Wednesday, December 28, 2022

ஆபிரகாம்போல முழு அர்ப்பணிப்புடன்........

ஆதவன் 🖋️ 702 ⛪ டிசம்பர் 30,  2022 வெள்ளிக்கிழமை

"விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சுதந்தரமாகப் பெறப்போகிற இடத்திற்குப் போகும்படி அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப்போனான்." ( எபிரெயர் 11 : 8 )

விசுவாசம் என்பது நம்பப்படுபவைகளில் உறுதியாக இருப்பது என்று வேதம் கூறுகின்றது. ( எபிரெயர் 11 : 1 ) நாம் தேவனை உறுதியாக நம்பினோமானால்,  அவர் நமக்குத் தருவதை ஏற்றுக்கொள்ளும் உறுதி நமக்கு வேண்டும். இந்த உறுதியினையே ஆபிரகாம் கொண்டிருந்தார். அதனையே இன்றைய வசனம், "தான் சுதந்தரமாகப் பெறப்போகிற இடத்திற்குப் போகும்படி அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப்போனான்." என்று கூறுகின்றது.  

அதாவது ஆபிரகாம் தனது சுய ஆசை விருப்பங்களை நிறைவேற்றிட தேவனை விசுவாசிக்கவில்லை. மாறாக தேவன் விரும்புவதை அவர் தனக்குச் செய்யட்டும் என்று தன்னை ஒப்புக்கொடுத்தார்.  

நாம் தேவனை அறியாமல் இருந்தபோது தேவன் நம்மை அழைத்து தனது நித்திய ஜீவ பாதையினை நமக்கு வெளிப்படுத்தினார். அப்படி நம்மை அழைத்து, நமது பாவங்களை மன்னித்து வழிநடத்தும் அவர் முற்றுமுடிய நம்மை நடத்துவார். இப்படி விசுவாசித்து நம்மை தேவனுக்கு அர்ப்பணித்து வாழ்வதையே அவர் விரும்புகின்றார். 

அனைத்துப் பரிசுத்தவான்களும் இப்படியே வாழ்ந்தனர்; அனைத்து தேவ தாசர்களும் இப்படியே வாழ்ந்தனர்.  ஆபிரகாம் தன்னை தேவன் அழைத்தபோது எங்கு போகின்றோம் நமக்கு  என்ன நடக்கும் என்று விசாரியாமல் போனார். மோசே, தேவன்  தன்னை இஸ்ரவேலருக்குத் தலைவராக ஏற்படுத்தவேண்டும் என்று ஜெபிக்கவில்லை, சாமுவேல் மற்றும் நியாதிபதிகள் தங்களுக்கு தேவன் வெளிப்படுத்தியபடியே செயல்பட்டனர். ஆடு மேய்த்துக்கொண்டிருந்த தாவீது தன்னைத் தேவன்  ராஜாவாக மாற்றவேண்டும் என்று  ஜெபிக்கவில்லை. தேவ சித்தத்துக்கு இவர்கள் தங்களை ஒப்புக்கொடுத்து வாழ்ந்தனர்.

ஆனால் இன்று பலருடைய ஜெபங்களும், பல ஊழியர்களது ஜெபங்களும், எதிர்கால தரிசனங்கள் என்று தாங்கள் தங்கள் மனதில் எண்ணிக்கொண்ட ஆசைகள் நிறைவேறிட ஜெபிப்பதாகவே இருக்கின்றன. "பிதாவே, எனது சித்தமல்ல; உமது சித்தமே நிறைவேறட்டும்" என்று ஜெபித்து நமக்கு முன்மாதிரி காட்டினார் இயேசு கிறிஸ்து.   ஆம், இத்தகைய ஜெபத்தையே நம்மிடம் விரும்புகின்றார் தேவன்.

விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சுதந்தரமாகப் பெறப்போகிற இடத்திற்குப் போகும்படி அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப்போனதுபோல தேவனுக்கு நம்மை ஒப்புக்கொடுத்து நாம் ஆவிக்குரிய பயணத்தைக் தொடரவேண்டும்.

நம்மை அழைத்த தேவன் உண்மையுள்ளவர். நம்மை ஒரு நோக்கத்துக்காக அவர் அழைத்திருப்பாரேயானால் அதனைக் கண்டிப்பாக நம்மைக்கொண்டு நிறைவேற்றுவார். அவருக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ்வோமானால் ஆபிரகாமுக்கு அளித்ததுபோல நமக்கும் வாக்குறுதிகள் அளித்து நாம் விசுவாசத்தில் நிலைத்து நிற்க உதவுவார். 

