Monday, March 13, 2023

எதார்த்தமாக இருக்கப் பழகுவோம்.

ஆதவன் 🌞 776🌻 மார்ச் 14,  2023 செவ்வாய்க்கிழமை 

"நாங்கள் தூரத்திலிருக்கும்போது எழுதுகிற நிருபங்களால் வசனத்தில் எப்படிப்பட்டவர்களாயிருக்கிறோமோ அப்படிப்பட்டவர்களாகவே சமீபத்திலிருக்கும்போதும் கிரியையிலும் இருப்போம் என்று சிந்திக்கக்கடவன்." ( 2 கொரிந்தியர் 10 : 11 )


பொதுவாக இந்த உலகத்தில் மனிதர்கள் பேசுவது ஒன்று செய்வது ஒன்று என  வாழ்கின்றனர். தொலைபேசியில் பேசும்போது அன்பொழுகப் பேசுவார்கள். ஆனால் அவர்களது இடத்தில சென்று தங்கும்போது அவர்களது செயல்பாடுகள் வித்தியாசமானதாக இருக்கும்.  

நாம் எவ்வளவுதான் நண்பர்களாக இருந்தாலும் தொலைவில் இருக்கும்வரைதான் நமது உறவுகள் சிறப்பாக இருக்கும். ஒரே அறையில் சேர்ந்து தங்கும்போது பல்வேறு மனஸ்தாபங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. காரணம், தொலைவிலிருந்து பேசும்போது நட்புக்காக நமது சில குணங்களை மற்றவர்களிடம் மறைத்துவிடுகின்றோம். சேர்ந்து வாழும்போதுதான் நமது குறைகள் நம்மை அறியாமலேயே வெளிப்படும்.  "ஐயோ, இவரை நாம் எப்படியெல்லாமோ நினைத்தோமே, இவர் இப்படிப்பட்டவராக அல்லவா இருக்கின்றார்" என எண்ணுவோம். 
\
ஆனால் பவுல் அடிகள் தான் அப்படிப்பட்டவன் அல்ல என்று கூறுகின்றார். எனவேதான், "நாங்கள் தூரத்திலிருக்கும்போது எழுதுகிற நிருபங்களால் வசனத்தில் எப்படிப்பட்டவர்களாயிருக்கிறோமோ அப்படிப்பட்டவர்களாகவே சமீபத்திலிருக்கும்போதும் கிரியையிலும் இருப்போம்" என்கின்றார். 

பவுலின் நிரூபங்களும் போதனைகளும் கடினமானவை; ஆனால் வல்லமையுள்ளவை. பவுலின்  உடல் பலவீனமான உடல். அவரது எழுத்தாற்றலோடு ஒப்பிடும்போது பேச்சாற்றல் குறைவுள்ளது. ஆனால் இவைகளை மாய்மாலமாக மக்களிடம்  மறைக்காமல் தொலைவிலிருக்கும்போது இருப்பதுபோலவே அவர்களோடு இருக்கும்போதும் இருப்பேன் என்கின்றார். இதனையே இன்றைய தியான வசனத்தின் முந்தின வசனத்தில், "அவனுடைய நிருபங்கள் பாரயோசனையும் பலமுமுள்ளவைகள்; சரீரத்தின் தோற்றமோ பலவீனமும், வசனம் அற்பமுமாயிருக்கிறதென்கிறார்களே." ( 2 கொரிந்தியர் 10 : 10 ) என்று குறிப்பிடுகின்றார். 

ஆனால் இன்று ஆவிக்குரிய சபைகளில் ஊழியர்களிடம் இந்தக் குணம் பொதுவாக இருப்பதில்லை. அவர்கள் சபைக்கு நாம் செல்லும்போது மாய்மால அன்புடன்,  வித்தியாசமான பேச்சுவழக்கில் நம்மோடு பேசுவார்கள். இவர்கள் பேசும் தமிழே வித்தியாசமாக இருக்கும். இப்படிப்பேசுவதே ஆவிக்குரிய பேச்சு என எண்ணிக்கொள்கின்றனர். ஆம், சுய முகங்களை மறைத்து தங்கள் சபைகளுக்கு மக்கள் வரவேண்டுமென்பதற்காகவே இந்த மாய்மாலம். 

