நமது பிரதான ஆசாரியர்

    

                                        - சகோ. எம். ஜியோ பிரகாஷ் 


"ம்முடையபலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்." ( எபிரெயர் 4 : 15 )


"தனக்கு வந்தால்தான் தெரியும் தலைவலியும் காய்ச்சலும்" என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதாவது மற்றவர்களுக்கு அறிவுரைகூறுவதிலும், மற்றவர்கள் செய்யும் செயல் தவறு என நிரூபிப்பதிலும்  தீவிரம் காட்டுபவர்கள்  தங்களுக்கு அதேபோன்ற பிரச்னை வரும்போது தாங்கள் மற்றவர்களை குறைகூறிய  அதே தவறைச் செய்வர்ஆம் சொல்லுவது எல்லோருக்கும் எளிது ஆனால் சொல்லியபடி வாழ்ந்துகாட்டுவதுதான் கடினம்


திருவள்ளுவரும் இதுபற்றிக் கூறும்போது, "சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணஞ் செயல்" (குறள் - 664) என்று கூறியுள்ளார்


நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நாம் பூமியில் வாழ்வதற்கும் , மறுமை இன்பத்தை அடைவதற்கும் பல அறிவுரைகளைக் கூறினார். ஆனால்,  இன்று  பலர்  'இயேசு கிறிஸ்துவின் போதனைகள்படி யாரும் வாழ முடியாது' என்று கூறுகின்றனர். கிறிஸ்தவ ஊழியர்களில் சிலர்கூட இப்படிக் கூறுவதுண்டு. ஆனால் ஓன்று நாம் கவனிக்கவேண்டும்,  இயேசு கிறிஸ்து வெறும் போதனை செய்ததோடு நிற்கவில்லை, தனது போதனையின்படி வாழ்ந்து நமக்கு முன்மாதிரி காட்டியுள்ளார். அதனையே எபிரெய நிருப ஆசிரியர், " எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்" என்று குறிப்பிட்டுகின்றார்


எந்த ஒரு தகப்பனோ தாயோ தங்களது இரெண்டு வயது குழந்தையை ஐந்து இட்லி சாப்பிட வற்புறுத்துவதில்லை. அல்லது ஒரு குடம் தண்ணீரைத் தெருநல்லியில் போய் பிடித்துவரும்படிக் கூறுவதில்லை. காரணம் அவர்களுக்கு தங்களது குழந்தையால் எது முடியும் அல்லது முடியாது என்று தெரியும். இதுபோலவே, தேவனுக்கும் நம்மால் எது முடியும் எது முடியாது என்று தெரியும். முடியாத எதனையும் இயேசு கிறிஸ்து போதிக்கவில்லை. 


நாம் மேலே பார்த்த வசனத்தில், எல்லா விதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும் என்று கூறும்போது, நமக்கு இன்று உலகினில் வரக்கூடிய அனைத்து வித சோதனைகளும் அவருக்கும் வந்தன  என்று பொருள். பண ஆசையினால் விழக்கூடிய சோதனை, பதவி ஆசையில் விழக்கூடிய வாய்ப்பு, இச்சையில் அகப்படும் வாய்ப்பு போன்ற சோதனைகள் அவருக்கும் வந்தது. ஆனால் அவர்  அவற்றில் அகப்படாமல் பாவமில்லாதவராய் இருந்தார். அதனால்தான் அவரால் நம்மையும் பாவத்திலிருந்து விடுக்க முடியும் என்று இந்த நிருப ஆசிரியர் கூறுகின்றார்.


"ஆதலால், அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்". (  எபிரெயர் 2 : 18 )


ஒரு புதிய காட்டுவழிப் பாதைஅதனைக் கடந்து செல்லவேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்படுகின்றது என்று வைத்துக்கொள்வோம். முன்பின் தெரியாத அந்தக் காட்டில் நமக்கு வழிகாட்ட அங்கு அந்த காட்டைப் பற்றியும் அங்குள்ள வழிகள், நீரோடைகள், பழ மரங்கள் பற்றியும் , ஆபத்தான இடங்கள் பற்றியும் தெரிந்த ஒரு மனிதன் நமக்கு வழிகாட்டக் கிடைத்தால் எப்படி இருக்கும் ? அன்பானவர்களே, அத்தகைய மனிதன் தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.


நாம் வெட்டிப்பேச்சு பேசும் அரசியல்வாதியைப்போல  உள்ள ஒரு தலைவரை நமக்குத் தலைவராகப் பெறவில்லை. நாம் பயணம் செய்யும் பாதையில் அவர் ஏற்கெனவே பயணம் செய்துவிட்டார். எனவே நமக்கு உதவி செய்ய அவரால் முடியும். இதுவே நமது கிறிஸ்தவ நம்பிக்கை.   


"நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல்" என்று இந்த வசனம் கூறுகின்றது. அதாவது நமது பலவீனங்கள் அவருக்குத் தெரியும். அவற்றைக்குறித்து அவரும் பரிதாபப்படுகின்றார். நாம் செய்யவேண்டியது நமது பலவீனங்களை அவரிடம் ஒத்துக்கொண்டு அவரது உதவியை நாடுவதே. 'ஆணடவரே என்னால் இந்தக் குறிப்பிட்டப் பாவ பழக்கத்தை விட முடியவில்லை, ஆண்டவரே பொருளாசை, பதவி ஆசை, இச்சை, பெருமை, பொறாமை என்று நம்மை அடிமைப்படுத்தும் பாவங்களை அவரிடம் அறிக்கையிட்டு அவரது உதவியை நாடுவோம். நமக்கு எல்லா விதத்திலும் உதவிசெய்ய அவர் வல்லவராயிருக்கிறார்


மேலும், அப்போஸ்தலனாகிய யோவான் கூறுகின்றார், "தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கின்றது" (1 யோவான் 3:9). தேவனுடைய வித்து நமக்குள் இருந்தால் அது  நம்மைப் பாவம் செய்ய விடாது. அன்பானவர்களே, உலக ஆசீர்வாதங்களுக்காகவே ஜெபித்துக் கொண்டிருந்தோமானால் ஒருவேளை நாம் ஜெபித்த காரியத்தைப் பெற்றுக்கொள்ளலாம்  ஆனால் பாவ மன்னிப்பைப் பெற்றுக்கொள்ளமுடியாது.


அப்போஸ்தலனாகிய யோவான் கூறுவதுபோல முதலில் பாவ மன்னிப்பைப் பெற்று தேவனால் பிறந்த அனுபவத்தைப் பெறவேண்டும். அப்போது அவரது வித்து நமக்குள் இருக்கும். அது நம்மைப் பாவம் செய்யவிடாது. பாவத்தின்மேல் வெற்றிபெற்ற ஒரு வாழ்க்கையை  வாழ நம்மால் முடியும்.



Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்