தேவன்மேல் கொண்ட விசுவாசத்தில் குறைவுபடாமல் கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப்போன ஆபிரகாம்போல முழு அர்ப்பணிப்புடன் தேவனுக்கு நம்மை ஒப்புக்கொடுப்பதையே தேவன் விரும்புகின்றார். அத்தகைய அர்பணிப்புக்கு நமது சுய ஆசைகள் தடையாக நில்லாமல் பார்த்துக்கொள்வோம். அவரே நமக்கு நியமித்த காரியங்கள் வாய்க்கும்படிச் செய்வார். 

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                      தொடர்புக்கு- 96889 33712

Tuesday, December 27, 2022

இரகசியம் காத்தல்

ஆதவன் 🖋️ 701 ⛪ டிசம்பர் 29,  2022 வியாழக்கிழமை

"உங்களைக்குறித்துப் பேசவும் நியாயந்தீர்க்கவும் எனக்கு அநேக காரியங்களுண்டு. என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர்; நான் அவரிடத்தில் கேட்டவைகளையே உலகத்துக்குச் சொல்லுகிறேன் என்றார்." ( யோவான் 8 : 26 )

விபச்சாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிபட்டப் பெண்ணை இயேசு கிறிஸ்து கிருபையாய் மன்னித்து அனுப்பினார். பின்னர் சுற்றிநின்ற யூதர்களிடம், "நான் உலகத்துக்கு ஒளியாக இருக்கிறேன் என்று பேச ஆரம்பித்தார். தொடர்ந்து யூதர்களுக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் இடையே நடைபெற்ற உரையாடலின்போது இயேசு கிறிஸ்து இன்றைய தியானத்துக்குரிய வார்த்தைகளைக் கூறுகின்றார். 

அதாவது இயேசு கிறிஸ்து கூறுவதன் பொருள் என்னவென்றால், "உங்களைக்குறித்து எனக்கு பல காரியங்கள் தெரியும், உங்கள் ஒவ்வொருவருடைய பாவ காரியங்கள், உங்கள் மீறுதனான செயல்கள் எல்லாம் எனக்குத் தெரியும். அனால் நான் அவைகளை பேச விரும்பவில்லை.  என்னை அனுப்பிய பிதா உண்மையுள்ளவர், நான் அவரிடத்தில் கேட்டவைகளை மட்டுமே உலகத்துக்குச் சொல்லுகிறேன்" என்பதாகும். 

அன்பானவர்களே, நாம் அனைவருமே இயேசு கிறிஸ்து கூறுவதுபோல வாழப் பழகிவிட்டால் நமது ஆவிக்குரிய வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தைக் காண முடியும். நம்மைச் சுற்றியுள்ளவர்கள், நமக்கு வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் செய்யும் செயல்பாடுகள், அவர்களது தவறானப் பழக்கங்கள் இவை நமக்கு ஒருவேளைத் தெரியவருமேயானால் இயேசு கிறிஸ்து கூறுவதுபோல அவைகளைக்குறித்து பேச விரும்பக்கூடாது. 

ஆனால் பெரும்பாலான மக்கள் பிறரைப்பற்றி ஏதாவது செய்தி தங்களுக்குத் தெரியவந்தால்  அதற்குக்  கண் காது மூக்கு வைத்து மற்றவர்களிடம் பரப்புபவர்களாக இருக்கின்றனர். அப்படிப் பேசும்போது அந்த நேரத்துக்கு நமக்கும் அதனைக் கேட்பவர்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆனால் அப்படிப் பேசுவதால் எந்த பலனும் ஏற்படாது; மாறாக பகைதான் வளரும்.

இயேசு கிறிஸ்து தனக்கு எதிராகப் பேசிச்  செயல்பட்ட யூதர்களைக்குறித்து ஒன்றுமே குற்றம் சொல்லவில்லை. ஆனால் மறைமுகமாகக் கண்டித்தார். "உங்களில் பாவமில்லாதவர் இவள்மேல் கல்லெறியட்டும்" என்ற வார்த்தைகள் அவர்களது பாவங்களை அவர்களுக்கு உணர்த்தியதால் ஒவ்வொருவராக அங்கிருந்து நகர்ந்துவிட்டனர். 

