கிறிஸ்து இடதுசாரி புரட்சியாளரா ?

கிறிஸ்து இடதுசாரி புரட்சியாளரா ?  

சகோ . எம் . ஜியோ பிரகாஷ் 

ன்றைய கிறிஸ்தவத் தலைவர்கள் மற்றும் போதகர்கள் பலரும், சமூக சேவையாளர்கள் பலரும் கிறிஸ்துவை இந்த உலக ஆசீர்வாதத்தை அளிக்க வந்தவராகவே படம்பிடித்துக் காட்டுகின்றனர். வேதாகம வசனங்களை அவற்றின் உண்மையானபொருள் விளங்காமல் போதிக்கின்றனர். இவற்றின் விளைவே தவறான ஆசீர்வாத உபதேசங்களும் விடுதலை இறையியல் எனும் இடதுசாரி சிந்தனை போதனைகளும். 

கிறிஸ்து மக்களுக்கு விடுதலை வாழ்வு அளிக்க வந்தார் என்பதை இவர்கள் உலக கண்ணோட்டத்துடனேயே பார்த்து அதற்கேற்ப பொருள் விளக்கமளித்து மக்களைக் குழப்பி கிறிஸ்து கூறிய  தேவனுடைய ராஜ்யத்திற்குள் தாங்களும் நுழையாமல்  மற்றவர்களையும் நுழைய விடாமல் தடுத்து மிகப் பெரிய தடைக்கற்களாக இருக்கின்றனர். பல ஆண்டுகளாக வேதாகமக் கல்லூரிகளில் இறையியல் படித்த இந்த போதகர்கள் தேவனை படிப்பின் மூலம் மட்டும் ஒருவன் அறிய முடியாது என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டாக இருக்கின்றனர்.

இயேசு கிறிஸ்து தனது ஊழியத்தின் ஆரம்பத்தில் ஏசாயா நூலின் 61 ம் அதிகாரத்தின் முதல் இரு வசனத்தைக் கூறி தனது ஊழிய நோக்கத்தினை வெளிப்படுத்தினார்.

"கர்த்தருடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார், தரித்திரருக்குச் சுவிசேஷத்தை பிரசிங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார். இருதயம் நறுங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்திப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும் கர்த்தருடைய அனுகிரக வருஷத்தைப் பிரச்சித்தப்படுத்தவும் என்னை அனுப்பினார்" (லூக்கா - 4:18,19 & ஏசாயா - 61:1,2)

இந்த வசனத்துக்கு உலகப் பொருள்கொண்டு இயேசு கிறிஸ்து ஒரு இடது சாரி சிந்தனையுள்ள மனிதன் (கவனிக்க, மனிதன்) என்று எண்ணி அதற்கேற்ப சம்பவங்களை வேதாகமத்திலிருந்து எடுத்துக் காட்டி விளக்குகின்றனர். இதற்கு ஆதாரமாக அவர்கள் இயேசு கிறிஸ்து அப்பம் பலுக்கச் செய்த சம்பவத்தையும் கோவிலில் வியாபாரம் செய்தவர்களை சாட்டையால் அடித்துத் துரத்தியதையும் தங்களுக்கேற்ப பொருள்விளக்கமளித்து மக்களைக் குழப்புகின்றனர்.

இந்த ஊழியக்காரர்கள் மற்றும் சமூக சிந்தனையாளர்கள்களின் கணக்குப்படி இன்று சமூக சேவை செய்யும் பலரும்  கிறிஸ்துவின் அடிச்சுவட்டைப் பின்பற்றுபவர்களாக சித்தரிக்கப்படுகின்றனர். வெறும் ஜெபம் ஆராதனையைவிட இத்தகைய இரக்கச் செயல்பாடுகளே போதும் எனப் போதனைவேறு  செய்கின்றனர்.

வேதம் என்ன கூறுகிறது என்பதைக் குறித்து ஒரு தெளிவான பார்வை இருந்தாலே இத்தகைய வேதப்  புரட்டர்களுக்குப்  பதில் கூற முடியும். நம் நீதிச் செயல்களால் மட்டும் நாம் நீதிமானாக முடியாது என வேதம் கூறுகிறது.

