JULY 2020 - TODAY'S BIBLE MESSAGE


ஆதவன் - ஜூலை - 31,  2020 வெள்ளிக்கிழமை
இன்றைய  வேதாகமச் சிறு செய்தி

                                                  - சகோ.எம்.ஜியோ பிரகாஷ்  96889 33712

"எந்த மனுஷனையும் கிறிஸ்து  இயேசுவுக்குள் தேறினவனாக  நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து , எந்த மனுஷனுக்கும்  புத்திசொல்லி , எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம் பண்ணுகிறோம் " (கொலோசெயர் - 1:28)  

இன்றைய பெரும்பாலான சுவிசேஷ அறிவிப்புகளில்  கிறிஸ்துவை ஒரு ஆத்தும இரட்சகர் என்று அறிவிப்பதைவிட அவர் ஒரு அற்புதர் என்றே அறிவிக்கப்படுகிறது. கிறிஸ்து ஒரு ஆத்தும இரட்சகர் என்று அறிவிப்பதை பல சுவிஷேஷகர்கள் விரும்புவதில்லை. காரணம் அப்படி போதித்தால் மக்கள் கூட்டம் சேராது. அற்புதம் என்றால் தான் கூட்டம் சேரும்.

இப்படிக்  கிறிஸ்துவை ஒரு அதிசயம் செய்யும் மந்திரவாதியாகவே பல ஊழியர்களும் அறிவிக்கின்றனர். இதனால் கிறிஸ்துவை அறியாத மக்களும் பிற மத மக்களும் கிறிஸ்தவத்தை சரியாக புரிந்துகொள்ள முடியவில்லை.

ஒருமுறை வங்கி ஒன்றில் உயர் பதவி வகிக்கும் ஒரு பிராமண சகோதரர் என்னிடம் பேசிக்கொண்டிருக்கும்போது கிறிஸ்தவத்தைப்பற்றி பல விசயங்களை கேட்டார். அவர் பல கிறிஸ்தவ பத்திரிகைகளையும் பல ஊழியர்களது பிரசங்கங்களையும்  கேட்டவர். அவர் என்னிடம் பேச்சு வாக்கில் சொன்னார், "இந்து மத போதனைகளில் உள்ளான மனித மாற்றத்தைப் பற்றி நிறைய கூறப்பட்டுள்ளன. ஆன்மிகம் என்பது உலக விசயங்களுக்கு அப்பாற்பட்டது. ஆனால் உங்கள் கிறிஸ்தவத்தில் அதுபோல எதுவும் இல்லையே. வெறும் அற்புதம் அதிசயம் பற்றித்தானே கூறுகிறார்கள், எழுதுகிறார்கள் " என்றார் அவர். 

அவரிடம் நான் மெய்யான கிறிஸ்தவ போதனைகளை பற்றி சொன்னபோது இதுவரை நான் இவைகளை அறியவில்லை. எனக்கு இவைகள் அறிவிக்கப்படவும் இல்லை என்றார். இதுதான் உண்மை. ஆம், இந்தியாவில் கிறிஸ்தவம் இன்னும் சரியாக அறிவிக்கப்படவில்லை. கிறிஸ்தவர்களில் பெரும்பான்மை யோர்கூட சரியான சுவிசேஷ அறிவைப் பெறவில்லை. 

"எந்த மனுஷனையும் கிறிஸ்து  இயேசுவுக்குள் தேறினவனாக  நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து , எந்த மனுஷனுக்கும்  புத்திசொல்லி , எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம் பண்ணுகிறோம் " (கொலோசெயர் - 1:28)  என எழுகிறார் பவுல் அடிகள். ஒரு மனிதனை கிறிஸ்து இயேசுவுக்குள்ளான மனிதனாக மாற்ற வேண்டுமானால் அவனுக்கு கிறிஸ்துவை அறிவிக்கவேண்டும். அவர் செய்த அற்புதத்தையல்ல.

இன்று சுவிசேஷ அறிவிப்பு என்பது பத்தில்  ஒரு பங்கு காணிக்கை கொடுத்தால் கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார் என்பதும் , கர்த்தர் உங்களை மென்மேலும் உயர்த்துவார் என்பதும், ஆசீர்வதிப்பார், ஆசீர்வதிப்பார் எனத் திரும்பத்  திரும்பக் கூறுவதும் தானேதவிர மெய்யான ஆசீர்வாதம் என்பது என்ன  என்பதோ கர்த்தர் அந்த மெய் ஆசீர்வாதத்தை யாருக்கு அளிப்பர் என்பதோ, தேவ ஆசீர்வாதத்தை பெற கூறப்பட்டுள்ள ஆசீர்வாத வாக்குத்தத்தங்களுக்கு முன் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளோ,    தேவனுக்கு ஏற்புடையோராய் வாழாவிட்டால் என்ன நேரும் என வேதத்தில் கூறப்பட்டுள்ள சாபங்களோ  பெரும்பாலான ஊழியர்களால் கூறப்படுவதில்லை. கூறினால் அவர்களுக்கு கூடும் அந்தப் பெரிய கூட்டத்தின் பெரும்பகுதி இடத்தைக் காலிசெய்துவிட்டு ஓடிவிடும்.

இன்று கிறிஸ்தவ கூட்டங்களில் மக்கள் எதற்க்காக கூடுகிறார்கள்? உலக ஆசீர்வாதத்திற்காகவும், தங்கள் குழந்தைகளுக்கு திருமணம் நடக்கவேண்டுமென்பதற்காகவும், கடன் பிரச்சனை தீரவும்,  நோய் குணமாகவும், தொழில் விருத்தியடைய வேண்டுமென ஊழியரை ஜெபிக்கச் சொல்வதற்கும் மட்டுமே. இங்கு கிறிஸ்து எங்கு இருக்கிறார்?

அன்பானவர்களே நீங்கள் இன்னும் அற்புதங்கள் வழியாகவே கிறிஸ்துவைத் தேடுகிறவர்களாக இருந்தால் மிகவும் பரிதபிக்கத்தக்கவர்களாகவே இருப்பீர்கள். அப்போஸ்த்தலாரான பேதுரு கிறிஸ்துவை சிலுவையில் அறையப்பட்டவராகவே பிரசங்கித்தார். "நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசு வையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாகினார் என்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவீர்கள்". (அப்.பணி - 2;36)  என்று பேதுரு பிரசங்கித்தபோது மூவாயிரம் பேர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டனர். ஆம் , அவர்கள் அற்புதத்துக்காக கிறிஸ்துவிடம் வரவில்லை. கிறிஸ்து சிலுவையின் வழியைத்தான் மீட்பின் வழியாக கொடுத்தாரே தவிர உலக ஆசீர்வாத வழியையல்ல. 

குருடருக்கு வழி காட்டும் குருடர்களால் வழிநடத்தப்படும் கிறிஸ்தவ விசுவாசிகள் ஊழியர்களிடமும் பாஸ்டர்களிடமும் வைக்கும் நம்பிக்கையை கிறிஸ்துவின்மேல் என்று வைக்கிறார்களோ அப்போதுதான் சரியான சத்தியத்தை அறிய முடியும் பிறருக்கும் அறிவிக்க முடியும்.

ஆசீர்வாத செய்திகள் சிலுவை உபதேசத்தை மறுதலிக்கின்றன. அவற்றைக்கேட்பவர்கள் கெட்டுப்போவார்கள். இரட்சிக்கப்படு கிறவர்களுக்கோ அது தேவ பெலனாயிருக்கிறது. அவர்கள் பெலத்தின்மேல் பெலனடைவார்கள்.

ஆம், "சிலுவையைப் பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்கு பைத்தியமாயிருக்கிறது , இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவ பெலனாயிருக்கிறது (1 கொரிந்தியர் -1:18)

ஆதவன் - ஜூலை - 30,  2020 வியாழக்கிழமை
இன்றைய  வேதாகமச் சிறு செய்தி

                                     - சகோ.எம்.ஜியோ பிரகாஷ்  96889 33712

"சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான்; தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார்." (  சங்கீதம் 41 : 1 )

நமது சமுதாயத்தில் ஏழை எளியவர்கள் எங்கும் நிறைந்துள்ளனர். நம்மால் எல்லோருக்கும் உதவிடமுடியாது. ஆனால் நம்மால் முடிந்தளவு நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு உதவிட முடியும். நாம் உண்ணும்போது, ஆடை அணியும்போது,  வாழ்ந்திட ஒரு வீடு அமையும்போது இவை ஏதுமில்லாத வறியவர்களை எண்ணிப் பார்க்கவேண்டும். கூடுமானால் அவர்களுக்கு உதவிட வேண்டும்.

தெருவில் பிச்சை எடுக்கும் மக்கள் எப்படியாவது தங்கள் வயிற்றை இரந்து நிரப்பிவிடுகின்றனர். ஆனால் நமது ஊரில் சில குடும்பங்கள் உண்ண  உணவின்றி  வாழ்வதுண்டு . அவர்களுக்கு யாரிடமும் உதவி கேட்கக் கூட முடியாதபடி தன்மானம் தடுக்கிறது. மிகக் கொடிய வறுமையில் அவர்கள் தவிக்கின்றனர். மேலும் இந்தக் கொரோனா காலத்தில் வேலையில்லாத பல குடும்பங்கள் வறுமையில் வாடுகின்றன. இவர்களுக்கு உதவாவிட்டாலும் பரவாயில்லை, இவர்களது வறுமையை நமக்குள் பேசி விமர்சிக்காமலிருப்போம்.

ஏழையைப் பரியாசம் பண்ணுகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்; ஆபத்தைக்குறித்துக் களிக்கிறவன் தண்டனைக்குத் தப்பான். (  நீதிமொழிகள் 17 : 5 )

சிலர் தங்களிடம் உதவிகேட்டு வரும் பிச்சைக்காரர்களிடம் உதவி ஏதும் செய்யாமல், " நல்ல உடல் சுகத்தோடுதானே இருக்கிறாய்? வேலைக்குப் போனால் என்ன? எங்கள் வீட்டுக்கு வேலைக்கு வரியா? எனக் கேள்வி எழுப்புவதுண்டு. அன்பானவர்களே, சிலர் அப்படி வேலை செய்ய மனதில்லாமல் பிச்சை எடுப்பதே சுகம் என்று எண்ணி வாழலாம். ஆனால் எல்லோரும் அப்படியல்ல. பார்ப்பதற்கு திடமுள்ளவர்கள்போல இருந்தாலும் சிலருக்கு வேறு நோய்கள் பிரச்சனைகள் இருக்கும்.  நமக்குத் தெரியாது. எனவே கொடுக்க மனமிருந்தால் கொடுங்கள் . கேலியான கேள்விகள் வேண்டாம்.  ஏனெனில் வேதம் கூறுகின்றது, "தரித்திரருக்குக் கொடுப்பவன் தாழ்ச்சியடையான்; தன் கண்களை ஏழைகளுக்கு விலக்குகிறவனுக்கோ அநேக சாபங்கள் வரும். (  நீதிமொழிகள் 28 : 27 )

பழைய ஏற்பட்டுக் காலத்திலும்கூட ஏழைகளுக்குக் கொடுப்பது  நியாயப்பிரமாணக் கட்டளைகளில் ஒன்றாக இருந்தது "தேசத்திலே எளியவர்கள் இல்லாதிருப்பதில்லை; ஆகையால் உன் தேசத்திலே சிறுமைப்பட்டவனும் எளியவனுமாகிய உன் சகோதரனுக்கு உன் கையைத் தாராளமாய்த் திறக்கவேண்டும் என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்." (  உபாகமம் 15 : 11 )

தேவன் ஏழைகளுக்கு இரங்குவதை மிக சிறந்த காரியமாகப் பார்ர்கிறார். எனவேதான் வேதம் கூறுகிறது, "ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார். (  நீதிமொழிகள் 19 : 17 )

அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.
(  2 கொரிந்தியர் 9 : 7 )

ஆதவன் - ஜூலை - 29,  2020 புதன்கிழமை
இன்றைய  வேதாகமச் சிறு செய்தி
 
                                                       - சகோ.எம்.ஜியோ பிரகாஷ்  96889 33712

"நாம் உண்மையில்லாதவர்களாய் இருந்தாலும் அவர் உண்மையுள்ளவராய்  இருக்கிறார்; அவர் தம்மைத்தான் மறுதலிக்க மாட்டார்" (2 தீமோத்தேயு - 2:13)

மனிதர்கள் நாம் பல வேளைகளில் உண்மையற்றவர்களாக இருக்கின்றோம். சில வேளைகளில், நாம் உண்மையுள்ளவர்களாக இருக்க முயன்றாலும் சூழ்நிலைகள் நம்மை நாம் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாத நிலைக்குத் தள்ளிவிடும். உதாரணமாக ஒரு தகப்பன் தனது மகளது திருமணத்தில் வரதட்சணையாக குறிப்பிட்ட அளவு நகை போடுவதாக வாக்களிக்கின்றார் என வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் அவர் உண்மையுள்ளவராக இருந்தாலும் சூழ்நிலை அவர் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாத நிலைக்குத் தள்ளிவிடுகிறது. இது பெரிய பிரச்சனையாக உருவெடுத்து விடுகிறது.

