Saturday, February 11, 2023

தேவன் தீமையை வெறுக்கின்றாரே தவிர தீமை செய்பவர்களை வெறுப்பதில்லை.

ஆதவன் 🌞 748 🌻 பிப்ருவரி 14,  2023 செவ்வாய்க்கிழமை

"தீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்ணனே, அநியாயத்தை நோக்கிக்கொண்டிருக்கமாட்டீரே; பின் துரோகிகளை நீர் நோக்கிக் கொண்டிருக்கிறதென்ன? துன்மார்க்கன் தன்னைப் பார்க்கிலும் நீதிமானை விழுங்கும்போது நீர் மௌனமாயிருக்கிறதென்ன?" ( ஆபகூக் 1 : 13 )


இன்றைய வசனத்தில் ஆபகூக் தீர்க்கதரிசி கூறும் வார்த்தைகள் சாதாரண மனிதர்களது மனநிலையில் இருந்து அவர் கூறுவது.  தேவன் தீமையைப் பார்க்காதவர். எனவே அவர் தீமை செய்பவர்களையும் அழித்து ஒழித்துவிடவேண்டும் என்று ஆபகூக் எண்ணுகின்றார்.  எனவேதான்  "துரோகிகளை நீர் நோக்கிக் கொண்டிருக்கிறதென்ன? துன்மார்க்கன் தன்னைப் பார்க்கிலும் நீதிமானை விழுங்கும்போது நீர் மௌனமாயிருக்கிறதென்ன?" என்று தேவனை நோக்கிக் கேள்வி எழுப்புகின்றார். 

நமது தேவன் தீமையைப் பார்க்காத சுத்தக்கண்ணன் என்று வேதம் கூறினாலும்  அவர் தீயோரை அழித்து ஒழிக்க வரவில்லை.  தேவன் தீமையை வெறுக்கின்றாரே தவிர தீமை செய்பவர்களை வெறுப்பதில்லை. இயேசு கிறிஸ்து கூறிய ஊதாரி மைந்தன் உவமை, காணாமல் போன ஆடு உவமை இவை எல்லாமே பாவிகள் மனம் திரும்பி தேவனிடம் வரவேண்டும் எனும் தேவனது எண்ணத்தைக் குறிப்பனவாகும். எனவேதான், "இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் " ( லுூக்கா 19 : 10) என்றார் இயேசு கிறிஸ்து. 

இன்று துன்மார்க்கர்களது வாழ்க்கைச் செழிப்பதைக் காணும்போது நாமும் ஆபகூக் தீர்க்கத்தரிசியைப்போல எண்ணலாம். ஏன் தேவன் இவைகளை அனுமதிக்கின்றார் எனும் கேள்வி நமக்குள் எழலாம். 

அன்பானவர்களே, நித்திய நரக  அக்கினி என்பது நினைத்துப்பார்க்க முடியாத கொடுமையானது. அத்தகைய கொடுமையை யாரும் அனுபவிப்பதை தேவன் விரும்புவதில்லை. எனவே, அவர்கள் மனம்திரும்பிட வாய்ப்பளித்து நீடிய பொறுமையோடே அவர்களது மனம்திரும்புதலுக்குக் காத்திருக்கின்றார். 

இதற்காகவே இயேசு கிறிஸ்து உலகினில் வந்தார். "நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன்'( மாற்கு 2 : 17 ) "பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது." ( 1 தீமோத்தேயு 1 : 15 ) எனும் வசனங்கள் துன்மார்க்கரை உடனடியாக தேவன் ஏன் அழிப்பதில்லை என்பதற்குப் பதிலாக அமைந்துள்ளன.  

