DAILY MEDITATION ON WHATSAPP
Tuesday, April 27, 2021
Friday, April 23, 2021
கிறிஸ்துவுக்காக கிறிஸ்துவை அன்புசெய்வோம்
- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்
கிறிஸ்தவ ஆன்மீகம் என்பது இன்று சுயம் சார்ந்த ஒன்றாக; அதாவது, விசுவாசிகள் என்று தங்களைக் கூறிக்கொள்வோர் தங்களது சுய ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள மட்டுமே தேவனைத் தேடுவதாக இருக்கின்றது. தேவனைத் தேடுபவர்களைப்போல பலரும் ஆலயங்களுக்குச் சென்றாலும் அவர்கள் தேடுவதோ உலகப் பொருட்களையும் உலக ஆசீர்வாதங்களையுமே. எனவேதான் அந்த உலக ஆசீர்வாதங்களை எப்படியாவது பெற்றிட வேண்டி காணிக்கைகளையும் இன்னும் பல்வேறு ஆவிக்குரிய காரியங்களையும் செய்கின்றனர். மற்றபடி அவர்களுக்கு கிறிஸ்து இயேசுவின்மேல் எந்தத் தனிப்பட்ட அன்போ பாசமோ இருப்பதாகத் தெரியவில்லை.
பெரும்பாலான கிறிஸ்தவ ஊழியர்களும்கூட மக்களை இதுபற்றி தெளிவுபடுத்துவதோ, மெய்யான ஆன்மீகத்துக்கு நேராக மக்களை வழி நடத்துவதோ இல்லை. காரணம் அவர்களும் உலக இச்சைகளிலும் பண ஆசையிலும் மூழ்கிப்போய் உள்ளனர். பிரபல ஊழியர்கள் மட்டுமல்ல, சிறிய அளவில் ஊழியம்செய்யும் ஊழியர்கள்கூட இப்படியே இருக்கின்றனர்.
இதற்கு முக்கிய காரணம், இன்று ஊழியம் செய்யும் பலரும் ஊழிய அழைப்பைப் பெற்றவர்களல்ல. அவர்களில் பலரும் கடமைக்காக ஊழியம் செய்பவர்களாகவே இருக்கின்றனர். வேறு வேலை கிடைக்காததால் ஊழியத்துக்கு வந்தவர்கள், பெற்றோரின் நிர்ப்பந்தத்தால் (ஊழியத்துக்கு எனது மகனை ஒப்புக்கொடுப்பேன் என பொருத்தனை செய்துவிட்டதால்) ஊழியத்துக்கு வந்தவர்கள், சுய மன ஆசையால் ஊழியத்துக்கு வந்தவர்கள், நல்ல வேலையில் இருந்து பணி நிறைவுபெற்றபின் பொழுதுபோக்க ஊழியம் செய்பவர்கள் எனப் பல்வேறு வித ஊழியர்கள் உள்ளனர்.
இதுபோலவே விசுவாசிகளும் இருக்கின்றனர். இன்று விசுவாசிகள் என்று கூறிக்கொள்வோர் எதற்காக தேவனைத் தேடுகிறார்கள் என்று பார்ப்போமானால் அவர்களது பதில் வித்தியாசமாக இருக்கும். நான் சிலரிடம் பேச்சுவாக்கில் இந்தக் கேள்விகளைக் கேட்பதுண்டு. "நீங்கள் எதற்காகக் கோவிலுக்குப் போகிறீர்கள் ? " அல்லது நீங்கள் தேவனிடம் என்ன வேண்டுவீர்கள்?"
இந்தக் கேள்விகளுக்கு பெரும்பாலோனோர் கூறிய பதில்கள் :-
* கோவிலுக்குச் செல்வது கிறிஸ்தவ கடமை என்று வேதம் கூறுகின்றது, அதனால் செல்கிறேன்
* சிறுவயதுமுதல் கோவிலுக்குச் சென்று பழகிவிட்டதால் போகவில்லையானால் மனது உறுத்தும் அதனால் போகிறேன்.