ஆனால் தேவன் அன்றும் இன்றும் என்றும் வாக்கு மாறாதவராக இருக்கின்றார்.

கிறிஸ்துவை அறிந்த ஆரம்ப காலத்தில் என்னை வழி நடத்திய பாஸ்டர் ஜான்சன் டேவிட் அவர்களது வாழ்வில் நடந்த சம்பவத்தை அவர் ஒருமுறை என்னிடம் கூறினார். சென்னைத் துறைமுகத்தில் நல்ல வேலையில் இருந்த அவரைத் தேவன் தனது முழுநேர ஊழியத்துக்கு அழைத்தார். ஆனால் பல காலம் அதற்குக் கீழ்ப்படியாமல் இருந்துள்ளார். இறுதியில் தேவன் அவரைத் திட்டவட்டமாக வேலையை விட்டுவிட்டு ஊழியத்துக்கு வருமாறு அழைக்கவே அவரும் அப்படியே தனது வேலையே ராஜினாமா செய்துவிட்டு முழுநேர ஊழியத்துக்கு வந்துவிட்டார்.

ஆனால் ஊழியத்துக்கு வந்தபின்  மாத வருமானமில்லாததால் வறுமை வாட்டத்  துவங்கியது.  சாப்பாட்டுக்கே கஷ்டமான நிலை. ஒருமுறை அவரது வேஷ்டி சட்டையைத் துவைக்க சோப்பு வாங்கக்கூட காசு இல்லாத நிலை. அவருக்கு மறுநாள்  ஒரு கூட்டத்தில் செய்தி வேறு கொடுக்கவேண்டியிருந்தது. அன்று வீட்டுமுன் வராண்டாவில் அமர்ந்து கண்ணீரோடு ஜெபித்துக்கொண்டிருந்தார்.

"ஆண்டவரே, நான் வசதியோடு வாழ்ந்து வந்தேன். நீர் என்னை உமது  ஊழியத்துக்கு அழைத்து , நான் உன்னை நடத்துவேன் என்று வாக்களித்தீரே... இன்று இப்படி துணி துவைக்க சோப்பு வாங்கக்கூட முடியாத வறுமை நிலைக்கு என்னைத் தள்ளிவிட்டீரே.." என்று சொல்லிக் கண்ணீரோடு ஜெபித்தார். கண்களில் வழிந்த கண்ணீரைத் தனது தோளிலிருந்து துண்டால் துடைத்தார். அப்போது "டக் " எனும் ஓசையுடன் ஏதோ அவர்முன் விழுந்தது. கண்களைத் திறந்து பார்த்தபோது அவர்முன் ஒரு சோப்புத் துண்டு கிடந்தது. அருகிலிருந்த வேப்பமரத்திலிருந்து காகம் ஒன்று அதனைக் கீழே போட்டுள்ளது .

இந்த சம்பவம் அவரது விசுவாசத்தைப் பெரிதும் வளர்க்க உதவியது. மட்டுமல்ல ஊழியத்தில் வந்த கஷ்டங்களை விசுவாசத்தோடு கடந்திட உதவியாக இருந்துள்ளது. தேவன் அவரைப் பிற்பாடு படிப்படியாக உயர்த்தினார்.

இந்த சம்பவம் எலியாவுக்குக் காகங்கள் உணவளித்த சம்பவத்தை ஒத்துள்ளதல்லவா? "காகங்கள் அவனுக்கு விடியற்காலத்தில் அப்பமும் இறைச்சியும், சாயங்காலத்தில் அப்பமும் இறைச்சியும் கொண்டுவந்தன.."(  1 இராஜாக்கள் 17 : 6 )

அன்பானவர்களே வேதம் கூறுகின்றபடி, நாம் உண்மையில்லாதவர்களாய் இருந்தாலும் அவர் உண்மையுள்ளவராய்  இருக்கிறார். எனவே தேவனிடம் கிட்டிச் சேர்த்துவிடீர்களென்றால் நாம் அவரது பிள்ளைகளாக மாறிவிட்ட உரிமை வந்துவிடுகிறது. ஒரு தாயும் தகப்பனும் பாதுகாத்து உதவுவதுபோல அவர் நமக்கு உதவுவார். எந்த சூழ்நிலையிலும் விசுவாசத்தைவிட்டு விலகிடாமல் நம்மால் வாழமுடியும்.

ஆதவன் - ஜூலை - 28,  2020 செவ்வாய்க்கிழமை
இன்றைய  வேதாகமச் சிறு செய்தி
  
                                                                - சகோ.எம்.ஜியோ பிரகாஷ்  96889 33712
"ந

ஜெபத்தைக் குறித்து பல காரியங்களைக் கூற முடியும். இன்றய சிந்தனையில்  நமது தனிப்பட்ட ஜெபம் பொதுவான ஜெபம் இவை இரண்டிலும் நாம் எப்படிக் கவனமாக இருக்கவேண்டும் என சில கருத்துக்களைப் பார்ப்போம்.  

முதலாவது மேற்படி வசனம் கூறுவதுபோல, நமது இருதயம் பரலோக தேவனை நோக்கியே இருக்க வேண்டும்.  

தேவன் வெறும் வார்த்தை அலங்காரத்தைப் பார்த்து ஜெபத்தை அங்கீகரிப்பவரல்ல. (சங்கீதம் - 66:18)

அக்கிரம சிந்தை - அதாவது தேவனுக்கு விரோதமான எண்ணங்கள், சக மனிதர்களுக்கு விரோதமான எண்ணங்கள், நீதி நியாயமற்ற மன எண்ணங்கள், துன்மார்க்க எண்ணங்கள், இம்மாதிரியான எண்ணங்களை மனதில் வைத்துக்கொண்டு நாம் எவ்வளவு ஜெபித்தாலும் பயனில்லை. முதலில் அத்தகைய எண்ணங்களை தேவன் மாற்றும்படியும், ஒரு தூய உள்ளத்தினை நமக்குத் தரும்படியும் வேண்டுதல் செய்து ஒப்புரவாகவேண்டும்.   

மேலும் ஜெபம் நமது இருதயத்திலிருந்து புறப்பட்டு வரவேண்டும். வாய் வார்த்தைகளில் மட்டுமல்ல. "இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்"  என  இயேசு கிறிஸ்து கூறியதுபோல நமது ஜெபமானது இருதயத்தின் நிறைவினால் வர வேண்டும்.  எனவே வீண் வார்த்தைகள் தேவனுக்குத் தேவையில்லை. 

இயேசு கிறிஸ்துக் கூறினார், 

சிலர் பொதுவான ஜெபத்தில்  வசனங்களுக்குமேல் வசனமாகச்  சொல்லி ஜெபிப்பர். அப்படி  ஜெபித்தால்தான் தேவன் கேட்பார் என எண்ணி வசனமாகச் சொல்லிக்கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்களில் பலரும்  தங்களது அறிவால், தாங்கள் படித்த வசனங்களை சொல்கிறார்களே தவிர இருதய பூர்வமாக ஜெபிப்பதில்லை. இதயபூர்வமான ஜெபம் உண்மையில் வசனங்களை அடுக்க நினைக்காது.

ஆனால் தேவைக்கேற்ப ஆவியானவர் வசனங்களைத் தரும்போது நமது ஜெபத்தில் வசனங்கள் வெளிவரும். உண்மையில் இது ஆவிக்குரிய ஜெபம் செய்வோருக்குப் புரியும். நமது ஜெபத்துக்கான பதிலையும் தேவன் தாமே சில வசனங்கள் மூலம் தருவார்.  

வெறுமனே வசனங்களை அடுக்கி ஜெபிப்பது ஒருவிதத்தில் பெருமையின் அடையாளமாகவும் இருக்க வாய்ப்பிருக்கிறது. சிலர் தாங்கள் ஜெபிப்பது வல்லமையுள்ள ஜெபம் எனப்  பிறருக்குத் தெரியவேண்டும் எனும் எண்ணத்தில் ஜெபிப்பர். அத்துடன் தாங்கள் ஜெபிப்பது சிறப்பான ஜெபம் என பிறர் எண்ண  வேண்டுமென்று வசனங்களை அடுக்குவர். தங்களை அறியாமலே இவர்களது மனம் பிறர் நமது ஜெபத்தைக் கவனிக்கிறார்கள் 

பொது ஜெபத்தில், எவ்வளவு சுருக்கமாக ஜெபத்தை முடிக்க வேண்டுமோ அவ்வளவு சுருக்கமாக முடிக்க வேண்டும். இல்லையானால் மக்கள் வெறுப்படைந்து இவர் எப்போது இந்த ஜெபத்தை  முடிப்பார் எனும் எண்ணத்தில் இருப்பார்களேதவிர ஜெபத்தோடு ஒன்றிணைய மாட்டார்கள்.

நமது கைகளோடுகூட நம்முடைய இருதயத்தையும் பரலோகத்திலிருக்கிற தேவனிடத்திற்கு ஏறெடுக்கக்கும்போது நமது ஜெபம் வித்தியாசமான ஆவிக்குரிய ஜெபமாக அமையும்.

ஆதவன் - ஜூலை - 27,  2020 திங்கள்கிழமை 
 இன்றைய  வேதாகமச் சிறு செய்தி   

                                               - சகோ.எம்.ஜியோ பிரகாஷ்  96889 33712
🎚️
 "நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும் , கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்."  (  சங்கீதம் 34 : 19 ) 

ஒருவர் மருத்துவராகவோ, பொறியாளராகவோ கல்லூரிப் பேராசிரியராகவோ ஆகவேண்டுமென்றால் நேரடியாக அப்படி ஆகிட முடியாது. ஒவ்வொரு வகுப்பாக தேர்வு எழுதி வெற்றிபெற்று, இறுதியில் போட்டித் தேர்வு, இன்டெர்வியூ எனப் பல கட்டங்களைத் தாண்டியே அப்படி ஆக முடியும். இந்தத் தேர்வுகளைப்  போலவே நமது வாழ்க்கையிலும் நாம் ஆவிக்குரிய சிறந்த மனிதனாக மாறப் பல கட்டங்களைத் தாண்டவேண்டியுள்ளது. இந்தத் தேர்வுகளைப் போன்றவையே துன்பங்கள். 

ஒருவன் கிறிஸ்துவிடம் நம்பிக்கைக் கொண்டவனாக, நீதிமானாக  இருப்பதால் அவனுக்குத் துன்பங்கள் வராது என வேதம் கூறவில்லை. மாறாக நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும் என்றே கூறுகிறது. துன்பங்களும் பாடுகளும் உலகத்தில் பிறந்த ஒவொருவருக்கும் உண்டு. நீதிமானுக்கு அதிகம் உண்டு.  ஆனால் கிறிஸ்து அதனைத் தாங்கக்கூடிய பலத்தினை அவரை விசுவாசிப்போருக்குத் தருகின்றார். இயேசு கிறிஸ்து கூறியுள்ளார் , "உலகத்தில் உங்களுக்கு  உபத்திரவம் உண்டு, ஆயினும் திடன் கொள்ளுங்கள் நான் உலகத்தை ஜெயித்தேன்" (யோவான் - 16:33) 

நீதிமானுக்கு ஏன் அதிக துன்பம் என்று நாம் பார்ப்போமானால் , உலகத்திலிருந்து நீதிமான்களை தேவன் பிரித்து நடத்துவதால்தான். இயேசு கிறிஸ்துக் கூறினார், " நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாரா யிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது." (  யோவான் 15 : 19 ) அப்படி உலகம்  பகைப்பதால் தான் நீதிமானுக்குத் துன்பங்கள் அதிகம். 