இயேசு கிறிஸ்து கூறியதுபோல, தேவனிடம் நாம் கேள்விப்பட்டவைகளையே பிறருக்கு எடுத்துக்கூற கடமைப்பட்டுள்ளோம்.  யாரைப்பற்றி எந்தச் செய்தி நமக்குக் கிடைத்தாலும் அது குற்றம்கண்டுபிடிக்கும் அல்லது குற்றம்சுமத்தும் செய்தியானால் அவற்றைத் தவிர்த்திடுவோம். 

தேவனிடம் நாம் தனிப்பட்ட உறவில் வளரும்போது தேவன் நமக்குப் பல ஆவிக்குரிய சத்தியங்களை வெளிப்படுத்தித் தருவார். அந்த உண்மையையே நாம் பேசுவதற்கு முன்னுரிமைகொடுக்கவேண்டும். அப்படிப் பேசும்போது நாம் பலருக்கு கிறிஸ்துவை அறிவிக்கமுடியும். பிறரைப்பற்றி அவதூறு பேசுவது குறையும். 

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                      தொடர்புக்கு- 96889 33712

காணிக்கைகளைப் பிறகு பார்க்கலாம்

ஆதவன் 🖋️ 700 ⛪ டிசம்பர் 28,  2022 புதன்கிழமை

"எங்கள் தேவனுக்கு ஆலயத்தைக்கட்டுகிறதற்கு உங்களுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை; பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் ராஜா எங்களுக்குக் கட்டளையிட்டபடி. நாங்களே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு அதைக் கட்டுவோம்." ( எஸ்றா 4 : 3 )

கர்த்தருக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழாதவர்கள் கர்த்தருக்கென்று அளிக்கும் காணிக்கைகளையும் அவர்கள் செய்யும் உதவிகளையும் ஆலயக்  காரியங்களையும் தேவன்   அங்கீகரிப்பதில்லை.  கோடி கோடியாக ஆலயங்களுக்குக் கொட்டிக்கொடுத்தாலும், இரவு பகல் பாராமல் ஆலயக் காரியங்களுக்கு உழைத்தாலும் தேவன் அதனை அங்கீகரிப்பதில்லை. காரணம், தேவன் ஒன்றுமில்லாத தரித்திரனோ நம் உதவினால்தான் நிறைவடைபவரோ அல்ல.

தேவன் நமது மனம் திரும்பிய வாழ்கையினையே மேலாக  விரும்புகின்றார். மேலும், மற்றவர்கள் செய்வதைப்பார்த்து போட்டிபோட்டு தேவனுக்கென்று செய்வதை தேவன் அங்கீகரிப்பதில்லை.

பாபிலோனிலிருந்து கோரேஸ் ராஜாவால் விடுவிக்கப்பட்டு எருசலேமுக்கு வந்த யூதர்கள் செருபாபேல்,  யெசுவா தலைமையில் எருசலேம் ஆலயத்தை பழுதுபார்த்து கட்டத்துவங்கினர். அதனைப்பார்த்த யூதர்களுக்கு எதிராக அதுவரை  செயல்பட்டவர்களும் வந்து, "உங்களோடுகூட நாங்களும் கட்டுவோம்; உங்களைப்போல நாங்களும் உங்கள் தேவனையே நாடுவோம்" (எஸ்றா - 4:2) என்றார்கள்.  அவர்களுக்கு மறுமொழியாக செருபாபேலும்  எசுவாவும் இன்றைய வசனத்தைக் கூறுகின்றனர். 

தேவனுக்கு ஆலயம் கட்டுவதில் அவர்கள் உதவ முன்வந்தது நல்லச்  செயல்தான் ஆனால் யூதர்கள் அதனை விரும்பவில்லை. இன்று உள்ள ஊழியர்களை இந்நேரத்தில் நாம் நினைத்துப்பார்ப்போம். அவர்கள் தங்கள் ஊழியத் தேவைகளுக்கும் செலவுகளுக்கும் எந்த துன்மார்க்கன், எம்மாற்றுக்காரன் உதவினாலும் அதனைப் பெற்றுக்கொண்டு அவனுக்கு ஆசீர்வாத வார்த்தைகளைக் கூறத்தயாராக உள்ளனர். 