அன்பானவர்களே, பவுல் அடிகள் கூறுவதுபோல எதார்த்தமாக இருக்கப் பழகுவோம். நமது பேச்சும் செயல்பாடுகளும் எப்போதும் ஒரேபோல இருக்கட்டும். நய வசனிப்பாலும், மாய்மால பேச்சினாலும் அரசியல் கட்சிகளுக்கு ஆள் சேர்பதுபோல நாம் ஆள் சேர்க்கவேண்டிய அவசியமில்லை. 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Saturday, March 11, 2023

அநீதியுள்ளவரல்ல நமது தேவன். ...

ஆதவன் 🌞 775🌻 மார்ச் 13,  2023 திங்கள்கிழமை 

"கர்த்தருக்குள் நீங்கள் படுகிறபிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக."( 1 கொரிந்தியர் 15 : 58 )


பொதுவாக இந்த உலகில் மனிதர்கள் பிறர் அவர்களுக்குச் செய்யும் உதவிகளை உடனேயே மறந்து விடுவார்கள். எவ்வளவு பெரிய உதவி செய்தாலும் அதனை நினைவுகூர்ந்து வாழ்பவர்கள் வெகுசிலர்தான். ஆனால் நமது கர்த்தர் அப்படிப்பட்டவர் அல்ல; அவற்றை அவர் மறந்துவிடுவதுமில்லை என்று இன்றைய வசனம் கூறுகின்றது. கர்த்தருக்காக என்று நாம் செய்யும் செயல்கள் வீணானவை அல்ல என்பதால் உறுதியுடன் அப்படி கர்த்தருக்காக என்று செய்யும் செயல்களைச் செய்து அவற்றில் பெருகவேண்டும் என்கின்றார் பவுல் அடிகள்.

கர்த்தருக்காக என்று ஆர்வமுடன்  நாம் செய்யும் தர்ம காரியங்கள், உதவிகள், அவருக்கென்று செய்யும் ஊழியங்கள் இவை விளம்பர நோக்கத்திற்காக அல்லாமல், உண்மையான அன்புடன் செய்யப்படுமேயானால் கர்த்தர் அவற்றை நினைவுகூர்ந்து நமக்குப் பதில் செய்வார். மேலும், அப்படிக் கர்த்தர் பதில் செய்வார் என்று எண்ணிக்கூட நாம் செய்யக்கூடாது. மாறாக கர்த்தருக்கென்று செய்வது இயற்கையாக நம்மில் உருவாகவேண்டும். 

இதற்கு ஒரு உதாரணம் கூறலாம். நாம் காற்றை சுவாசிக்காவிட்டால் உயிர்வாழ முடியாது.  ஆனால் நாம் அப்படி நினைத்துக்கொண்டு சுவாசிப்பதில்லை. மாறாக, நம்மை அறியாமல் நாம் சுவாசித்துக்கொண்டிருக்கின்றோம். இதுபோலவே நாம் கர்த்தருக்கென்று நற்செயல்களை இயற்கையாகவே செய்யவேண்டியது அவசியம். அத்தகைய நமது செயல்களை கர்த்தரும் மறக்கமாட்டார். 

அப்படி நாம் கர்த்தரது பெயருக்காகச்  செய்யும் அன்புள்ள செயல்களை மறந்துவிடுவதற்கு அவர் அநீதியுள்ளவரல்ல என்று வேதம் கூறுகின்றது. "உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே." ( எபிரெயர் 6 : 10 ) நீதி, நேர்மையற்று வாழும் சில உலக மக்களைப்போல அநீதியுள்ளவரல்ல நமது தேவன். 

சிலர் தங்கள் செய்த நல்லச்  செயல்களை விளம்பரப்படுத்திச்  சொல்லிச் சொல்லி வாழ்வார்கள். வேறு சிலரோ, "நான் எவ்வளவோ நல்லது செய்தேன் எனக்கு ஆண்டவர் ஒண்ணுமே செய்யமாட்டேன் என்கிறார்" எனப் புலம்புவார்கள். அன்பானவர்களே, உண்மையும் உத்தமத்தோடும் செய்த எந்த செயலையும் தேவன் மறக்கமாட்டார். தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தை மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்ல. மட்டுமல்ல கர்த்தர் எவருக்கும் கடன்பட்டவரல்ல. இந்த உண்மை நமக்குள் உறுதியாக இருக்குமானால் எந்த எதிர்பார்ப்புமின்றி கர்த்தருக்கென்று நற்செயல்கள் செய்பவர்களாக இருப்போம்.

