கு உகந்தவர்கள். "ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை." ( ரோமர் 8 : 1 ).

அன்பானவர்களே, எந்த ஒரு காரியமாக இருந்தாலும் தேவ ஆலோசனையின்படியும் ஆவியானவரின் வழி நடத்துதலின்படியுமே நாம் செய்யவேண்டும். அப்போஸ்தலரான பவுல் அடிகளே, என் மாம்சத்தில், நன்மை வாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன் எனக் கூறுகின்றார். நாம் எம்மாத்திரம்?

நன்மைசெய்யவேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது, நன்மைசெய்வதோ என்னிடத்திலில்லை எனப் பவுல் அடிகள் கூறுவதுபோல நாம் நம்மைக் கிறிஸ்துவுக்கு ஒப்படைத்துவிடுவோம். நாம் கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடந்தால் நமக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.

Monday, April 05, 2021

ஆதவன் - ஏப்ரல் 06, 2021 - செவ்வாய்க்கிழமை

 தேவன் மதத்தைப்பார்த்து மனிதனை நேசிப்பவரல்ல

ஆதவன் - ஏப்ரல் 06, 2021 - செவ்வாய்க்கிழமை          இன்றைய  வேதாகம சிறுசெய்தி - 280

"தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 10 : 34 , 35 )

மனிதர்கள் தங்கள் குறுகிய புத்தியால் கடவுளையும் தங்களைப்போல அற்பமானவராக எண்ணிக்கொள்கின்றனர். உலக மனிதர்களுக்கும் தலைவர்களுக்கும் பிறர் தங்களைப் புகழ்வதும் தங்களுக்கு மாலை அணிவித்து மரியாதைசெய்து வரவேற்பதும் பெரிதாகத் தெரியும். ஆனால் தேவன் அப்படிபட்டவரல்ல. மக்கள் பொதுவாக இதுபோல ஒரு அற்ப மனிதனாகக் கடவுளையும் எண்ணிக்கொள்கின்றனர். எனவே கடவுள் படத்துக்கு மாலை அணிவிப்பதையும், நறுமண அகர்பத்திகளைக் கொளுத்துவதையும் இன்னும் பல்வேறு பக்திக் செயல்களைச் செய்வதையும் கடவுள் விரும்புவார் என எண்ணி அவைகளுக்கு முன்னுரிமை கொடுக்கின்றனர்.

இத்தகைய மனிதர்கள், கடவுள்தான் தங்களைப் பாதுகாக்கின்றார் என்பதை மறந்து இவர்கள் கடவுளைப் பாதுகாக்க முயலுகின்றனர். அரசியல் தலைவனிடம் அன்பினைப்பெற பிற கட்சிக்கு எதிராகச் சில அற்ப செயல்களைச் செய்வதுபோன்று கடவுளது அன்பினைப் பெற பிற மத வழிபாட்டுத்தலங்களை அழித்து தங்கள் கடவுளுக்கு வழிபாட்டுத் தலங்கள் அமைக்க முயலுகின்றனர். அதாவது கடவுளை ஒரு அற்பமான அரசியல் தலைவனாக எண்ணிக்கொள்கின்றனர்.

தவறு என்று தெரிந்தும் தங்களது மதவைராக்கியதாலும், ஜாதி வைராக்கியதாலும் அநீதிக்குத் துணைபோகின்றனர். விபச்சாரம், வேசித்தனம், களவு, ஏமாற்று, வஞ்சகம், ஊழல் என அனைத்து அயோக்யத்தனங்களையும் செய்துவிட்டு கடவுள் உருவங்களுக்குமுன் கூப்பாடுபோட்டு அலறுவதாலும் அந்த உருவங்களுக்கு முன் மரியாதையாக விழுந்து வணங்குவதாலும் ஆசீர்வாதம் கிடைக்குமென்று எண்ணுகின்றனர்.

ஆனால் நமது பரிசுத்தமான தேவன் சொல்கின்றார்,
நான் பட்சபாதமுள்ளவரல்ல, எந்த ஜனத்திலாயினும் எனக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே எனக்கு உகந்தவன். அதாவது, நீ எனக்கு பூமாலையும் பத்தியும் நறுமண புகைகளும் செலுத்தவேண்டாம், எனக்குப் பயந்து நீதியைச் செய்; அது போதும்.