ஆவியானவரின் துணையோடு உண்மையான ஊழியம்செய்யும் ஊழியர்கள் இத்தகைய காணிக்கைகளை ஏற்றுக்கொள்வதில்லை. அவர்கள், செருபாபேலும்  எசுவாவும் கூறியதைப்போல இத்தகையோர் அளிக்கும் காணிக்கைகளை தவிர்த்துவிடுகின்றனர். 

நான் முன்பு ஆராதனைக்குச் செல்லும் சபை பாஸ்டர், ஜாண்சன் டேவிட் அவர்கள் அவருக்குக் காணிக்கைக் கொடுக்க முன்வரும் சிலரிடம், "தம்பி, முதலில் நீங்க ஆண்டவர்பக்கம் வாருங்க, உங்க வாழ்க்கையை அவருக்கு ஒப்புகொண்டுங்க, காணிக்கைகளைப் பிறகு பார்க்கலாம்" என்று கூறிவிடுவார். அவர்களது மனம்திரும்புதலுக்காக ஜெபிப்பார். இதுவே உண்மை ஊழிய செய்யக்கூடிய செயல். 

எவ்வளவு பெரிய பணத் தேவைகள் இருந்தாலும், "நாங்களே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு அதைக் கட்டுவோம்" என்று துணிவுடன் இருந்து யூதர்கள் ஆலயத்தைக் கட்டினர்.  

நாம் காணிக்கை அளிக்கும் பணத்தை நாம் நேர்மையான வழியில் சம்பாதித்தோமா இல்லை ஏமாற்று வழிகளிலும் துன்மார்க்க முறையிலும் சம்பாதித்தோமா என்று சிந்தித்துப்பார்த்து மனம்திரும்புதலடைந்து காணிக்கை அளிப்பதிலும் ஆலய பணிகளிலும் ஈடுபடுவோம்.  "எங்கள் தேவனுக்கு ஆலயத்தைக்கட்டுகிறதற்கு உங்களுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை." என்ற வார்த்தைகள் நம்மை சிந்திக்கத் தூண்டி மனம்திரும்புதலைக் கொண்டுவரவேண்டும்.

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                      தொடர்புக்கு- 96889 33712

Sunday, December 25, 2022

பலவான்களைத் தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்தினார்

ஆதவன் 🖋️ 699 ⛪ டிசம்பர் 27,  2022 செவ்வாய்க்கிழமை

பூமியின் குடிகள் எல்லாம் ஒன்றுமில்லையென்று எண்ணப்படுகிறார்கள்; அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிகளையும் நடத்துகிறார்; அவருடைய கையைத்தடுத்து, அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை என்றேன். ( தானியேல் 4 : 35 )  

நமது படிப்பும் திறமைகளும் நமக்கு நல்ல பொருள் சம்பாதிக்கும் வாய்ப்பினைத் தந்திருக்கலாம். ஆனால், அந்த நிலையில் நாம் தேவனை இரண்டாவது இடத்துக்குத் தள்ளி எனது சுயத் திறமையால்தான் இவைகளைச் சம்பாதித்தேன் என்று பெருமையாகக் கூறிக்கொள்ளுதல் தேவனுக்கு ஏற்புடைய செயலல்ல. 

இதுபோல, பொருளாதாரத்தில் நமது தாழ்ந்த நிலையும் சில நேரங்களில் நமக்கு வரும்  துன்பங்களும் வீழ்ச்சிகளும் நம்மை நாம் உணர்ந்து திருத்திக் கொள்வதற்காகவும்      இருக்கலாம்.  தேவன் சில வேளைகளில் அப்படி நாம் திருந்திட சில தாழ்நிலைமையை நமக்கு ஏற்படுத்துவார். அந்தத் தாழ்த்தப்பட்டத் தருணங்களை நாம் நமது மன மாற்றத்துக்குத் தேவன் தரும்  வாய்ப்பாக எண்ணிப்  பயன்படுத்தி நம்மைத் திருத்திக்கொள்ளவேண்டும்.  

பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருக்கு ஒரு பெருமை எண்ணம் மனதில் இருந்தது. அவன் உண்டாக்கிய அரண்மனை, மாட மாளிகை இவைகளைப்பார்க்கும்போது அவனுக்குள் அவனது வல்லமையினை எண்ணி பெருமை ஏற்பட்டது.  "இது என் வல்லமையின் பராக்கிரமத்தினால், என் மகிமைப்பிரதாபத்துக்கென்று, ராஜ்யத்துக்கு அரமனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா என்று சொன்னான்." ( தானியேல் 4 : 30 ) அவன் இந்த வார்த்தைகளைக் கூறவும் வானத்திலிருந்து தேவ சப்தம் உண்டாகி:- 

"மனுஷரினின்று தள்ளப்படுவாய்; வெளியின் மிருகங்களோடே சஞ்சரிப்பாய்; மாடுகளைப்போல் புல்லை மேய்வாய்; இப்படியே உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகை செய்து, தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறாரென்பதை நீ அறிந்துகொள்ளுமட்டும் ஏழு காலங்கள் உன்மேல் கடந்துபோகும் என்று உனக்குச் சொல்லப்படுகிறது என்று கூறியது." ( தானியேல் 4 : 32 )

அந்தத் தேவ சப்தம் கூறிய காலம் நிறைவுற்றபோது நேபுகாத்நேச்சாருக்கு புத்தி வந்தது. அதன்பின் அவன் இன்றைய தியானத்துக்குரிய வார்த்தைகளைக் கூறுகின்றான். என் கையின் பலத்தால் நான் கட்டி எழுப்பிய மகா பாபிலோன் அல்லவா? என்று பெருமையாகப் பேசியவன் இப்போது, "அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிகளையும் நடத்துகிறார்; அவருடைய கையைத்தடுத்து, அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை" என்கின்றான்.  

அன்பானவர்களே இந்தத் தாழ்மை எப்போதும் நமக்கு இருக்கவேண்டும். நம்மால் செய்யக்கூடியது ஒன்றுமே இல்லை. அவர் நினைத்தால் நாம் எவ்வளவு மேலான நிலையில் இருந்தாலும் ஒரு நொடியில் கீழே தாழ்த்த முடியும். அதுபோல கீழ்நிலையில் இருக்கும் நம்மை ஒரு நொடிப்பொழுதில் உயர்த்தவும் முடியும். அவருக்கு அடங்கி அவருக்கு நம்மை ஒப்புக்கொடுத்து வாழவேண்டியது அவசியம்.  

உபாகமத்தில் இதுபற்றி தேவன் மோசேமூலம் கூறுகின்றார், " என் சாமர்த்தியமும் என் கைப்பெலனும் இந்த ஐசுவரியத்தை எனக்குச் சம்பாதித்தது என்று நீ உன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளாமலும் இருக்க எச்சரிக்கையாயிருந்து, உன் தேவனாகிய கர்த்தரை நினைப்பாயாக; அவரே உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த தம்முடைய உடன்படிக்கையை உறுதிப்படுத்தும்படி, இந்நாளில் உனக்கு உண்டாயிருக்கிறதுபோல, ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை உனக்குக் கொடுக்கிறவர்." ( உபாகமம் 8 : 17, 18 )

நமது படிப்பு, குடும்ப பாராம்பரியம், நமது திறமை, சுய பலம், போன்ற  வீண் பெருமைகளை  விட்டு, தேவ பலத்தை நம்பி வாழவேண்டியது அவசியம். "தம்முடைய புயத்தினாலே பராக்கிரமஞ்செய்தார்; இருதய சிந்தையில் அகந்தையுள்ளவர்களைச் சிதறடித்தார். பலவான்களை ஆசனங்களிலிருந்து தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்தினார்." ( லுூக்கா 1 : 51,52 ) என்கின்றது தேவ வசனம்.

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                      தொடர்புக்கு- 96889 33712

இருளிலிருந்து ஒளியைநோக்கி ...

ஆதவன் 🖋️ 698 ⛪ டிசம்பர் 26,  2022 திங்கள்கிழமை

"சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான்" ( யோவான் 3 : 21 )

இருளிலிருந்த மக்களை விடுவித்து ஒளியைநோக்கி நடத்திட ஒளியாகிய இயேசு கிறிஸ்து மனிதனாக உலகினில் வந்தார். இங்கு "மெய்யான ஒளி" எனும் வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அப்படியானால், பொய்யான ஒளி என்று ஒன்றும் இருக்கின்றது என்பது விளங்குகின்றது. பலரும் பொய்யான ஒளியை மெய்யான ஒளி என எண்ணி மோசம்போகின்றனர். ஆத்தும இரட்சிப்பில்லாத போலி அற்புதங்கள் போலி ஆசீர்வாதங்கள் இவை பொய்யான ஒளியினால் ஏற்படுபவை. ஆம், எனவேதான் அப்போஸ்தலரான பவுல்,  "அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே" (II கொரிந்தியர் 11:14) என எழுதுகின்றார். 