எனவே கர்த்தருக்குள் நாம்  படுகிற முயற்சிகள் வீணானவையல்ல  என்று  அறிந்து, நாம்  உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருக்கென்று செய்யும் செயல்களில் எப்போதும் பெருகுகிறவர்களாக  இருக்கவேண்டியது அவசியம் என்று கூறும் பவுலடிகளின் வார்த்தைகளின்படி வாழ முயற்சிப்போம். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

கடவுளை அறிதலும் கடவுளைப்பற்றி அறிதலும்

ஆதவன் 🌞 774🌻 மார்ச் 12,  2023 ஞாயிற்றுக்கிழமை 


"ஞானி எங்கே? வேதபாரகன் எங்கே? இப்பிரபஞ்சத் தர்க்கசாஸ்திரி எங்கே? இவ்வுலகத்தின் ஞானத்தை தேவன் பைத்தியமாக்கவில்லையா?" ( 1 கொரிந்தியர் 1 : 20 )

தேவனைப் பற்றி  அறிதல்; தேவனை அறிதல்  இவை இரண்டும் வெவ்வேறானவை என்று ஏற்கெனவே பல முறை தினசரி தியானங்களில் விளக்கியுளேன். தேவனைப்பற்றி நாம் வேதாகத்தை வாசிப்பதன் மூலமும், மறைக்கல்வி வகுப்பகள்மூலமும் அல்லது பிரசங்கங்கள் கேட்பதன்மூலமும் அறிந்துகொள்ளலாம். ஆனால் தேவனை இப்படிப் படித்து  அறிய முடியாது. தேவனை அறிதல் என்பது வேறான மேலான அனுபவம். அது கடவுளோடு தனிப்பட்ட உறவில் வளருவது. அதனை  மத வழிபாடுகள்மூலமும் மதச் சடங்குகளைக் கடைபிடிப்பதன்மூலமும் பெறமுடியாது.  

கண் தெரியாத முருடர்களுக்கும்  பல்வேறு நிறங்களின் பெயர்கள் தெரியும் ஆனால் அந்த நிறங்கள் எப்படி இருக்கும் எனும் நிறங்களின் மகிமை அவர்களுக்குத்  தெரியாது. கண்பார்வை உள்ளவர்களே நிறங்களைப் பகுத்து அறிய முடியும். இதுபோலவே இறையியல் கல்விகளோ, வேத பண்டிதர்கள் ஆவதோ   தர்க்க சாஸ்திரங்களோ கடவுளை அறிய உதவாது. ஆனால் மனிதர்கள் இந்த முறையில் கடவுளை அறிய முயன்று பைத்தியமாகியுள்ளனர் என்கின்றார் பவுல் அடிகள். எனவேதான், "ஞானி எங்கே? வேதபாரகன் எங்கே? இப்பிரபஞ்சத் தர்க்கசாஸ்திரி எங்கே? இவ்வுலகத்தின் ஞானத்தை தேவன் பைத்தியமாக்கவில்லையா?" ( 1 கொரிந்தியர் 1 : 20 ) என்கின்றார்.

தேவனை அறிதல் என்பது மேலான ஆவிக்குரிய அனுபவம். அது தேவனால் வழிநடத்தப்படும் அனுபவம். தகப்பன் மகன்/மகள் உறவில் தேவனது உடனிருப்பை அறியும் அனுபவம். 

ஆனால் இன்று இதனை விளக்கிக் கூறி இரட்சிப்பு அனுபவத்தை மக்களுக்கு எடுத்துக் கூறுபவர்களை பைத்தியக்காரர்கள் என்று எண்ணுகின்றனர்  உலகத்து ஞானிகளும், இறையியல் கல்லூரி படிப்பாளிகளும். ஆனால் இத்தகைய ஆவிக்குரிய பிரசங்கங்கள் மூலமே விசுவாசிகளை தேவன் இரட்சிக்கின்றார். 