நான் இவ்வளவு ஜெபித்தும் , தேவனிடம் பற்றுதலாயிருந்தும் ஏன் எனக்கு இதனைத் துன்பங்கள் எனக் கலங்கிடவேண்டாம்.   உபாத்திரவத்தின் வழியே சென்று ஒரு ஜெயம் உள்ள வாழ்க்கை வாழவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம். தேவன் நமது உபத்திரவத்தை நாம் மேற்கொள்ள உதவாமல் கைவிட்டுவிடுவதில்லை. 1 கொரிந்தியர் -10:13 கூறுகிறது, உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுவதற்கு இடம்கொடாமல் சோதனையைத் தங்கத்  தக்கதாக சோதனையோடுகூட அதற்கு தப்பிக்கொள்ளும் போக்கையும் உண்டாக்குவார். 

ஆம், "நீதிமான்கள் கூப்பிடும்போது கர்த்தர் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார்."

(  சங்கீதம் 34 : 17 ) மேலும் வேதம் கூறுகிறது,  "கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது; அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது."  சங்கீதம் 34 : 15 )

தாவீது சிறு வயது துவங்கி தேவனால் நடத்தப்பட்டவர். ஆரம்பம் முதல் பல சோதனைகளைக் கடந்து வந்தவர். சவுல் பல முறை அவரைக் கொல்ல முயன்றும் தேவன் அவரை சவுலின் கைகளுக்கு ஒப்புக்கொடுக்கவில்லை. மேலும் அவர் ராஜாவாக இருந்து பல பொருளாதார நிலையிலிருந்த மக்களைக் கண்டிருக்கிறார். அவரது அனுபவத்தால் துணிந்து பின்வருமாறு கூறுகின்றார்...

"நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன், ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்து திரிகிறதையும் நான் காணவில்லை." (  சங்கீதம் 37 : 25 )

ஆம், தேவன் நம்மை சோதித்தாலும் ஒரேயடியாக கைவிட்டுவிடமாட்டார். நமது சந்ததியினையும் ஆசீர்வதிப்பார்.


ஆதவன் - ஜூலை - 26,  2020 ஞாயிற்றுக்கிழமை
இன்றைய  வேதாகமச் சிறு செய்தி  

                                                      - சகோ.எம்.ஜியோ பிரகாஷ்  96889 33712

"தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்."
(  1 பேதுரு 5 : 8 )

அப்போஸ்தலனாகிய பேதுரு பிசாசின் குணத்தைப்பற்றி தெளிவாக விளக்குகின்றார். ஆதியில் ஏதேனில் ஆதாம் ஏவாளைக் கவிழ்த்துப்போட்ட பிசாசு தனது தந்திரங்களை இன்னும் நிறுத்தவில்லை. பெருமையினால் தான் இழந்துபோன பரலோக இன்பத்தை மனிதர்கள் அனுபவித்து விடக்கூடாது என்பதில்  அவன் வைராக்கியமாக இருக்கின்றான். இதனால்தான் கர்ஜிக்கிற சிங்கம் போல சுற்றித்திரிகின்றான்.

இயேசு கிறிஸ்து உலகினில் வந்து பாடுபட்டு மரித்து உயிர்த்தபோது பிசாசின் தலையை நசுக்கினார்.  அதனால்  தலை நசுக்கப்பட்ட ஆதி சர்ப்பம் இப்போது வலு இழந்தவனாக இருக்கிறான்.  தேவனுக்கு கீழ்ப்படிந்த  ஒரு வாழ்க்கை வாழும்போது சிங்கம் போன்ற பிசாசு நம்மைவிட்டு ஓடிப் போவான். 

"ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்."
(  யாக்கோபு 4 : 7 )

ஆனால் மனிதர்கள் நாம் மாறி நிற்கின்றோம். பிசாசைக்  கண்டு பயந்து ஓடுகின்றோம் ஆனால் பாவத்துக்கு எதிர்த்து நிற்க முயன்று பாவத்தில் விழுகின்றோம்.  காரணம் நாம் பல பாவ காரியங்களைப் பாவம் என்று எண்ணுவதில்லை. பிசாசு நமது மனதை மயக்கி வைத்துள்ளான். "இதெல்லாம் பெரிய பாவமா?" எனும் எண்ணத்தை நம்மில் விதைப்பதே பிசாசுதான். எனவேதான் இயேசு கிறிஸ்து கூறினார், அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷ கொலை பாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான். (  யோவான் 8 : 44 )

இந்தப் பிசாசை எதிர்த்து நிற்கக்கூடிய வல்லமையையும் அதிகாரத்தையும் இயேசு கிறிஸ்து நமக்குத் தந்துள்ளார். போர் செய்பவன் எப்படி தன்னைப் பாதுகாத்திட சில கவசங்களையும் எதிரியைத் தாக்கிட சில ஆயுதங்களையும் வைத்திருப்பானோ அதுபோல நமக்கும் தேவன் சில பாதுகாப்புக் கவசங்களையும் ஆயுதங்களையும் தந்துள்ளார். இதனைப் பவுல் அடிகள், 

"நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்". (  எபேசியர் 6 : 11 )

"ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்" (  எபேசியர் 6 : 13 ) என்று கூறுகின்றார். அவை என்ன கவசங்கள், ஆயுதங்கள் ?

சத்தியம் என்னும் கச்சை,  நீதியென்னும் மார்க்கவசம், சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சை, விசுவாசமென்னும் கேடகம் , இரட்சணியமென்னும் தலைச்சீராய், தேவவசனமாகிய ஆவியின் பட்டயம் (  எபேசியர் 6 : 14-17 )

மேற்குறிப்பிட்ட பாதுகாப்புக்கு கவசங்களையும், போர் ஆயுதங்களையும் நாம் கையாண்டால் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரியம் பிசாசு நம்மை விட்டு ஓடுவான்.

இந்தக் கவசங்களும் ஆயுதங்களும் நம்மிடம் எப்போதும் இருக்கின்றதா என்பதை நாம் உறுதி செய்து கொள்ளவேண்டும். அன்பானவர்களே பிசாசுக்கு எதிர்த்து நிற்கும் பலத்துடன் வாழ்ந்து ஆவிக்குரிய வாழ்வில் வெற்றி பெறுவோம்.



ஆதவன் - ஜூலை - 25,  2020 சனிக்கிழமை 

 இன்றைய  வேதாகமச் சிறு செய்தி 
🎚️                                     - சகோ.எம்.ஜியோ பிரகாஷ்  96889 33712

 "கர்த்தரே ஆவியானவர் ; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு." (  2 கொரிந்தியர் 3 : 17 )

ஒருவன் அடிமைத்தனத்திலிருந்து விடுதலைப் பெறவேண்டுமானால் முதலில் தான் ஒரு அடிமை என்பதை உணரவேண்டும். மட்டுமல்ல, ஒரு உரிமைக்  குடிமகனுடைய அதிகாரம், உரிமைகள் என்னென்ன என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும். இந்தியா அடிமைப்பட்டிருந்தபோது சுதந்திர போராட்டத்  தலைவர்கள் அந்தப் பணியைத்தான் செய்தார்கள்.  மஹாத்மா  காந்தி மட்டுமல்ல அனைத்து இந்தியாவிலும்  பல தலைவர்களும் எழுத்தாளர்களும்  இருந்து மக்களை உணர்வடையச் செய்தனர்.  தமிழகத்தில் மகாகவி பாரதியார், வ.உ .சி ., கல்கி போன்றோரை நாம் குறிப்பிடலாம்.

இதுபோல ஆத்தும விடுதலை மக்களுக்குத் தேவையாய் இருந்தது. மக்கள் பாவத்தைக் குறித்தும், நீதியைக்  குறித்தும்  அறியாதவர்களாக இருந்தனர். பாவத்தைக் குறித்து அறியாத யூதர்களிடம் இயேசு கூறினார், "பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." (  யோவான் 8 : 34 )

நாங்கள் யாருக்கும் இதுவரை அடிமையாகவில்லை என்று கூறிய யூதர்களிடம்தான் இயேசு கிறிஸ்து இப்படிக் கூறினார். மட்டுமல்ல, அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாகும் வழியையும் கூறினார்;- "சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்." (  யோவான் 8 : 32 )

"நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்" என்று கூறிய இயேசு கிறிஸ்துதான் சத்தியம். சத்தியமான அவரை  அறியும்போது மட்டுமே நாம் பாவத்திலிருந்து விடுதலை அடைய முடியும். "ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்," (  யோவான் 8 : 36 )

இயேசு கிறிஸ்து பாவங்களை மன்னிக்கிறவர் மட்டுமல்ல பாவ பழக்கத்திலிருந்து விடுதலையும் தருபவர். 

பழைய ஏற்பட்டு மக்கள் பாவ மன்னிப்புபெற  கிடா அல்லது காளைகளைப் பலியிட்டு வந்தனர். ஆனால் மன்னிப்பு பெற்றபின் திரும்பத்  திரும்ப அதே பாவத்தைச் செய்து  மறுபடி மறுபடி பலியிட்டு வந்தனர். ஆம் அந்தப்பலிகள் மனிதரைப்  பூரணப் படுத்த மாட்டாது.  ".....வருஷந்தோறும் இடைவிடாமல் செலுத்தப்பட்டுவருகிற ஒரேவிதமான பலிகளினாலே அவைகளைச் செலுத்த வருகிறவர்களை ஒருக்காலும் பூரணப்படுத்தமாட்டாது."(  எபிரெயர் 10 : 1 ) 

அன்பானவர்களே நமது பாவங்களுக்கு மன்னிப்பு பெற்றால் மட்டும் போதாது பாவத்திலிருந்து முழு விடுதலையும் பெற  வேண்டும். அந்த விடுதலை நமது விடுதலை நாயகன் இயேசு கிறிஸ்துவிடம் மட்டுமே உண்டு. பாவ மன்னிப்புக்காக மட்டும் ஜெபிக்காமல் ஆண்டவரே நான் இன்னின்ன பாவ சுபாவங்களை விட முடியாமல் இருக்கிறேன் அவற்றிலிருந்து எனக்கு விடுதலை தாரும் என வேண்டினால் மட்டுமே விடுதலை வாழ்வைப் பெற்று மகிழமுடியும் .


ஆம், குமாரன் (இயேசு கிறிஸ்து ) உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்," (  யோவான் 8 : 36 )

ஆதவன் - ஜூலை - 24,  2020 வெள்ளிக்கிழமை
இன்றைய  வேதாகமச் சிறு செய்தி 

                                                    - சகோ.எம்.ஜியோ பிரகாஷ்  96889 33712

"அநியாயம் செய்கிறவன் இன்னும் அநியாயம் செய்யட்டும், அசுத்தமாயிருக்கிறவன் இன்னும்  அசுத்தமாயிருக்கட்டும், நீதியுள்ளவன் இன்னும் நீதி செய்யட்டும், பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும், இதோ சீக்கிரமாய் வருகிறேன் அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நானளிக்கும் பலன் என்னோடுகூட வருகிறது" (வெளிப்படுத்தின விசேஷம் - 22:11,12)

ஒருமுறை ஒரு சகோதரன் என்னிடம், "இந்த வசனம் தவறு போல இருக்கிறது. அது எப்படி கடவுள் அநியாயம் செய்கிறவன் இன்னும் அநியாயம் செய்யட்டும் அசுத்தனாயிருக்கிறவன் இன்னும் அசுத்தனாயிருக்கட்டும் என்று கூறுவார்?" என்று கேட்டார். அவர் கேட்டது சரிபோல தெரிந்தாலும் இந்த வசனம் கூறும் செய்தி நம்மைச் சிந்திக்கச் செய்வதாகும்.