மெய்யான ஒளியான கர்த்தராகிய இயேசு கிறிஸ்து குறிப்பிட்ட ஒரு சிலரை மட்டும் பிரகாசிக்கச் செய்பவரல்ல.; அவர் எந்த மனிதனையும் பிரகாசிக்கச்செய்பவர். அவர் மனிதரிடம் வேற்றுமை பாராட்டுபவரல்ல. ஆனால் இந்த உலகம் அன்று இயேசு கிறிஸ்துவை அறியாமல் இருந்ததுபோலவே இன்றும் அறியவில்லை. "அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை." ( யோவான் 1 : 10 )

ஆம் அன்பானவர்களே, ஒளியைப் பகைக்கிறவனாக ஒருவன் இருக்கிறானென்றால் அவன் இருள் நிறைந்தவனும், ஒளியை ஏற்றுக்கொள்ள முடியாதவனுமாய் இருக்கிறான் என்று பொருள். தேள், பூரான், கரப்பான், இன்னும் கற்களுக்கடியில் பதுங்கி வாழும் உயிரினங்களும் இரவில் நடமாடும் விலங்கினங்களும் ஒளியை விரும்புவதில்லை. அவை இருளையே நாடிச்செல்லும். அதுபோலவே ஜீவ ஒளியாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஒருவன் பகைக்கிறானென்றால் அவனது இருதயம் இருளின் ஆட்சியிலும் பொய்யான ஒளியின் கட்டுப்பாட்டிலும் இருக்கின்றது என்று பொருள். 

இதனையே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, "பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்." ( யோவான் 3 : 20 ) என்று குறிப்பிடுகின்றார். ஆனால், "சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான்" ( யோவான் 3 : 21 )

சத்தியத்தின்படி வாழ்ந்து, நமது செயல்கள் தேவனுக்குள்ளான தூய்மையான செயல்கள் என்று கருதினால் நாம் ஒளிக்குத் தூரமானவர்கள் அல்ல.  அதே நேரம் நாம் கிறிஸ்தவர்களாக வாழ்ந்தாலும் நமது செயல்கள் இருளின் செயல்பாடுகளாக இருக்குமேயானால் நாம் இன்னும் மெய்யான ஒளியை நமக்குள் பெறவில்லை என்று பொருள். 

"இருளில் நடக்கிற ஜனங்கள் பெரியவெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது." ( ஏசாயா - 9:2 ) என்று ஏசாயா இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக்குறித்து தீர்க்கதரிசனம் கூறினார்.  ஆம், இருளில் நடக்கிற ஜனங்கள் சிறிய ஒளியையல்ல, பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது. மட்டுமல்ல, அந்த ஒளி மரண இருளில் குடியிருப்பவர்கள்மேல் பிரகாசித்தது என்றும் கூறப்பட்டுள்ளது. 

எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எனும் மெய்யான ஒளி, இன்று கிறிஸ்துவைப் பகைக்கும், வெறுக்கும் மனிதர்களையும் பிரகாசிக்கச் செய்யக்கூடியது.  இதற்கு ஆயிரக்கணக்கான உயிருள்ள சாட்சிகள் உண்டு. கம்யூனிச சித்தாந்தத்தில் மூழ்கி கிறிஸ்துவைக்குறித்து அவமானமாய்ப் பேசித்திரிந்த நானும் இதற்கு ஒரு சாட்சியே. 

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                      தொடர்புக்கு- 96889 33712

மனுஷர்மேல் பிரியமும் நம் ஒவ்வொரு கிறிஸ்தவன் மூலமும் உலகினில் உண்டாவதாக.

ஆதவன் 🖋️ 697 ⛪ டிசம்பர் 25,  2022 ஞாயிற்றுக்கிழமை

"அந்நேரமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி: உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்."  (  லுூக்கா 2 : 13, 14 ) 

 அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு நல்வாழ்த்துக்கள் !!! 