இன்று சமூக சேவை செய்கிறோம் என்று கூறிக்கொள்பவர்களில் எத்தனைபேர் அதனை ஒரு சேவையாகச் செய்கின்றனர்? சமூக சேவை மற்றும் மக்களுக்கான விடுதலைச் சேவைகளில் ஈடுபடும் சேவை நிறுவனத் தலைவர்கள் எதற்காக அந்தச் சேவையில் ஈடுபடுகின்றனர் என்று பார்த்தால்:-

1. வெளிநாட்டிலிருந்து அல்லது உள் நாட்டிலிருந்து பண உதவி கிடைப்பதால் அப்படிச் செய்கின்றனர்

2. அப்படிச் செய்வதால் தங்களது பெயர் பிரிசித்தமடைகிறது , அதனால் செய்கின்றனர்

3. ஏழை மக்களை முன்னிறுத்தி சேவை செய்வதால் தங்களது பிழைப்பு நடக்கிறது, எனவே சேவை செய்கின்றனர்.

உண்மையான மக்கள் அன்புள்ளவன் இவை எதனையும் எதிர்பார்க்காமல் செய்வான். ஆனால் அப்படி ஒருவனால் செய்யமுடியாது எனும்போது அவன் அதிக அதிக பாவத்தில்தான் விழுவான். இன்று சமூக சேவை எனும் பெயரில் வெளிநாடுகளிலிருந்து பணத்தைப் பெற்று தங்களது குடும்பத்தை வளர்த்துக்கொள்ளும் பலரை நாம் பார்க்கிறோமே? சுனாமி இந்தியாவைத் தாக்கியபோது மக்களுக்காக வந்த பணத்தைச் சுருட்டி கார் பங்களா என வாங்கி குவித்த தொண்டு நிறுவனங்கள் எத்தனை எத்தனை?

ஆம் கிறிஸ்து ஒருவனுக்குள்  உருவாக்காவிட்டால் அவன் இப்படிக் கொள்ளைக்காரனாகத்தான் இருப்பான். நமது நல்லச் செயல்களல்ல, செயல் செய்யப்படும் நோக்கத்தை தேவன் பார்க்கிறார்.  "அவர் தன்  கண் கண்டபடி நியாயம் தீர்க்காமலும் தனது காது கேட்டபடி தீர்ப்புச்  செய்யாமலும் நீதியின்படி ஏழைகளை நியாயம் விசாரித்து யாதார்த்தத்தின்படி சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்   செய்து......." (ஏசாயா - 11:3,4)

கிறிஸ்து நமக்குள் இல்லாவிட்டால் நல்ல நோக்கம் ஒருவனுக்கும் வருவதில்லை. "எத்தியோப்பியன்  தனது தோலையும் சிவிங்கி தனது புள்ளிகளையும் மாற்றக்கூடுமோ? கூடுமானால் தீமை செய்யப் பழகின நீங்களும் நன்மை செய்யக்கூடும்" (எரேமியா - 13:23). ஆம் மனிதனது நினைவுகள் அவன் சிறு வயது துவங்கி  பொல்லாதவைகளாகவே இருக்கின்றன. கிறிஸ்துவின் ஒளி ஒரு மனிதனுக்குள் வரும்போது மட்டுமே அவன் தனது சுய ஆளுகையிலிருந்து விடுபட முடியும்.

எனவேதான் பரிசுத்த பவுல் அடிகள், "மனுஷன் நியாயப் பிரமாணத்தின்  கிரியைகளினால்  அல்லாமல் விசுவாசத்தினாலே நீதிமானாக்கப்படுகிறான் " (ரோமர்- 3:28) என்று கூறுகிறார். நியாயப்  பிரமாணம் உன்னிடத்தில் அன்புகூருவதுபோல பிறனிடத்திலும் அன்புகூரு என்று கூறுகிறது.  அன்பினால் நான் ஏழைக்குச் செய்கிறேன் என்று ஒருவன் கூறினாலும் அது அவன் கிறிஸ்துவின்மேல் விசுவாசமுள்ளவனாக மாறினால் மட்டுமே பூரணமாகும்.

அன்னைத் தெரேசா அவர்கள் தனது வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுவார். ஒருமுறை அன்னைக் கலந்துகொண்ட கூட்டத்திற்கு மத்திய சமூக நலத்துறை அமைச்சர் ஒருவர் தலைமை தாங்கினார். அவர் அன்னையின் சேவைகளையும் அவரது நிறுவனத்தையும் பார்த்துவிட்டு பின்வருமாறுக் கூறினாராம், " மதர் நாங்களும் (அரசாங்க அதிகாரிகளும்) நீங்களும் ஒரே பணியைத்தான் செய்கிறோம். ஆனால் நாம் இருவருக்கும் மிகப் பெரிய வித்தியாசம் ஒன்று உள்ளது.  நாங்கள் இந்தப் பணியை ஏதோ ஒன்றிற்காகச் (பணத்துக்காக) செய்கிறோம் , நீங்கள் யாரோ ஒருவருக்காகச்  (கிறிஸ்துவுக்காக)  செய்கிறீர்கள். ஆம் கிறிஸ்து ஒருவற்காகவே செய்த பணியாக எண்ணி அன்னை தெரெசா  சேவை செய்ததால்தான் அவர் புனிதையாகக் கருத்தப்படுகிறார்.

சேவை செய்வது என்பது ஏழைகளுக்கு கொடுப்பது, உதவுவதுதான் என்றாலும் ஒரு மனிதன் தேவனுடைய ஆவியினால் ஆட்கொள்ளப் பட்டால்தான் அது பூரணப்படும். எனவேதான் பவுல் அடிகள் கூறுகிறார், " நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால் அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது" (ரோமர்-5:5) நம்முடைய இருதயத்தில் தேவனுடைய அன்பின் ஆவியானவர் ஊற்றப்படவேண்டும்.

கிறிஸ்துவை உலக ஆசீர்வாதத்துக்கான ஒருவராக, ஒரு விடுதலை வீரராக சுருக்கமாக ஒரு கம்யூனிசவாதியாக  எண்ணிக்கொள்பவர்கள் ஒன்றினை கருத்தில் கொள்ளவேண்டும். கிறிஸ்து அப்படி ஒரு உலக சம தர்ம சமத்துவத்தை உருவாக்க எண்ணி பூமியில் தோன்றியிருந்தால் அவர் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்திருக்கவேண்டிய அவசியமே இல்லை. ஒரு அரசனுடைய மகனாகப் பிறந்து அரசாட்சியைக்கைப்பற்றி அத்தகைய சமத்துவ சமுதாயத்தைத் தோற்றுவித்திருக்க முடியும்.   எனவே இயேசு கிறிஸ்து உலகத்தில் வந்தது அதற்காக அல்ல என்பது தெளிவு.

பின் எதற்காக வந்தார்? கிறிஸ்து மக்களை தேவனுடைய ராஜ்யத்துக்கு ஏற்புடையவர்களாக மாற்றிட வழி காட்டிடவும் அதற்காக தனது இரத்தத்தைச் சிந்தி மறுபிறப்பு எனும் இரட்சிப்பின்  வாசலைத் திறந்திடவும் வந்தார். நிக்கொதேமு எனும் யூத போதகர் ஒருவரிடம் இயேசு கிறித்து கூறினார், " ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்" (யோவான் - 3:3) பல வருடங்களாக மக்களுக்கு தேவனைப் பற்றி போதித்த ஒரு மிகப் பெரிய யூத போதகருக்கே மறுபடி பிறக்கவேண்டியது அவசியமானதாக இருக்குமானால் நமக்கு அது எவ்வளவு அதிகம் தேவை?

கிறிஸ்துவின் மறுபிறப்பு எனும் இரட்சிப்பை ஒருவன் பெற்றால் மட்டுமே அவன் கிறிஸ்துவுக்கு ஏற்ற ஊழியனாக  இருக்க முடியும். அத்தகையவனே கிறிஸ்துவின் அன்புடன் சேவை செய்ய முடியும்.

நமது பலவீனங்களை நாம் ஒத்துக்கொள்ளவேண்டும். ஆண்டவரே எனது பலவீனங்களை நான் ஏற்றுக்கொள்கிறேன். எனது மீறுதல்கள் மற்றும் பாவங்களை அறிக்கையிடுகிறேன். உமது இரத்தத்தால் என்னைக் கழுவி  உமது இரட்சிப்பின் சந்தோஷத்தை எனக்குத் தாரும் என வேண்டுவோம். இதை வாசிக்கும் நீங்கள் சமூக சேவை செய்பவரானால் உங்களையே நீங்கள் பரிசோதித்தறியுங்கள். இதுவரை நீங்கள் எதற்காக சேவைசெய்தீர்கள்? பணத்துக்காகவா ? பெருமைக்காகவா? சேவை செய்வதில் உண்மையாக இருந்தீர்களா?  மெய்யாகவே நீங்கள் உங்களை ஆய்வு செய்து தேவனிடத்தில் உங்களைத் தாழ்த்தினால் தேவன் உங்களுக்கு வெளிப்படுவார். உங்கள் சேவை வித்தியாசமானதாக இருக்கும். "என்னைப் பலப்படுத்திக்கின்ற    கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலனுண்டு" (பிலிப்பியர் -4:13) என்று கூறி சேவைசெய்வீர்கள். அப்போது, பவுல் கூறுவதுபோல, "அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன்"   (பிலிப்பியர் -3:11) எனும் எண்ணம் உங்களை ஆட்கொள்ளும். ஏமாற்று, திருட்டு, கபடம், மாய்மாலம் இல்லாததாக உங்கள் சேவை இருக்கும்.  கர்த்தர்தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.
  

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்