இந்த வசனம் உண்மையில் தேவனுடைய மன ஆதங்கத்தினை உணர்த்துகிறது. ஆதியாகமம் முதல் இறுதி நூலான வெளிப்படுத்தின விசேஷம் வரை எவ்வளவோ நீதியுள்ள கட்டளைகளை தேவன் நமக்குத் தந்துள்ளார். மட்டுமல்ல இந்தக் கட்டளைகளைக் கடைபிடித்து வாழ்ந்த பரிசுத்தவான்களது சாட்சிகளையும் நமக்குத் தந்துள்ளார். 

"இந்நாளில் நான் உங்களுக்கு விதிக்கிற இந்த நியாயப்பிரமாணம் முழுமைக்கும் ஒத்த இவ்வளவு நீதியுள்ள கட்டளைகளையும் நியாயங்களையும் பெற்றிருக்கிற வேறே ஜாதியும் ஏது ?" (உபாகமம் - 4:8) என தேவன் கேட்கிறார்.

அதாவது இவ்வாவு நீதியுள்ள கட்டளைகளையும் நியாயங்களையும் பெற்ற நீங்கள் இன்னும் திருந்தவில்லையானால் அப்படியே இருந்து அழிந்து போங்கள்  என்பது பொருள். 

ஒரு ஆசிரியர் மாணவனுக்குப் பாடங்களைப் போதித்து, வீட்டுப் பாடங்களையும் கொடுக்கிறார். பல  மாணவர்கள் அதற்குக் கீழ்ப்படிகின்றனர். ஒரு சில அடங்காத மாணவர்கள் எதற்கும் கீழ்ப்படிவதில்லை. பாடங்களையும் படிப்பதில்லை. ஆசிரியரையும் கேலி கிண்டல் செய்வர். அந்த ஆசிரியர் இறுதியில் பொறுக்கமுடியாமல் அவர்களைப் பார்த்துக் கூறுவார், "என்னால் முடிந்தவரை நான் முயன்றுவிட்டேன்..இனி படித்தால் படியுங்கள் அல்லது எக்கேடும் கெட்டுப்போங்கள். இறுதித் தேர்வில் நீங்கள் உணர்ந்துகொள்வீர்கள்".  தேவன் கூறுவதும் இதுதான்.

"பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன்,
இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்.."....(  எபிரெயர் 1 : 2 )

பல்வேறு தீர்க்கதரிசிகள் மூலம் பல்வேறு வகைகளில் பேசிய தேவன் இறுதியில் தனது குமாரனான இயேசு கிறிஸ்து மூலம் மக்களிடம் பேசினார்.  அவர் பல்வேறு அற்புதங்கள் மூலம் தான் கூறுவது  மெய் என்பதை நிரூபித்தார். " நான் சொல்வதை நம்புங்கள், இல்லையானால் என் கிரியைகளின் நிமித்தமாவது என்னை நம்புங்கள் " என்றார். இப்படி முயன்றும் இன்னும் திருத்தமாட்டோம் என பிடிவாதத்தால் இருக்கும் மக்களை பார்த்தே, "அநியாயம் செய்கிறவன் இன்னும் அநியாயம் செய்யட்டும், அசுத்தமாயிருக்கிறவன் இன்னும்  அசுத்தமாயிருக்கட்டும்", என்று கூறப்பட்டுள்ளது. 

நீதியுள்ளவன் இன்னும் நீதி செய்யட்டும், பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும், என்று கூறியபடி நாம் முயல்வோம். இதோ சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு அவர் அளிக்கும் பலன் அவரோடுகூட வருகிறது.


 ஆதவன் - ஜூலை - 23,  2020 வியாழக்கிழமை

இன்றைய  வேதாகமச் சிறு செய்தி

                                                   - சகோ.எம்.ஜியோ பிரகாஷ்  96889 33712

"தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன்." (  2 கொரிந்தியர் 10 : 18 )

"For not he that commendeth himself is approved, but whom the Lord commendeth."
(  2 Corinthians 10 : 18 )

ற்புகழ்ச்சி சிலருக்குத் தாராளமாக வரும். வார்த்தைக்கு வார்த்தைத் தங்களது பெருமைகளைக் கூறி மகிழ்வர். ஆனால் ஒன்று... தற்பெருமைக்காரன் பேச்சை வேறு வழியின்றி கேட்பவர்கள் பின்பு அதனை தங்களுக்குள் சொல்லிச் சிரிப்பர் என்பது தற்பெருமை பேசுபவனுக்குத் தெரியாது. அரசியல்வாதிகள் தற்பெருமையில் கைதேர்ந்தவர்கள்.

ஆனால் வேதம் கூறுவதுபோல தற்பெருமை பேசும் மனிதன் உத்தமனாய் இருப்பதில்லை. கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் பலர் ஆலயங்களுக்கு ஏதாவது சிறிய அன்பளிப்பு அளித்திருந்தாலும் அதில் பெரிய எழுத்துக்களில் தங்களது பெயரை பொறித்திடுவது பார்க்க வேடிக்கையாக இருக்கும். ஒரு ஆலயத்தில் நான் பார்த்த ஒரு காரியம், ஒருவர் மின் விசிறி ஒன்று காணிக்கை அளித்துள்ளார். அதில் மூன்று இறக்கைகளிலும் ஒன்றில் அவரது பெயர், மற்றொன்றில் மனைவி பெயர், இன்னொன்றில் தனது மகள் பெயர் எனப் பொறித்திருந்தார். இவர்களை புத்தியில்லாதவர்கள் என்று வேதம் கூறுகின்றது. 

"........தங்களைக்கொண்டு தங்களை அளந்துகொண்டு, தங்களுக்கே தங்களை ஒப்பிட்டுக்கொள்ளுகிற அவர்கள் புத்திமான்களல்ல. (  2 கொரிந்தியர் 10 : 12 ) எனக் கூறுகின்றார் பவுல் அடிகள்.

கிறிஸ்தவன் என்று கூறிக்கொள்பவனுக்குக் கிறிஸ்துவின் தாழ்மை வேண்டாமா? இன்று பல கிறிஸ்தவ ஊழியர்கள் கூட பெருமைக்கு அடிமையாகி தங்களைக் குறித்து, தங்கள் வல்லமைப்பிரதாபத்தைக் குறித்து பெருமை பாராட்டுவதற்கு அளவே இல்லை. தங்களுக்குத் தாங்களே , " தீர்க்கதரிசன வரம் பெற்றவர்" ," குணமாக்கும் வரம் பெற்றவர்",   "அப்போஸ்தலர்" போன்ற பட்டங்களைக் கொடுத்து போஸ்டர் அடித்து விளம்பரம் தேடுகின்றனர். பலருடைய ஆடை அலங்காரம் வேறு சினிமா நடிகர்களை மிஞ்சுகிறது. இவை பிற மத மக்கள் மத்தியில்கூட கேலிபேசப்படுகிறது.

கிறிஸ்துவின் தாழ்மை குறித்து வேதம் இவ்வாறு  கூறுகிறது, "அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்." (  பிலிப்பியர் 2 : 6 - 8 )

தேவாதி தேவன் தன்னைத் தான் படைத்த மனிதனுக்கு ஒப்பாக மாற்றி அந்த மனிதர்கள் கையால் மரிக்கவும் முன்வந்தார். ஆனால் அற்ப மனிதர்கள் பெருமைபேசி அழிக்கின்றனர். ஆம், 'அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை.
(  நீதிமொழிகள் 16 : 18 )

Pride goeth before destruction, and an haughty spirit before a fall. (  Proverbs 16 : 18 )

தேவன் தாழ்மையுள்ளவர்களுக்குக் கிருபை அளிக்கிறார் என வேதம் கூறுகின்றது. அற்பத்தனமாக நம்மை நாமே உயர்வாகப் பேசிப் பேசி தாழ்ந்து போய்விடக் கூடாது . ........"ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்." (  1 பேதுரு 5 : 5 )

அன்பானவர்களே, தாழ்மையை அணிந்துகொண்டு தேவ கிருபையைப் பெற்று ஆவிக்குரிய வாழ்வில் வளர்வோம் . அப்போஸ்தலனாகிய யாக்கோபு கூறுகிறார், " கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்போது அவர் உங்களை உயர்த்துவார் " (யாக்கோபு - 4:10)

இன்றைய  வேதாகமச் சிறு செய்தி - நாள் :- 22.07.2020  புதன் கிழமை


                                                     - சகோ.எம்.ஜியோ பிரகாஷ்  96889 33712


"நீயோ உபவாசிக்கும்போது, அந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படாமல், அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு." (  மத்தேயு 6 : 17 )


இன்று கிறிஸ்தவர்கள் செய்யும் வேதத்துக்கு முரணான முக்கியமான செயல்களில் ஒன்று மேற்கண்ட வசனத்தை மீறுவது. இது இயேசு கிறிஸ்து கூறிய ஓர் சிறிய கட்டளை. ஆனால் இந்தச் சிறிய கட்டளையைக் கூட ஊழியர்கள் கடைபிடிப்பதில்லை.

உபவாசமிருப்பது நமது தனிப்பட்ட - நமக்கும் தேவனுக்குமான செயல். எனவேதான் இயேசு கிறிஸ்து அது மறைவாய் இருக்கவேண்டுமென்று கூறினார். ஜெபம், காணிக்கை அளித்தல் , உபவாசம் இவை அனைத்துமே அந்தரங்கத்தில் நமக்கும் தேவனுக்கும் மட்டுமே தெரிய வேண்டிய காரியங்கள். 

ஆனால் இன்று நடப்பதென்ன? உபவாச ஜெபம், உபவாச காத்திருப்புக்  கூட்டம்  என போஸ்டர் ஒட்டி  உபவாசமிருக்கின்றனர்.  "நீ உபவாசிக்கும்போது, அந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படாமல், அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக" என்றார் இயேசு. ஆனால் இவர்களோ போஸ்டர் ஒட்டி விளம்பரப் படுத்தி உபவாசமிருக்கின்றனர். 

"நீங்கள் உபவாசிக்கும்போது, மாயக்காரைப்போல முகவாடலாய் இராதேயுங்கள்; அவர்கள் உபவாசிக்கிறதை மனுஷர் காணும் பொருட்டாக, தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." (  மத்தேயு 6 : 16 )

மேலும்  அப்போஸ்தலனாகிய பவுல் அடிகள் கூறுகின்றார், "போஜனமானது நம்மை தேவனுக்கு உகந்தவர்களாக்கமாட்டாது; என்னத்தினாலெனில், புசிப்பதினால் நமக்கு ஒருமேன்மையுமில்லை, புசியாதிருப்பதினால் நமக்கு ஒரு குறைவுமில்லை."(  1 கொரிந்தியர் 8 : 8 ) சாப்பிடாமல் இருக்கிறான் என்பதற்காக தேவன் நமது விண்ணப்பத்தைக் கேட்டுவிடுவதில்லை. முதலாவது நமது மனமானது தூய்மையாக வேண்டும்.

"போஜனபதார்த்தங்களினாலல்ல, கிருபையினாலே இருதயம் ஸ்திரப்படுகிறது நல்லது; போஜனபதார்த்தங்களில் முயற்சிசெய்கிறவர்கள் பலனடையவில்லையே." (  எபிரெயர் 13 : 9 )

இப்படிச் சொல்வதால் உபவாசம் இருக்கவேண்டாம் என்று பொருளல்ல. உபவாசமிருப்பதை ஒரு ஞாயப்பிராமணக்  கட்டளைபோல அனுசரிப்பது சரியல்ல. சில வேளைகளில் தேவனே நமக்கு உணர்த்துவார். (தேவன் நமக்கு உணர்த்துவதை புரிந்துகொள்ளும் நிலைக்கு முதலில் வரவேண்டும்.) அப்படி உணர்த்தப்படும் போது கண்டிப்பாக அதனைக்  கடைபிடிக்க வேண்டும். நமது தனிப்பட்ட ஆவிக்குரிய காரணங்களுக்காக தேவன் அதனை நமக்கு நியமிக்கலாம். மாறாக, சாப்பிடாமல் இருந்தால் நமது ஜெபம் கேட்கப்படும் என எண்ணுவதோ, "நான் உபவாசமிருக்கிறேன்" என ஊர் அறிய தண்டோரா போடுவதோ கிறிஸ்து காட்டிய வழியல்ல.