கொர்நேலியு தேவனை அறியாதவராக இருந்தாலும் தேவனுக்குப் பயந்து நீதியைச் செய்து வாழ்ந்தவர்; தனது சுய மகிமைக்காக அல்லாமல் உண்மையான மனித நேயத்துடன் தானங்களும் தர்மங்களும் செய்தவர். எனவே தேவன் தன்னை அவருக்கு வெளிப்படுத்தினார்.

நமது பாவ வழிகளைத் தொடர்ந்து நடத்திக்கொண்டு வாழ்பவன் தேவனை அறிய முடியாது. மத வைராக்கியத்தினால் தனது கடவுளுக்கென்று சில பல செயல்களை செய்யலாம். ஆனால் அனைவரையும் படைத்து ஆளும் தேவன் ஒருவரே. அவர் அநியாயத்துக்குத் துணைபோகின்றவர் அல்ல. "அவர் தீமையைப் பார்க்க மாட்டாத சுத்தக்கண்ணர்". அநியாய வாழ்க்கை வாழ்ந்து இவ்வுலக நிம்மதியையும் இழந்து மறு உலக நிச்சயமுமில்லாமல் பரிதாபமாக உலகத்தைவிட்டுக் கடந்துச்சென்ற தலைவர்களையும் சாதாரண மனிதர்களையும் நாம் பார்த்துள்ளோம்.

அன்பானவர்களே, ஒரேயொரு வாழ்வு நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை நீதியோடும் நேர்மையோடும் வாழ்ந்து தேவனை அறிந்துகொள்வோம். தேவன் மதத்தைப்பார்த்து மனிதனை நேசிப்பவரல்ல; அவர் நம்மில் யாருக்கும் தூரமானவருமல்ல. கொர்நேலியுவைபோல நீதியோடும் நேர்மையோடும் வாழும் யாருக்கும் தன்னை வெளிப்படுத்துவார்.

Sunday, April 04, 2021

ஆதவன் - ஏப்ரல் 05, 2021 - திங்கள்கிழமை

 பாவத்துக்கு மரித்து நீதிமான்களாக்கப்பட வேண்டுமானால் கிறிஸ்துவுக்கு நம்மை முற்றிலும் ஒப்படைக்கவேண்டியது அவசியமாயிருக்கிறது.

ஆதவன் - ஏப்ரல் 05, 2021 - திங்கள்கிழமை          இன்றைய  வேதாகம சிறுசெய்தி - 279

"கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலைக்குறித்து அப்போஸ்தலர் மிகுந்த பலமாய்ச் சாட்சிகொடுத்தார்கள்; அவர்களெல்லார்மேலும் பூரண கிருபை உண்டாயிருந்தது." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 4 : 33 )

கிறிஸ்து உயிர்தெழுந்தது அவரைக் கொலைசெய்த யூதர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்திருக்கும். ஆனால் அவர்களால் அதனை மூடி மறைக்கமுடியவில்லை. காரணம், அப்போஸ்தலர்கள் மூலம் செய்யப்பட்ட அருஞ்செயல்கள். கிறிஸ்து செய்ததுபோல அப்போஸ்தலர்களும் மரித்தவர்களை உயிரோடு எழுப்பினார்கள், நோய்களைக் குணமாக்கினார்கள், முடவர், குருடர் போன்றவர்களை சுகமாக்கினார்கள். இப்படி, கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலைக்குறித்து அப்போஸ்தலர் மிகுந்த பலமாய்ச் சாட்சிகொடுத்தார்கள்.

ஆனால், மக்களிடையே கிறிஸ்துவின் உயிர்தெழுதலைக் குறித்து பல்வேறு சந்தேகங்கள் இருந்தன. விசுவாசிகள் என்று தங்களைக் கூறிக்கொண்டு ஆலயத்துக்கு வந்தவர்களிடத்தையேகூட கிறிஸ்துவின் உயிர்தெழுதலைக் குறித்து சில சந்தேகங்கள் இருந்தன. அவர்களுக்கு உண்மையினைத் தெளிவுபடுத்தவே அப்போஸ்தலரான பவுல் அடிகள், "கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா (வீண்) ." (  1 கொரிந்தியர் 15 : 14 ) என்று எழுதுகின்றார்.