ஆனால் மதிகெட்ட துன்மார்க்கர்கள் தங்களது துன்மார்க்கச் செயல்களுக்குத் தண்டனை உடனே கிடைக்காததால் கடவுளை நம்புவதில்லை. "தேவன் இல்லை என்று மதிகேடன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்; அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான அக்கிரமங்களைச் செய்து வருகிறார்கள்." ( சங்கீதம் 53 : 1 )

ஆனால் எத்தகைய துன்மார்க்கரையும், பாவிகளையும்  மன்னித்து அணைத்துக்கொள்ள தேவன் ஆர்வமாகவே இருக்கின்றார். ஆம், "நான் அவர்கள் அநியாயங்களைக் கிருபையாய் மன்னித்து, அவர்கள் பாவங்களையும் அக்கிரமங்களையும் இனி நினையாமலிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.(எபிரெயர் 8:12)

இன்றைய வசனத்தின் இறுதியில் ஆபகூக், "துன்மார்க்கன் தன்னைப் பார்க்கிலும் நீதிமானை விழுங்கும்போது நீர் மௌனமாயிருக்கிறதென்ன?" எனும் கேள்வியை எழுப்புகின்றார்.  இதற்கான பதில், நீதிமானை அவர் துன்மார்க்கனைக் கொண்டு சோதித்துப் புடமிடுகின்றார் என்பதே பதில்.  ஆம் அன்பானவர்களே, இந்தக் கிருபையின் காலத்தில் வாழும் நாம் ஆபகூக் தீர்க்கதரிசி கூறுவதுபோல துன்மார்க்கரும் பாவிகளும் அழியவேண்டும் எனும் எண்ணக்கூடாது. அவர்களது மனம் திரும்புதலுக்காக ஜெபிக்கவேண்டியது அவசியம்.   

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Friday, February 10, 2023

கிறிஸ்துவின் சீடர் என்று அழைக்கப்பட கனியுள்ள வாழ்க்கை வாழவேண்டியது அவசியம்

ஆதவன் 🌞 747 🌻 பிப்ருவரி 13,  2023 திங்கள்கிழமை 


"ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள்." ( மத்தேயு 28 : 19, 20 )

இயேசு கிறிஸ்து பாடுபட்டு  மரித்து உயிர்த்து நாற்பது நாட்களுக்குப்பின் தனது சீடர்களை கலிலேயாவிலுள்ள குறிப்பிட்ட மலைக்கு வரவழைத்து அவர்களுக்கு இறுதி அறிவுரையாகக் கூறியவையே இன்றைய தியானத்துக்குரிய வசனம்.  

இங்கு இயேசு கிறிஸ்து, அற்புதம் செய்யுங்கள், மாயாஜாலம் செய்யுங்கள், தீர்க்கதரிசனங்கள் சொல்லுங்கள், பில்லி சூனிய கட்டுகளை அவிழுங்கள், ஜெப பேனா விற்பனை செய்யுங்கள், ஜெப தைலம் விற்பனை செய்யுங்கள், தசமபாக காணிக்கையைச் சரியாகக் கணக்கிட்டு வாங்கி உங்களுக்கு கார், பங்களா வாங்குங்கள் என்றெல்லாம் கூறவில்லை. மாறாக, "சகல ஜாதி ஜனங்களையும் சீடராக்கி ஞானஸ்நானம் கொடுங்கள்" என்று கூறுகின்றார். 

ஒரு சீடத்துவ வாழ்க்கை வாழ்வே அவர் மக்களை அழைக்கின்றார். ஒருவர் கிறிஸ்துவின் சீடர் என்று அழைக்கப்பட அவர் கனியுள்ள வாழ்க்கை வாழவேண்டியது அவசியம். "நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள்." ( யோவான் 15 : 8 ) என்று இயேசு கிறிஸ்து கூறவில்லையா? எனவே, ஆவியின் கனிகள் உள்ளவனே கிறிஸ்துவின் சீடன். 

ஆவியின் கனி என்பது என்ன? "ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும்." ( எபேசியர் 5 : 9 )

மேலும், "ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை." ( கலாத்தியர் 5 : 22, 23 ) என்று வேதம் கூறுகின்றது. 