அனைத்து மத மக்களும் உண்ணா நோன்பு இருக்கின்றனர். ஆனால் போஸ்டர் அடித்து கூட்டம்போட்டு அதனை விளம்பரப்  படுத்துவதில்லை. 

இறுதியாக தேவனுக்கு உகந்த உபவாசம் எது என்பதை ஏசாயா பின்வருமாறு கூறுகின்றார்:- 

"பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக்கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம்." (  ஏசாயா 58 : 7 )

உபவாசமிருக்கும்போது இதனையும் கருத்தில்  கொள்வோம் .

இன்றைய  வேதாகமச் சிறு செய்தி - நாள் :- 21.07.2020  செவ்வாய்க்கிழமை

                                                 - சகோ.எம்.ஜியோ பிரகாஷ்  96889 33712

"ந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது." (  மத்தேயு 15 : 8 )

ஏசாயா தீர்க்கதரிசி கூறிய வார்த்தைகளை (ஏசாயா - 29:13) இயேசு இங்கு மேற்கோள்காட்டிப் பேசுகின்றார்.  பெரும்பாலான ஊழியர்களும் மக்களும் இதுபோலவே இருக்கின்றனர். 

இந்த மக்களது வாயில் தேவனைத் துதிக்கும் துதிகளும் வேத வசனங்களும் இருக்கும், காணிக்கைகள் அள்ளி அள்ளிக் கொடுப்பார்கள்,  மிகுதியாய் ஜெபிப்பார்கள், உபவாசமிருப்பார்கள், ஜெபக் கூட்டங்களில் ஆர்வத்துடன் பங்கேற்பார்கள், ஆனால் அவர்களது இதயமோ தேவனைவிட்டுத் தூரமாகி இந்த உலக இச்சைகளில் மூழ்கி இருக்கும். 

"இரண்டு எஜமான்களுக்கு ஊழியம்செய்ய ஒருவனாலும் கூடாது, ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான் அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைப் பண்ணுவான். தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியம் செய்ய உங்களால் கூடாது." (மத்தேயு - 6:24) என்றார் இயேசு கிறிஸ்து . ஆனால் இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்யும் ஊழியர்களும் அவர்களை பின்பற்றுகின்ற மக்களும் மிகத் தாராளமாக இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்கின்றனர்.

ஜெபிப்பது, வேதம் வாசிப்பது, உபவாசிப்பது இவை எளிது. யாரும் செய்யலாம். எல்லா மத மக்களும்  இத்தகையைச் செயல்பாடுகளை தங்கள் தங்கள் மதத்துக்குரிய முறைமைகளின்படி செய்கின்றனர். எனவே  இவைகளைக் கொண்டு ஒரு மனிதனை நாம் ஆவிக்குரிய மனிதன் என எடைபோட முடியாது. 

"இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள் , அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள் " (மத்தேயு - 5:8) என்றார் இயேசு கிறிஸ்து . நமது இருதயத்தில் பொய் , புரட்டு, வஞ்சகம், வேசித்தனம், ஏமாற்று போன்ற குணங்களை வைத்துக்கொண்டு வாயினால் தேவனைத் துதிப்பதும் அவரை ஆராதிப்பதும் வீண். இத்தகையக் குணங்கள் தேவனை நம் இருதயத்தை நெருங்க முடியாதவாறு தடுக்கின்றது . நமது இருதயம் தேவனை விட்டுத் தூரமாய் விலகிப் போகின்றது . எனவேதான் இயேசு கிறிஸ்த்துக் கூறினார்:-

"நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." (  மத்தேயு 18 : 3 ) சிறு பிள்ளைகளுக்கு பொய் , புரட்டு, வஞ்சகம், வேசித்தனம், ஏமாற்று போன்ற குணங்கள் இருப்பதில்லை. எனவேதான் இயேசு இப்படிக் கூறினார்.

அன்பானவர்களே, வெறும் ஜெபம், வேத வாசிப்பு, உபவாசம், காணிக்கை அளித்தல், ஜெபக் கூட்டங்களில் பங்கெடுத்தல் இவை மட்டும் போதாது, நமது இருதயம் தேவனுக்கு நெருக்கமாக வேண்டும். நம்மை நாமே வஞ்சித்திடாமல் நமது குற்றங்குறைகளை உணர்ந்து திருந்துவோம்.   

வாயினால் தேவனிடத்தில் சேர்ந்து, உதடுகளினால் தேவனைக் கணம் பண்ணி நம்  இருதயம் தேவனுக்குத் தூரமாக இருக்குமேயானால் நம்மை நாம் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்வதில் அர்த்தமில்லை. 

இன்றைய  வேதாகமச் சிறு செய்தி - நாள் :- 20.07.2020  திங்கள் கிழமை

                                                 - சகோ.எம்.ஜியோ பிரகாஷ்  96889 33712

"............பூரணராகும்படி கடந்துபோவோமாக. (  எபிரெயர் 6 : 2 )

நாம் பூரணமாகவேண்டுமென்பதே தேவனுடைய சித்தம். தேவன் எதிலுமே ஒரு நிறைவை அல்லது ஒரு முழுமையை விரும்புகின்றார். அன்பில், பரிசுத்தத்தில், நீதியில் எல்லாவற்றிலும் ஒரு முழுமை வேண்டுமென விரும்புகிறார். ஒரு சில வேளைகளில் மட்டும் இவைகளில் நிலைத்திருப்பது போதாது.

இன்று ஆவிக்குரிய மக்கள் என்று தங்களைக் கூறிக்கொள்வோர் பலர் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளிலும் ஒருசில சடங்குகளைக் கைக்கொள்வதிலும் கவனம் செலுத்துகின்றனரே தவிர அதற்குமேல் செல்லத் துணிவதில்லை. அல்லது அதுபற்றிய தெளிவு இல்லாமல் இருக்கின்றனர். ஜெபங்கள், உபவாசம், வேத வாசிப்பு, ஆராதனைகளில் பங்கேற்பது, இவையே போதும் என எண்ணிக்கொள்கின்றனர். ஆனால் இவை மட்டும் போதாது என வேதம் கூறுகின்றது. எனவேதான் எபிரேய நிருப ஆசிரியர் பின்வருமாறு கூறுகின்றார் :- 

"ஆகையால், கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களை நாம் விட்டு, செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல், தேவன்பேரில் வைக்கும் விசுவாசம், ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நியாயத்தீர்ப்பு என்பவைகளாகிய அஸ்திபாரத்தை மறுபடியும் போடாமல், பூரணராகும்படி கடந்துபோவோமாக".
(  எபிரெயர் 6 : 1, 2 )

பழைய ஏற்பட்டு கால ஆசாரிப்புக் கூடாரத்தைக் கொண்டு பூரணத்தை விளக்கலாம். ஆசாரிப்புக் கூடாரத்தில் மூன்று பிரிவுகள் இருந்தன. வெளிப் பிரகாரம், பரிசுத்த ஸ்தலம், மகா பரிசுத்தஸ்தலம். வெளிப் பிரகார தண்ணீர்த்தொட்டியில் தங்களை கழுவி  பரிசுத்த ஸ்தலத்தினுள் நுழைந்தனர். அங்கு தேவ சமூகத்து அப்பங்களும், எரிகின்ற குத்துவிளக்கும் , நறுமண தூப பீடமும் இருந்தன. அதக்குப் பின் மகா பரிசுத்த ஸ்தலம் இருந்தது. அது ஒரு திரைச் சீலையால் பிரிக்கப்பட்டிருந்தது.   

இன்றய புதிய ஏற்பாட்டுக் காலத்தில் இவை முறையே ஞானஸ்நானம் (தண்ணீர்த்தொட்டியில் கழுவுதல்),  தேவனின் வார்த்தை (தேவ சமூகத்து அப்பம்), பரிசுத்த ஆவியின் அபிஷேகம் (எரிகின்ற குத்துவிளக்கு) நறுமண தூபம் (துதி ஆராதனை) இவைகளைக் குறிக்கின்றன. இவைகளையே ஆவிக்குரிய மக்கள் என்று கூறிக்கொள்ளும் பலரும் செய்து வருகின்றனர். ஆனால் இதற்கு அப்பால் உள்ளதுதான் மகா பரிசுத்த ஸ்தலம்.

முற்காலத்தில் பிரதான ஆசாரியன் ஆண்டுக்கு ஒருமுறை வெள்ளாட்டுக்கடா, காளையின் இரத்தத்தால் தன்னைச் சுத்திகரித்துக்கொண்டு இதனுள் நுழைவான். ஆனால் கிறிஸ்து இயேசுவால் நாம் இன்று மகா பரிசுத்த ஸ்தலத்தினுள் நுழைய முடிகிறது. கிறிஸ்து மரித்தபோது தேவாலய திரைச் சீலை மேலிருந்து கீழாக கிழிந்தது இதனை உணர்த்தவே. பரிசுத்த ஸ்தலத்துக்கு மகா பரிசுத்த ஸ்தலத்துக்குமிடையே இருந்த திரை அவரால் விலகியது. 

"வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்."
(  எபிரெயர் 9 : 12 ) என்று வாசிக்கிறோம்.

இந்த மகா பரிசுத்த ஸ்தலத்தினுள் நுழைவதே நம்மைப் பூரணப்படுத்தும். அங்குள்ள உடன்படிக்கைப் பெட்டியின் மேலிருந்த  கிருபாசனத்திலிருந்து தேவன் பிரதான ஆசாரியனிடம் பேசினார்.  இன்றும் இந்த அனுபவத்தில் நாம் வரும்போது தேவ சத்தத்தைக் கேட்கலாம். அவர் நம்மை வழி நடத்த அவரோடு நடக்கலாம். பாவங்களிலிருந்து முற்றிலும் ஜெயம் கொள்ளுகிற ஒரு வாழ்க்கை வாழ அவர் நமக்கு உதவுவார்.  இப்படிச் செல்வதே பூரணத்தை நோக்கி கடந்து செல்வது. 

" மனந்திரும்புதல், தேவன்பேரில் வைக்கும் விசுவாசம், ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நியாயத்தீர்ப்பு என்பவைகளாகிய அஸ்திபாரத்தை மறுபடியும் போடாமல்" என்று வேதம் கூறுவதால் இவை அஸ்திபார உபதேசங்கள் என்பது புரியும்.  அஸ்திபாரம் மட்டும் போதாது, அதற்குமேல் நாம் கட்டப்படவேண்டும். 

தேவனது கிருபையைப் பெற்று தூய ஆவியின் வழிநடத்துதலில் நடக்கவேண்டும். தேவையற்ற பல்வேறு உபதேசங்களைப் பிடித்துக்கொண்டு இருப்போமானால்  பழைய ஏற்பாட்டுக்கால பரிசேயரைப்போலவே இருப்போம்.  எனவே பூரணராகும்படி கடந்துபோவோமாக.

இன்றைய வேதாகமச் சிறு செய்தி - நாள் :- 19.07.2020  ஞாயிற்றுக்கிழமை
                                       
                                               - சகோ.எம்.ஜியோ பிரகாஷ்  96889 33712

"அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல." (  1 யோவான் 4 : 18 )

திரைப்படம் கண்டுபிடிக்கப்பட்ட ஆரம்பகாலம் அது.   ஜெர்மனியின் சர்வாதிகாரியான ஹிட்லர் ஒரு திரைப்படத்தில் நடித்தார்.  தான் நடித்ததை மக்கள் எப்படி ரசிக்கிறார்கள் என்று நேரடியாக அறிந்துகொள்ள  திரை அரங்கத்தினுள் மாறுவேடத்தில் வந்து அமர்ந்திருந்தார். 

திரையில் அவர் தோன்றியவுடன் மக்கள் கைகளைத் தட்டி ஆர்ப்பரித்தனர். திரையில் ஹிட்லர் என்ன செய்தாலும் அதனை ரசித்துக் குரல் எழுப்பினர்.  அவருக்கு ஒரே ஆச்சரியம். அவர் மெதுவாகத் தன் அருகில் அமர்ந்திருந்தவரிடம், " இந்த ஹிட்லர் அப்படி என்ன பிரமாதமாக நடிக்கிறான்?  அவனுக்கு ஏன் இப்படி வரவேற்பு கொடுக்கிறீர்கள் ?" என்று கேட்டார்.

