வெளிச்சத்துக்கு வருவோம் ......!


வெளிச்சத்துக்கு வருவோம் ......!

- சகோ. எம். ஜியோ பிரகாஷ் 


(ஒளியின் தூதனுடைய  (ஒளியான மெய்  தேவனுடைய தூதர்களின்)   வேடத்தைத் தரித்துக்கொண்ட பொய்யனின் (சாத்தானின்) ஊழியர்கள் பெருகி மக்களை சத்தியத்தை அறியவிடாமல் தடை செய்து வரும் காலகட்டத்தில் நாம் வாசிக்கின்றோம். பிரபல ஊழியர்கள் என்று அறியப்படும் பலரும் இன்று இப்படி வஞ்சிக்கிற ஆவியைக் கொண்டு மக்கள் சத்தியத்தினை அறியத்  தடையாக உள்ளனர். இவர்களிடமிருந்து ஆவிக்குரிய வாழ்வை மக்கள் காத்துக்கொள்ள வழிகாட்டும் கட்டுரை இது )  

கிறிஸ்தவத்தைப்பற்றி கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்வோருக்கும்,  கிறிஸ்துவை அறியாத மக்களுக்கும்  சரியான முறையில் எடுத்துச் சொல்ல இன்று ஆட்கள் மிக மிகக் குறைவு.  "அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்" (மத்தேயு - 9:37)    என இயேசு கிறிஸ்து கூறியது இன்றும் மிகச் சரியாக இருக்கிறது. 

வெளிப் பார்வைக்கு இன்று கிறிஸ்தவ ஊழியர்களும் ஊழியங்களும்  சபைகளும் பெருகியது போலத் தெரிந்தாலும் உண்மை அதுவல்ல. பெரும்பாலான இன்றைய கிறிஸ்தவர்களும் கிறிஸ்துவின் போதனையைப்  பின்பற்றவில்லை, ஊழியர்களும் போதகர்களும் கிறிஸ்துவின் போதனையைப் போதிக்கவில்லை. கிறிஸ்தவ ஆன்மிகம் என்றால் என்ன  என்பது பெரும்பாலான ஊழியர்களுக்கும்  கிறிஸ்தவர்கள் எனத் தங்களைக்  கூறிக் கொள்ளும்  மக்களுக்கும் தெரியவில்லை. தங்களது கையில் சுமந்து செல்லும் வேதம் கூறும் உண்மை கிறிஸ்தவர்களுக்குத் தெரியவில்லை. அப்படி தெரிந்திருக்குமேயானால் இன்று தமிழகத்தில் பிரபலமாக விளங்கும் பல ஊழியர்களும் காணாமல் போயிருப்பார்கள். சமுதாயத்திலிருந்து துரத்தியடிக்கப்பட்டிருப்பார்கள். ஆம், நாங்கள் பரம்பரைக் கிறிஸ்தவர்கள் எனக் கூறிக்கொள்ளும் பலரும் கூட ஊழியர் கூறுவதை நம்பும் அளவுக்கு வேதம் கூறுவதை நம்பாததே இந்த இழி நிலைமைக்குக் காரணம்.

அன்பானவர்களே, கிறிஸ்துவை அறியாத ஊழியர்கள் கிறிஸ்துவை அறிவிக்கத் துவங்கியதே கிறிஸ்தவத்தின் மிகப் பெரிய சாபக் கேடாக இருக்கிறது. வெறும் பண ஆசையையே நோக்கமாகக் கொண்டு ஊழியம் செய்பவர்களும் வேறு வேலை கிடைக்காததால் ஊழியம் செய்ய வந்தவர்களும், உலக வேலையில் இருந்து சம்பாதித்துவிட்டு ரிட்டயர்டு ஆனபின் பொழுது போக்க ஊழியத்துக்கு வந்தவர்களும்,  பெருமைக்காக ஊழியம் செய்ய வந்தவர்களும் தான் பெரும்பாலான கிறிஸ்தவ  ஊழியர்கள்.  கிறிஸ்துவால் குறிப்பிட்டு ஊழியத்துக்கு அழைக்கப்பட்டு ஊழியம் செய்வோர்  வெகு சிலரே.  அப்படி கிறிஸ்துவால் ஊழியத்துக்கு அழைக்கப்பட்டு ஊழியத்துக்கு வந்தவர்களும் கிறிஸ்துவின்மேல் உள்ள பார்வையைத் திருப்பி ஏற்கெனவே உலகப்பிரகாரமாக ஊழியம் செய்து பிரபலமாக விளங்கும் ஊழியர்களைப் பார்த்து அதுபோன்று மாய்மால ஊழியம் செய்யத் துவங்கிவிடுகின்றனர். ஆம் அவர்களது ஆரம்பம் சரியாக இருந்தாலும் கிறிஸ்துவை விட்டுத் தங்களது பார்வையைத் திரும்பியதால் தவறான வழிக்குச் சென்றுவிடுவதுடன் பல ஆயிரக்கணக்கான மக்களையும் தவறான வழிக்கு நடத்துகின்றனர். இத்தகைய பின்மாற்ற    ஊழியர்களை  இன்றயக் கிறிஸ்தவத் தலைவர்களும் தங்களுக்கு மீட்பின் அனுபவம் இல்லாத காரணத்தால் கண்டுபிடிக்க முடியாமல் தலையில் தூக்கி வைத்து ஆடுகின்றனர்.