அதாவது, கிறிஸ்து கூறிய இறுதி அறிவுரை இதுதான். இந்த உலகினில் சென்று அனைத்து இன மக்களுக்கும் நற்செய்தியை அறிவித்து அவர்களை கனியுள்ள சீடர்கள் ஆக்குங்கள் என்பதே. அப்படி அவர்கள் கனியுள்ளவர்களாக மாறவேண்டுமானால், "நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள்." 

அன்பானவர்களே, எனவேதான் நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டியுள்ளது. பவுல் அடிகள் கூறியுள்ள ஆவிக்குரிய கனிகள் ஒருவரிடம் உருவாக்க உழைப்பவனே உண்மையான சுவிசேஷகன். அத்தகைய நற்செய்தியாளர்களை மட்டுமே நாம் மதிக்கவேண்டும், கனம்பண்ணவேண்டும். மத வியாபாரிகளை புறக்கணிக்கவேண்டும் 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

புதிய மனுஷனைத் தரித்துக்கொள்வோம்.

ஆதவன் 🌞 746 🌻 பிப்ருவரி 12,  2023 ஞாயிற்றுக்கிழமை 

"மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்." ( எபேசியர் 4 : 24 )

கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக நாம் வாழ முற்படும்போது நமது பழைய மனிதனைக் களைந்துவிடவேண்டியது அவசியம். நான் இப்படியே இருப்பேன் ஆனால் தேவன் என்னை ஆசீர்வதிக்கவேண்டும் என்று நாம் கூறமுடியாது.  தேவன் மனிதனைத் தனது சாயலாகவும் தனது ரூபமாகவும் படைத்தார். ( ஆதியாகமம் 1:27)  ஆனால் அந்த மனிதனை நாம் பாவத்தால் இழந்துவிட்டோம். 

இந்த உலகத்தில் நாம் பாவம் செய்து தேவ மகிமையை இழந்து விடுகின்றோம். எனவே நாம் தேவனோடு ஐக்கியப்படவேண்டுமானால் நாம் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட காலத்தில் இருந்ததுபோல  புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளவேண்டும்.

மேலும் இன்றைய வசனம், "மெய்யான நீதி" எனும் வார்த்தை ஒன்றையும் கூறுகின்றது. இந்த உலகத்தில் மனிதர்களது நீதி என்று ஒன்று  உண்டு. ஆனால் நாம் அதன்படிமட்டுமல்ல, தேவ நீதியின்படி வாழவேண்டியது அவசியம்.   ஏனெனில் மனிதர்களுக்களது நீதி நம்மைத் தேவனுக்கு உகந்தவர்களாக மாற்றாது. நாம்  நீதியான வாழ்வுதான் வாழுகின்றோம் என நாம் எண்ணிக்கொண்டிருக்கலாம். ஆனால், நாம் ஒருவேளை தேவ நீதியின்படி வாழாதவர்களாக இருக்கலாம். தேவ நீதியின்படி நாம் வாழ்கின்றோமா என்பதே முக்கியம். 

ஏனெனில் மனிதர்களது நீதி அழுக்கான கந்தையைப்போல இருக்கின்றது. "நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள்போல இருக்கிறோம்; எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது, நாங்கள் அனைவரும் இலைகளைப்போல் உதிருகிறோம்; எங்கள் அக்கிரமங்கள் காற்றைப்போல் எங்களை அடித்துக்கொண்டுபோகிறது." ( ஏசாயா 64 : 6 ) என்று  வசனம் கூறுகின்றது. 

அழுக்கும் கந்தையுமான மனித நீதியின்படியல்ல, தேவ நீதியின்படி வாழ நாம் முற்படவேண்டும். இதுவே மெய்யான நீதி.

நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு பெயர் நீதியின் சூரியன். எனவே, நீதியின் சூரியனான அவரே நம்மை மெய்யான  நீதியின் பாதையில் நடத்திட முடியும். அன்பானவர்களே, அவரது வழி நடத்துதலுக்கு நம்மை ஒப்புக்கொடுப்போம். அவரே நம்மை "மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் நடத்திட முடியும். மட்டுமல்ல, அவரது இரத்தத்தால் நமது பாவங்கள் மன்னிக்கப்படும்போது மட்டுமே தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனை நாம் தரித்துக்கொள்ள முடியும்.

