"அன்பு" - கிறிஸ்தவத்தின் அச்சாணி


"அன்பு" - கிறிஸ்தவத்தின்    அச்சாணி 

சகோ. எம். ஜியோ பிரகாஷ் 


கிறிஸ்தவர்கள் என்றால் யார்? என்பதற்கு இந்த உலகம் தரும் விளக்கம் குறுகியது. ஏதாவது ஒரு கிறிஸ்தவ சபைப் பிரிவில் உறுப்பினர்களாக இருப்பவர்களும், கிறிஸ்தவப் பெயர்களைக் கொண்டவர்களையும் கிறிஸ்தவர்கள் என உலகம் கணிக்கின்றது. இத்தகைய மக்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் பிறவியிலேயே கிறிஸ்தவர்கள் எனப் பெயர் பெற்றுவிடுகின்றனர். அரசாங்கமும், நாட்டின் சட்டமும் இத்தகையவர்களைக் கிறிஸ்தவர்கள் எனக் கூறுகின்றது. 

பொதுவாக அனைவருமே இயேசு கிறிஸ்துவை ஒரு மதத்தை உருவாக்க வந்த தலைவராகவே பார்க்கின்றனர். எனவே அந்தத் தலைவரை முன்னிறுத்தி பேச்சுபவர்களைக். கிறிஸ்தவர்கள் எனக் கூறுகின்றர். ஆம் , தேசத்தின் பார்வைக்கும் உலகத்தின் பார்வைக்கும் இது சரியே. ஆனால் வேதம் இப்படிக் கூறவில்லை. 

ஆள் எணிக்கையோ   பெரிய திரள் கூட்டமோ தேவனுக்குத் தேவையில்லை. கிறிஸ்துவின் மனநிலை உள்ள அல்லது கிறிஸ்துவின் சிந்தையுள்ள ஒரு சிலர் இருந்தாலே அது தேவனுக்குப் பெரிதாக இருக்கிறது. ஆம் வேதம் கூறுகிறது,  "கிறிஸ்துவின் ஆவி இல்லாதவன் அவருடையவனல்ல" (ரோமர் - 8:9) அதாவது ஒருவன் கிறிஸ்தவன் என்று கூறப்படவேண்டுமானால் அவனுக்குள் கிறிஸ்துவின் ஆவி இருக்கவேண்டும். அதாவது அவன் கிறிஸ்துவின் சிந்தை உள்ளவனாக மாறவேண்டும். இப்படி கிறிஸ்துவின் ஆவியால் நடத்தப்படுகிறவர்களே தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். "எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்" (ரோமர் - 8:14)   

ஆதி அப்போஸ்தலர்கள் வாழ்க்கை இப்படித்தான் இருந்தது. அவர்கள் இயேசு கிறிஸ்துவின் ஆவியினால் நிரம்பியவர்களாக வாழ்ந்தனர். அவர்களது வித்தியாசமான வாழ்க்கை முறை மற்றவர்களை அவர்களைத் திரும்பிப் பார்க்கச்செய்தது.  இப்படிக் கிறிஸ்துவின் ஆவியினால் நடத்தப்பட்ட சீடர்களை பார்த்து மற்றவர்கள்தான் கிறிஸ்தவர்கள் என அவர்களை அழைத்தனர். இப்படி "முதன் முதலில் அந்தியோகியாவிலே சீஷர்களுக்கு கிறிஸ்தவர்கள் என்கிற  பெயர் வழங்கிற்று" (அப்போஸ்தலர் - 11:26) என வாசிக்கின்றோம்.

ஆனால் இன்றய நிலை என்ன? கிறிஸ்துவின் ஆவியினால் நடத்தப்படுகிற வாழ்க்கை இன்று எத்தனை கிறிஸ்தவர்களிடம்  உள்ளது?  இன்றய நிலை மிகவும் வருந்தத்தக்கதாக இருக்கிறது . இன்றய பெரும்பாலான கிறிஸ்தவர்கள்  தாங்கள் சார்ந்திருக்கும் சபைப் பிரிவால் நடத்தப்படுகிறவர்களாக இருக்கின்றனர். தாங்கள் சார்ந்திருக்கும் சபையின் தலைவர் கூறுகிறபடி நடக்கிறவர்களாக  இருக்கின்றனர். தங்களது மனதுக்குப் பிடித்த பாஸ்டர்களால் நடத்தப்படுகிறவர்களாக இருக்கின்றனர். அல்லது பிரபல பிரசங்கியால் நடத்தப்படுகிறவர்களாக இருக்கின்றனர். 

இத்தகைய கிறிஸ்தவர்கள் எனவே எதைச்  செய்தாலும் வேதத்தின் அடிப்படையை விட்டு தாங்கள் விரும்புகின்ற அந்தத் தலைவர் கூறுகிறபடி செய்கிறவர்களாக இருக்கின்றனர். ஜெபம் செய்வது, வேதம் வாசிப்பது, காணிக்கை அளிப்பது, வழிபாடு செய்வது எல்லாமே  தாங்கள் சார்ந்திருக்கும் சபைப் பிரிவின்படியும் தாங்கள் சார்ந்திருக்கும் சபையின் தலைவர் கூறுகிறபடியும்  தங்களது மனதுக்குப் பிடித்த பாஸ்டர்கள்  கூறுகிறபடியும் அல்லது பிரபல பிரசங்கியின் அறிவுரையின் படியும்  தானே தவிர ஆவியின் வழி நடந்தாலோ வேதத்தின் அடிப்படையின்படியோ பெரும்பாலும் இருப்பதில்லை. சரி அதைத்தான் விட்டுவிடுவோம், இவர்களை நடத்தக் கூடிய தலைவர்களுக்காவது தேவனுடைய ஆவியினால் நடத்தப்படுகிற அனுபவம் இருக்கிறதா என்று பார்த்தால்  அதுவும் பெரும்பாலும் இல்லை என்றே கூறவேண்டும். (இல்லை என்பதற்குச் சாட்சி அவர்களது செயல்பாடுகளே)

கிறிஸ்தவ ஆவிக்குரிய சபை என தங்கள் சபைகளைக் கூறிக்கொள்ளும்  ஊழியர்கள் பலரும் கூட தங்கள் சபை விசுவாசிகளால் வழிநடத்தப்படுகிறவர்களாக இருக்கின்றனர். அதாவது தங்களது சபை விசுவாசிகளைத் திருப்திப்படுத்தும் விதத்தில் கிறிஸ்துவின் போதனைகளைத் திரித்து தங்களது பிழைப்பைத் தேடுபவர்களாக இருக்கின்றனர். அவர்களது முக்கிய குறிக்கோள் அதிக காணிக்கை பெறுவது மட்டுமே. அதற்கேற்ப போதித்து சத்தியத்தை மறுதலித்து எப்படி போதித்தால்  விசுவாசிகளை தக்கவைத்துக்கொள்ளலாம், அதிக காணிக்கைகளை பெறலாம் என்பதே அவர்களது எண்ணமாய்   இருக்கிறது. இத்தகைய போதகர்கள் "இன்னொரு கிறிஸ்துவை "  அல்லது "வேறொரு கிறிஸ்துவை" அறிவிக்கிறவர்களாக இருக்கின்றனர்.

இத்தகைய தலைவர்களால் வழிநடத்தப்படுகிற கிறிஸ்தவர்கள் எனவே தேவனை தங்களது தகப்பனாக அல்ல, ஒரு கண்டிப்பான அதிகாரியாக எண்ணி அவரைத் திருப்திப்படுத்த ஆவிக்குரிய செயல்கள்   என்று சில செயல்களை செய்து  தங்களுக்குத் தாங்களே திருப்தியடைந்துகொள்கின்றனர். தங்களைக் கிறிஸ்தவர்கள் என்றும் கூறிக்கொள்கின்றனர்.

திரைப்படம் கண்டுபிடிக்கப்பட்ட ஆரம்ப காலத்தில் ஜெர்மனியின் சர்வாதிகாரியாக இருந்த அடால்ப் ஹிட்லர் ஒரு திரைப் படத்தில் நடித்தார். ஒருமுறை அவர் தான் நடித்த படத்தை மக்கள் எப்படி ரசித்துப் பார்க்கிறார்கள் என்பதை நேரடியாக பார்த்து அறிய விரும்பினார். அவர் ஒரு திரை அரங்கினுள் மாறு வேடத்தில் நுழைந்து படம் பார்த்தார். மக்கள் திரையில் ஹிட்லரைக் கண்டவுடன் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். திரையில் ஹிட்லர் எதைச் செய்தாலும் பாராட்டினர். இதை பார்த்துக் கொண்டிருந்த ஹிட்லருக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் தனது பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தவரிடம், "என்ன பெரியவரே, இந்த ஹிட்லர் எங்கே பெரிதாய் நடிக்கிறான்? கேணப் பயல்போல அவன் செய்கை இருக்கிறது,.....மக்கள் இதையெல்லாம் பாராட்டுகிறார்களே ?" என்றார்.

அதற்கு அந்த நபர், "ஐயா, நீங்கள் வெளி நாட்டவர் என எண்ணுகிறேன். இங்கே ஜெர்மனியில் ஹிட்லர் எதைச் செய்தாலும் அதை நாம்  பாராட்டவேண்டும். இல்லையென்றால் அவன் நம்மை கொலை செய்துவிடுவான்" என்றார்.   

அன்று ஹிட்லருக்குப் பயந்து எப்படி மக்கள் கைதட்டி ரசித்தனரோ அதுபோலவே இன்றய ஆவிக்குரிய மக்கள் எனது தங்களைக் கூறிக்கொள்ளும் பல விசுவாசிகள் இருக்கின்றனர். தேவனை கண்டிப்பான ஒரு அதிகாரியாகவே அவர்கள் பார்க்கின்றனர். வேதம் வாசிக்கவில்லை என்றால் தேவன் தங்களைத் தண்டித்துவிடுவார் என பயந்து வேதம் வாசிக்கின்றனர். ஞாயிறு ஆராதனைக்குச் செல்லவில்லை என்றால் தங்களைத் தேவன் தண்டித்துவிடுவார், காணிக்கை அளிக்காவிட்டால் தங்களை வறுமை அடையச்செய்துவிடுவார் என பயந்து பயந்து எல்லாச்  செயல்களையும் செய்கின்றனர். இத்தகைய உலக போதனைகளை நிறைவேற்றுவதே ஆவிக்குரிய வாழ்க்கை என எண்ணிக் கொள்கின்றனர். 

வேதம் கூறுகின்றது, "உங்கள் காரியங்களெல்லாம் அன்போடே செய்யப்படக்கடவது" (1 கொரிந்தியர் - 16:14) தேவனுக்கென்று எதைச் செய்தாலும் தேவன் மேலுள்ள பூரண அன்போடு செய்யவேண்டும். பயத்துடனோ, நமக்கு என்ன ஆதாயம் கிடைக்கும் எனும் எண்ணத்திலோ செய்யக்கூடாது. "அன்பிலே பயமில்லை. பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும், பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பிலே பூரணப்பட்டவனல்ல" (1 யோவான் 4:18)     

தேவனுக்கென்று எதனைச் செய்தாலும் தேவன்மேலுள்ள பூரண அன்புடன் செய்ய வேண்டும். கட்டளை கூறியுள்ளதால் செய்கிறேன் என்பது  மெய் அன்பல்ல. தேவன்மேலுள்ள அன்பினால் நான் தேவனுக்கு இப்படிச் செய்கிறேன் என்று ஒரு காரியத்தைச் செய்வதே அன்பு. அதாவது ஒரு அதிகாரிக்குப் பயந்து ஊழியம் செய்யும் பணியாளனாயல்ல,   ஒரு தந்தைக்கு அன்பால் ஏவப்பட்டு ஊழியம் செய்யும் மகனைப்போல பணிசெய்வதையே தேவன் விரும்புகிறார். 

இப்படி தேவனை உண்மை அன்புடன் ஏற்றுக்கொண்டு செயல்படும்போது மட்டுமே கிறிஸ்துவின் அன்பை நாம் உலகுக்குப் பிரதிபலிக்க முடியும். அப்படிப் பிரதிபலிக்கும்போதுதான் பவுல் அடிகள் கூறியதைப்போல, "எங்களுக்கோ கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது" (1 கொரிந்தியர் - 2;16) என்று கூறிட முடியும். தேவனிடத்தில் மெய்  அன்புகொண்டு வாழும்போதுதான் தேவன் தம்மில் அன்பு கூறுகிறவர்களுக்கு ஏற்படுத்தினவைகளை  நாம் காண முடியும்; உணர முடியும். 

"தேவன் தம்மில் அன்பு கூருகிறவர்களுக்கு ஆயத்தம் பண்ணினவைகளை கண் காணவுமில்லை, காது  கேட்கவுமில்லை, அவைகள் மனிதருடைய இருதயத்தில் தோன்றவுமில்லை. நமக்கோ தேவன் அவைகளை தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்" (1 கொரிந்தியர் - 2: 9,10)

இயேசு கிறிஸ்து இரண்டே இரண்டு கட்டளைகளைத்தான் கொடுத்தார். தேவனாகிய கர்த்தரிடத்தில் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் முழு பலத்தோடும் அன்பு கூறுவது ; உன்னிடத்தில் அன்பு கூருவதுபோல பிறரிடத்தில் அன்பு கூருவது (மத்தேயு - 22:37-40). இந்த அன்பின் கட்டளைகளைக் கடைபிடித்து கிறிஸ்துவுக்குள் வாழ்பவர்களே கிறிஸ்தவர்கள். இவர்கள், "கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொண்டதுபோல, நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள்" (ரோமர்-15:7) என்பதற்கிணங்க பிறரை ஏற்றுக்கொள்ளும் மனமுடையவர்களாக   மாறிடுவர், இதுவே கிறிஸ்தவ அன்பு.

இப்படி ஒரு அன்பு வாழ்க்கை வாழும்போது பலவீனர்களது பலவீனங்களை நாம் தங்கிடுவோம். கிறிஸ்துவை விசுவாசியாதவர்களையும் அன்பு செய்வோம். கிறிஸ்தவர்கள் எனும் ஒரே காரணத்தால் நம்மை ஒதுக்கிப் புறக்கணிப்பவர்களையும் அன்பு கூருவோம். அப்படிச் செய்யும்போது மட்டுமே கிறிஸ்து மகிமைப்படுவார். இன்று நடப்பதென்ன? ஆவிக்குரிய சபையினர் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் பலரும் இந்து சகோதரர்களையும் , ரோமன் கத்தோலிக்கர்களையும், சி.எஸ்.ஐ சபைப் பிரிவினரையும் தீண்டத்  தகாதவர்களாக  அல்லவா பார்க்கின்றனர்? இவர்கள் எப்படித் தாங்கள் அறிந்துள்ளதாகக் கூறிக்கொள்ளும்   கிறிஸ்துவை அவர்களுக்கு அறிவிக்க முடியும்?

மேலும், சில கிறிஸ்தவ சபைகளுக்குள் வெறுப்பும் போட்டி மனப்பான்மைகளும் அடிமட்டம் துவங்கி மேல்மட்டம் வரைக்கும் பரவியுள்ளதை மறுக்க முடியாது. சபைத் தேர்தல் அரசியல் தேர்தலைவிட   மோசமானதாக மாறி நீதிமன்றத்தை நாடும் அலங்கோலங்கள் , கொலைகள் எனத் தொடர்கின்றன. வேதம் எல்லா விதத்திலும் கிறிஸ்துவைப் பின்பற்றி வாழ அல்லவா அறிவியுறுத்துகின்றது?

"நம்மில் ஒவ்வொருவனும் பிறனுடைய பக்திவிருத்திக்கேதுவான நன்மையுண்டாகும்படி அவனுக்குப் பிரியமாய் நடக்கக்கடவன். கிறிஸ்துவும் தமக்கே பிரியமாய் நடவாமல் உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தைகள் என்மேல் விழுந்தன என்று எழுதியிருக்கிறபடி நடந்தார்" (ரோமர் - 15:2,3)

மேலும்,  பல ஊழியர்கள் கிறிஸ்துவை அறிவிப்பதனால் ஏதாவது பிரச்சனைகளோ துன்பங்களோ ஏற்படும்போது சாதாரண உலக மனிதர்களைப்போல பேசுவதும் வரட்டுத்தனமாகச் செயல்படுவதும், யாராவது அவர்களுக்கு மறுப்பாக பேசிவிட்டால் அவர்களை  ஆள்வைத்து அடிப்பதும் , தங்கள் செய்கையை நியாயப்படுத்தி பத்திரிகைகளில் பேட்டி அளிப்பதும் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இந்தச் செயல்பாடுகளில் கிறிஸ்துவின் தெய்வீக அன்பையோ பொறுமையையோ நாம் காண  முடிவதில்லை.

"நாம் நன்மைக்கு ஞானிகளும் தீமைக்குப் பேதைகளுமாயிருக்க வேண்டும்" (ரோமர் - 16:19) என வேதம் கூறுகிறது. அதாவது நமக்கு எதிரான தீமைகளை பேதைத்தனத்துடன் ஏற்றுக்கொள்ளவேண்டும். இது கிறிஸ்துவின் அன்பு நம்மில் வெளிப்படும்போதே   முடியும்.

"வைராக்கியமும் விரோதமும் எங்கே உண்டோ அங்கே கலகமும் சகல துர்  செய்கைகளும் உண்டு" (யாக்கோபு - 3:16)

நமக்கு எதிரான செயல்பாடுகளை இப்படி தெய்வீக அன்புடன் எதிர்கொள்ளும்போதுதான் நமக்கு எதிரானவர்கள் நமக்கு சாதகமாக மாறுவார்கள்.  அல்லது தேவன்தாமே நமக்காக யுத்தம் செய்து நமக்குப்  பிரச்சனைகளிலிருந்து விடுதலையும் வெற்றியும் தருவார். வேதம் கூறும் கிறிஸ்தவ வாழ்க்கைக்கு அடிப்படை இதுவே. இப்படிச் செய்யும்போது "சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார்.  (1 கொரிந்தியர் - 16:20) எனும் வசனம் நமது  வாழ்க்கையில் உண்மையாவதைக் காணலாம். ஆம், தெய்வீக  அன்பினால் அகிலத்தையே ஆட்கொள்ளலாம்.

"ஏனெனில், அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது, அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து அவரை அறிந்திருக்கிறான். அன்பில்லாதவன் தேவனை அறியான். தேவன் அன்பாகவே இருக்கிறார்" (1 யோவான் - 4:7,8)

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்