மேலும், "கிறிஸ்து எழுந்திராவிட்டால், உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும்; நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள்." ( 1 கொரிந்தியர் 15 : 17 ) என்று எழுதுகின்றார். அதாவது நமது பாவங்கள் கிறிஸ்துவினால் மன்னிக்கப்படும் அனுபவம் நமக்கு வேண்டும். இல்லையானால் கிறிஸ்துவை விசுவாசிக்கிறேன் என்று நாம் கூறிக்கொள்வதும் வீணானதாயிருக்கும்.

மேலும் இன்றைய வசனம் கூறுகின்றது, "அவர்களெல்லார்மேலும் பூரண கிருபை உண்டாயிருந்தது." அதாவது கிறிஸ்துவின் உயிர்தெழுதலுக்குச் சாட்சிகளாயிருந்த சீடர்கள்மேல் கிறிஸ்துவின் பூரண கிருபை இருந்தது. இன்று நாமும் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவுக்குச் சாட்சிகளாக வாழ்வோமானால், நம்மைக்கொண்டும் வல்லமையான செயல்களை தேவன் செய்வார்; மட்டுமல்ல நம்மேலும் கிறிஸ்துவின் பூரண கிருபை நிறைந்திருக்கும்.

கிறிஸ்துவின் பாடுகளும் மரணமும் நம்மை பாவங்களிலிருந்து விடுவிக்கக் காரணமாயிருக்கின்றது. மனிதர்கள் பாவம் செய்து மீறிமீறிப்போனாலும், "மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல. எப்படியெனில், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாய்ப் பெருகியிருக்கிறது." ( ரோமர் 5 : 15 )

மேலும் ஒரே மனிதனாகிய ஆதாமின் கீழ்படியாமையினால் பாவிகளான மனிதர்கள், கிறிஸ்துவின் கீழ்படிதலினால் நீதிமான்களாக்கப்படுகிறார்கள். "அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்." (  ரோமர் 5 : 19 )

எனவே நாம் பாவத்துக்கு மரித்து நீதிமான்களாக்கப்பட வேண்டுமானால் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவுக்கு நம்மை முற்றிலும் ஒப்படைக்கவேண்டியது அவசியமாயிருக்கிறது. எனவே நம்மை அவருக்கு முற்றிலும் ஒப்படைப்போம்; மீட்பின் அனுபவத்தைப் பெற்று சாட்சிகளாக வாழ்வோம்.

Saturday, April 03, 2021

ஆதவன் - ஏப்ரல் 04, 2021 - ஞாயிற்றுக்கிழமை

 உயிர்ப்பு விழா கொண்டாடி மகிழ்ந்தால் போதாது. அவர் வரும்போது அவரை எதிர்கொள்ளத் தகுதியுள்ளவர்களாய் மாறவேண்டியது அவசியம்.

ஆதவன் - ஏப்ரல் 04, 2021 - ஞாயிற்றுக்கிழமை          இன்றைய  வேதாகம சிறுசெய்தி - 278

"சீமோன் பேதுரு அவனுக்குப்பின்னே வந்து, கல்லறைக்குள்ளே பிரவேசித்து, சீலைகள் கிடக்கிறதையும், அவருடைய தலையில் சுற்றியிருந்த சீலை மற்றச்சீலைகளுடனே வைத்திராமல் தனியே ஒரு இடத்திலே சுருட்டி வைத்திருக்கிறதையும் கண்டான்."( யோவான் 20 : 6 , 7 )

கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைப் பற்றிக் கூறும்போது அவரை அடக்கம் செய்தபோது அவரது தலையில் சுற்றிக்கட்டியிருந்த துணியினைப்பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. வேதத்திலுள்ள எந்த வசனமும் அர்த்தமில்லாமல் எழுதப்படவில்லை என்பதற்கு வேதாகமத்தில் இந்தத் துணிபற்றி எழுதபட்டுள்ள குறிப்பு ஒரு சான்றாகும். கிறிஸ்துவின் தலைத் துணியினைப்பற்றிக் கூறப்பட்டுள்ளதற்கு வேத அறிஞர்கள் யூத முறைமைகளை ஆய்வுசெய்து கீழ்கண்ட உண்மையினைக் கண்டறிந்துள்ளனர்.