அப்படி புதிய மனிதனாக வாழவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம். அவருக்கு நம்மை முற்றிலும் ஒப்புக்கொடுத்து பாவ மன்னிப்பின் நிச்சயத்தைப்பெற்று மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்வோம். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக. 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Thursday, February 09, 2023

கிறிஸ்துவோடு தனிப்பட்ட உறவில் வாழ்வதே முக்கியம்.

ஆதவன் 🌞 745 🌻 பிப்ருவரி 11,  2023 சனிக்கிழமை 

"ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு." ( வெளிப்படுத்தின விசேஷம் 2 : 4 )

நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு, கிறிஸ்த்துவை அறிந்து ஆவிக்குரிய வாழ்வில் நடக்க ஆரம்பிக்கும்போது நமக்கு கிறிஸ்துவிடம் அதிக  அன்பு ஏற்படும். எப்போதும் அவரது நினைவும் அவருக்கு ஏற்புடைய ஏதாவது ஒன்றினை தினமும் செய்யவேண்டும் எனும் ஆசையும் அதிக அளவில் இருக்கும். அவரது உடனிருப்பை நாம் எப்போதும் உணருவோம். கிறிஸ்துவின்மேலுள்ள இந்த அன்பையும் ஈடுபாட்டையும் நாம் தொடர்ந்து காத்துக்கொள்ளவேண்டும் என்று இந்த வசனம் நமக்கு அறிவுறுத்துகின்றது.    

எபேசு சபைத் தூதனுக்கு ஆவியானவர் இதனைக் கூறுகின்றார். அந்த சபையிலுள்ள நல்ல குணங்களையும் முதலில் பாராட்டுகின்றார். இன்று நமக்கும் இதுபோன்ற நல்ல ஆவிக்குரிய குணங்கள் இருக்கலாம் ஆனாலும் அது மட்டும்போதாது கிறிஸ்துவிடமுள்ள அன்பில் குறைவில்லாமல் இருக்கவேண்டியது அவசியம்.

அது என்ன நல்ல குணங்கள்? கிறிஸ்துவின் பணிகளைச்  செய்யும் பிரயாசம்,  பொல்லாத ஊழியர்கள் செய்யும் காரியங்களை சகிக்கமுடியாமை, கள்ள அப்போஸ்தலர்களை இனம் கண்டறிந்தபின்பும் பொறுமையாக அவர்களை ஏற்றுக்கொள்வது, அவர்கள்மேல் பொறுமையாக இருப்பது,  கிறிஸ்துவின் காரியங்களை செய்ய இளைப்படையாமல் இருப்பது போன்றவை. 

இதனையே, "உன் கிரியைகளையும், உன் பிரயாசத்தையும், உன் பொறுமையையும்,  நீ பொல்லாதவர்களைச் சகிக்கக் கூடாமலிருக்கிறதையும், அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை நீ சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்ததையும்; நீ சகித்துக் கொண்டிருக்கிறதையும், பொறுமையாயிருக்கிறதையும், என் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன்". ( வெளிப்படுத்தின விசேஷம் 2 : 2, 3 ) என்று கூறுகின்றார். 

மேற்குறிப்பிட்ட நல்ல குணங்கள் இருந்தாலும், "நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு." என்று தொடர்ந்துவரும் இந்த வசனம் கூறுகின்றது. அதாவது மேற்குறிப்பிட்ட குணங்கள் மட்டும் போதாது கிறிஸ்துவோடு தனிப்பட்ட உறவில் நாம் இணைந்திருக்கவேண்டும். கிறிஸ்துவோடு நெருங்கிய உறவு இல்லாமல் இருந்துகொண்டும் ஒருவர் மேற்குறிப்பிட்ட ஆவிக்குரிய காரியங்களைச் செய்ய முடியும். 