ஒருவன் போதிப்பதைக் கேட்க அதிகம் கூட்டம் சேர்வதால் அவன் கூறுவது அனைத்தும் சரி என்று ஆகிவிடாது, மாறாக, அவன் பெரும்பாலான மக்களுக்கு எது விருப்பமாக இருக்கிறதோ அதனை போதிக்கிறான் என்பதே உண்மை.  எனவே அது மக்களைத் திருப்பதிப்படுத்தும் போதனையே தவிர தேவனைத் திருப்பதி படுத்தும் போதனையாக இருக்க முடியாது.

இன்றய பிரபல போதகர்களது போதனைகளைக் கவனித்துப் பாருங்கள். அவை பெரும்பாலும் ஆசீர்வாதத்தைப் பிரசித்திப்படுத்தும் போதனைகளாகவே இருக்கும். "அதிசயம், அற்புதம், வல்லமை" இவையே இந்தப் போதகர்களது போதனையின் கருப்பொருள். இவைகளை ஒருவன் பெறவேண்டுமானால் அந்த ஊழியரது திட்டங்களுக்குப் பொருள் உதவி செய்யவேண்டும். இந்த ஊழியர்களது கூட்டங்களுக்குச் செல்லும் மக்களும் என்ன வேண்டுகிறார்கள்? தங்களது நோய்  நீங்க வேண்டும், பேய் நீங்கவேண்டும், கடன் தொல்லை நீங்கவேண்டும், தங்களது மக்களுக்கு நல்ல வரன் அமைய வேண்டும், நல்ல வேலை கிடைக்கவேண்டும், தங்கள் செய்யும் தொழில் செழிக்கவேண்டும்.....இப்படியே தான் இந்தப் பட்டியல் தொடரும்.  அதாவது துன்பமில்லாத ஒரு நல்ல செழிப்பான வாழ்க்கை வேண்டும் என்பதே மக்களது வேண்டுதல்; உலகத்தில் ஒரு மேலான வாழ்க்கை வாழ்ந்து முடிக்கவேண்டும் என்பதே மக்களது வேண்டுதல். மேற்படி விசயங்களில் ஆன்மிகம் எங்கே இருக்கிறது என்று யாரும் எண்ணிப்பார்ப்பதில்லை.

மக்களது இந்த ஆசையைத்தான் இன்றய ஊழியர்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். ஜெபம், உபவாசம், காணிக்கை, ஆராதனை என அனைத்திலும் மக்களது இந்த உலக ஆசையைப் புகுத்தி இணைத்து மனக்   குருடர்களாக மக்களை இருளிலேயே வைத்துள்ளனர். காரணம் இந்த ஊழியர்களும் இப்படி மனக் குருடர்களாகவும் இருளின் பிடியில் இருப்பவர்களாகவும் இருபதே.  ஜெபம், உபவாசம், காணிக்கை, ஆராதனை இவை முக்கியமே எனினும் அவை வெறும் உலக ஆசீர்வாதத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கக் கூடாது.  " உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகை என்று அறியீர்களா?" (யாக்கோபு - 4:4) மேலும் ஒருவன் ஜெபம் செய்து தேவனிடம் ஒன்றை வேண்டும் முன் அவன் கிறிஸ்துவின் இரத்தத்தால்  கழுவப்பட்ட அனுபவத்தைப் பெற்றவனாக இருக்க வேண்டியது அவசியமாகும். 

தேவச்  சாயலாகப் படைக்கப்பட்ட நாம் தேவனோடு இணையவேண்டும். இதுவே தேவனுடைய திட்டம். பரிசுத்த தேவனோடு இணையவேண்டுமானால் நாமும் பரிசுத்தமாக இருக்கவேண்டும். அது மனித முயற்சியால் ஆகாது. நாம்  கிறிஸ்துவின் இரத்தத்தினால் உண்டாக்கப்பட்ட  இரட்சிப்பினைப் பெற்று தேவனுடைய பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்படும் ஒரு வாழ்க்கை அனுபவத்துக்குள் வந்தால் மட்டுமே அது முடியும்.  சுவிசேஷம் எழுதப்பட்டதன் நோக்கமே அதுதான். இதனை இயேசு கிறிஸ்துவின் அன்புச்  சீடனான யோவான், " இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினால் நித்திய ஜீவனை அடையும்படியாகவும் இவைகள் எழுதப்பட்டிருக்கின்றன" (யோவான் - 20;31)  எனத் தெளிவாகக் குறிப்பிடுகின்றார்.

மேலும் மத்தேயு நற்செய்தியில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைப் பற்றி கூறும்போது, "அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக: ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்" (மத்தேயு - 1:21) என வானதூதன் இயேசுவின் உலகத்  தகப்பனாகிய யோசேப்பிடம்  கூறுவதைக் காணலாம்.

ஆனால் இன்றய ஊழியர்களும் கிறிஸ்தவத் தலைவர்களும் இவற்றைப் போதிப்பது கிடையாது. இந்த மீட்பின் அனுபவத்தைப் பெற மக்களை வழி நடத்துவதும் கிடையாது. ஆனால் இந்த ஊழியர்கள் மக்களது  தற்கால மன அமைதிக்காக மேற்பூச்சாக ஒத்தடம் கொடுத்து விடுகின்றனர். ஆம், "அவர்கள் தேவ நீதியை அறியாமல், தங்களது சுய நீதியை நிலை நிறுத்த" விரும்புகிறார்கள். (ரோமர் -  10:3)

ஆவிக்குரிய வாழ்வு என்பது ஒரு மேலான அனுபவமாகும். அது கிறிஸ்து வாழ்ந்து காட்டிய அனுபவம். அவரது சீடர்களும் பல்வேறு பரிசுத்தவான்களும் வாழ்ந்து காட்டிய அனுபவம்.  " மாம்சத்தின்படி நடக்கிறவர்கள்  மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்".  (ரோமர் -  8:5) என வேதம் கூறுகிறது.  கிறிஸ்துவுக்குரிய ஆவிக்குரிய வாழ்க்கை நாம் வாழும்போது நமது உலகத் தேவைகளை அவர் சாந்திப்பார். "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்போது இவைகளெல்லாம் உங்களுக்கு கூடக்  கொடுக்கப்படும்"  (மத்தேயு - 6:33) இந்த விசுவாசத்தோடு கிறிஸ்துவைப் பற்றி வாழ்வதுதான் கிறிஸ்தவ வாழ்வு.

ஒருவன் கிறிஸ்தவனாகி விட்டதால் அவனது துன்பங்கள் மாறிவிடும் என்று வேதம் கூறவில்லை.  எனவே அப்படி ஒருவன் போதித்தால்  அவன் பொய்யன். "உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு" (யோவான் - 16:33) என இயேசு கிறிஸ்துவே கூறியுள்ளார்.   ஆனால் கிறிஸ்தவனுக்குள்ள மேன்மை அனுபவம் என்ன? அது சோதனை ஏற்படும்போது அதனைத் தாங்கும் வலிமையையும் அதிலிருந்து விடுபடும் வழியை தேவன் தருவார். அவன் நிர்கதியற்று தற்கொலை போன்ற தவறான முடிவுக்குச் செல்ல மாட்டான்.  எனவேதான்  வேதம் பின்வருமாறு கூறுகிறது, " மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறு சோதனை உங்களுக்கு நேரிடவில்லை, தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுவதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்  தக்கதாக, சோதனையோடு கூட  அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்." (1 கொரிந்தியர் - 10:13) 

தேவன் எனக்கு எல்லாம் தந்துகொண்டே இருப்பதால் நான் அவரை நேசிக்கிறேன் என்பதல்ல, எந்த சூழலிலும் அவரிடம் அன்புடையவராக இருப்பதையே தேவன் விரும்புகிறார். யோபு கூறியதைப்போல, "அவர் என்னைக் கொன்றுபோட்டாலும் அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன் " (யோபு - 13:15) என்பதே தேவ அன்பு. இதனை யோபு தன்  அனுபவத்தால் உணர்ந்து கூறினார். தேவன் அவரை அதிகமாக ஆசீர்வதித்திருந்தார். ஆனால் அதே ஆசீர்வாதம் தன்னைவிட்டு எடுபட்ட போதும் யோபு தனது தேவ அன்பில் மாறவில்லை. இது யோபு தேவன்மேல் கொண்டிருந்த அன்பை  விசுவாசத்தையும் காட்டுகிறது. தனக்குத் துன்பம் ஏற்பட்டபோது யோபு கூறிய விசுவாச வார்த்தைகளைப்  பாருங்கள்:- " தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ ?" (யோபு - 2:10)

அப்போஸ்தலரான பவுல் அடிகள் இந்த அனுபவத்தில் இருந்ததால்தான், " கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ,  துன்பமோ , பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டையமோ இவையெல்லாவற்றிலேயும்  நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றிலும் ஜெயம் கொள்ளுகிறவர்களாய் இருக்கிறோமே.  மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமை களானாலும்,  நிகழ்காரியங் களானாலும் வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும் வேறெந்த சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து   இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நாம்மைப்  பிரிக்க மாட்டாதென்று    நிச்சயத்திருக்கின்றேன்." (ரோமர் - 8:36-39) என்று கூறுகின்றார்.

ஆனால் இன்றய ஊழியர்கள் இதற்கு மாறாக மக்களை வழிநடத்துகின்றனர். தவறான முன் உதாரணங்களையும் தவறான நம்பிக்கையையும் மக்களிடம் புகுத்துகின்றனர். இதுவே இன்றய கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்வோரின் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்துவிடுகின்றது. உதாரணமாக ஊழிக்காரன்  ஜெபித்தால் மாணவனுக்கு முதல் மதிப்பெண் கிடைக்கும் என்றும் தோல்வியே ஏற்படாது என்றும் ஒரு மாயை ஏற்படுத்தப்பட்டுள்ளது.  ஆனால் கிறிஸ்தவ மாணவர்களைவிட மற்ற மத மாணவர்களே பல்வேறு தேர்வுகளில் முதல் மதிப்பெண் பெறுகின்றனர்.  முதல் மதிப்பெண் பெறுவது மட்டுமே வாழ்வின்  வெற்றி அல்ல என்பதை உளவியல் ஆற்றுப்படுத்துனர்கள் தெரிந்துள்ள அளவுக்கு கிறிஸ்தவ ஊழியர்கள் தெரிந்துகொள்ளாதது இன்றய கிறிஸ்தவத்தின் சாபக்கேடாக உள்ளது.  அப்போஸ்தலரான பவுல் அடிகள், "இம்மைக்காக மாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாய் இருந்தால் எல்லா மனுஷரைப் பார்க்கிலும் பரிதபிக்கக்கூடியவர்களாய்  இருப்போம்"  (1 கொரிந்தியர் - 15:19) என்று எழுதுகின்றார்.


அன்பானவர்களே ! பின்மாற்ற ஊழியர்களை நம்பி ஏமாற வேண்டாம். முதலில் நீங்களே வேதாகமத்தை பரிசுத்த ஆவியின் துணையுடன் நன்கு வாசியுங்கள். உண்மையை அறியும் ஆர்வத்துடன் நீங்கள் வேதத்தை வாசிப்பீர்கள் என்றால் தேவன் உங்களை சாத்திய வெளிச்சத்துக்குள்  வழி நடத்துவார்.  ஆவிக்குரிய கிறிஸ்தவர்களாய் வாழ உறுதி  கொள்ளுங்கள். அதற்குத் தடையாக உள்ள பொருளாசைக்கு  நேராக வழிநடத்தும்  ஊழியர்களையும் , ஊழியர்களது பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளையும்  புறக்கணியுங்கள். கர்த்தர்தாமே உங்களை நிறைவாய் ஆசீர்வதிப்பார்.

"ஆனபடியால் கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து  மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பில்லை" (ரோமர் - 8:1)

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்