மதிப்புமிக்க யூதத் தலைவர்கள் விருந்துண்ணும்போது கடைபிடிக்கும் ஒரு வழக்கத்தை இது குறிப்பிடுகின்றது. அதாவது, தலைவன் உணவருந்தும்போது வேலைக்காரன் உணவுகளைப் பரிமாறிவைத்துவிட்டு ஒதுங்கிச்சென்றுவிடவேண்டும். தலைவன் சாப்பிடுவதை அவன் பார்த்துக்கொண்டு நிற்கக்கூடாது; தலைவன் அவனை அழைத்தாலொழிய அந்த அறையினுள் வரக்கூடாது.

சிலவேளைகளில் உணவருந்தும் தலைவன் அவசரவேலையினிமித்தம் வெளியே செல்லநேர்ந்தால், அவன் தனது தலையில் கட்டியிருக்கும் தலைத் துணியைக் கழற்றி சுருட்டி உணவருந்தும் மேசையின் ஓரத்தில் வைத்துவிட்டுச் செல்வான். அப்படி அவன் செல்வது, நான் இன்னும் எனது உணவை முடிக்கவில்லை, நான் திரும்பி வருவேன் என்பதைக் குறிக்கும். அப்போது அந்த வேலைக்காரன் தலைவன் வருகையினை எதிர்பார்த்துக் காத்திருப்பான்.

அன்பானவர்களே, சுருட்டி வைக்கப்பட்டிருந்த கிறிஸ்துவின் தலைதுணியினைப்பற்றி தனியாக வேதம் குறிப்பிடுவதற்குக் காரணம் இதுதான் எனக் கண்டறிந்துள்ளனர் வேத அறிஞர்கள். அதாவது கிறிஸ்து தான் மீண்டும் வரப்போவதைக் குறிக்க இதனை ஒரு அடையாளமாக விட்டுச் சென்றார்.

"கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ அப்படியே மறுபடியும் வருவார்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 1 : 11 )

அன்பானவர்களே, கிறிஸ்து தனது முதல் வருகையில் கிருபை நிறைந்தவராக வந்தார். அன்பு, இரக்கம், நிறைந்து பணியாற்றினார். ஆனால் அவரது இரண்டாம் வருகை நீதிபதி போன்று உலகை நியாயம்தீர்க்கப் போகின்ற வருகை. அங்கு அன்பு, இரக்கம் எல்லாம் இருக்காது, நீதி மட்டுமே அவர்முன் இருக்கும். எனவேதான் அவர் கூறுகின்றார், "இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது." (  வெளிப்படுத்தின விசேஷம் 22 : 12 )

தனது சுய இரத்தத்தால் மீட்பினை உருவாக்கியவர் அதனை அலட்சியப்படுத்துபவர்களை நீதியாய் நியாயம்தீர்ப்பேன் என்கின்றார். வெறும் உலக மகிழ்ச்சிக்காய் உயிர்ப்பு விழா கொண்டாடி மகிழ்ந்தால் போதாது. அவர் வரும்போது அவரை எதிர்கொள்ளத் தகுதியுள்ளவர்களாய் மாறவேண்டியது அவசியம்.

"நான் சிறு குழந்தையாய் இருந்தபோதிருந்தே அவர் வருகிறார் , வருகிறார் என்று கூறுவதைக் கேட்கிறேன், எப்போதான் வருவார்" எனச் சிலக் கிறிஸ்தவர்களே கிண்டலாகக் கேட்கின்றனர். அவர்களுக்கு அப்போஸ்தலரான பேதுரு இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன்பே பதில் கூறிவிட்டார்.

"அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்தபின்பு சகலமும் சிருஷ்டிப்பின் தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே என்று சொல்லுவார்கள்." ( 2 பேதுரு 3 : 4 )

"தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்." ( 2 பேதுரு 3 : 9 )

அவர் வருவார் என்பதற்கு கல்லறையில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த துணியும்கூட ஒரு முன்னடையாளம்தான்.

"இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர் மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்." ( வெளிப்படுத்தின விசேஷம் 22 : 20 )

ஆதவன் - ஏப்ரல் 03, 2021 - சனிக்கிழமை

 இயேசு கிறிஸ்துவின்மேல் பரிதாபப்பட்டு அழும் கண்ணீராக இல்லாமல், பாவத்துக்கு மனம்வருந்தி மன்னிப்புக் கேட்கும் கண்ணீராக இருக்கட்டும்.

ஆதவன் - ஏப்ரல் 03, 2021 - சனிக்கிழமை          இன்றைய  வேதாகம சிறுசெய்தி - 277

"திரள்கூட்டமான ஜனங்களும் அவருக்காகப் புலம்பி அழுகிற ஸ்திரீகளும் அவருக்குப் பின்சென்றார்கள். இயேசு அவர்கள் முகமாய்த் திரும்பி: எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்." ( லுூக்கா 23 : 27, 28 ) என்றார்.