அவருக்கு மறுமொழியாக அந்த மனிதன், " ஐயா, நீங்கள் வெளிநாட்டவர் என எண்ணுகிறேன். இங்கு ஜெர்மனியில் ஹிட்லர் என்ன செய்தாலும் அதனைப் பாராட்டவேண்டும். இல்லையானால் அவன் நம்மைச் சுட்டுக் கொன்று விடுவான்" என்று பதில் கூறினார்.

இன்று பல கிறிஸ்தவர்கள் தேவனிடம் ஜெபிப்பது, காணிக்கை கொடுப்பது, வேதம் வாசிப்பது எல்லாமே இப்படி ஒரு மனநிலையில்தான். அன்று மக்கள் எப்படி ஹிட்லருக்கு பயப்பட்டனரோ அதுபோல ஓர் வித பயத்தினால் தேவனை வழிபடுகின்றனர். ஒருவேளை நாம் இவைகளை செய்யவில்லையானால் தேவனது சாபத்தையும் கோபத்தையும் பெற்றுவிடுவோம் எனும் பயத்தால் செய்கின்றனர். தங்களது ஆசீர்வாதங்களை இழந்துவிடுவோமோ எனும் பயத்தில் செய்கின்றனர். தங்களது சுய ஆசை இச்சைகளை நிறைவேற்றிக்கொள்ள தேவனைத் தேடுபவர்கள் இப்படி இருப்பதில் ஆச்சரியமில்லை. 

"உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்பு கூராதிருங்கள் ; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை " (1 யோவான் - 2:15)

பழைய ஏற்பட்டு பக்தர்கள் தேவனை தகப்பனாக பார்க்கவில்லை. அவர்கள் அவரைச் சேனைகளின் கர்த்தராக,  கண்மலையாக, கோட்டையாக, பட்சிக்கிற அக்கினியாகப் பார்த்தனர். ஆனால் தேவன் நமது தகப்பன். தேவனை அப்பா எங்க கூப்பிட இயேசு நமக்குக் கற்றுத் தந்துள்ளார். தகப்பனாக தேவனை நாம் பார்ப்போமானால் தேவையற்ற பயங்கள் நம்மைவிட்டு அகலும்.

தேவனை நாம் ஒரு தந்தைக்குரிய பாசத்துடன் நெருங்கவேண்டும். அது எப்போது முடியும்? அவரது கற்பனைகளைக் கைக்கொள்ளும்போதுதான். "நாம் தேவனுடைய கற்பனைகளைக்  கைக்கொள்ளுவதே அவரிடத்தில் அன்புகூருவதாகும், அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல " (1 யோவான் - 5:3)

தகப்பனுக்குரிய அன்போடு தேவன் நம்மை அணைத்துக்கொள்ள நாம் இடம்தருவோம். பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல. 

நம்முடைய பலவீனங்கள் எல்லாம் அவருக்குத் தெரியும் . எல்லா விதத்திலும் நம்மைப்போல சோதிக்கப்பட்டவர் அவர். ஆனால் பாவமில்லாதவர். ஆதலால் அவரிடம் இரக்கம்பெற நாம் பயப்படாமல் தைரியமாய் அவரது கிருபாசனம் அருகே செல்வோம்.

"நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார். ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்." (  எபிரெயர் 4 : 15, 16 )


இன்றைய வேதாகமச் சிறு செய்தி - நாள் :- 18.07.2020  சனிக்கிழமை

                                                  

"சிங்கங்கள் என்னைச் சேதப்படுத்தாதபடிக்கு தேவன் தம்முடைய தூதனை அனுப்பி, அவைகளின் வாயைக் கட்டிப்போட்டார்; அதேனென்றால் அவருக்கு முன்பாக நான் குற்றமற்றவனாய்க் காணப்பட்டேன்; ராஜாவாகிய உமக்கு முன்பாகவும் நான் நீதிகேடு செய்ததில்லை என்றான்." (  தானியேல் 6 : 22 )

மேற்கண்ட தானியேலின் அறிக்கை, ஜெபம் மட்டுமல்ல சாட்சியுள்ள ஒரு வாழ்க்கை அதைவிட முக்கியம் என்பதை வலியுறுத்துவதாக உள்ளது. 

தரியு ராஜா, தானியேலின் விரோதிகளின் நிர்பந்தத்தால் தானியேலை சிங்கக்  கெபியினுள் போட்டாலும் அவனது மனது உறுத்திக்கொண்டே இருந்தது. அன்று இரவு ராஜாவுக்குத் தூக்கமும் வரவில்லை. மறுநாள் அதிகாலையில் ராஜா, "கெபியின் கிட்டவந்தபோது, துயரசத்தமாய்த் தானியேலைக் கூப்பிட்டு: தானியேலே, ஜீவனுள்ள தேவனுடைய தாசனே, நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைச் சிங்கங்களுக்குத் தப்புவிக்க வல்லவராயிருந்தாரா என்று தானியேலைக் கேட்டான்."(  தானியேல் 6 : 20 )

ராஜாவுக்குத் தானியேலின் ஜெப வாழ்க்கைத் தெரிந்திருந்தது. எனவேதான் இப்படிக் கேட்டான். அவனுக்கு மறுமொழியாகத் தான் தானியேல் மேற்கண்ட பதிலைக் கூறினார். இங்குத் தானியேல் கூறும் பதிலிலுள்ள அர்தத்தைப் பாருங்கள், "அதேனென்றால் அவருக்கு முன்பாக நான் குற்றமற்றவனாய்க் காணப்பட்டேன்; ராஜாவாகிய உமக்கு முன்பாகவும் நான் நீதிகேடு செய்ததில்லை"

அதாவது ராஜாவே நான் ஜெபித்தத்தினால் மட்டுமல்ல , நான் தேவனுக்கு முன்பாக குற்றமற்றவனாக இருந்தேன், ராஜாவாகிய உமக்கு முன்பாகவும் (அதாவது உலக காரியங்களிலும் ) குற்றமற்றவனாக காணப்பட்டேன். எனவே சிங்கங்கள் என்னைச் சேதப்படுத்தாதபடிக்கு தேவன் தம்முடைய தூதனை அனுப்பி, அவைகளின் வாயைக் கட்டிப்போட்டார்.

இதுவே நாம் அறியவேண்டிய சத்தியம் . ஜெபிப்பதோடு நமது வாழ்க்கை உண்மையுள்ளதாக இருக்கவேண்டும்.  

கடவுளுக்குமுன்பாக உண்மை 
உலக காரியங்களில் உண்மை 

ஆனால் இன்று ஆவிக்குரியவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் பல கிறிஸ்தவர்களிடம் இவை இரண்டும் இல்லை. அவர்கள் நன்றாக ஜெபிக்க அறிந்திருக்கிறார்கள். அதிகாலையில் எழுந்து சில மணி நேரம் ஜெபிக்கிறார்கள். ஆனால் தேவனுக்கு முன்பாக உண்மையில்லை. பல பாவ பழக்கவழக்கங்களைக் கொண்டவர்களாகவே இருக்கின்றனர். அதுபோல உலக காரியங்களிலும் உண்மையில்லாதவர்களாக பொய், லஞ்சம், செய்யும் வேலையில் உண்மையில்லாத தன்மை  இவைகளைக் கொண்டவர்களாக இருக்கின்றனர்.   

அன்பானவர்களே இப்படி ஒரு போலி வாழ்க்கை வாழ்ந்துகொண்டு ஜெபம் மட்டுமே நம்மைக் காப்பாற்றும் என எண்ணிக்கொண்டிருந்தோமானால் நிச்சயமாக ஏமாந்துபோவோம். 

ஜெபம், வாழ்க்கை இரண்டும் கிறிஸ்தவ வாழ்வின் இரு கண்கள். ஜெபம் எனும் கண்ணை வைத்துக்கொண்டு வாழ்க்கை எனும் மறு கண்ணை இழந்து ஒற்றைக் கண்ணர்களாக வாழ்வது பரிதபிக்கத்தக்கது.


இன்றைய வேதாகமச் சிறு செய்தி - நாள் :- 17.07.2020  வெள்ளிக்கிழமை
                                                      - சகோ.எம்.ஜியோ பிரகாஷ்  96889 33712
🎚️
 சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள். (  மத்தேயு 5 : 5 )

 Blessed are the meek: for they shall inherit the earth. (  Matthew 5 : 5 ) 

நமது தேசப்பிதா மகாத்மா காந்தி அடிகள் ஒரு மாபெரும் அஹிம்சாவாதியாக மாறிடக் காரணம் மேலே குறிப்பிட்டுள்ள வசனம் என்று கூறுகிறார். சாந்தகுணமுள்ளவர்கள் இந்தப் பூமியையே சுதந்தரிக்க முடியுமென்றால் நான் ஏன் இந்தியாவை இந்தக் குணத்தால் சுதந்தரிக்க முடியாது? எனும் கேள்வியே அவரை அஹிம்சை முறையினைப் பின்பற்றச் செய்தது. அதுபோல அவர் இந்திய மக்களது இதயங்களைச் சுதந்தரித்துக் கொண்டார். 

நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சந்தகுணத்தால் இந்த ஒட்டுமொத்த உலகத்தையும் சுதந்தரித்துக் கொண்டதை நாம் பார்க்கின்றோம். சாந்த குணத்துடன் வாழ  அவர் பல அறிவுரைகளைக் கூறினார். உதாரணமாக:-

"நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு. உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு". (  மத்தேயு 5 : 39, 40 )

இயேசு கிறிஸ்து இவற்றைச் சொல்ல மட்டும் செய்யவில்லை செயலிலும் செய்து காட்டினார். தன்னைக் காட்டிக்கொடுத்த யூதாசை அப்போதும்கூட, "சிநேகிதனே"  (மத்தேயு - 26:50) என்றே அழைத்தார். தன்னைச் சிலுவையில் அறைந்தவர்களுக்காக பிதாவிடம் மன்னிப்பு வேண்டி ஜெபித்தார். (லூக்கா - 23:34) அதனால்தான் கிறிஸ்து உலகை சுதந்தரித்து நமக்கு மீடப்பையும்  உண்டாக்கினார்.

சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள். (  சங்கீதம் 37 : 11 )

இன்று உலகினில் சண்டைகளும் பிரச்சனைகளும் ஏற்பாடக் காரணம் மக்களிடையே சாந்த குணம் இல்லாததினால்தான்.  ஒரு அடி நிலத்துக்காக பல தலைமுறைகளாக கோர்ட் வாசலுக்கு நடையாய் நடக்கும் குடும்பங்கள் பல. அந்த நிலத்தைத் தாங்களும் அனுபவிக்காமல் தங்கள் சந்ததிகளும் அனுபவிக்காமல் செத்து அழிகின்றனர். மட்டுமல்ல வாழ்நாள் முழுவதும் சமாதானத்தையும் இழக்கின்றனர்.

வேதம் கூறுகின்றது "சாந்தகுணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்தி, சாந்தகுணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார்."
(  சங்கீதம் 25 : 9 ) ஆம் அன்பானவர்களே, சாந்தகுணத்தோடு இருந்தோமானால் தேவ வழிகளை நமக்குப் போதித்து நடத்துவார்.

பொறுமை, அன்பு, தாழ்ச்சி போன்ற குணங்களை வாழ்வில் கடைபிடித்து தேவ வழியை அறிந்து நடக்க தூய ஆவியின் வழிநடத்தலை வேண்டுவோம் .