கிறிஸ்து பிறந்தவுடன் அவரைப்பற்றி அறிவிக்கப்பட்ட முதல் அறிவிப்பு, கிறிஸ்து பிறந்ததால்  பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று கூறுகின்றது. சமாதானக் காரணர் என்றே இயேசு கிறிஸ்து அறியப்படுகின்றார். அவர் பல  இடங்களில்  மக்களையும் சீடர்களையும் பார்த்துக் கூறிய வார்த்தைகள் சமாதான வார்த்தைகளே. 

மனிதனது பாவச் செயல்பாடுகளே சமாதானக் குறைவுக்குக் காரணம் என்பதால் பழைய ஏற்பாட்டுக்  காலத்தில்  பல்வேறு கட்டளைகள்  கொடுக்கப்பட்டன. இக்கட்டளைகள் மனிதனை பாவத்தில் விழாமல் காப்பாற்றும் என எண்ணப்பட்டது.  இவற்றை நியாயப்பிரமாணக் கட்டளைகள்  என்று கூறுகின்றோம். பத்துக் கட்டளைகளைத் தவிர,  யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம் மற்றும் உபாகமம் நூல்களில் பலக் கட்டளைகள் கொடுக்கப்பட்டுள்ளன.  இவை மொத்தம் 613 கட்டளைகள் என்று வேத அறிஞர்கள் கணக்கிட்டுள்ளனர். ஆனாலும் பாவமும் தொலையவில்லை  சமாதானமும் வரவில்லை. 

ஆனால் பலியாக இறப்பதற்காகவே உலகினில் பிறந்த கிறிஸ்து, தனது இரத்தத்தால் நித்திய  மீட்பை உண்டுபண்ணி பாவத்தை மன்னிக்கும் மீட்பை உண்டுபண்ணி  அந்தப் பாவங்களில் மனிதர்கள் விழுந்துவிடாமல் அவர்களை வழிநடத்திட பரிசுத்த ஆவியானவரையும் நமக்குத் தந்துள்ளார். கிறிஸ்துவின் கிருபைக்குள்  வந்துவிடும்போது பாவத்தை மேற்கொள்ளும் வல்லமை  நமக்குக்  கிடைக்கின்றது. சமாதானமும் கிடைக்கின்றது.  

இதனையே நாம் ரோமர் நிருபத்தில், "அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்." (  ரோமர் 8 : 3 ) என்று வாசிக்கின்றோம்.

இரண்டாவது மனிதத்தன்மையுடன் பிறரிடம் நடக்கக்கூடிய மன நிலை. இதுவும் கிறிஸ்து இயேசுவால் வந்ததே. கட்டளைகளைப் பார்க்காமல் மனிதரை மதித்து நடக்கவேண்டிய மனநிலை. இதனால்தான் இயேசு கிறிஸ்துக் கூறினார், " மனிதன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை, ஓய்வுநாள் மனிதனுக்காக உண்டாக்கப்பட்டது".  ஆகவே சட்டங்கள்   மனிதனுக்காகவேத் தவிர மனிதன் சட்டத்திற்காக அல்ல. எந்தச்  செயலைச் செய்யும்போதும்  முதலில் நாம் பார்க்கவேண்டியது மனித நலம். மனித நலமா தேவ கட்டளையா என்று பிரச்சனைவரும்போது மனித நலனை முன்னிலைப்படுத்தி நாம் செயல்படும்போது அதுவே தேவனுக்குப் பிரியமானதாக ஆகின்றது. இல்லாவிடில்  நாம் ஒரு வறட்டு வேதாந்தியாகவே உலகுக்குத் தெரிவோம்.

அன்பானவர்களே, இன்றைய கிறிஸ்துப் பிறப்பு நமக்கு இத்தகைய சிந்தனையைத் தர தேவனை வேண்டுவோம்.  பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் நம் ஒவ்வொரு கிறிஸ்தவன் மூலமும் உலகினில் உண்டாவதாக.

 தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                     தொடர்புக்கு :- 9688933712 


Friday, December 23, 2022

பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.