இன்று பெரிய வியாழன் மற்றும் துக்கவெள்ளி நாட்களில் நடைபெறும் ஆராதனைச் சடங்குகளில் கலந்துகொள்ளும் பலருக்கு இயேசுவின் பாடுகளும் மரணமும் மனதில் ஒரு உணர்ச்சியைத் தூண்டி கண்களில் கண்ணீர் வரவைக்கலாம். இது மன உணர்ச்சியினால் ஏற்படும் ஒரு தூண்டுதல். ஒரு சோகமான திரைப்படத்தைப் பார்க்கும்போது பலர் அழுவதுண்டு; சிலருக்கு புத்தகங்களில் படிக்கும் கதைகள் இப்படி உணர்ச்சியினைத் தூண்டலாம். ஆனால் அடுத்தச் நாட்களில் எல்லாவற்றையும் மறந்துவிடுவார்கள்.

அன்பானவர்களே, இயேசு கிறிஸ்துவின் சித்திரவதைகளும் மரணமும் உணர்ச்சிவசப்பட்டு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் அழுது மறந்துபோவதற்கல்ல. இப்படிப் பரிதாபப்பட்டுத் தனக்காக மக்கள் அழுவதை இயேசு விரும்பவுமில்லை. அதனையே தன்னைப் பார்த்து அழுத பெண்களுக்கு அவர் கூறுகின்றார், "நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்".

பாவமும் மரணமும் எவ்வளவு கொடூரனானவை என்பதை இயேசு அறிந்திருந்தார். ஆனால் மக்களுக்கு அதனைப்பற்றி அக்கறையில்லாமலிருந்தது. அவர்கள் உணர்ச்சிவசப்பட்டும் அவர்மேல் பரிதாபம்கொண்டும் அழுதனர். எனவே தங்களது பாவ வாழ்க்கையிலிருந்து மனம்திரும்பாமல், தங்களது குழந்தைகளது மனம்திரும்புதலைகுறித்து கவலைகொள்ளாமல் வெறும் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் அழுவதில் பிரயோஜனமில்லை என்பதையே இயேசு கிறிஸ்து இங்குக் குறிப்பிடுகின்றார்.

அன்பானவர்களே, வெறும் உணர்ச்சிகளுக்கு அடிமையானது போதும். இத்தகைய உணர்ச்சிவசப்படுவது ஒன்றுக்கும் உதவாது. நாம் மனம்திரும்பாமல்போனால் இறுதியில் அது நம்மை நரகத்துக்கு நேராகக் கொண்டுசென்றுவிடும். "ஆண்டவரே, ஆண்டவரே உமக்காக துக்கவெள்ளிக்கிழமைதோறும் அழுதேனல்லவா ?" என்று நாம் கூறி தப்பிட முடியாது. ஏனெனில், மனம் திரும்பாமல் இருந்துகொண்டு வெறுமனே பிரசங்கங்களைக் கேட்பதோ தேவனுடைய ஆலயத்தில் நற்கருணை உட்கொள்வதோ கூட நம்மை பரலோகத்துக்கு உரிமையாளராக்காது என்று இயேசு கிறிஸ்து ஏற்கெனவே பின்வருமாறு தெளிவாகக் கூறியுள்ளார்:-

"அப்பொழுது நீங்கள்: உம்முடைய சமுகத்தில் போஜனபானம்பண்ணினோமே, நீர் எங்கள் வீதிகளில் போதகம்பண்ணினீரே என்று சொல்லுவீர்கள். ஆனாலும் அவர்: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன், அக்கிரமக்காரராகிய நீங்களெல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று சொல்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்."( லுூக்கா 13 : 26 , 27 )

அன்பானவர்களே, இந்த நாட்களில் நாம் அழுவது வெறும் உணர்ச்சிவசப்பட்டு, இயேசு கிறிஸ்துவின்மேல் பரிதாபப்பட்டு அழும் கண்ணீராக இல்லாமல், பாவத்துக்கு மனம்வருந்தி மன்னிப்புக் கேட்கும் கண்ணீராக இருக்கட்டும். அதனையே இயேசு கிறிஸ்து விரும்புவார்.