* எனது
தேவைகளை ஆண்டவரிடம் கேட்பதற்குச் செல்கிறேன்
*
நோய்கள் , கடன் பிரச்சனைகள், பிள்ளைகளின் திருமண காரியங்கள், வேலை வாய்ப்பு
கிடைக்க, தேர்வில் வெற்றிபெற, நல்ல மதிப்பெண் கிடைக்க......இப்படியே தொடரும்
அவர்களது பதில்கள்.
இதற்கு மேல் ஒருவர்கூட என்னிடம் வேறு பதில்கள் கூறவில்லை. அதாவது அனைவரும் தேவனைவிட தேவன் தரும் ஆசீர்வாதத்தையே விரும்புகின்றனர் என்பது தெளிவாக தெரிந்தது. தேவனே நம்மிடம் வருவது எவ்வளவு பெரிய ஆசீர்வாதம் என்று ஒருவர்கூட நினைக்கவில்லை. எனவே தேவனே நீர் எனக்கு வேண்டுமென்றோ நீர் எப்போதும் என்னோடுகூட இருக்கவேண்டுமென்றோ வேண்டியதில்லை.
ஏதேனில் ஆதாம் ஏவாள் இப்படியே இருந்தனர். அவர்கள் தேவனைவிட தேவனால் படைக்கபட்டக் கனியையே அதிகம் விரும்பினர். எனவே, தேவ கட்டளையைப் புறக்கணித்து விலக்கபட்டக் கனியைப் புசித்தனர்.
பவுல் அடிகள் தனது சீடனான தீமோத்தேயு குறித்துக் கூறும்போது "மற்றவர்களெல்லாரும் (தீமோத்தேயு தவிர மற்ற எல்லோரும்) கிறிஸ்து இயேசுவுக்குரியவைகளைத் தேடாமல், தங்களுக்குரியவைகளையே தேடுகிறார்கள்." ( பிலிப்பியர் 2 : 21 ) என்று கூறுகிறார். அன்பானவர்களே இதுவே இன்றும் தொடர்கிறது.
இப்படி தேவனைப் புறக்கணித்து தேவனால் படைக்கப்பட்டப் பொருட்கள்மேல் ஆசைகொள்வதுகுறித்து வேதம் பின்வருமாறு கூறுகின்றது. "தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென். இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சைரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்; " ( ரோமர் 1 : 25, 26 )
தேவனைவிட தேவனால் படைக்கபட்டப் பொருட்கள்மேல் ஆசைகொண்டு அவைகளை அடைந்திட வேண்டுவது சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவிப்பதே என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது. என் ஆத்துமா தேவன்மேல், ஜீவனுள்ள தேவன்மேலேயே தாகமாயிருக்கிறது; நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்?" ( சங்கீதம் 42 : 1 , 2 ) கோடைகாலத்தில் தண்ணீர் தாகத்தால் தவிக்கும் மான் எப்படி தாகம் தீர்க்கும் நீரோடையை நாடி வாஞ்சித்து கதறுகிறதோ அதுபோல ஜீவனுள்ள தேவன்மேல் எனது இருதயம் தாகமாயிருக்கிறது என்று தாவீது ராஜா கூறுகிறார்.
ராஜாவாகிய அவருக்கும் பல உலகத் தேவைகள் இருந்தன. ஆனால் அவற்றைவிட அவரது மனமானது தேவனையே தேடியது. மட்டுமல்ல, நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்? என ஏங்கினார் அவர். எனவேதான் தேவன் தாவீதைத் தனது இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டார். இந்த ஆசை நமக்கு இல்லையானால் நமது ஆன்மீக பக்தி முயற்சிகள் அனைத்துமே வீணானவைகளே.
அன்பானவர்களே நமக்குப் பலப் பிரச்சனைகள் தேவைகள் இருக்கலாம். ஆனால் பிரச்சனைகளுக்கு மூல தீர்வான தேவனைத் தேடுவதை விட்டுவிட்டு அவரிடமிருந்து பெறவேண்டியவைகளையே பலரும் தேடுகிறோம்.
ஆனால் இயேசு கிறிஸ்துக் கூறினார், "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்." ( மத்தேயு 6 : 33 )
இயேசு கிறிஸ்து கூறிய வார்த்தைகளின்மேல் விசுவாசமில்லாததாலேயே பலரும் இப்படி இருக்கின்றனர். அன்பானவர்களே, இப்படியே இருப்போமானால் ஒருவேளை நாம் இந்த உலகினில் விரும்பியதைப் பெறலாம். ஆனால் கிறிஸ்துவை வாழ்வில் அறியாதவர்களாகவே மரிக்கவேண்டியிருக்கும். நமது வாழ்வில் கிறிஸ்துவை சுவைக்கும் அனுபவம் இல்லையானால் நாம் மரித்தபின்னும் அதனை சுவைக்கமுடியாது. நித்திய பேரின்பத்தையும் அடையமுடியாது.
கிறிஸ்துவுக்காக கிறிஸ்துவை அன்புசெய்யும் மேலான நிலையினை வேண்டுவோம். அதுவே மெய்யான இறை அனுபவத்தை நமக்குக் கொடுக்கும்.
Tuesday, April 20, 2021
Monday, April 19, 2021
Thursday, April 08, 2021
எப்போதும் சந்தோசமாய் இருப்பது எப்படி?
- எம். ஜியோ பிரகாஷ்
உலகத்தில் நமக்கு பாடுகளும்,வேதனைகளும் தொடரத்தான் செய்யும். அதனால் நமது மனம் துவண்டு வேதனைப் படுவதுண்டு. கஷ்டமான சூழ்நிலையில் மகிழ்ச்சியாய் சந்தோசமாய் நாம் இருக்க முடியாதுதான். மிகப்பெரிய இழப்போ நமக்கு வேண்டியவரது மரணமோ ஏற்படும்போது நாம் மகிழ்ச்சியாய் இருக்க முடியாதுதான். இயேசு கிறிஸ்து கூட தனது சிநேகிதன் லாசர் மரித்ததைக் கேள்விப்பட்டு கண்ணீர் சிந்தினார் என நாம் வேதத்தில் வாசிக்கின்றோம். ஆனால் அப்போஸ்தலரான பவுல் அடிகள், "கர்த்தருக்குள் எப்போதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்கிறேன் " (பிலிப்பியர் -4:4) எனக் கூறுகின்றார்.
அப்போஸ்தலரான பவுல் ஏன் இப்படிக் கூறுகின்றார் என்று இந்த வசனத்தைச் சரியாகக் கவனித்தால் புரியும். அவர் கூறுகின்றார், "கர்த்தருக்குள் எப்போதும் சந்தோஷமாயிருங்கள் ". என்று. உலக சந்தோசம் என்பது வேறு ஆவிக்குரிய சந்தோசம் என்பது வேறு. பவுல் அடிகள் இங்குக் கூறுவது ஆவிக்குரிய சந்தோசம் குறித்து. அதனைத்தான் "கர்த்தருக்குள்" என்ற அடைமொழியுடன் கூறுகின்றார். இந்த உலகத்தில் நமக்குப் பாடுகள், வேதனைகள், பிரச்சனைகள் எல்லாம் உண்டு ஆனால் கர்த்தரை விட்டு பின்மாறிடாமல், பிரச்னை வந்தவுடன் தேவனை முறுமுறுக்காமல், ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது? நான் தேவனிடம் எவ்வளவோ நம்பிக்கையாய் இருந்தேன், என் நம்பிக்கை பொய்த்துவிட்டது.....என்பன போன்ற எண்ணங்கள் நமது தேவன் மீதான நம்பிக்கையை சேதப்படுத்த விடாமல் வாழ்வது. இதுவே கர்த்தருக்குள் சந்தோஷமாய் இருப்பது.
இப்படி ஒரு மனநிலை இருந்ததால்தான் பவுல் அடிகள், "நான் எந்த நிலையில் இருந்தாலும் மன ரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன். தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும் வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும் ." (பிலிப்பியர் -4:11,12) எனக் கூறுகின்றார்.
யோபுவின் வாழ்க்கையைப் பாருங்கள். அவர் துன்பப்பட்டபோது அரற்றினார், புலம்பினார். அது அவரது மனித மனநிலை. ஆனால் அவர் தேவனோடு ஆவிக்குரிய உறவில் இருந்ததால் மகிழ்ச்சியோடு கூறினார், " என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசி நாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். இந்த என் தோல் முதலானவை அழுகிப்போன பின்பு நான் என் மாம்சத்திலிருந்து தேவனைப் பார்ப்பேன் " (யோபு-19:25,26) இதுவே கர்த்தருக்குள் சந்தோசமாய் இருப்பது.
எந்த நேரத்திலும், பிரச்சனையிலும் தேவனை விட்டுப் பின் மாறிடாமல் இருப்பது. இரத்த சாட்சிகளது வாழ்க்கை இப்படித்தான் இருந்தது. முதல் இரத்த சாட்சியான ஸ்தேவான் ஒரு உதாரணம். அவரைக் கல் எறிந்து கொல்வதற்கு கொண்டு செல்லும்போதும் அவர் மனம் கலங்கவில்லை. தேவனது மகிமையைக் கண்டு களிகூர்ந்தார். இன்று நமக்குப் பாடுகளும் துன்பங்களும் வரும்போது யோபுவைப் போலும், பவுலைப்போலும், ஸ்தேவானைப் போலும் நம்மால் இருக்க முடியாவிட்டாலும் தேவனை முறுமுறுக்காமலாவது இருப்போம்.
தேவனோடு அதிக ஜெப வாழ்வில் நெருங்கி நாம் வாழும்போது தேவன் இந்த பலத்தை நமக்குத் தருவார். ஆனால் நாம் உலக நாட்டங்களுக்காக மட்டும் தேவனைத் தேடாமல் அன்போடு, "தேவன் எனக்கு வேண்டும்" எனும் அன்பு உணர்வோடு தேவனைத் தேடவேண்டும். அப்படித் தேடும்போது உலக ஆசீர்வாதங்கள் நமக்குக் கிடைக்காமல் போனாலும் அது நம்மை சோர்வுக்குள்ளாக்காது.
எபிரேயர் நிருபத்தில் பல விசுவாச வீரர்களைக் குறித்து வாசிக்கின்றோம். ஆனால் அவர்கள் எல்லோரும் தாங்கள் விசுவாசித்ததை இந்த உலகத்தில் அடையவில்லை. ஆனால் மகிழ்ச்சியோடு மரித்தனர். "இவர்களெல்லாரும், வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவைகளை அடையாமல், தூரத்திலே அவைகளைக் கண்டு, நம்பி அணைத்துக்கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு, விசுவாசத்தோடே மரித்தார்கள்." ( எபிரெயர் 11 : 13 )
துன்பங்கள் நம்மை மேற்கொள்ளாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது அவசியம். அதாவது துன்பங்களே இல்லாத வாழ்வை தேவன் நமக்கு வாக்களிக்கவில்லை என்ற உணர்வு நமக்கு வேண்டும். "உலகத்திலே உங்களுக்கு உபத்திரவம் உண்டு" என்றுதான் இயேசு கிறிஸ்துக் கூறினார்.
யோபுவைவிட பெரிய துன்பம் ஒன்றும் நமக்கு வந்துவிடவில்லை. எனவே கர்த்தருக்குள் சந்தோஷமாயிருங்கள்.
Wednesday, April 07, 2021
படைத்த தேவனா ? படைக்கபட்ட உலகப் பொருளா?
- எம் . ஜியோ பிரகாஷ்
"தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள்.....இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சை ரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்..." (ரோமர்- 1:25,26)
படைத்தவரை சேவிப்பது, படைக்கப்பட்ட பொருட்களை சேவிப்பது என இரு வேறு நிலைகளை பவுல் அடிகள் இங்கு விளக்குகின்றார். அதாவது படைத்தத் தேவனுக்குரிய மகிமையை அவருக்குக் கொடுக்காமல் படைக்கப்பட்டப் பொருட்களுக்குக் கொடுப்பது. இது இன்று நேற்று ஆரம்பித்த நிலையல்ல, தேவன் மனிதனைப் படைத்த ஆரம்ப காலத்திலேயே ஆரம்பித்துவிட்டது.
அன்று ஏதேனில் ஆதாமும் ஏவாளும் தங்களைப் படைத்தத் தேவனது கட்டளையை மீறி தேவன் தடை செய்த படைக்கப்பட்ட பொருளான கனியின்மேல் ஆசைகொண்டார்கள். அதனால் தேவனது சாபத்துக்கு உள்ளானார்கள். இன்றும் மனிதன் இதையே செய்கின்றான். தேவனைவிட உலகப் பொருட்கள்மேல் ஆசை கொள்வது சிருஷ்டியை தொழுது சேவிப்பதுதான். பணம், பதவி, சொத்து சுகங்களுக்கு ஆசைப்பட்டு இன்று மனிதர்கள் தேவனுக்கு விரோதமான செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.
இப்படி தேவனை விட்டு தேவனால் படைக்கப்பட்ட பொருள்மேல் ஆசை கொள்வதால்தான் இழிவான "இச்சை" மனிதனில் பிறக்கின்றது என இந்த வசனம் சொல்கிறது. தேவனுக்கு ஒப்பானது உலகினில் எதுவுமே இல்லை. ஆனால் இன்று மனிதர்கள் பணம், பதவி , பெண் ஆசை, மண்ணாசை என இழிவான இச்சைகளில் சிக்கி தேவனது சாபத்துக்கு உள்ளாகின்றார்கள். எப்படியாவது உலகினில் நினைததைச் சாதித்துவிடவேண்டுமென்றும் மக்களது மதிப்பினைப் பெற்றுவிடவேண்டுமென்றும் தரம்தாழ்ந்த செயல்பாடுகளில் மனிதர்கள் ஈடுபடுகின்றனர்.
மட்டுமல்ல, இப்படி இழிவான இச்சைகளில் சிக்கி இருப்போர் "அவைகளை செய்கின்ற மற்றவர்களிடத்தில் பிரியப்படுகிறவர்களுமாய் இருக்கிறார்கள்." (ரோமர் -1;32) உலகினில் நடக்கும் காரியங்களை நாம் கவனித்துப் பார்த்தாலே இது புரியும். அவலட்சணமான காரியங்களைச் செய்யும் அரசியல்வாதிகளுக்குப் பின்னால் மக்கள்கூட்டம் ஓடுவது இதனால்தான். அவர்கள் இந்தமாதிரி மோசமான காரியங்களில் ஈடுபடுவோரையே விரும்புகின்றனர். இந்த உலகத்திலேயே துன்மார்க்கத்தில் ஈடுபடும் மனிதனுக்கு அமைதியாக நல்லசெயல்பாடுகளைச் செய்யும் மனிதர்களோடு ஒத்துபோகமுடியவில்லை. அப்படியானால் இவர்கள் எப்படி பரிசுத்தவான்கள் கூட்டத்தில் சந்தோஷமடைய முடியும்?
அன்பானவர்களே, மனிதனது வேசித்தன செயல்பாடுகளுக்கு காரணமும் இச்சையே. இதன்பொருட்டே உலகம் இன்று விலை கொடுத்துக்கொண்டு இருக்கிறது. ஆம் இவை அனைத்துக்கும் காரணம் தேவனை விட்டு தேவனால் படைக்கப்பட்ட பொருட்கள்மேல் ஆசைகொள்வதே. அப்போஸ்தலரான பவுல் இப்படி படைத்தவரைவிட்டு படைக்கப்பட்டப் பொருட்கள்மேல் ஆசைகொள்வதால் வரும் கேடுகளைப்பற்றி ரோமர் நிருபத்தில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
"இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சைரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்; அந்தப்படியே அவர்களுடைய பெண்கள் சுபாவ அநுபோகத்தைச் சுபாவத்துக்கு விரோதமான அநுபோகமாக மாற்றினார்கள். அப்படியே ஆண்களும் பெண்களைச் சுபாவப்படி அநுபவியாமல், ஒருவர்மேலொருவர் விரகதாபத்தினாலே பொங்கி, ஆணோடே ஆண் அவலட்சணமானதை நடப்பித்து தங்கள் தப்பிதத்திற்குத் தகுதியான பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள்." ( ரோமர் 1 : 26, 27 )
மனிதர்களுக்கு தேவனை அறியவேண்டுமெனும் ஆசை இல்லை. எனவேதான் அவர்கள் படைக்கபட்டப் பொருட்களை நாடி தேவனைப் புறக்கணிக்கின்றனர். இதுவே மனிதனது கேடான சிந்தைகளுக்குக் காரணமாகின்றது. "தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்." ( ரோமர் 1 : 28 )
அன்பானவர்களே, உலக பொருட்கள்மேல் ஆசைகொண்டு தேவனை மறந்து வாழ்வோமெனில் நமது நித்தியம் நரக அக்கினியிலேயே இருக்கும். உலகப் பொருட்களை தேவைக்கு அனுபவிப்போம்; இச்சைகொண்டு அலைந்து அவைகளைப்பெற துன்மார்க்கச்செயல்பாடுகளில் ஈடுபட்டு நமது ஒரே வாழ்வைத் தொலைத்துவிடவேண்டாம். அப்படியே இருப்போமெனில் இம்மையிலும் மறுமையிலும் நமக்கு நிம்மதியென்பது இருக்காது.
Tuesday, April 06, 2021
ஆதவன் - ஏப்ரல் 07, 2021 - புதன்கிழமை
நல்லது செய்து ஒருவன் தேவனது முன்னிலையில் நல்லவன் ஆக முடியாது.
Monday, April 05, 2021
ஆதவன் - ஏப்ரல் 06, 2021 - செவ்வாய்க்கிழமை
தேவன் மதத்தைப்பார்த்து மனிதனை நேசிப்பவரல்ல
Sunday, April 04, 2021
ஆதவன் - ஏப்ரல் 05, 2021 - திங்கள்கிழமை
பாவத்துக்கு மரித்து நீதிமான்களாக்கப்பட வேண்டுமானால் கிறிஸ்துவுக்கு நம்மை முற்றிலும் ஒப்படைக்கவேண்டியது அவசியமாயிருக்கிறது.
Saturday, April 03, 2021
ஆதவன் - ஏப்ரல் 04, 2021 - ஞாயிற்றுக்கிழமை
உயிர்ப்பு விழா கொண்டாடி மகிழ்ந்தால் போதாது. அவர் வரும்போது அவரை எதிர்கொள்ளத் தகுதியுள்ளவர்களாய் மாறவேண்டியது அவசியம்.
ஆதவன் - ஏப்ரல் 03, 2021 - சனிக்கிழமை
இயேசு கிறிஸ்துவின்மேல் பரிதாபப்பட்டு அழும் கண்ணீராக இல்லாமல், பாவத்துக்கு மனம்வருந்தி மன்னிப்புக் கேட்கும் கண்ணீராக இருக்கட்டும்.