இன்றைய வேதாகமச் சிறு செய்தி - நாள் :- 16.07.2020  வியாழக்கிழமை

                                                         - சகோ.எம்.ஜியோ பிரகாஷ்  96889 33712

"பொல்லாங்குச் செய்கிறவன் எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்காதபடிக்கு ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்". (யோவான் - 3:20)

ஒளியை விரும்பும் உயிரினங்களுக்கும் இருளை விரும்பும் உயிரினங்களுக்கும் மிகப் பெரிய வித்தியாசமுண்டு. ஆந்தை, கூகை, தேள் கரப்பான், பூரான் இவைபோன்ற உயிரினங்கள் ஒளியை விரும்புவதில்லை. அவை எப்போதும் இருளான இடங்களையே தேடி பதுங்கி உயிர்வாழும். கற்களின் அடியிலும், மரப் பொந்துகளிலும் அவை தங்கியிருக்கும். அவை மறைந்திருக்கும் கற்களை அகற்றினால் அவை உடனே இருளைத்  தேடி ஓடும். 

திருடர்களைப்  பாருங்கள் அவர்கள்  எங்கே திருடச் சென்றாலும் அங்குள்ள விளக்குகளைத் தான் முதலில் அணைப்பர். ஒளியான இடத்தில இருளின் உயிர்களுக்கு இடமில்லை.


 உலக முடிவிலும் இருளான வாழ்க்கை நடத்தும் மக்களுக்கு இதுவே  நடக்கும். தேவன் இருளான நரகத்தில் தள்ளுமுன் பாவிகளின் பாவ வாழ்க்கையே அவர்களை இருளை நாடி ஓடச் செய்யும்.     

இதனை ஒரு உதாரணம் மூலம் விளக்கலாம். ஒரு திருமண வீட்டில் மேடையில் மணமக்கள் அமர்ந்திருக்கும்போது நல்ல ஆடையை அணிந்துள்ள விருந்தினர்கள் மேடையில் ஏறி நேரடியாக மணமக்களை வாழ்த்துவார்கள். மேடை வண்ண விளாக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்துக்கொண்டிருக்கும். ஆனால் அங்கு அரைகுறை ஆடையுடனோ நிர்வாணமாகவோ ஒரு மனிதன் வர நேர்ந்தால் அவன் மேடையில் வருவானா ? வெட்கப்பட்டு தன்  மானத்தை மறைக்க இருளான இடத்தைத் தேடி ஓடுவானல்லவா?

ஒளியான வாழ்க்கையைப்  பகைத்து இருளான பாவ வாழ்க்கையில் வாழும் மனிதன் இப்படியே இருப்பான். இரட்சிப்பின் ஆடை அணிந்தவர்கள் மணவாளனான இயேசுவிடம் நெருங்கி உறவாட , அந்த ஆடையில்லாத நிர்வாண மனிதன் தானாகவே தனக்கும் பிசாசுகளும் ஆயத்தம்பண்ணப்பட்ட இருளைத் தேடி ஓடுவான். ஆம் ஒளிக்கும் இருளுக்கும் சாம்மந்தமேது ? 

"ஒளியானது உலகத்தில் வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாய் இருக்கிறபடியால் அவர்கள் ஒளியைப் பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினை தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது" (யோவான் -3:19)

"உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி"    (யோவான் -1:9) மெய்யான அந்த ஒளியிடம் வரும்போது எந்த மனுஷனும் பிரகாசமடைவான். 

சந்திரனுக்கு சுய  ஒளி கிடையாது. ஆனால் அது சூரியனுடைய ஒளியை வாங்கி பூமிக்கு ஒளி கொடுக்கிறது.  அதுபோலவே கிறிஸ்து இல்லாத மனிதன் கிறிஸ்துவுக்குத் தன்னை ஒப்புக் கொடுக்கும்போது நீதியின் சூரியனான அவரது ஒளியைப் பெற்று பிறருக்கு ஒளிகொடுப்பவனாக மாறுகின்றான். "நான்  உலகத்திலிருக்கையில் உலகத்துக்கு ஒளியாயிருக்கிறேன் " (யோவான் 9:5) என்று கூறிய இயேசு கிறிஸ்து "நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாக இருக்கிறீர்கள்" (மத்தேயு - 5:14) என்று இதனால்தான் கூறினார். 

நீதியின் சூரியனான இயேசு கிறிஸ்து நம்மை ஒளிரடையச் செய்ய நம்மை அவருக்கு முற்றிலும் ஒப்படைப்போம்.  மேலும் நாம் அவரது ஒளியைப் பெற்றுக்கொண்டவர்களாக இருந்தால் அது இருளடைந்திடாமல் பாதுகாப்போம். இயேசு கிறிஸ்து கூறுகின்றார், " உன்னிலுள்ள வெளிச்சம் இருளாகாதபடிக்கு எச்சரிக்கையாய் இரு "         ( லூக்கா - 11:35)



இன்றைய வேதாகமச் சிறு செய்தி - நாள் :- 15.07.2020  புதன் கிழமை

                                                         - சகோ.எம்.ஜியோ பிரகாஷ்  96889 33712

"அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று. உலகமோ அவரை அறியவில்லை." (  யோவான் 1 : 10 )

"He was in the world, and the world was made by him, and the world knew him not."
(  John 1 : 10 )

இயேசு கிறிஸ்துவைப் பற்றி அவரது அன்புச்  சீடர் யோவான் குறிப்பிடும் உண்மை இது. இயேசு கிறிஸ்து உலகினில் இருந்தபோது எப்படி மக்கள் அவரை அறியாமல் இருந்தார்களோ  அதுபோலவே இன்றும் பல கிறிஸ்தவர்கள் இருக்கின்றனர்.  

பல கிறிஸ்தவர்களும் இன்று இயேசுவை அற்புத அதிசயங்களை செய்யும் ஒரு மந்திரவாதியாக, நோய் ஏற்படும்போது ஒரு மருத்துவராக, தாங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது வீட்டை பாதுகாத்திடும் ஓர் காவல்காரனாக இப்படிப் பல விதங்களில் அவரைப் பார்க்கின்றனர். அவரை தேவாதி தேவனாக, மகத்துவமுள்ள கர்த்தாதி கர்த்தராக, இரக்கமுள்ள ஒரு தகப்பனாக பார்ப்பவர்கள் வெகு குறைவான மக்களே. 

ஒரு காதலன் அல்லது காதலி எப்படி தனது துணையிடம் பேசி உறவாட விரும்புவார்க்ளோ  அதுபோல எந்த வித  எதிர்பார்ப்புமில்லாமல்  இயேசுவை இயேசுவுக்காகவே அன்புசெய்யும் உள்ளங்கள் வெகு சொற்பமான மக்களே. ஆனால் இயேசு அப்படிப்பட்ட உள்ளங்களுக்காக தாகத்தோடு காத்திருக்கின்றார். 

இயேசு உலகினில் வாழ்ந்தபோது யூதர்கள் பலரும் அவரை தேவ குமாரனாக ஏற்றுக்கொள்ளவில்லை. அவரை அவர்கள் மரியாளின் மகனாக, யோசேப்பின் மகனாகத்தான் பார்த்தனர். அதற்குமேல் அவரை அவர்களுக்குத் தெரியவில்லை. 

"இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா? யாக்கோபு யோசே சீமோன் யூதா என்பவர்கள் இவனுக்குச் சகோதரர் அல்லவா?  இவன் சகோதரிகள் எல்லாரும் நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? இப்படியிருக்க, இதெல்லாம் இவனுக்கு எப்படி வந்தது? "  (  மத்தேயு 13 : 55, 56 ) என்று சொல்லி, அவரைக் குறித்து இடறலடைந்தார்கள்.

அன்பானவர்களே , இன்றும் நாம் இயேசுவை இப்படிப் பார்த்தோமானால் மிகவும் பரிதபிக்கத்தக்கவர்களாக இருப்போம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் பிறந்த ஒரு சாதாரண மனிதனாக  அவரை எண்ணிக்கொண்டதையே   அது குறிக்கும் . அப்படியானால் நாம்  சர்வ வல்லமையுள்ள தேவனுக்கும் சாதாரண மனிதனுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களாக ஒரு  பெயர் கிறிஸ்தவராகவே இருப்போம்.   

"அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை." (  யோவான் 1 : 2,3 ) என வேதம் தெளிவாகக்  கூறுகின்றது. அப்படியானால் அவர் எந்த ஒரு மனிதப் பிறவியோடும் ஒப்பிடமுடியாதவராகவே இருக்கிறார். 

அவர் ஆபிரகாமுக்கு முன்பே உள்ளவர். "ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்". (  யோவான் 8 : 58 ) என்று மிகத் தெளிவாகவே யூதர்களுக்கு அறிக்கையிட்டவர்.

அன்பானவர்களே , தேவனை அறியும் அறிவு இல்லையானால் இன்னும் நாம் யூதர்களைப்போலவே இருப்போம். தேவனிட ம் மெய்யான அன்பும் விசுவாசமும் நமக்குள் வராது. பெயரளவில் அவரை கடவுள் என்று கூறிக்கொண்டு ஒன்றுக்கும் உதவாத குருட்டு வழிபாடுகளைக் கடைபிடித்துக் கொண்டிருப்போம்.  அவரை அறியும் ஞானத்தை பரிசுத்த ஆவியானவர் நமக்குத் தந்திட வேண்டுவோம். 

கிறிஸ்துவை சர்வ வல்லமையுள்ள தேவனாக ஏற்றுக்கொள்ளும்போது மட்டுமே  நமது ஆவிக்குரிய வாழ்வில் பெரிய மாறுதல்களையும் ஆசீர்வாதங்களையும் பெற்று மகிழமுடியும் .


இன்றைய வேதாகமச் சிறு செய்தி - நாள் :- 14.07.2020  செவ்வாய்க்கிழமை

                                                         - சகோ.எம்.ஜியோ பிரகாஷ்  96889 33712 

"


பல ஆவிக்குரிய சபைப் போதகர்களும் விசுவாசிகளும் சமூக வலைத் தளங்களில் வெளியிடும் கருத்துக்கள் உண்மையில் கிறிஸ்தவ போதனைகளுக்கு முரணான கருத்துகளேயாகும். சாமீப காலங்களில் இன்றய ஆளும் பாரதீய ஜனதா கட்சி செயல்படும் முறையினை வைத்து இவர்கள் வெளியிடும் கருத்துக்கள் சிலவற்றைப் பாப்போம். 

"பாரதீய ஜனதா கட்சி தமிழகத்திலும் இந்தியாவிலும் இருந்து முற்றிலும் அகற்றப்பட உபவாசமிருந்து ஜெபிப்போம்" என ஒரு பதிவு ....

"அடுத்த தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி தமிழகத்தில் தோல்வி அடையவேண்டி உபவாசம் "

"கிறிஸ்தவர்களுக்கு எதிரான சக்திகள் அழித்து ஒழிக்கப்பட உபவாசம்"

இந்தக் கருத்துக்களை வெளியிடும் நபர்கள் தங்களை கிறிஸ்தவர்களின் பாதுகாவலர்கள்போல  காண்பித்துக் கொண்டாலும் பொதுவாக இவர்கள் அனைவரும் ஆவிக்குரிய வழிநடத்துதல் உள்ளவர்கள் கிடையாது. ஏனெனில் இவர்கள் ஜெபம், உபவாசம் இவை பற்றி கொண்டுள்ள கருத்துக்களும் இவர்களது செயல்களும் கிறிஸ்தவ போதனைகளுக்கு முரணானவையாகும்.




இன்றைய வேதாகமச் சிறு செய்தி - நாள் :- 13.07.2020  திங்கள்கிழமை

                               - சகோ.எம்.ஜியோ பிரகாஷ்  96889 33712   
"கர்த்தருடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார், தரித்திரருக்குச் சுவிசேஷத்தை பிரசிங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார். இருதயம் நறுங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்திப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும் கர்த்தருடைய அனுகிரக வருஷத்தைப் பிரச்சித்தப்படுத்தவும் என்னை அனுப்பினார்" (லூக்கா - 4:18,19 & ஏசாயா - 61:1,2)

இந்த வசனத்துக்கு உலகப் பொருள்கொண்டு இயேசு கிறிஸ்து ஒரு இடது சாரி சிந்தனையுள்ள மனிதன் (கவனிக்க, மனிதன்) என்று எண்ணி அதற்கேற்ப சம்பவங்களை வேதாகமத்திலிருந்து எடுத்துக் காட்டி விளக்கும்  சில போதகர்கள் சில கிறிஸ்தவ சபைப் பிரிவுகளில் இருக்கின்றனர். பத்துப் பதினைந்து ஆண்டுகள் இறையியல் கல்லூரியில் பயின்றவர்கள் இவர்கள். இறையியல் படிப்பதால் ஒருவன் தேவனை அறிய முடியாது என்பதற்கு இவர்கள் சாட்சிகளாக உள்ளனர். 