ஆதவன் 🖋️ 696 ⛪ டிசம்பர் 24,  2022 சனிக்கிழமை

"நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது." ( 1 யோவான்  4 : 10 )

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் மனிதனாகப் பிறந்தது தேவன் உலகத்தின்மேல் கொண்ட அன்பினை வெளிப்படுத்துகின்றது. நாம் இன்று அவரிடம் அன்புகூருவதற்குமுன்பே அவர் நம்மீது அன்பு கூர்ந்தார். அப்படி அன்புகூர்ந்ததால் தந்து குமாரனை பாவப்பரிகார பலியாக உலகினில் அனுப்பினார்.  இப்படி அவர் நம்மீது அன்புகூர்ந்ததால் அன்பு உண்டாகியிருக்கிறது. 

தேவன் மனிதர்களுக்காக ஏற்படுத்திய நித்திய ஜீவனை சாத்தானால் மோசம்பண்ணப்பட்டு மனிதர்கள் இழந்துபோவது தேவனுக்கு வேதனை தந்தது. ஆனால் மனிதர்கள் சாத்தானின் தந்திரத்தை எதிர்த்து நிற்க முடியாதவர்களாகி அவனுக்கு அடிமைகளாகிவிட்டனர். ஆம், பாவம் செய்பவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என்று இயேசு கிறிஸ்து கூறியபடி மனிதர்கள் பாவத்துக்கு அடிமைகளாகிவிட்டனர்.  

எனவே, "பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்." ( 1 யோவான்  3 : 8 ) இதுவே கிறிஸ்து உலகினில் மனிதனாக வெளிப்பட்டதன்  நோக்கம்.

அன்பானவர்களே, நாம் இன்று ஒரு அரசியல் தலைவரது பிறந்தநாளைக் கொண்டாடுவதுபோல இயேசு கிறிஸ்துவின் பிறப்பு விழாவைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். குடில்களும், அலங்கார விளக்குகளும், வகை வகையான இனிப்புகளும் உண்டு, புத்தாடை அணிந்து ஆலயங்களுக்குச் சென்று கறி சாப்பாடு சாப்பிட்டு சாதாரண உலக மக்களைப்போல இந்த நாளைக் கொண்டாடுவது ஏற்புடையதுதானா என்று எண்ணிப்பார்க்கவேண்டும். 

இயேசு கிறிஸ்து உண்மையில் இதே நாளில்தான் பிறந்தாரா என்று யாருக்கும் தெரியாது ஆனால், அவர் இந்த உலகத்தில் பிறந்தார் என்பது சரித்திர உண்மை. உலக வரலாற்றையே அவரது பிறப்புதான் இரண்டாகப் பிரித்தது. அவர் பிறந்த நோக்கத்தைப் புரிந்துகொள்ளாமல் அந்த நோக்கத்தை நிறைவேற்றிடாமல் வெறும் கொண்டாட்டங்கள் அர்த்தமற்றவையே.

வெறும் ஒருநாள் கொண்டாட்டத்தை தேவன் விரும்புவதில்லை. இயேசு கிறிஸ்து நமது பாவங்களுக்காக மரித்தார் என்றும், சாத்தானின் பாவப்பிடியிலிருந்து நம்மை விடுவிக்க வெளிப்பட்டார் என்றும் விசுவாசிக்கவேண்டும். நமக்கு நித்திய ஜீவன் எனும் முடிவில்லா வாழ்வு அவரால் மட்டுமே உண்டு என்பதை விசுவாசிக்கவேண்டும். நமது பாவங்களை உணர்ந்து மனம் திரும்பிய வாழ்வு வாழ நம்மை ஒப்புக்கொடுக்கவேண்டும். இவை இல்லாத கொண்டாட்டங்கள் அர்த்தமிழந்தவையே. அவைகளினால் எந்தப் பயனும் இல்லை. 

ஆம், நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது. அதனைநாம் மறந்துவிடக்கூடாது. அவர்மேல் விசுவாசம்கொண்டு மனம் திரும்பிய வாழ்க்கை வாழ இந்தநாளில் முடிவெடுத்து நமது பாவங்களை அவரிடம் அறிக்கையிட்டு நித்திய ஜீவனுக்கான வழியில் நடக்க முயலுவோம்.

"குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் " ( யோவான் 3 : 36 )

செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                                            தொடர்புக்கு- 96889 33712


சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - ஓசியா 6 : 1 / Hosea 6:1

" ஆதவன் " தியானம் - 1978 ஜூலை 08, புதன் 2026       "கர்த்தரிடத்தில் திரும்புவோம் வாருங்கள்; நம்மைப் பீறினார், அவரே நம்மைக் ...