- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
"விதைகளின் உள்ளே" 🌳
📖 வேதாகமத் தியானம் எண் - 1790 🔆 ஆதவன் 01 .01.2026 வியாழன்
"உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்."( நீதிமொழிகள் 3: 6)
"ஆதவன்" வேதாகத் தியான வாசகர்கள் அனைவருக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் மகிழ்ச்சிகரமான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!
புதிய ஆண்டு துவங்கிவிட்டால் எங்கும் பல்வேறு ஆசீர்வாத வாக்குறுதிகளைத்தான் நாம் கேட்கமுடியும். இது வாடிக்கை. ஒவ்வொரு ஆண்டும் ஆரம்பத்தில், "இந்த ஆண்டு உங்களைத் தேவன் அளவில்லாத ஆசீர்வாதத்தால் நிரப்பப்போகிறேன் என்கிறார்" என்று ஆசீர்வாத வாக்குறுதிகளைப் பல ஊழியர்கள் கூறுவார்கள். ஆனால் அந்த ஆண்டு முடிந்து புதிய ஆண்டு துவங்கும்போதும், "கடந்த ஆண்டில் நீங்கள் அனுபவித்தத் துன்பங்கள் பிரச்சனைகள் அனைத்தையும் மாற்றி, தேவன் உங்களை இந்தப் புதிய ஆண்டில் ஆசீர்வாதத்தால் நிரப்பப்போகிறேன் என்கிறார்" என்று புதிய வாக்குறுதியைக் கூறுவார்கள். அப்படியானால் சென்ற ஆண்டில் இவர்கள் கூறியது பொய்யா: தேவன் கூறியது பொய்யா?
அன்பானவர்களே, நாம் ஞானமுள்ளவர்களாக வாழவேண்டியது அவசியம். ஆண்டுகள் மாறுவதால் வாழ்க்கையில் பிரச்சனைகள் மாறப்போவதில்லை. ஒரு ஆண்டு துடிக்கின்றது என்றால், பூமி சூரியனை ஒருமுறை சுற்றி வந்துள்ளது என்று பொருள். ஆவிக்குரிய வாழ்க்கைக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. புதிய ஆண்டிலாவது நமக்கு நல்லது ஏதேனும் நடக்காதா எனும் ஏக்கம் அனைவருக்கும் இயல்பிலேயே இருக்கின்றது. இந்த ஏக்கத்தைப் பல ஊழியர்கள் தவறாகப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றுகின்றனர்.
ஆனால் தேவன் நமது வாழ்வில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு ஆண்டு மாறுவதல்ல; முதலில் நாம் அவரது வழிக்குத் திரும்பவேண்டியது அவசியமாய் இருக்கிறது.
இதனையே இன்றைய தியான வசனம் நமக்கு அறிவுரையாகக் கூறுகின்றது. ஆசீர்வாத வாக்குத்தத்தங்களைத் தேடி ஓடாமல் முதலில் "உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்." என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது.
நமது வாழ்வில் ஒவ்வொரு கணமும் நாம் அவரை எண்ணி, அவரை நம்பி, அவருக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. அப்படி வாழும்போது அவர் நம்மை ஒரு அரச குமாரனாக நடத்துகின்றார். ஒரு ராஜா, அல்லது இந்தக்காலத்துக்கு ஏற்ப கூறுவோமானால் ஒரு பிரதமரோ முதலமைச்சரோ வருகிறார் என்றால் அவர் வருமுன் முதலில் அவர் பயணிக்க இருக்கும் சாலைகள் சீர்ச்செய்யப்படும். தேவன் இதுபோலவே தனது வழியில் நடக்கும் பிள்ளைகளுக்காக வழியை ஆயத்தம் செய்கின்றார். இதனையே இன்றைய தியான வசனம், "அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்" என்று கூறுகின்றது.
ஆம் அன்பானவர்களே, ஆண்டு ஆரம்பித்துவிட்டதால் ஆங்காங்கே நடக்கும் வாக்குத்தத்தைக் கூட்டங்களில் கலந்துகொண்டு அவர்கள் மனோதத்துவ அடிப்படையில் கூறும் ஆசீர்வாத வாக்குறுதிகளைக் கேட்டுத் திருப்தியடைந்து அதுவே போதும் என்று வாழ்வோமானால் 2027 ஆம் ஆண்டிலும் இதுபோலவே புதிய வாக்குத்தத்தத்துக்காக ஓடவேண்டியிருக்கும்.
புதிய ஆண்டில் தேவன் எனக்கு என்னச் செய்வார் என்று சிந்திப்பதைவிட்டு, நான் தேவனுக்காகப் புதிய ஆண்டில் என்னச் செய்யப்போகிறேன் என்று சிந்தித்து நமது வழிகளை அவருக்கு ஏற்புடையதாக்குவோம். அப்பொழுது அவர் நமது பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.
"விதைகளின் உள்ளே" 🌳
📖 வேதாகமத் தியானம் எண் - 1791 🔆 ஆதவன் 02 .01.2026 வெள்ளி
"இமைப்பொழுது உன்னைக் கைவிட்டேன்; ஆனாலும் உருக்கமான இரக்கங்களால் உன்னைச் சேர்த்துக்கொள்வேன்." ( ஏசாயா 54: 7)
நம்முடைய தேவன் இரக்கங்களின் பிதாவாக இருக்கின்றார். அதாவது மன்னிப்பதிலும் ஆறுதல் அளிப்பதிலும் அவருக்கு நிகர் யாருமில்லாத தனித்துவமிக்கவராக இருக்கின்றார். எனவேதான் அப்போஸ்தலரான பவுல், "நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம். " (2 கொரிந்தியர் 1:3) என்று கூறுகின்றார்.
அவர் மன்னிக்கும் பிதாவாக இருப்பதால் நாம் அவருக்கு எதிராகப் பாவம் செய்யும்போதும் அவர் உடனேயே நம்மைத் தண்டித்துவிடுவதில்லை. ஆனால், ஆவிக்குரிய வாழ்வில் அவருக்கு ஏற்புடையவர்களாக வாழும் நாம் சிலவேளைகளில் பாவங்கள் செய்யும்போது நம்மைவிட்டுத் தனது பிரசன்னத்தை விலக்குகின்றார். அப்போது நாம் ஆவிக்குரிய கைவிடப்பட்ட நிலைமையை அடைகின்றோம்; தேவன் நம்மைவிட்டு வெகு தொலைவில் சென்றுவிட்டதுபோல உணர்கின்றோம்.
ஆனால், அவர் இரக்கமுள்ளவராக இருப்பதால் நமது பாவங்களை நாம் உணர்ந்து மன்னிப்பு வேண்டும்போது நம்மை அவர் மன்னித்து மீண்டும் சேர்த்துக்கொள்கின்றார். இதனையே, "இமைப்பொழுது உன்னைக் கைவிட்டேன்; ஆனாலும் உருக்கமான இரக்கங்களால் உன்னைச் சேர்த்துக்கொள்வேன்." என்று கூறுகின்றார். இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து நாம் வாசிக்கின்றோம், "அற்பகாலம் மூண்ட கோபத்தினால் என் முகத்தை இமைப்பொழுது உனக்கு மறைத்தேன்; ஆனாலும் நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன் என்று கர்த்தராகிய உன் மீட்பர் சொல்லுகிறார்." ( ஏசாயா 54: 8)
ஆம் அன்பானவர்களே, தேவனுடைய கோபம் இமைப்பொழுதுதான். அதாவது நாம் கண்ணைமூடித் திறப்பதுபோல அவ்வளவு குறைவான நேரமே அவரது கோபம் நம்மேல் இருக்கின்றது. மீண்டும், ஒரு தாய் தனது பிள்ளையைச் சேர்த்துக்கொள்வதுபோல நம்மை அவர் மீண்டும் தன்னோடு சேர்த்துக்கொள்கின்றார். ஆனால் அவரது இமைப்பொழுது நமக்குச் சிலவேளைகளில் அதிக நேரம்போலத் தெரிகின்றது. எனவே நாம் அந்த வேளைகளில் பொறுமையுடன் காத்திருக்கவேண்டியது அவசியம்.
சிலவேளைகளில் நமது வாழ்வில் தொடரும் பிரச்சனைகளைப் பார்த்து நாம் கலக்கமடைந்து, "ஒருவேளை தேவன் என்னைத் தள்ளிவிட்டாரோ?" என்று கருதலாம். ஆனால் தேவன் அப்படி நம்மைத் தள்ளிவிடுவதில்லை. "பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும், என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை." (யோவான் 6:37) என்று இயேசு கிறிஸ்துக் கூறவில்லையா?
எனவே அன்பானவர்களே, பிரச்சனைகள், துன்பங்கள் நமது வாழ்வில் தொடரும்போது நாம் கலக்கமடையவேண்டியதில்லை. அவர் நம்மைத் தள்ளிவிடமாட்டார். நம்மைச் சீர்படுத்துவதற்காக இமைப்பொழுது நம்மை அவர் கைவிட்டாலும் உருக்கமான இரக்கங்களால் நம்மைத் தம்மோடு மீண்டும் சேர்த்துக்கொள்ளுவார். இந்த இமைப்பொழுது கைவிடப்படுதல் நமது ஆவிக்குரிய வாழ்வில் அவசியமானது. காரணம், தேவனது இந்த இமைப்பொழுது கைவிடப்படுவதிலும் சேர்த்துக்கொள்வதிலும் ஆவிக்குரிய மனிதர்கள் மேலும் இன்பமடைகின்றனர்; ஆவிக்குரிய வாழ்வை உற்சாகமுடன் தொடருகின்றனர்.
"விதைகளின் உள்ளே" 🌳
📖 வேதாகமத் தியானம் எண் - 1792 🔆 ஆதவன் 03 .01.2026 சனி
"தம்முடைய தாசனாகிய தாவீதைத் தெரிந்துகொண்டு, ஆட்டுத்தொழுவங்களிலிருந்து அவனை எடுத்தார்." ( சங்கீதம் 78: 70)
"தெரிந்தெடுத்தல்" (Select) "தேர்வுசெய்தல்" (Elect) எனும் இரு வார்த்தைகளும் பார்வைக்கு ஒன்றுபோலத் தெரிந்தாலும் இரண்டுக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. "தெரிந்தெடுத்தல்" என்பது இருக்கும் பல பொருள்களிலிருந்து விரும்பும் ஒன்றை நாம் தெரிந்து கொள்வது. தேர்வு செய்தல் என்பது குறிக்கப்பட்ட மக்களிலிருந்து ஒருவரை நாம் தேர்ந்தெடுப்பது. நாம் தேர்தல்களில் நமக்கு கொடுக்கப்பட்ட வேட்பாளர்களிலிருந்து ஒருவரை தேர்வு செய்கின்றோம்.
தேவன் எப்போதுமே தனக்கு வேண்டிய மனிதர்களை தெரிந்திடுகின்றார். அவர் தேர்வு செய்வதில்லை. மனிதர்களது உள்ளான மனம் அவருக்குத் தெரிவதால் அவர் மனிதர்களை இப்படித் தெரிந்தெடுக்கின்றார். இப்படியே அவர், தம்முடைய தாசனாகிய தாவீதைத் தெரிந்துகொண்டு, ஆட்டுத்தொழுவங்களிலிருந்து அவனை எடுத்தார். ஆபிரகாமையும் இதுபோலவே அவர் தேர்தெடுத்தார்.
எந்த ஒரு உலகப் பதவிக்கு நாம் விண்ணப்பித்தாலும் அவர்கள் நமது படிப்பு, நமது திறமைகள், முன் அனுபவங்கள் இவைகளை அடிப்படையாகக்கொண்டு தான் நம்மைத் தேர்வு செய்வார்கள். ஆனால் தேவனோ, எந்தப் படிப்பும், திறமையும் முன் அனுபவங்களும் இல்லாதவர்களைத் தெரிந்துகொண்டு அவர்களைத் தகுதிப்படுத்துகின்றார்.
இது ஏன் என்பதனை அப்போஸ்தலரான பவுல், "ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார். உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார்." (1 கொரிந்தியர் 1: 27, 28) என்று விளக்கமாகக் கூறுகின்றார்.