இந்த ஊழியக்காரர்கள் மற்றும் சமூக சிந்தனையாளர்கள்களின் கணக்குப்படி இன்று சமூக சேவை செய்யும் பலரும்  கிறிஸ்துவின் அடிச்சுவட்டைப் பின்பற்றுபவர்களாக சித்தரிக்கப்படுகின்றனர். வெறும் ஜெபம் ஆராதனையைவிட இத்தகைய இரக்கச் செயல்பாடுகளே போதும் எனப் போதனைவேறு  செய்கின்றனர்.

வேதம் என்ன கூறுகிறது என்பதைக் குறித்து ஒரு தெளிவான பார்வை இருந்தாலே இத்தகைய வேதப்  புரட்டர்களுக்குப்  பதில் கூற முடியும். நம் நீதிச் செயல்களால் மட்டும் நாம் நீதிமானாக முடியாது என வேதம் கூறுகிறது.

இன்று சமூக சேவை செய்கிறோம் என்று கூறிக்கொள்பவர்களில் எத்தனைபேர் அதனை ஒரு சேவையாகச் செய்கின்றனர்? சமூக சேவை மற்றும் மக்களுக்கான விடுதலைச் சேவைகளில் ஈடுபடும் சேவை நிறுவனத் தலைவர்கள் எதற்காக அந்தச் சேவையில் ஈடுபடுகின்றனர் என்று பார்த்தால்:-

வெளிநாட்டிலிருந்து அல்லது உள் நாட்டிலிருந்து பண உதவி கிடைப்பதால் அப்படிச் செய்கின்றனர், அப்படிச் செய்வதால் தங்களது பெயர் பிரபலமடைவதால் செய்கின்றனர்,  ஏழை மக்களை முன்னிறுத்தி சேவை செய்வதால் தங்களது பிழைப்பு நடக்கிறது, எனவே சேவை செய்கின்றனர்.

இன்று சமூக சேவை எனும் பெயரில் வெளிநாடுகளிலிருந்து பணத்தைப் பெற்று தங்களது குடும்பத்தை வளர்த்துக்கொள்ளும் பலரை நாம் பார்க்கிறோமே? சுனாமி இந்தியாவைத் தாக்கியபோது மக்களுக்காக வந்த பணத்தைச் சுருட்டி கார் பங்களா என வாங்கி குவித்த தொண்டு நிறுவனங்கள் எத்தனை எத்தனை?

ஆம் கிறிஸ்து ஒருவனுக்குள்  உருவாக்காவிட்டால் அவன் இப்படிக் கொள்ளைக்காரனாகத்தான் இருப்பான். நமது நல்லச் செயல்களல்ல, செயல் செய்யப்படும் நோக்கத்தை தேவன் பார்க்கிறார்.  

ஆம் மனிதனது நினைவுகள் அவன் சிறு வயது துவங்கி  பொல்லாதவைகளாகவே இருக்கின்றன. கிறிஸ்துவின் ஒளி ஒரு மனிதனுக்குள் வரும்போது மட்டுமே அவன் தனது சுய ஆளுகையிலிருந்து விடுபட முடியும். எனவேதான் பரிசுத்த பவுல் அடிகள், "மனுஷன் நியாயப் பிரமாணத்தின்  கிரியைகளினால்  அல்லாமல் விசுவாசத்தினாலே நீதிமானாக்கப்படுகிறான் " (ரோமர்- 3:28) என்று கூறுகிறார். நியாயப்  பிரமாணம் உன்னிடத்தில் அன்புகூருவதுபோல பிறனிடத்திலும் அன்புகூரு என்று கூறுகிறது.  அன்பினால் நான் ஏழைக்குச் செய்கிறேன் என்று ஒருவன் கூறினாலும் அது அவன் கிறிஸ்துவின்மேல் விசுவாசமுள்ளவனாக மாறினால் மட்டுமே பூரணமாகும்.

சேவை செய்வது, ஏழைகளுக்கு கொடுப்பது, உதவுவது நல்லதுதான் என்றாலும் ஒரு மனிதன் தேவனுடைய ஆவியினால் ஆட்கொள்ளப் பட்டால்தான் அது பூரணப்படும். நம்முடைய இருதயத்தில் தேவனுடைய அன்பின் ஆவியானவர் ஊற்றப்படவேண்டும். அப்போது சுய லாப நோக்கங்கள் அழிந்துவிடும்.

கிறிஸ்து உலக ஆசீர்வாதத்துக்காக  உலகினில் வரவில்லை.  கிறிஸ்து மக்களை தேவனுடைய ராஜ்யத்துக்கு ஏற்புடையவர்களாக மாற்றிட வழி காட்டிடவும் அதற்காக தனது இரத்தத்தைச் சிந்தி மறுபிறப்பு எனும் இரட்சிப்பின்  வாசலைத் திறந்திடவும் வந்தார். 

நிக்கொதேமு எனும் யூத போதகரிடம்  இயேசு கிறித்து கூறினார், " ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்" (யோவான் - 3:3) பல வருடங்களாக மக்களுக்கு தேவனைப் பற்றி போதித்த ஒரு மிகப் பெரிய யூத போதகருக்கே மறுபடி பிறக்கவேண்டியது அவசியமானதாக இருக்குமானால் நமக்கு அது எவ்வளவு அதிகம் தேவை?

கிறிஸ்துவின் மறுபிறப்பு எனும் இரட்சிப்பை ஒருவன் பெற்றால் மட்டுமே அவன் கிறிஸ்துவுக்கு ஏற்ற ஊழியனாக  இருக்க முடியும். அத்தகையவனே கிறிஸ்துவின் அன்புடன் சேவை செய்ய முடியும்.




இன்றைய வேதாகமச் சிறு செய்தி - நாள் :- 12.07.2020  ஞாயிற்றுக்கிழமை

                                                     - சகோ.எம்.ஜியோ பிரகாஷ்  96889 33712   

"பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே என்னை நோக்கிப் பாருங்கள், அப்போது இரட்சிக்கப்படுவீர்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை ". (ஏசாயா - 45:22)

நோக்கிப் பார்த்தால் உறவு வளரும். நமது வீட்டிற்கு வருபவரை நாம் நோக்கிப் பார்க்காமல் அவர்கள் வரும்போது வேறு எங்கேயோ நோக்கி வேறு ஏதாவது பணியில் இருந்தால் அவர்கள் நம்மைப் பற்றி என்ன எண்ணுவார்கள்?  அதன் பிறகு நமது வீட்டிற்கு வருவார்களா?

நோக்கிப் பார்த்தல் என்பது மெய்யான உறவுக்கு அடையாளம். திருடர்களும் திருட்டு புத்தி உள்ளவர்களும் பிறரை முகத்துக்கு முகம் பார்ப்பதில்லை.  ஏனென்றால் அவர்களது இருதயமே அவர்களை குத்தும். தேவன் கூறுகின்றார், உங்களிடம் குறைகள் குற்றங்கள் உண்டு என்பது எனக்குத் தெரியும் ..ஆனால் என்னை நோக்கிப் பாருங்கள், அப்போது இரட்சிக்கப்படுவீர்கள்.

சங்கீதம் 121:1 கூறுகிறது, "எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்". பர்வதம் என்பது மலை. நாம் சில வேளைகளில் எவரிடமாவது உதவி கேட்கும்போது , " இந்தக் காரியத்தில் நான் உங்களைத்தான் மலைபோல நம்பியுள்ளேன்" என்று கூறுவதுண்டு.  இங்கே சங்கீதக்காரன் தேவனை தனக்கு ஒத்தாசை தரும் மலையாகப் பார்க்கின்றார். 

ஆபிரகாம், மோசே , யோசேப்பு, தானியேல்...இன்னும் வேதத்தில்  அனைத்துப் பரிசுத்தவான்களுமே இப்படி தேவனை நோக்கிப் பார்த்தவர்கள்தான். எனவேதான் தாவீது கூறுகின்றார், "அவர்கள் அவரை நோக்கிப் பார்த்துப் பிரகாசமடைந்தார்கள் ..அவர்கள் முகங்கள் வெட்கப்பட்டுப்போகவில்லை" (சங்கீதம் - 34:5)

தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களது வாழ்க்கையில் ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுவார்கள். அவர் முதல் அமைச்சராக இருந்தபோது அவர் அலுவலகம் செல்லும் வழியில் ஒரு ஏழை மனிதன் தினம்தோறும் ஒரு குறிப்பிட்ட சாலை ஓரம் நின்றுகொண்டு அவரது கார் எப்போது வரும் என அவரைப் பார்க்க நின்றுகொண்டு இருப்பானாம். இதனை  எம்.ஜி.ஆர். அவர்கள் பல நாட்களாகக் கவனித்து வந்திருக்கின்றார். ஒருநாள் தனது கார் ஓட்டுனரிடம் தனது காரை அவனருகில் நிற்பாட்டச்சொல்லி அவனைக் கூப்பிட்டு விசாரித்திருக்கின்றார். 

அவன் சொன்னான், "ஐயா வேறு ஒன்றுமில்லை. நான் உங்கள் ரசிகன். உங்கள் முகத்தை தினமும் பார்க்கவேண்டுமென்றுதான் நான் இங்கே நிற்கின்றேன். உங்கள் கார் இந்த இடத்தைக் கடந்து சென்ற பின்பு உங்கள் முகத்தைப் பார்த்த திருப்தியோடு எனது அடுத்த வேலைகளைக் கவனிக்கச் செல்வேன்".

இந்தப் பதில் எம்.ஜி.ஆர். அவர்களை ஆச்சரியப்படுத்தியது. அவர் உடனே தனது உதவியாளரிடம் அந்த மனிதனைப் பற்றிய விபரங்களை சேகரித்துக்கொண்டு அவனையும் கூட்டிவா என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.  அந்த உதவியாளர் அதுபோல அவனைக் கூட்டிக்கொண்டு அவனைப் பற்றிய செய்தியினை எம்.ஜி.ஆரிடம் கூறியுள்ளார். அவனது தேவைகளை அறிந்த எம்.ஜி.ஆர். அவன் எதிர்பார்த்திராத ஒரு பெரிய தொகையினைக் கொடுத்து அவனை அனுப்பிவைத்தாராம். 

அன்பானவர்களே ஒரு சாதாரண உலக அதிகாரமுள்ள ஒரு மனிதனது முகத்தை நோக்கிப்பார்த்த மனிதன் இப்படி ஒரு உலக ஆசீர்வாதத்தைப் பெற்றானென்றால், அண்டசராசரங்களைப் படைத்தது ஆளும் தேவாதி தேவனை தினமும் நோக்கிப் பார்க்கும் நாம் எத்தகைய ஒரு மேலான ஆசீர்வாதத்தைப் பெற்று மகிழ முடியும் என எண்ணிப்பாருங்கள் !

வேதாகமம் முழுவதும் பல நூறு சம்பவங்கள் இப்படி தேவனை நோக்கிப் பார்த்த மக்கள் அடைந்த ஆசீர்வாதத்தைக் குறிப்பிடுகின்றன.

அன்பானவர்களே, நமக்காக இரத்தம் சிந்தின இயேசு கிறிஸ்துவை  நோக்கிப் பாருங்கள் .......
ஆணிகளால் கடாவப்பட்ட அவரையே  நோக்கிப் பாருங்கள் ....
முதுகெல்லாம் காசை அடிகளால் உழப்பட்ட அவரை நோக்கிப் பாருங்கள் ......
நாம் உயிர் பெற வேண்டி தன்னுயிர் கொடுத்தவரை நோக்கிப் பாருங்கள் .....
மரித்து உயிர்த்து ஒருபோதும் சாகாமை உள்ளவராய் ஜீவித்திருக்கும் தேவாதி தேவனை நோக்கிப் பாருங்கள் .....

அப்போது இரட்சிக்கப்படுவீர்கள் 

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்