பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்...


                                             -  எம். ஜியோ பிரகாஷ் 


கிறிஸ்தவம் என்பது  வெறும் ஆராதனை, சடங்குகள், சம்பிரதாயங்கள் சார்ந்த ஒன்றல்ல. ஆனால் இன்று அது அப்படி மாற்றப்பட்டுவிட்டது. பெரும்பாலான விசுவாசிகளும் ஊழியர்களும் ஆராதனை சடங்குகள் சம்பிரதாயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கிறிஸ்தவத்தின் மூல கோட்பாடுகளை மறந்து விட்டனர். எனவேதான் சாதாரண உலக மதங்களைப்போல ஒரு மதமாகவே கிறிஸ்தவம் மக்களால் பார்க்கப்படுகின்றது.


கிறிஸ்தவம் மதமல்ல, அது ஒரு வாழ்க்கை மார்க்கமாகும். "நானே வழி " என்று கூறி நமக்கு வழிகாட்டிய கிறிஸ்துவின் வழியில் நடப்பதே கிறிஸ்தவ வாழ்வு. தேவனோடு தொடர்புடைய ஒரு வாழ்க்கை வாழ்ந்து அவரது குரலுக்குக்  கீழ்ப்படிந்து வாழ்வதே கிறிஸ்தவ வாழ்வு. 

"நான் உங்கள் பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துவந்த நாளிலே, தகனபலியைக்குறித்தும், மற்றப் பலிகளைக்குறித்தும் நான் அவர்களோடே பேசினதையும் கட்டளையிட்டதையும் பார்க்கிலும், என் வாக்குக்குச் செவிகொடுங்கள், அப்பொழுது நான் உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்;" ( எரேமியா 7 : 22, 23 ) என்கிறார் கர்த்தர்.


பழைய ஏற்பாட்டுக்காலத்தில் தேவன் பல்வேறு பலிகளையும் நியமங்களையும் மக்களுக்கு நியமித்திருந்தார். அதன்படி பலிகள் செலுத்தி வாழ்வதுதான் தேவனுக்கு ஏற்புடைய செயல் என்று மக்கள் நினைத்திருந்தனர். ஆனால் அவர்கள் தேவனுடைய வாக்குக்குச் செவிகொடுக்கவில்லை. அதாவது அவர்கள் கட்டளையைக் கட்டளையாகப் பார்த்தனரேத்தவிர தேவன் விரும்பும் அன்பையும், இரக்கத்தையும் நீதியையும் விட்டுவிட்டனர். பலியிடுவது சம்பந்தமான கட்டளையை நிறைவேற்றுவதில் காட்டிய ஆர்வத்தை மனிதநேயத்திலும் பிறரை அன்பு செய்வதில் காட்டவில்லை.


எனவேதான் இயேசு கிறிஸ்துக் கூறினார், "பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுகொள்ளுங்கள்; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன்." ( மத்தேயு 9 : 13 )


பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுகொள்ளுங்கள் என்று கூறிய இயேசு கிறிஸ்து இன்னுமொரு இடத்தில் "பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று நீங்கள் அறிந்தீர்களானால், குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்த மாட்டீர்கள்." ( மத்தேயு 12 : 7 ) என்று கூறுகின்றார்.


ஆனால் இன்றும் கிறிஸ்தவர்களிடையே இயேசு கிறிஸ்துவின் காலத்து யூதர்கள் வாழ்ந்த  நிலைதான் தொடர்கின்றது. பல ஊழியர்கள் வறட்டுத்தனமான போதனைகளை போதிக்கின்றனரேத் தவிர இயேசு கிறிஸ்து கூறிய அன்பையும் இரக்கத்தையும் விட்டுவிட்டனர். தசமபாக போதனை இதற்கு ஒரு உதாரணம். அன்பு, இரக்கம், நீதி இவற்றைப்பற்றி மக்களுக்கு எடுத்துரைப்பதைவிட, அத்தகைய வாழ்க்கையில் மக்கள் நடப்பதை வலியுறுத்துவதைவிட,  வருமானத்தில் பத்தில் ஒன்று காணிக்கைக் கொடுப்பதுதான் வலியுறுத்தப்படுகின்றது.


பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுகொள்ளுங்கள் என்று இயேசு கிறிஸ்து கூறுவது வேதாகமக் கல்லூரியில் சென்று கற்றுக்கொள்ள அல்ல, மாறாக பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு கற்றுத்தர இடம்கொடுங்கள் என்று பொருள்


உங்கள் பொருளாசையையும் பண வெறியையும் விட்டுவிடீர்களானால் ஆவியானவர் உங்களை வழிநடத்துவார்; கற்றுத்தருவார் என்று பொருள். பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று நீங்கள் அறிந்தீர்களானால், குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்தமாட்டீர்கள். அதாவது காணிக்கைக் கொடுக்காதவர்களை சபிக்கமாடீர்கள், காணிக்கையை வலியுறுத்தி பேசுவதைவிட பரிசுத்தத்தில் மக்களை வழிநடத்திட முயலுவீர்கள் என்று தேவன் அறிவுறுத்துகின்றார்.


என் வாக்குக்குச் செவிகொடுங்கள், அப்பொழுது நான் உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள் என தேவன் கூறுவது நாம் அனைவருக்கும் ஒரு அறிவுரையாக இருக்கட்டும். அவர் இரண்டே இரண்டு கட்டளைகளைத்தான் கூறினார். ஒன்று எல்லாவற்றுக்கும் மேலாக தேவனை நேசிப்பது, இரண்டாவது தன்னைத்தான் நேசிப்பதுபோல பிறரை நேசிப்பது. இதற்கு முரணான வாழ்க்கை, அன்பற்ற போதனைகள் நாம் தேவ ஜனமாக இருக்கத் தடையானவைகள்.


ஆம் அன்பானவர்களே, பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று நாம் அறிந்துகொண்டால் பிறரைக் குற்றப்படுத்தமாட்டோம். தேவன் காட்டிய அன்பு வழியில் நடப்போம். அதுவே கிறிஸ்துவுக்கு ஏற்புடைய வழி.

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்