எல்லோரும் இரட்சிக்கப்பட தேவன் விருப்பமுள்ளவராக இருந்தாலும் அவர்களில் சிலரை மட்டும் அவர் தெரிந்து கொண்டவர்களாக எண்ணி நடத்துகின்றார். "அந்தப்படியே, அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்." ( மத்தேயு 22: 14) என்று நாம் வாசிக்கவில்லையா?
தேவன் மனிதர்களில் சிலரை இப்படித் தெரிந்துகொள்வதற்கு நாம் எந்த மனித அளவுகோலைக்கொண்டும் கணித்திடமுடியாது. "கர்த்தருடைய சிந்தையை அறிந்தவன் யார்? அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்தவன் யார்?" (ரோமர் 11:34) என்று கூறியுள்ளபடி நாம் அவரது சிந்தனையை அறியமுடியாது. அவர் தனக்குச் சித்தமானவர்களைத் தெரிந்துகொள்கிறார்.
நாம் பலவேளைகளில் சில ஊழியர்கள் தவறு செய்யும்போது அவர்களைக்குறித்துப் பலவிதமாகப் பேசுகின்றோம். அப்படிப் பேசுவது நாம் தேவனது தெரிந்துகொள்ளுதலைக் கேலி செய்கின்றோம் என்று பொருள். "தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர்." ( ரோமர் 8: 33) ஆம், தேவன் நினைத்தால் அவர்களை நீதிமான்களாக மாற்றுவார். ஆம், ஆட்டுத் தொழுவதிலிருந்து தாவீதைத் தெரிந்துகொண்டதுபோல அவர் அவர்களைத் தெரிந்தெடுத்திருக்கலாம். தாவீதும் பாவம் செய்தார். ஆனால் தேவன் தாவீதை தூக்கி நிறுத்தினார்.
அன்பானவர்களே, தேவ ஊழியர்கள் செய்யும் தவறான உபதேசங்களை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டியது நமது கடமை. ஏனெனில் தவறான உபதேசங்கள் பலரை நரக படுகுழிக்குள் இழுத்துச்சென்றுவிடும். அதனை நாம் தடுக்கவேண்டியது அவசியம். அதே வேளையில் அத்தகைய ஊழியர்களைத் தனிப்பட்டவிதத்தில் கேலி செய்து அவமதித்துப் பேசுவது தேவனுக்கு எதிரான பாவம். அப்படிச் செய்யும்போது நாம் தேவனது தெரிந்துக்கொள்ளுதலை அவமதிக்கின்றோம்.
"மற்றொருவனுடைய வேலைக்காரனைக் குற்றவாளியாகத் தீர்க்கிறதற்கு நீ யார்? அவன் நின்றாலும் விழுந்தாலும் அவனுடைய எஜமானுக்கே அவன் உத்தரவாதி; அவன் நிலைநிறுத்தப்படுவான்; தேவன் அவனை நிலைநிறுத்த வல்லவராயிருக்கிறாரே." ( ரோமர் 14:4)
தவறான உபதேசங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்வோம்; தவறான ஊழியர்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவோம். அவர்களைத் தெரிந்தெடுத்த தேவனுக்கு அவர்கள் கணக்குக் கொடுத்துக்கொள்வார்கள்.
"விதைகளின் உள்ளே" 🌳
📖 வேதாகமத் தியானம் எண் - 1793 🔆 ஆதவன் 04 .01.2026 ஞாயிறு
"உங்கள் வெட்கத்துக்குப் பதிலாக இரண்டத்தனையாய்ப் பலன் வரும்; இலச்சைக்குப் பதிலாகத் தங்கள் பாகத்தில் சந்தோஷப்படுவார்கள்; அதினிமித்தம் தங்கள் தேசத்தில் இரட்டிப்பான சுதந்தரம் அடைவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்களுக்கு உண்டாகும்." ( ஏசாயா 61 : 7 )
தேவனுடைய மெய்யான அசீர்வாதம் நமக்கு நமக்கு உண்டாகும்போது நமது வாழ்வில் பெரிய மாறுதல் ஏற்படுவதை நாம் காண முடியும். இந்த உலகத்தில் செல்வமும் வசதியும் பதவியும் உள்ளவர்களையே பலரும் மதிக்கின்றனர். மட்டுமல்ல, பலர் தங்கள் உறவினர்களில் வசதி குறைந்தவர்களைக்கூட மதிப்பதில்லை. அப்படி மதிப்புக் குறைவாக நடத்தப்படுவது அந்த எளிய மனிதர்களுக்கு வெட்கத்தை உண்டாக்குகின்றது.
பல்வேறு செழிப்புகளை வாழ்வில் அனுபவித்த யோபு, தனது ஏழ்மை நிலையில் ஏற்பட்ட அவமானத்தைப் பின்வருமாறு கூறுவதை நாம் வாசிக்கின்றோம்;-
"எனக்கு அறிமுகமானவர்கள் எனக்கு அந்நியராய்ப் போனார்கள். என் பந்துஜனங்கள் விலகிப்போனார்கள். என் சிநேகிதர் என்னை மறந்துவிட்டார்கள். என் வீட்டு ஜனங்களும், என் வேலைக்காரிகளும், என்னை அந்நியனாக எண்ணுகிறார்கள்; அவர்கள் பார்வைக்கு நான் பரதேசியானேன். நான் என் வேலைக்காரனைக் கூப்பிடுகிறபோது அவன் எனக்கு உத்தரவு கொடான்; என் வாயினால் நான் அவனைக் கெஞ்சவேண்டியதாயிற்று." ( யோபு 19 : 13-16 )
அன்பானவர்களே, இத்தகைய நிலைமை ஒருவருக்கு ஏற்படும்போது அது எத்தகைய அவமானகரமான காரியமாக இருக்குமென்று எண்ணிப்பாருங்கள். எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் எந்த மனிதரோடும் அதிகம் பேசுவதில்லை; யார் எந்த விழாவுக்கு அழைப்பிதழ் கொடுத்தாலும் கலந்துகொள்வதில்லை. நானும் அவரைக்குறித்துத் தவறுதலாக எண்ணியிருந்தேன். ஒருமுறை அவரோடு மனம்திறந்து பேசக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது. அப்போதுதான் எனக்கு அவரது இந்த நிலைமையின் காரணம் புரிந்தது. மிகச்சிறப்பான வாழ்க்கை வாழ்ந்த அவர் இப்போது மிக ஏழ்மை நிலையில் இருக்கின்றார். குடியிருப்பதுகூட வாடகைவீடுதான். ஆனால் அவரைப் பார்க்கும்போது வறுமை தெரியாது.
ஆம் அன்பானவர்களே, யோபுவைப் போல மனதளவில் வெகுவாக அவமானத்தைச் சந்தித்திருந்தார் அவர். எனவே, ஒதுங்கியே வாழ்ந்து வருகின்றார். இப்போது சில கிறிஸ்தவ சகோதரர்கள் அவரைக் கிறிஸ்துவுக்குள் வழிநடத்திக் கொண்டிருக்கின்றார்கள். எனவே, இப்பொது மனதளவில் அவர் கிறிஸ்துவுக்குள் மகிழ்ச்சியாகவே இருக்கின்றார் என்பதனை அறிந்தேன். "உங்கள் வெட்கத்துக்குப் பதிலாக இரண்டத்தனையாய்ப் பலன் வரும்; இலச்சைக்குப் பதிலாகத் தங்கள் பாகத்தில் சந்தோஷப்படுவார்கள்" எனும் தேவ வார்த்தைகள் அவரை விசுவாசம்கொள்ள வைத்துள்ளன. இந்த வார்த்தைகளின் ஊக்கத்தால் இப்பொது தனது தாழ்மை நிலையிலும் மகிழ்ச்சியாக விசுவாசத்துடன் வாழ்கின்றார்.
இன்று பல மனிதர்கள் இப்படி அவமானத்துக்குள்ளான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பல தற்கொலைகள் இந்த அவமானத்தால் நிகழ்வதை நாம் தினசரி செய்தித்தாள்களில் வாசிக்கின்றோம்.
எனவே, இதை வாசிக்கும் நண்பர்கள் இன்று ஒருவேளை இதே நிலைமையில் இருந்தாலும் இப்படி அவமானமோ, மனமடிதாலோ அடையத் தேவையில்லை. காரணம் வாழ்வளிக்கும் தேவ வார்த்தைகள் நமக்கு உண்டு. விசுவாசத்தால் தேவ வார்த்தைகளை ஏற்றுக்கொண்ட யோபுவின் வாழ்க்கை ஆசீர்வாதம் பெறவில்லையா? ஆம், "கர்த்தர் யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார்". ( யோபு 42 : 12 ) என்று கூறியுள்ளபடி வெட்கத்துக்குப் பதிலாக இரண்டத்தனையாய்ப் பலன் வரும்; இலச்சைக்குப் பதிலாகத் சந்தோஷம் ஏற்படும்; இரட்டிப்பான சுதந்தரமும் நித்திய மகிழ்ச்சியும் நிச்சயம் உண்டாகும்.
"விதைகளின் உள்ளே" 🌳
📖 வேதாகமத் தியானம் எண் - 1794 🔆 ஆதவன் 05.01.2026 திங்கள்
"கெட்டச் சிந்தையுள்ளவர்களும் சத்தியமில்லாதவர்களும் தேவபக்தியை ஆதாயத்தொழிலென்று எண்ணுகிறவர்களுமாய் இருக்கிற மனுஷர்களால் மாறுபாடான தர்க்கங்களும் பிறக்கும்; இப்படிப்பட்டவர்களை விட்டு விலகு." ( 1 தீமோத்தேயு 6 : 5 )
எந்தக் காலத்தையும்விடப் புத்தாண்டு ஆரம்பத்தில் இன்றைய தியான வசனம் கூறுவதுபோன்ற சிந்தனையுள்ள மனிதர்களை நாம் அதிகம் காணலாம். இன்றைய தியான வசனம் இவர்களை நாம் இனம்கண்டு நம்மைக் காத்துக்கொள்ளவே எழுதப்பட்டுள்ளது. நாம் ஆவிக்குரிய வாழ்க்கையினை சிறப்பாக வாழ்வதற்குப் பவுல் அப்போஸ்தலர் கூறும் சில ஆலோசனைகளை நாம் தியானிக்கலாம்.
இன்றைய தியான வசனத்தில், கெட்டச் சிந்தனை உள்ளவர்கள், உண்மையில்லாதவர்கள், மக்களது தேவ பக்தியைத் தங்களுக்கு ஆதாயம் தரக்கூடிய தொழிலாக பயன்படுத்தி பணம் சம்பாதிப்பவர்கள் இவர்களை நாம் விட்டுவிலகிடவேண்டும் என்கிறார் பவுல். ஏன் இவர்களை விட்டு விலகிடவேண்டும் என்றால் இவர்களால், மாறுபாடான தர்க்கங்கள் உருவாகும் என்கிறார் அவர்.
இத்தகைய மனிதர்களை நாம் அடையாளம் கண்டுகொள்ள முதலில் நமது ஆவிக்குரிய கண்கள் திறக்கப்படவேண்டும். மேலும், சபை பாகுபாடு இல்லாமல் அடிப்படை வேத சத்தியங்களை உணர்ந்துகொள்ளும் ஆர்வம் நமக்கு இருக்கவேண்டும். அப்படி இருக்கும்போது மட்டுமே நாம், யார் கெட்டச் சிந்தனை உள்ளவர்கள், உண்மையில்லாதவர்கள், மக்களது தேவ பக்தியைத் தங்களுக்கு ஆதாயம் தரக்கூடிய தொழிலாக பயன்படுத்தி பணம் சம்பாதிப்பவர்கள் என்பதனைக் கண்டுகொள்ளமுடியும்.
இத்தகைய மனிதர்களோடு நாம் கலந்திருப்போமானால் அவர்களது செயல்பாடுகள் மெய்யான ஆவிக்குரிய மனிதர்களுக்கு முரண்பாடாகத் தெரியும். எனவே அவர்களோடு உண்மை நிலைமையினை நாம் விளக்கும்போது தர்க்கங்கள் உருவாகும். இது நமது ஆவிக்குரிய வளர்ச்சியினைப் பாதிக்கும். எனவே நாம் இவர்களை விட்டு விலகவேண்டியது அவசியம்.
ஆனால் எப்படி இருந்தாலும், இப்படி வேதத்துக்கு "எதிர்பேசுகிறவர்கள் சத்தியத்தை அறியும்படி தேவன் அவர்களுக்கு மனந்திரும்புதலை அருளத்தக்கதாகவும், பிசாசானவனுடைய இச்சையின்படி செய்ய அவனால் பிடிபட்டிருக்கிற அவர்கள் மறுபடியும் மயக்கந்தெளிந்து அவன் கண்ணிக்கு நீங்கத்தக்கதாகவும், சாந்தமாய் அவர்களுக்கு உபதேசிக்கவேண்டும்." ( 2 தீமோத்தேயு 2 : 25-26 ) என்று கூறுகின்றார் பவுல்.
மேலும், இத்தகைய தவறான உபதேசம் செய்யும் மனிதர்களை வேத புரட்டர்கள் என்று கூறுகின்றார் பவுல். ஆம், "வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருதரம் புத்தி சொன்னபின்பு அவனைவிட்டு விலகு." (தீத்து 3:10)
இன்று பல கிறிஸ்தவ ஊழியர்கள் இப்படியே வேத புரட்டர்களாக இருக்கின்றனர். நம்மால் முடியுமானால் இவர்களுக்கு வேதம் கூறும் உண்மையின்படி போதிக்கவும் வாழவும் நாம் அறிவுறுத்தலாம். அது முடியாதென்றால் இவர்களை விட்டு நாம் விலகி இருப்பது நலம். சத்தியம் தெரிந்தும் இவர்களை ஆதரிப்போமானால் நாமும் இவர்களது தவறான வேத புரட்டுக்கு ஆதரவாளர்கள் என்பதை உறுதிப்படுத்துவதுடன் நமக்குத் தேவ ஆசீர்வாதம் கிடைப்பதற்கு நாமே தடையாக இருப்போம். எனவே, புத்திச் சொல்லக் கூடுமானால், இவர்களுக்குப் புத்திச் சொல்வோம்; முடியாதென்றால் புத்தி சொல்லாமலே அத்தகைய மனிதர்களை விட்டு விலகுவோம்.
ஐந்தறிவுள்ள மிருகங்கள்கூட தங்களுக்கு ஏற்பில்லாத உணவை உட்கொள்ளாது. அப்படியிருக்க ஆறறிவுள்ள ஆவிக்குரிய மனிதர்கள் நாம் எத்தகைய நன்மையான ஆவிக்குரிய உணவினை உட்கொள்ள ஆர்வமுள்ளவர்களாய் இருக்க வேண்டியது அவசியம்!!!
"விதைகளின் உள்ளே" 🌳
📖 வேதாகமத் தியானம் எண் - 1795 🔆 ஆதவன் 06.01.2026 செவ்வாய்
"இஸ்ரவேல் புத்திரரே, நீங்கள் எனக்கு எத்தியோப்பியரின் புத்திரரைப்போல் இருக்கிறீர்கள் அல்லவோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் இஸ்ரவேலை எகிப்து தேசத்திலிருந்தும், பெலிஸ்தரைக் கப்தோரிலிருந்தும், சீரியரைக் கீரிலிருந்தும் கொண்டுவரவில்லையோ?" ( ஆமோஸ் 9: 7)
தேவன் அனைவரையும் ஒரேவிதமாக நேசிக்கின்றார்; பெருமை எண்ணம் நமக்கு இருக்குமானால் நாம் தேவனை அறியமுடியாது எனும் உண்மைகளை இன்றைய தியான வசனம் நமக்கு விளக்குகின்றது.
இஸ்ரவேல் மக்களுக்குத் தங்களைப்பற்றிய ஒரு பெருமை இருந்தது. அதாவது, தாங்கள்தான் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள், மற்றவர்கள் அனைவரும் தேவனை அறியாத புற இனத்தவர்கள், எனவே தேவன் தங்களைத்தான் அதிகம் நேசிக்கின்றார் என்பதுதான் அந்தப் பெருமை.