இது எப்படி என்றால், வீட்டில் மனைவி பிள்ளைகளிடம் தனிப்பட்ட அன்புறவோடு பேசி உறவாடி இருக்காமல் வீட்டுச் செலவுக்கும்,  அவர்களுக்கு வேண்டிய இதரச் செலவுகளுக்கும் பணத்தைமட்டும் கொடுக்கும் மனிதனைப்போல உள்ளது. வீட்டுச் செலவுகளுக்கான பணத்தைக்கொடுப்பது  நல்லதுதான். ஆனால் வீட்டாரிடமுள்ள அன்பையும் தனிப்பட்ட உறவையும்  விட்டுவிட்டால் என்ன பயன்?   

அன்பானவர்களே, ஊழியங்களுக்கும் இதர ஆலயப் பணிகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பது மட்டும் போதாது;  கிறிஸ்துவோடு தனிப்பட்ட உறவில்   வாழ்வதே முக்கியம். அப்படி வாழ்ந்து நல்ல செயல்களையும் செய்வோம். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Tuesday, February 07, 2023

அவரிடத்தில் நான் விசுவாசமாயிருக்கும்படிக்கு அவர் யார்?

ஆதவன் 🌞 744 🌻 பிப்ருவரி 10,  2023 வெள்ளிக்கிழமை 

"காணாதவர்கள் காணும்படியாகவும், காண்கிறவர்கள் குருடராகும்படியாகவும் நியாயத்தீர்ப்புக்கு நான் இந்த உலகத்தில் வந்தேன்".  யோவான் 9 : 39 )

இயேசு கிறிஸ்து பிறவிக் குருடன் ஒருவனை குணமாக்கியது குறித்து யூதர்கள் நம்பாமல் குணமாக்கப்பட்டக் குருடனை அழைத்து மீண்டும் மீண்டும் விசாரித்தனர். பாவியாகிய ஒரு மனிதன் எப்படி இந்தக் காரியத்தைச் செய்யமுடியும் என அவர்கள் கேள்வி எழுப்பினர்.  அவர்கள் பார்வையில் இயேசு கிறிஸ்து ஒரு பாவ மனிதன்.  இதனை அவர்கள் குணமாக்கப்பட்டக் குருடனிடம் கூறியபோது அவன் அவர்களிடம்:-

"அவர் பாவியென்று எனக்குத் தெரியாது; நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்; இது ஒன்றுதான் எனக்குத் தெரியும்." ( யோவான் 9 : 25 ) என்றான். ஆனாலும் யூதர்கள் இவன் ஒரு பாவி எங்கே இருந்து வந்தவன் என்று எங்களுக்குத் தெரியாது என்றனர். அதற்குப் பார்வையடைந்த குருடன்,  "அவர் என் கண்களைத் திறந்திருந்தும், அவர் எங்கேயிருந்து வந்தவரென்று நீங்கள் அறியாதிருக்கிறது ஆச்சரியமான காரியம்." ( யோவான் 9 : 30 ) "அவர் தேவனிடத்திலிருந்து வராதிருந்தால் ஒன்றும் செய்யமாட்டாரே என்றான்." ( யோவான் 9 : 33 )
 
யூதர்கள் அவனைத் திட்டி அனுப்பிவிட்டனர். பிற்பாடு அவனை இயேசு கிறிஸ்து கண்டு அவனிடம் பேசும்போது தன்னை வெளிப்படுத்தி இன்றைய தியானத்துக்குரிய வார்த்தைகளைக் கூறுகின்றார். இயேசு குணமாக்கப்பட்டக்  குருடனிடம், "தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாய் இருக்கின்றாயா?" என்று கேட்டபோது அவன்,  " ஆண்டவரே, அவரிடத்தில் நான் விசுவாசமாயிருக்கும்படிக்கு அவர் யார் என்றான்." ( யோவான் 9 : 36 ) இப்படிக் கேட்டபோதுதான் அவனது ஆன்மீகக் குருடு நீங்கியது. 

கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் பலர் இன்னும் அவரை மெய்யாக அறிந்துகொள்ளவில்லை. ஆனால் "நாங்கள் காண்கிறோம்" என்று கூறிக்கொண்ட யூதர்களைப்போல  கூறிக்கொண்டிருக்கிறார்கள். நாம் இயேசு கிறிஸ்துவைக் காண்கின்றவர்கள் என்றால் வெறுமனே அவரை விசுவாசிக்கிறேன் என்று கூறுவதல்ல; அவரிடத்தில் நான் விசுவாசமாயிருக்கும்படிக்கு அவர் யார், அவருக்கு உகந்தது என்ன என்பதனை நாம் அறிய ஆர்வமுள்ளவர்களாக வேண்டும். அவரைப் புகழும்  புகழ்ச்சி நமது வாயில் இருந்தால் போதாது மாறாக நமது இருதயம் அவருக்கு நெருக்கமாக இருக்கவேண்டியது அவசியம். 

"இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது." ( ஏசாயா 29 : 13 ) என்ற வசனத்தின்படி இருந்தோமானால் நாமும் அவரைக் காண்கிறோம், அவரை அறிந்திருக்கின்றோம் என்று கூறிக்கொண்டாலும் உண்மையில் குருடர்களே.  

இப்படித் தேவனைத் தேடும்  உண்மையான மனமிருந்தும் இதுவரை அவரைக்    காணாதவர்கள் காணும்படியாகவும், அவரைக் காண்கின்றோம் என்று கூறிக்கொண்டு தாறுமாறான வாழ்க்கை வாழ்பவர்களை குருடராகும்படியாகவும் நியாயத்தீர்ப்புக்கு நான் இந்த உலகத்தில் வந்தேன் என்கின்றேன் என இயேசு கிறிஸ்துக் கூறுகின்றார். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

"உமக்குப் பிரியமானதைச் செய்ய"

ஆதவன் 🌞 743 🌻 பிப்ருவரி 09,  2023 வியாழக்கிழமை 

"உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன்; உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக." ( சங்கீதம் 143 : 10 )

மனிதர்கள் இன்று அவர்களாக சில காரியங்களைச்  சிந்தித்து  அது தேவனுக்கும்  பிரியமாயிருக்கும் என்று எண்ணிக்கொள்கின்றனர். அதாவது தங்களுக்கு எது உகந்தது என எண்ணுகின்றார்களோ அதுவே தேவனுக்கும் உகந்தது என்று எண்ணிக்கொள்கின்றனர். உதாரணமாக, குறிப்பிட்ட முறைப்படிக்  காணிக்கைக்  கொடுப்பது, ஜெபிப்பது, வேதாகமத்தை வாசிப்பது, ஜெபக்கூட்டங்களில் கலந்துகொள்வது இவையே தேவன் விரும்புவது அல்லது தேவனுக்கு உகந்தது என எண்ணிக்கொண்டு அவற்றைச்செய்ய ஆர்வமாகவுள்ளனர். தேவனுக்கு உகந்தது என்ன என்பதை பெரும்பாலும் மனிதர்கள் எண்ணிப்பார்ப்பதில்லை.

வெறும் பக்திச் செயல்பாடுகளே போதுமென்றால் இன்றைய வசனத்தில் தாவீது இப்படி விண்ணப்பம் செய்திருக்கமாட்டார். ஏனென்றால் யாரும் சொல்லிக்கொடுக்காமலேயே இவைகளைச் செய்யவேண்டுமென்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் தாவீது "உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக." என்று    கூறுகின்றபடி செம்மையான வழி என்று ஒன்று இருக்கின்றது. தேவனுடைய பரிசுத்த ஆவியானவரே நம்மை அந்தப்பாதையில் நடத்திட முடியும் என்பது தெளிவு. .   