"எப்படியெனில், தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமாயிற்று." ( 1 கொரிந்தியர் 1 : 21 )

அன்பானவர்களே, வேதாகமக் கல்லூரி படிப்புகள் தேவனைப்பற்றி மட்டுமே அறிய உதவுகின்றன; ஆனால் தேவனோடு நாம் வளர்த்துக்கொள்ளும் உறவுகளே தேவனை அறிய உதவும். அதுவே நாம் இரட்சிப்படைந்திட வழிகாட்டும். 

வேதாகமத்தை ஆவியானவரின் துணையோடு வாசித்து தியானிக்கும்போது மட்டுமே நாம் தேவனை அறியும் அறிவில் வளரமுடியும். இறையியல் கல்லூரி படிப்புபடித்த  மேதைகளது பிரசங்கங்களைக் கேட்பதைவிட ஆவிக்குரிய அனுபவம் பெற்ற தேவ மனிதர்களது பிரசங்கங்களைக் கேட்கும்போது  மட்டுமே தேவனைப்பற்றி அதிகம் அறிய முடியும். 

உலக ஞானி எங்கே? உலக அறிவுபெற்ற வேதபாரகன் எங்கே? தர்க்கசாஸ்திரி எங்கே? இவ்வுலகத்தின் ஞானத்தை தேவன் பைத்தியமாக்கவில்லையா?. உலக ஞானத்தையல்ல, ஆவிக்குரிய ஞானத்தையே விரும்புவோம்.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Friday, March 10, 2023

கொடுக்கப்பட்ட வேலைகளை உண்மையோடும் உத்தமத்தோடும் செய்வோம்.

ஆதவன் 🌞 773🌻 மார்ச் 11,  2023 சனிக்கிழமை 

"நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன்." ( பிலிப்பியர் 3 : 12 )

நாம் ஒவ்வொருவரைப் பற்றியும் தேவனுக்கு ஒரு நோக்கமுண்டு. நம்மை அவர் இரட்சித்ததற்கும் ஒரு நோக்கமுண்டு. கிறிஸ்து எல்லோருக்கும் தன்னை வெளிப்படுத்தவில்லை. குறிப்பிட்டச் சிலருக்கே வெளிப்படுத்தினார். அப்படி கிறிஸ்து எவர்களுக்குத் தன்னை வெளிப்படுத்தி அழைத்தாரோ அவர்கள் அந்தப்பணியைத் தொய்வில்லாமல் செய்யவேண்டியது அவசியம். 

கிறிஸ்துவோடு நாம் தொடர்புகொண்டு வாழும்போது கிறிஸ்து நம்மைகுறித்த நோக்கத்தை நமக்கு வெளிப்படுத்துவார். கிறிஸ்துவின் சுவிசேஷப்பணியினைச் செய்ய நாம் அழைக்கப்பட்டிருந்தோமானால் அந்தப் பணியினை நாம் மனப்பூர்வமாகச் செய்யவேண்டும். "கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ" என  அப்போஸ்தலரான பவுல் அடிகள் தேவன் தன்னை ஊழியத்துக்கு அழைத்ததைக் கூறுகின்றார். ஆம், கிறிஸ்து ஒவ்வொருவரையும் இப்படியே ஒவ்வொரு பணியினைச்  செய்யுமாறு பிடிக்கின்றார்.  பவுலடிகளைப் பிடித்தபோது  தேவன் கூறினார்:-    

"அவர்கள் என்னைப் பற்றும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும், பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய சுதந்தரத்தையும் பெற்றுக்கொள்ளும்படியாக, அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டு தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டு, இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார்."( அப்போஸ்தலருடைய நடபடிகள் 26 : 18 )

அதாவது மெய்யான ஒளியான  தேவனை அறியாமல் இருளில் வாழும் மக்களை அந்த ஒளியினிடத்திற்குக் கொண்டுவரவும், சாத்தானின் அதிகாரத்தைவிட்டு மக்களைத்  தேவனிடம் திரும்புவதற்கும், குருடாகிப்போன மக்களது மனக்கண்களைத் திறப்பதற்க்கும் தேவன் பவுலைத் தெரிந்துகொண்டார்.  இது பவுல் அடிகளுக்கு மட்டுமல்ல, தேவனது வேலைக்காக அழைக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் கொடுக்கப்பட்ட பணி இதுதான்.  இதனை நாம் சிறப்பாகச் செய்யவேண்டும். 

இந்தப் பணியை நான் செய்து முடித்துவிட்டேன் , அல்லது முற்றும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன் என்கின்றார் பவுல் அடிகள்.

அன்பானவர்களே, தேவன் நம்மை எந்தப் பணிக்கு அழைத்திருந்தாலும் அதனை நாம் சிறப்பாகச் செய்யவேண்டும். பவுல் அடிகள் கூறுவதுபோல நமக்கு நாம் செய்த பணியில் நிறைவு ஏற்படக்கூடாது. இன்னும்.....இன்னும்.....இன்னும்.....என எண்ணவேண்டும். அப்படி எண்ணி நாம் செயல்படும்போது நமது பணி சிறப்பாக அமையும்.  

இதனையே, "நான் அடைந்தாயிற்று என எண்ணாமல் அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன்." என்கின்றார் பவுல் அடிகள். தேவனால் நமக்குக் கொடுக்கப்பட்ட எந்தப் பணியாக இருந்தாலும் இதே மன நிலையுடன் தொடர்வோம். நல்ல உலக வேலைகளைத் தேவன் தந்திருந்தால் அந்த வேலையினை உண்மையோடும் உத்தமத்தோடும் செய்வோம். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Wednesday, March 08, 2023

விசுவாசத்தின் பலனாகிய ஆத்தும இரட்சிப்பு

ஆதவன் 🌞 772🌻 மார்ச் 10,  2023 வெள்ளிக்கிழமை 


"அவரை நீங்கள் காணாமலிருந்தும் அவரிடத்தில் அன்புகூருகிறீர்கள்; இப்பொழுது அவரைத் தரிசியாமலிருந்தும் அவரிடத்தில் விசுவாசம் வைத்து, சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர்களாய்க் களிகூர்ந்து, உங்கள் விசுவாசத்தின் பலனாகிய ஆத்துமரட்சிப்பை அடைகிறீர்கள்." ( 1 பேதுரு 1 : 8, 9 )

இன்றைய தியான வசனத்தின் இறுதியில், விசுவாசத்தின் பலனாகிய ஆத்தும இரட்சிப்பு எனும் வார்த்தைகள் வருகின்றன. அதாவது, இரட்சிப்பு ஏற்பட முதலாவது விசுவாசம் வேண்டும் என்பது இதன்மூலம் தெரிகின்றது. விசுவாசம் என்பது நாம் காணாததை நம்புவது. அதில் உறுதியாக இருப்பது. "விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது." ( எபிரெயர் 11 : 1 ) என்று வாசிக்கின்றோம். 

நாம் காணாமல் விசுவாசத்தினாலே இரட்சிப்பட்டுள்ளோம். எல்லாவற்றையும் கண்டால்தான் நம்புவேன் என்று கூறிக்கொண்டிருக்கமுடியாது. காணக்கூடியதை நம்புவது பெரிதல்ல. "நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். காணப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கையல்ல; ஒருவன் தான் காண்கிறதை நம்பவேண்டியதென்ன?" ( ரோமர் 8 : 24 )

பனிப் பகுதிகளில் பனிக்கட்டியினால் பாலம்போல நீர் உறைந்திருக்கும். அதன் அடியில் நீரானது ஓடிக்கொண்டிருக்கும். நாம் பனிப்பாலத்தில் நடக்கலாம். இதனை நாம் எல்லோரும் பார்த்ததில்லை. ஆனால் அதனைப் பார்த்த மனிதர்கள் நம்மிடம் கூறும்போது அவற்றை நம்புகின்றோம். அதுபோலவே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நாம் கண்டதில்லை. அவர் செய்த அற்புதங்களைப் பார்த்ததில்லை. ஆனால் அவரோடு இருந்து அவற்றைப் பார்த்து எழுதிவைத்துள்ள வேதாகமச் செய்திகளைக் கேட்டு; பார்த்து அவரை  நாம் நம்பும்போது இரட்சிக்கப்படுகின்றோம்.

இதனையே அப்போஸ்தலரான பேதுரு இன்றைய தியான வசனத்தில், "அவரை நீங்கள் காணாமலிருந்தும் அவரிடத்தில் அன்புகூருகிறீர்கள்; இப்பொழுது அவரைத் தரிசியாமலிருந்தும் அவரிடத்தில் விசுவாசம் வைத்து, சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர்களாய்க் களிகூர்ந்து, உங்கள் விசுவாசத்தின் பலனாகிய ஆத்துமரட்சிப்பை அடைகிறீர்கள்." என்று கூறுகின்றார். 

நமது அன்பு ஆண்டவரும் அப்போஸ்தலனாகிய தோமாவிடம், "தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார்." ( யோவான் 20 : 29 ) ஆம் அன்பானவர்களே, இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளின்படி பார்ப்போமானால் இன்று அவரைக் காணாமலிருந்தும் விசுவாசிக்கும் நாம் அனைவருமே பேறுபெற்றவர்கள்தான். 

இன்று கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் பலருக்கும்கூட   கிறிஸ்துவிடம் முழு விசுவாசம் இல்லை. ஊழியம் செய்யும் பலரும்கூட பிழைப்புக்கான ஒரு தொழிலாக இதனைச் செய்கின்றார்களே  தவிர கிறிஸ்துவின் அன்பை உணர்ந்து; அவரை அறிந்து செய்யவில்லை.  உண்மையாய்க் கிறிஸ்துவிடம் விசுவாசம்கொண்டு அவரை அறிந்துகொள்ளும்போதே நாம் இன்றைய வசனத்தில் பேதுரு கூறுவதுபோல  விசுவாசத்தின் பலனாகிய ஆத்தும இரட்சிப்பை அடைய முடியும்; மட்டுமல்ல, அப்போது வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள வசனங்கள் நமது வாழ்க்கையில் செயல்பட்டு மாபெரும் மாற்றத்தை நமது வாழ்வில் கொண்டுவரும். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

பாக்கியமுள்ளவர்களாகவே நமது ஆவிக்குரிய வாழ்வைத் தொடர்வோம்.

ஆதவன் 🌞 771🌻 மார்ச் 09,  2023 வியாழக்கிழமை 

"கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வமாகக்கொண்ட ஜாதியும், அவர் தமக்குச் சுதந்தரமாகத் தெரிந்துகொண்ட ஜனமும் பாக்கியமுள்ளது."( சங்கீதம் 33 : 12 )

இன்றைய வசனம் இரண்டு வித மக்களை பாக்கியமுள்ளவர்களாகக் குறிப்பிடுகின்றது. . 

1. கர்த்தரைத் தங்களுக்குச் சொந்தமாகத் தெரிந்துகொண்டவர்கள் 

2. கர்த்தர் தனக்குச் சொந்தமாகத் தெரிந்துகொண்டவர்கள்.

கர்த்தரைத் தங்களுக்குச் சொந்தமாகத் தெரிந்துகொண்டவர்கள்  என்பது வெறும் பெயரளவில் அவரை வழிபடுபவர்களை அல்ல; மாறாக, கர்த்தரைத்  தனது  சொந்த தாயைப்போலும் தகப்பனைப் போலும் சொந்த சகோதரனாகவும் சகோதரியாகவும்  தெரிந்துகொண்டு அத்தகைய உறவில் கர்த்தரோடு வாழ்பவர்கள். அப்படி வாழ்பவர்களை கர்த்தரும் தனக்குச் சொந்தமாக அங்கீகரிப்பார்.  

கர்த்தர் தெரிந்துகொள்வது என்பது ஒரு அரசாங்கம் ஒருவரை வெளிநாட்டிற்கு தனது தூதுவராகத் (Ambassador) தேர்வு செய்கின்றது போல தெரிந்துகொள்வது.  இப்படி தனது தூதுவரை தேர்வு செய்து பிற நாடுளில் பதவியில் அமர்த்துகின்றது உலக அரசாங்கம். இப்படித் தேர்வு செய்யப்படும் நபருக்கு அந்த நாட்டில் உள்ள அனைத்துச் செலவுகளையும் அரசாங்கமே செய்யும். பல சலுகைகளும் வழங்கும். ஆனால் அந்த நபர் அரசாங்கத்துக்கு விசுவாசமுள்ளவராக, உண்மையுள்ளவராக இருக்கவேண்டியது அவசியம். இல்லையானால் சட்டப்படி அவர் தண்டிக்கப்படுவர்.

இதுபோலவே தனது பிரதிநிதிகளாகத் தேவன் சில மக்களைத் தெரிந்து கொள்கின்றார். அப்போஸ்தலரான பவுலைத் தேவன் இப்படி ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகத் தெரிந்துகொண்டார். இஸ்ரவேல் மக்களையும் தேவன் இப்படியே தெரிந்துகொண்டார். உலகினில் பல்வேறு மக்கள் இனங்கள் இருந்தாலும் தேவன் இஸ்ரவேல் மக்களைத் தனது தூதுவர்களாகக் குறிப்பாகத் தேர்வு செய்தார். அது உண்மையிலேயே யூதர்களுக்கு ஒரு மேன்மையான காரியம்தான். அப்போஸ்தலரான பவுல் இதுபற்றி கூறும்போது, "இப்படியானால், யூதனுடைய மேன்மை என்ன? விருத்தசேதனத்தினாலே பிரயோஜனம் என்ன? அது எவ்விதத்திலும் மிகுதியாயிருக்கிறது; தேவனுடைய வாக்கியங்கள் அவர்களிடத்தில் ஒப்புவிக்கப்பட்டது விசேஷித்த மேன்மையாமே." ( ரோமர் 3 : 2 ) என்கின்றார்.

அன்பானவர்களே, இன்றைய உலகினில் இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசம்கொண்டு தேவனைத் தெரிந்துகொண்டவர்களையும்  தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் யூதர்கள் என்று வேதம் குறிப்பிடுகின்றது (ரோமர் -2:28,29). ஆம், நாம்தான் ஆவிக்குரிய யூதர்கள். எனவே நாம் தான் பாக்கியமுள்ளவர்கள்.

அப்போஸ்தலரான பேதுரு, "நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்." ( 1 பேதுரு 2 : 9 ) என்கின்றார். 

இப்படி நாம் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாக இருந்தாலும், "அதிகம் கொடுக்கப்பட்டவனிடம் அதிகம் கேட்கப்படும்" என்று இயேசு கிறிஸ்து கூறியதையும்  நாம் மறந்துவிடக்கூடாது. தெரிந்துகொள்ளப்பட்ட யூதர்கள் தேவனது வார்தைகளைப் பெற்றிருந்தாலும் அவர்கள் தேவனுக்கு விரோதமான பாவம் செய்தபோது தேவன் அவர்களைக் கடுமையாகத் தண்டித்தார். பிற ராஜாக்களிடம் அடிமைகளாக ஒப்புக்கொடுத்தார். இதுவே இன்றைய ஆவிக்குரிய யூதர்களாகிய நமக்கும் பொருந்தும்.

எனவே தேவன் நம்மைத் தெரிந்துகொண்டாலும் நாம் தேவனைத் தெரிந்துகொண்டாலும் அவருக்கேற்றபடித் தொடர்ந்து வாழவேண்டும். விலையேறப்பெற்ற இரட்சிப்பை நமக்குத் தந்து நம்மை  அலங்கரித்த தேவன் அதனை நாம் காத்துக்கொள்ளத் தவறினால் கடுமையாக நம்மைத் தண்டிப்பார் என்பதனையும் மறந்துவிடக் கூடாது. எனவே நாம் மற்றவர்களைவிட அதிக கவனமுள்ளவர்களாக இருக்கவேண்டும். பெற்றுக்கொண்ட இரட்சிப்பைக் கவனமுடன் காத்துக்கொள்வோம். தேவன் நமக்கு தகப்பனாக இருந்தாலும் அவர் பட்சிக்கிற அக்கினியாகவும் இருக்கின்றார் என்ற உண்மையினை நாம் மறந்துவிடாமல் கவனமுடன் பாக்கியமுள்ளவர்களாகவே நமது ஆவிக்குரிய வாழ்வைத் தொடர்வோம்.


தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Monday, March 06, 2023

ஆவியானவரின் வழிநடத்துதல்

ஆதவன் 🌞 770🌻 மார்ச் 08,  2023 புதன்கிழமை 

"நீங்கள் எகிப்திலிருந்து புறப்படுகிறபோது நான் உங்களோடே உடன்படிக்கைப்பண்ணின வார்த்தையின்படியே, என் ஆவியானவரும் உங்கள் நடுவில் நிலைகொண்டிருப்பார்; பயப்படாதேயுங்கள்." ( ஆகாய் 2 : 5 )

பழைய ஏற்பாடு புதிய ஏற்பாட்டுக்கு நிழலாட்டமாயிருக்கிறது. அன்று எகிப்திலிருந்து கானானை நோக்கி இஸ்ரவேலர் புறப்பட்டபோது  தேவன் அக்கினி ஸ்தம்பத்திலும் மேக ஸ்தம்பத்திலியுமிருந்து அவர்களை வழிநடத்தினார். இஸ்ரவேல் மக்கள் தனது வழிநடத்துதலை விட்டுத் திரும்பி மீண்டும் எகிப்துக்குச் சென்று பழையபடி அடிமையாகாமலிருக்கவேண்டும் என்று கருதி  எகிப்துக்குச் செல்லவேண்டாம் என்று பலமுறை தேவன் கட்டளையிட்டார். இன்று எகிப்து என்பது நாம் கிறிஸ்துவுடன் ஒப்புரவாகுவதற்கு முன்வாழ்ந்த  பாவ வாழ்கையினைக் குறிக்கின்றது.  அந்த எகிப்தைவிட்டு  வெளி வந்தால்தான் ஆவியானவரின் வழிநடத்துதல் தொடரும். 

இன்று கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்டு நாம் பரம கானானை நோக்கிப் பயணிக்கின்றோம். பழைய பாவ வாழ்க்கையிலிருந்து விடுபட்டு வாழும் நமக்குத் துணையாகப் பரிசுத்த ஆவியானவர் இருக்கின்றார். ஆம், பழைய எகிப்து வாழ்க்கையிலிருந்து விடுபட்டு பரம கானானை நோக்கிப் பயணிக்கும் நம்முடன் கிறிஸ்து உடன்படிக்கை  பண்ணின வார்த்தையின்படியே, ஆவியானவரும்  நம் நடுவில் தொடர்ந்து நிலைகொண்டிருப்பார்; பயப்படாதேயுங்கள் என்று இன்றைய தியான வசனம் நம்மைத் திடப்படுத்துகின்றது. எனவே நாம் பழைய எகிப்து எனும் பாவ வாழ்கைக்குச் சென்றுவிடக்கூடாது. 

நம்மைச் சரியான வழியில்  நடத்திடப்  பரிசுத்த ஆவியானவரை இயேசு கிறிஸ்து வாக்களித்து இன்று அளித்துள்ளார். "சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார். " ( யோவான் 16 : 13 ) என்று கூறினாரே?

இன்று பரிசுத்தமாய் வாழ முடியவில்லை என எண்ணம் உங்களுக்குள் ஏற்படுகின்றதா? அப்படியானால் நிச்சயமாக ஆவியானவர் அதற்கு உதவுவார். ஆம், "அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்." ( யோவான் 16 : 8 ) என்று இயேசு கிறிஸ்துக் கூறியுள்ளார். 

மேலும், "சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்."  ( யோவான் 16 : 13 ) என்றும் கூறியுள்ளார். 

எனவே அன்பானவர்களே, நம்மால் பாவத்தை மேற்கொண்டு மேலான ஆவிக்குரிய வாழ்வு வாழ முடியும். அதற்கு நாம் அன்றாட ஆலய வழிபாடுகளுக்கும் மேலாக தனிப்பட்ட முறையில் கிறிஸ்துவோடு நமது உறவை வளர்த்துக்கொள்ளவேண்டியது அவசியம். அப்போது, "நீங்கள் எகிப்திலிருந்து புறப்படுகிறபோது நான் உங்களோடே உடன்படிக்கைப்பண்ணின வார்த்தையின்படியே, என் ஆவியானவரும் உங்கள் நடுவில் நிலைகொண்டிருப்பார்." என்றபடி ஆவியானவர் நம்முடன் இருப்பார். 

"இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்." ( மத்தேயு 28 : 20 ) என்கிறார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - லுூக்கா 1 : 50 / Luke 1:50

  " ஆதவன் " தியானம் - 1979 ஜூலை 09, வியாழன் 2026       "அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுற...