அரசாங்கம், அதிகாரம், ஜெபம் - சில ஆவிக்குரிய சபைகளின் தவறான வழிகாட்டுதல்கள்


அரசாங்கம், அதிகாரம், ஜெபம் - சில ஆவிக்குரிய சபைகளின் தவறான வழிகாட்டுதல்கள்  

- சகோ . எம். ஜியோ பிரகாஷ் 


ங்களை ஆவிக்குரிய கிறிஸ்தவ சபை எனக் கூறிக்கொள்ளும் பல சபைகளும் தங்களை ஆவிக்குரிய கிறிஸ்தவர்களென்றும் கூறிக்கொள்ளும் பல சபைகளின்  விசுவாசிகளும் இன்று செயல்படும் விதங்கள் இவர்கள் சரியான கிறிஸ்தவ வழிகாட்டுதல் உள்ளவர்கள்தானா, கிறிஸ்தவ அடிப்படை போதனைகள் இந்தச் சபைகளில் போதிக்கப்படுகின்றதா எனும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.  

பல ஆவிக்குரிய சபைப் போதகர்களும் விசுவாசிகளும் சமூக வலைத் தளங்களில் வெளியிடும் கருத்துக்கள் உண்மையில் கிறிஸ்தவ போதனைகளுக்கு முரணான கருத்துகளேயாகும். சாமீப காலங்களில் இன்றய ஆளும் பாரதீய ஜனதா கட்சி செயல்படும் முறையினை வைத்து இவர்கள் வெளியிடும் கருத்துக்கள் சிலவற்றைப் பாப்போம். 

"பாரதீய ஜனதா கட்சி தமிழகத்திலும் இந்தியாவிலும் இருந்து முற்றிலும் அகற்றப்பட உபவாசமிருந்து ஜெபிப்போம்" என ஒரு பதிவு ....

"அடுத்த தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி தமிழகத்தில் தோல்வி அடையவேண்டி உபவாசம் "

"கிறிஸ்தவர்களுக்கு எதிரான சக்திகள் அழித்து ஒழிக்கப்பட உபவாசம்"

இந்தக் கருத்துக்களை வெளியிடும் நபர்கள் தங்களை கிறிஸ்தவர்களின் பாதுகாவலர்கள்போல  காண்பித்துக் கொண்டாலும் பொதுவாக இவர்கள் அனைவரும் ஆவிக்குரிய வழிநடத்துதல் உள்ளவர்கள் கிடையாது. ஏனெனில் இவர்கள் ஜெபம், உபவாசம் இவை பற்றி கொண்டுள்ள கருத்துக்களும் இவர்களது செயல்களும் கிறிஸ்தவ போதனைகளுக்கு முரணானவையாகும்.

ஒரு குறிப்பிட்ட தேதியையும் மணியையும் குறிப்பிட்டு அந்த நேரத்தில் மேற்கூறிய கருத்துக்களுக்காக உவாசம் இருந்து ஜெபிக்க அழைப்பு விடுகின்றனர்.

ஜெபத்தில் முக்கியமாக நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய காரியங்கள் பல உள்ளன

முதலாவது ஜெபிக்கும் நாம் தேவனுக்கு உகந்த ஒரு வாழ்க்கை வாழவேண்டியது அவசியமாகும். தாறுமாறான வாழ்க்கை வாழ்ந்துகொண்டு அல்லது ஆவியின் வழிநடத்துதல் இல்லாத ஓர் வாழ்க்கை வாழ்ந்துகொண்டு ஜெபிப்பதால் எந்த பயனும் இல்லை. அது வெறும் வார்த்தை அலங்காரமாக மிருக்குமே தவிர தேவனுக்கு ஏற்புடையது ஆகாது. மத வைராக்கியம் கொண்டு நமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மனதில்கொண்டு ஜெபிப்பதும் தேவனுக்கு ஏற்புடைய ஜெபமல்ல.

இந்த ஆவிக்குரிய சபைகள் ஜெபத்தை செய்வினை அல்லது பில்லி சூனியம் வைப்பதுபோல பயன் படுத்த முயலுவது தவறான காரியமல்லவா? நமக்கு விருப்பமில்லாதவர்கள் அல்லது நமக்கு எதிராக இருப்பவர்கள் அழிந்து ஒழிந்திட வேண்டுமென்று ஜெபிப்பது என்ன ஜெபம்? ஒருவேளை இந்த அரசாங்கம் மாறி வேறு ஒருவர் ஆட்சிக்கு வந்தாலும் அவர் நமக்குச் சாதகமாக இருப்பார்  என்பதற்கு என்ன அத்தாட்சி உள்ளது?

உலகத்தில் ஒருவனுக்கு ஆட்சி அதிகாரத்தைக் கொடுப்பதும் அதனை எடுப்பதும் தேவனது சித்தம். "உன்னதமான தேவன் மனுஷரின் ராஜ்யத்திலே ஆளுகை செய்து தமக்குச் சித்தமானவனை அதன்மேல் அதிகாரியாக்குகிறார்" (தானியேல் - 5:21). அதாவது இன்று ஒருவர் தேசத்தின் தலைவராக இருக்கிறாரென்றால் அவர் தேவனுக்கு உகந்தவராக இல்லாவிட்டாலும் தேவனுக்குச் சித்தமானவர்தான். இந்த மக்களை இப்போது ஆள இவர் போதும் என்பவரை தேவன் ஆட்சியில் அமர்த்துகின்றார். 

"தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனால் நியமிக்கப்பட்டிருக்கின்றன. ஆதலால் அதிகாரத்திற்கு எதிர்த்து நிற்கிறவன் தேவனுடைய நியமத்துக்கு எதிர்த்து நிற்கிறான்" (ரோமர் - 13:1, 2)   

மேலும் இயேசு கிறிஸ்து நாம்மைத் துன்பப்படுத்திக்கிறவர்கள் அழிய வேண்டுமென்றோ தோல்வியடையவேண்டுமென்றோ  ஜெபிக்க நமக்கு கற்றுத்தரவில்லை.  "நான் உங்களுக்குச்  சொல்கிறேன், தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால் அவனுக்கு மறு  கன்னத்தையும் திருப்பிக் காட்டு "  (மத்தேயு - 5:39) என்றே கூறினார். "உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள்"  (மத்தேயு - 5:44) என்றார். இதனைச் செயலிலும் காட்டினார். தன்னைக் காட்டிக்கொடுத்த யூதாசை அப்போதும்கூட, "சிநேகிதனே"  (மத்தேயு - 26:50) என்றே அழைத்தார். தன்னைச் சிலுவையில் அறைந்தவர்களுக்காக பிதாவிடம் மன்னிப்பு வேண்டி ஜெபித்தார். " பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னது என்று அறியாதிருக்கிறார்களே"  (லூக்கா - 23:34)

ஜெபத்தில் இரண்டாவது கவனிக்கவேண்டியது, தேவனது சித்தம் மட்டும் நிறைவேறிட ஜெபிப்பது. இதுவே மேலான ஜெபம். இயேசு கிறிஸ்து தான் பாடுபடுவதற்கு முந்தின இரவில் இப்படித்தான் ஜெபித்தார். "பிதாவே இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்  கூடுமானால்  நீங்கும்படிச் செய்யும், ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல , உம்முடைய சித்தத்தின் படியே ஆகக்கடவது"  (மத்தேயு - 26:39) என்றே ஜெபித்தார். இதுவே மேலான ஜெபம். தேவனது சித்தம் யார் ஆட்சி செய்யவேண்டுமோ அவரை ஆட்சியில் அமர்த்தும்.  

அன்பானவர்களே, ஆவிக்குரிய சபைகள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் சபைகள் இந்தப் போதனைகளை மறந்துவிட்டார்களா அல்லது இந்த கிறிஸ்துவின் போதனை இந்தக் காலத்துக்கு ஒத்து வராது என்று முடிவுக்கு வந்துவிட்டார்களா?

ஒருவன் கிறிஸ்தவனாகி விட்டதால் அவனது துன்பங்கள் மாறிவிடும் என்று வேதம் கூறவில்லை.  எனவே அப்படி ஒருவன் போதித்தால்  அவன் பொய்யன். "உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு" (யோவான் - 16:33) என இயேசு கிறிஸ்துவே கூறியுள்ளார்.   ஆனால் கிறிஸ்தவனுக்குள்ள மேன்மை அனுபவம் என்ன? அது சோதனை ஏற்படும்போது அதனைத் தாங்கும் வலிமையையும் அதிலிருந்து விடுபடும் வழியை தேவன் தருவார்.  எனவேதான்  வேதம் பின்வருமாறு கூறுகிறது, " மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறு சோதனை உங்களுக்கு நேரிடவில்லை, தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுவதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்  தக்கதாக, சோதனையோடு கூட  அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்." (1 கொரிந்தியர் - 10:13) 

அப்போஸ்தலரான பேதுரு கூறுகிறார், "ஒருவன் கிறிஸ்தவனாக இருப்பதனால் பாடுபட்டால் வெட்கப்படாமலிருந்து அதன் நிமித்தம் தேவனை மகிமைப்படுத்தக்கடவன். " (1.பேதுரு -4:16)

"நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள் ; ஏனென்றால் தேவனுடைய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார். அவர்களாலே தூஷிக்கப்படுகிறார். உங்களாலே மகிமைப்படுகிறார். " (1.பேதுரு -4:14)

அன்பானவர்களே, ஆவிக்குரிய சபைகள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் சபைகள் கூறும் தவறான உபவாச ஜெபங்களில் ஈடுபட்டு தேவனுக்கு எதிராகச் செயல்படாதிருங்கள். தேவ சித்தம் நிறைவேற ஜெபியுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. 

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்