ஏனெனில் எல்லா காணிக்கைகளையும், ஜெபங்களையும், சபைக் கூட்டங்களையும் தேவன் ஏற்றுக்கொள்வதில்லை. அக்கிரமச் செய்கைகளைச் செய்துகொண்டு அதிகமாக ஜெபிப்பதையும் தேவன் ஏற்றுக்கொள்வதில்லை. இதனையே ஏசாயா மூலம் தேவன் பின்வருமாறு வெளிப்படுத்தியுள்ளார்:-

"இனி வீண் காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டாம்; தூபங்காட்டுதல் எனக்கு அருவருப்பாயிருக்கிறது; நீங்கள் அக்கிரமத்தோடே ஆசரிக்கிற மாதப்பிறப்பையும், ஓய்வு நாளையும், சபைக்கூட்டத்தையும் நான் இனிச்சகிக்கமாட்டேன்." ( ஏசாயா 1 : 13 )

"நீங்கள் உங்கள் கைகளை விரித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன்; உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது." ( ஏசாயா 1 : 15 )

ஆம் அன்பானவர்களே, ஜெபம், காணிக்கை, உபவாசம், ஜெபக்கூட்டங்களில் கலந்துகொள்வது இவைகளைவிட முதலில் நமது வாழ்க்கை நல்லதாக இருக்கவேண்டும் என தேவன் விரும்புகின்றார். மணிக்கணக்கில் ஜெபிப்பதையல்ல நமது வாழ்க்கை செயல்பாடுகளைத்தான் தேவன் முதலில் பார்க்கின்றார். 

இப்படிக் கூறுவதால் அதிகநேரம் ஜெபிக்கவேண்டாம் என்று பொருளல்ல; தேவனுக்குள் நாம் வாழும்போது நாமே நம்மை அறியாமல் அதிக நேரம் ஜெபிப்போம். ஜெபமே ஆவிக்குரிய வாழ்வின் அடித்தளம். பாவ மன்னிப்பின் நிச்சயத்தை நாம் பெற்று மீட்பு அனுபவம் பெறும்போது நமது ஜெபம் வித்தியாசமானதாக இருக்கும். உலகத் தேவையளுக்காகவே மணிக்கணக்கில்  நாம் தேவனைக் கெஞ்சிக்கொண்டிருக்கமாட்டோம். 

எனவேதான் தாவீது, "உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன்; உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக." என்று ஜெபிக்கின்றார். நாம் நாமாக தேவனுக்கு இவை இவை பிரியமாய் இருக்கும் என எண்ணிக்கொள்வதல்ல, தேவன் எதனில் பிரியமாய் இருக்கிறார் என்று எண்ணிப்பார்க்கவேண்டும். அவற்றின்படி நடக்கவேண்டும்.  தேவனது பரிசுத்த ஆவியானவர் நம்மை உணர்த்தி அத்தகைய நல்ல வழியில் நடத்திட ஜெபிப்போம். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Monday, February 06, 2023

கர்த்தாரையும் அவரது கிருபையையும் துதிப்போம்

ஆதவன் 🌞 742 🌻 பிப்ருவரி 08,  2023 புதன்கிழமை 

"நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது." ( சங்கீதம் 136 : 23 )

சங்கீதம் 136 ஒரு துதியின் சங்கீதமாகும். வானம், சூரியன், சந்திரன், கடல் என கர்த்தரது ஒவ்வொரு படைப்பிற்காகவும் அவரைத் துதிக்கின்றது. மட்டுமல்ல, தனது பராக்கிரமத்தால் அவர் எகிப்தியரின் கையிலிருந்து இஸ்ரவேல் மக்களை மீட்டதையும் வல்லமைமிக்க ராஜாக்களை அழித்ததையும்  இஸ்ரவேல் மக்களுக்காக அவர் கிருபை செயல்பட்ட விதத்தையும் நினைத்துத் துதிக்கச் சொல்கின்றது.  