ஆனால், தேவன் அப்படி மனிதர்களுக்குள் வேறுபாடு பார்ப்பதில்லை. அவர் இஸ்ரவேல் மக்களை மட்டுமல்ல, அனைவரையும் நேசிக்கின்றார். தேவன் பிற இனத்து மக்களையும் இஸ்ரவேல் மக்களை எகிப்திலிருந்து விடுவித்ததுபோல அவர்களது வெவ்வேறு அடிமைத்தனங்களிலிருந்து விடுத்துள்ளார். எனவே இஸ்ரவேல் மக்களே நீங்கள் பெருமைபாராட்டவேண்டாம் என்கிறார் தேவனாகிய கர்த்தர். நீங்கள் எனக்கு வெறும் எத்தியோப்பியரின் புத்திரரைப்போலவே இருக்கிறீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். மட்டுமல்ல, நான் உங்களை எகிப்திலிருந்து விடுவித்ததுபோல பெலிஸ்தரைக் கப்தோரிலிருந்தும், சீரியரைக் கீரிலிருந்தும் கொண்டுவரவில்லையோ? என்று கேட்கின்றார்.
அதாவது உங்களை மட்டுமல்ல, நான் மற்ற இனத்து மக்களையும் உங்களை நேசிப்பதுபோல நேசிப்பதால் நான் அவர்களையும் விடுவித்துள்ளேன் என்கின்றார். இஸ்ரவேலரின் வரலாறு நமக்கு எடுத்துக் கூறப்பட்டதுபோல மற்றவர்களின் வரலாறு நமக்குக் கூறப்படாததால் நாம் இதனை அறியாமல் இருக்கின்றோம். ஆம், இஸ்ரவேலரே நீங்கள் பெருமை பாராட்டவேண்டாம் நீங்கள் எனக்கு எத்தியோப்பியரின் புத்திரரைப்போல் இருக்கிறீர்கள் அல்லவோ என்று கர்த்தர் சொல்லுகிறார்.
இதனையே அப்போஸ்தலரான பவுல் தேவன் தனக்கு வெளிப்படுத்திய இரகசியம் என்று கூறுகின்றார். "அதென்னவெனில் புறஜாதிகள் சுவிசேஷத்தினாலே உடன்சுதந்தரருமாய், ஒரே சரீரத்திற்குள்ளானவர்களுமாய், கிறிஸ்துவுக்குள் அவர் பண்ணின வாக்குத்தத்தத்துக்கு உடன்பங்காளிகளுமாய் இருக்கிறார்களென்கிற இந்த இரகசியத்தை அவர் எனக்கு வெளிப்படுத்தி அறிவித்தார்." ( எபேசியர் 3 : 3 ) என்கின்றார்.
யூதர்களை தேவன் நேசிப்பதுபோல மற்றவர்களையும் நேசிக்கின்றார். ஆம், "யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை; எல்லாருக்குங் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார்." (ரோமர் 10:12) மேலும், "யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்." (கலாத்தியர் 3:28) என்று நாம் வாசிக்கின்றோம்.
நாங்கள்தான் வேதத்தை உருவாக்கியவர்கள், நாங்கள்தான் தேவனோடு பேசியவர்கள், என்று பெருமை பாராட்டிக்கொண்டிருக்கும் யூதர்கள் அந்தப் பெருமையினால் இன்றுவரை மெய்யான மேசியாவைக் கண்டுகொள்ளவில்லை. ஆம், "அப்படியானால் என்ன? இஸ்ரவேலர் தேடுகிறதை அடையாமலிருக்கிறார்கள்; தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ அதை அடைந்திருக்கிறார்கள்; மற்றவர்கள் இன்றையத்தினம்வரைக்கும் கடினப்பட்டிருக்கிறார்கள்." (ரோமர் 11:7) ஆம் அன்பானவர்களே, தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட இஸ்ரவேலரால் புறஇனத்தவர்கள் எனக் கருதப்படும் நாம் கிறிஸ்துவாகிய மேசியாவைக் கண்டுகொண்டுள்ளோம்.
தேவனை அறிந்துகொள்ள மேலான இறையியல் அறிவோ, வம்ச பெருமையோ உதவாது. தாழ்மையான உள்ளமே தேவனை நாம் வாழ்வில் அறிந்துகொள்ள உதவும். நமது வேதஅறிவு, படிப்பு, பதவி, பணம் இவைகளைக்குறித்த பெருமை நமக்கு இருக்குமானால் இஸ்ரவேலரைப்போல நாமும் கிறிஸ்துவை வாழ்வில் அறியாதவர்களாகவே இருப்போம்.
"விதைகளின் உள்ளே" 🌳