இந்த சங்கீதத்தின் 23 ஆம் வசனம் வித்தியாசமானது. தேவனது பெரிய மகத்துவங்களைக் கூறிவிட்டு,  "நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது." என்று கூறுகின்றது. மட்டுமல்ல, நம்முடைய தேவனுக்கு அருமையான ஒரு புதுப் பெயரையும் இந்த வசனம் குறிப்பிட்டுள்ளது. அது, "தாழ்வில் நம்மை நினைத்தவர்".  இரட்சிப்பு, அரண், கோட்டை, கேடகம் எனும் வல்லமையைக் குறிக்கும் பல பெயர்களில் வேதம் தேவனைக் குறிப்பிட்டுள்ளது. இங்கோ, "தாழ்வில் நம்மை நினைத்தவர்" என்று குறிப்பிட்டு அவரைத் துதியுங்கள் என்று கூறுகின்றது. 

ஒரு மிகப்பெரிய கம்பெனியில் பல்வேறுபட்ட நிலையிலுள்ள தொழிலாளர்கள் வேலைசெய்வார்கள். அந்த தொழிற்சாலையின் எம்.டி. பல்வேறு நிலையிலுள்ள அந்த கம்பெனியின் அதிகாரிகளை நினைவுகூர்ந்து அவர்களை அழைத்துப் பேசுவார். அவர்களோடு ஆலோசனை செய்வார். ஆனால் அங்கு வேலைசெய்யும் தரை துடைக்கும் துடைப்புத் தொழிலாளியை அவர் நினைவில் வைத்திருக்கமாட்டார்.  அது அவருக்கு முக்கியமுமல்ல. 

ஆனால் நமது கர்த்தர் அப்படியல்ல என்று வேதம் கூறுகின்றது. அவருக்கு எல்லோரும் ஒன்றுதான். மட்டுமல்ல, அவரைபொருத்தவரை தாழ்நிலையிலுள்ளவர்கள்  தான் முக்கியமானவர்கள். அவர்களையே அவர் நினைவில் கொண்டுள்ளார். 

பெரிய மலையிலிருந்து வழிந்து ஓடிவரும்  தண்ணீர் மேட்டுப்பகுதியை நோக்கிப் பாய்வதில்லை. மாறாக தாழ்விடங்களையே முதலில் நிரப்பும். அதுபோல உன்னததேவ பர்வதத்திலிருந்து கர்த்தரது கிருபையும் ஆசீரும் தாழ்ந்த குணமுள்ளவர்களை நோக்கியே வருகின்றது. காரணம் அவர் தாழ்மையுள்ளவர்களையே நோக்கிப் பார்க்கின்றார். 

இன்று வறுமை, புறக்கணிப்பு, அவமானம் போன்ற தாழ்ச்சியில் இருக்கின்றீர்களா? அந்த நிலையிலும் கர்த்தருக்கேற்ற வாழ்க்கை வாழ்கின்றீர்களென்றால்  கர்த்தர் உங்களை நினைத்திருக்கின்றார். கலங்கிடவேண்டாம். நமது கர்த்தர் பதவி, பகட்டு, அழகு, அந்தஸ்து பார்த்து மக்களை நேசிப்பவரல்ல. அவர் இதயத்தையே நோய்ப்பார்த்து மக்களை எடைபோடுகின்றார். அதன் அடிப்படையிலேயே கனிவுடன் அவர்களை நினைவுகூர்கின்றார். 

இந்தச் சத்தியத்தை அனுபவித்து உணர்ந்ததால் சங்கீத ஆசிரியர் "நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது." என்கின்றார். அப்போஸ்தலனாகிய பவுல் அடிகளும் இதனால்தான்  "நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன்." ( பிலிப்பியர் 4 : 11 ) என்கின்றார். நாம் எந்த தாழ்ச்சியில் இருந்தாலும் மன மகிழ்ச்சியோடு கர்த்தாரையும் அவரது கிருபையையும் துதிப்போம். ஆம், கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார்; அவர் விடுவிப்பார். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - லுூக்கா 1 : 50 / Luke 1:50

  " ஆதவன் " தியானம் - 1979 ஜூலை 09, வியாழன் 2026       "அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுற...