வேதாகமச் செய்தி - ஆதவன் - ஆகஸ்ட் 2020

ஆதவன் - ஆகஸ்ட் - 18,  2020 செவ்வாய்க்கிழமை
இன்றைய  வேதாகமச் சிறு செய்தி
                                                                             - சகோ. எம். ஜியோ பிரகாஷ் 

"உன்னைக்குறித்தும் உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாயிரு, இவைகளில் நிலைகொண்டிரு, இப்படிச் செய்வாயானால், உன்னையும் உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய்."
(  1 தீமோத்தேயு 4 : 16 )

வேதாகம வசனங்களுக்கும் உலக புத்தகங்களிலுள்ள வார்த்தைகளுக்கும் மிகப் பெரிய வித்தியாசம் உண்டு. உலக கவிஞர்களும் ஞானிகளும் மக்களுக்குப் பல அறிவுரைகளைக் கூறிச் சென்றுள்ளனர். ஆனால் அதில் எத்தனை சதவிகிதத்தினை அவர்கள் கடைபிடித்தனர் என்று பார்ப்போமானால் மிக குறைவாகவே இருக்கும். ஏனேனில் பிறருக்கு அறிவுரை கூறுவது எளிது. ஆனால், அவற்றினைக் கடைபிடிப்பது கடினம்.  

ஆனால் நாம் பேசுவதை வாழ்வில் கடைப்பித்து பேசுவோமானால் அந்த வார்த்தைகள் உயிருள்ள வார்த்தைகளாக இருக்கும். பிரபலமாக  உள்ள அரசியல்வாதிகளைப்  பாருங்கள் அவர்கள் பேசுவதற்கும் அவர்களது செய்கைகளுக்கும்  சம்மந்தமே இருக்காது. ஏழைகளைப்  பற்றியும் வறுமையினைப் பற்றியும் அழகாகப் பேசுவார்கள். ஆனால் நடைமுறை வாழ்க்கையில் அவர்கள் செல்வச் செழிப்பில் புரள்பவர்களாகவும் ஏழைகளை அவமதிப்பவர்களாகவுமே இருப்பார்கள்.   

கிறிஸ்துவை உலகுக்கு அறிவிக்கும் போதகன் இப்படி இருக்கக் கூடாது என்று பவுல் அடிகள் கூறுகிறார். "இவைகளில் நிலைகொண்டிரு, இப்படிச் செய்வாயானால், உன்னையும் உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய்". என்கிறார். மற்றவர்களை இரட்சிப்புக்கு நேராக நடத்தவேண்டுமானால் முதலில் நாம் போதிக்கும் போதனைகளுக்கு ஏற்றபடி வாழும் அனுபவத்தினுள் இருக்கவேண்டும்.  இல்லையெனில் நமது பேச்சு அற்பமான அரசியல்வாதியின் பேச்சுபோலவே இருக்கும். அந்தப் பேச்சு மற்றவர்கள் இருதயத்தில் செயல்புரியாது.

தமிழகத்தின் பிரபல கவிஞர் ஒருவர் விபச்சாரத்திலும்  மது மயக்கத்திலும் வாழ்வைக் கழித்தார். ஆனால் அவர் மதுவையும் விபச்சாரத்தையும் பிறர் கைக்கொள்ளக் கூடாது எனப் போதித்தார். பல பாடல்கள் எழுதினார். இதுபற்றி அவரிடம் கேட்போருக்கு , "எனது அனுபவத்திலிருந்து பேசுகிறேன் என்பார்".  அவர் மதுவையும் மாதுவையும் முழுவதும் அனுபவித்தார். ஆனால் பிறர் அவற்றை அனுபவிக்கக் கூடாது எனப் போதித்தார். ஆனால் அவரது அந்தப் போதனையின் பயன் என்ன? அவருக்கும் பயனில்லை மற்றவர்களுக்கும் பயன்படவில்லை. குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே அந்தப் பேச்சு நிலை நின்றது. உலக நீதி நூல்கள் அனைத்துமே இத்தகையவையே. தமிழில் உள்ளதுபோல நீதி நூல்கள் வேறு எந்த மொழிகளிலுமே இல்லை. ஆனால் பயன் என்ன?

இயேசு கிறிஸ்து, "முதலில் உன் கண்ணில் இருக்கிற உத்திரத்தை  எடுத்துவிட்டு பிறன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுக்க வழிப்பார்" என்றார். பிறர் கண்ணிலிருக்கிற துரும்பை எடுப்பது நல்ல செயல்தான். ஆனால் அதற்குமுன் நமது கண் சுத்தமாக இருக்கவேண்டியது முக்கியம்.  

பவுல் அடிகள் மேற்படி வசனங்களை தனது சீடனான திமோத்தேயுவுக்கு எழுதினார். சுவிஷேச அறிவிப்பின் நோக்கமே பிறரை இரட்சிப்பில் நடத்துவதுதான். அந்த நோக்கம் நிறைவேறவேண்டுமானால் தான் போதிப்பதை கடைபிடித்து போதிக்கவேண்டும். இன்றய பெரும்பாலான சுவிசேஷ அறிவிப்புகள் பயனற்றுப் போவதற்கு காரணம் அதனை அறிவிப்பவர்கள் எந்த ஒரு போதனையிலும் சுய அனுபவமோ அவற்றைக் கடைபிடித்தோ போதியாமல் இருப்பதுதான். 

பெரிய போதகர்களுக்கு மட்டுமல்ல, நாம் எல்லோருக்குமே இது பொருந்தும். அன்பானவர்களே, வேத வசனங்களை வாழ்வில் கடைபிடிக்க முயற்சி செய்யுங்கள். அப்போதுமட்டுமே நாம் பிறருக்கு வெளிச்சமாக முடியும்.  நமது செயலைப் பார்த்தே மற்றவர்கள்  கிறிஸ்துவை அறிந்து இரட்சிப்புக்கு நேராக வருவார்கள். 

ஆதவன் - ஆகஸ்ட் - 17,  2020 திங்கள்கிழமை
இன்றைய  வேதாகமச் சிறு செய்தி

                                                                                - சகோ. எம். ஜியோ பிரகாஷ் 

"மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது." (  லுூக்கா 15 : 31 )

லூக்கா 15 ம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இயேசு கிறிஸ்துக் கூறிய இந்த உவமை மிகச் சிறப்பானது. இதனை ஊதாரி மைந்தன் உவமை என்றும் நல்ல தகப்பன் உவமை என்றும் கூறுவார்கள். 

பொதுவாக இந்த உவமை தகப்பனின் அன்பை விளகுவதாக உள்ளது என்பது நமக்குத் தெரியும்.  தவறு செய்த மகனிடம் தகப்பன் எப்படி அன்பாயிருந்து அவன் எப்போது மனம் திரும்பி வருவான் என ஏக்கத்தோடு காத்திருக்கிறான். இது, தேவன் நாம் மனம் திரும்பி அவரிடம் வர விரும்புவதை ஆவலுடன் எதிர்பார்ப்பதைக்  குறிக்கிறது. 

ஆனால் இந்த உவமையில் வேறொரு மேலான கருதும் அடங்கியுள்ளது. அதாவது இளைய மகன் தகப்பனைவிட,  தகப்பனோடுள்ள உறவைவிட,  தகப்பனது  சொத்துக்களை அதிகம் விரும்பினான். அவனுக்கு முதலில்  தெரியவில்லை தகப்பனோடு உறவாய் இருந்தாலே அந்த சொத்துக்கள் எல்லாம் தனக்கு கிடைக்கும் என்று.  வறுமை வாட்டியபின்னரே தெரிந்தது. 

தகப்பனிடம் உள்ள சொத்துக்களை பாகம் பிரித்து வாங்கிவிட்டு,  அயலூருக்குச் சென்று அதனை ஊதாரித்தனமாக செலவழித்து பின் வறுமை வாட்டியபின்  மனம் திரும்பி தகப்பனிடம் வருகிறான்.  

இன்று கிறிஸ்தவர்கள் பலரும் இந்தத் தவறையே  செய்கின்றோம். தேவனை விட,  அவரோடுள்ள உறவைவிட அவர் தரும் உலக ஆசீர்வாதங்களையே விரும்புகின்றோம். பல கிறிஸ்த ஊழியர்களும் ஆசீர்வாதம் என்று இதனையே குறிப்பிடுகின்றனர். ஆனால் தேவனோ நாம் அவரோடு உறவுடன் வாழவேண்டுமென விரும்புகின்றார். ஒரு வீட்டை எடுத்துக் கொள்ளுங்கள் வீட்டிலுள்ளவர் அனைவரும் ஒருவருக்கொருவர் பேசி உறவாடி இருப்பதுதானே மகிழ்ச்சியைக் கொடுக்கும்?  தேவன் நாம் அவரோடு ஒரு உறவுடன் வாழ வேண்டுமென விரும்புகின்றார். 

இன்று பலரது ஜெபங்களும் வேண்டுதல்களும் தேவனை உள்ளத்தில் தேடுவதாக இருப்பதில்லை. அவர்கள் ஜெபங்கள் இந்த ஊதாரி மைந்தனைப்போல தகப்பன் சொத்துக்களைக் குறிவைத்தே உள்ளன. உலக ஆசீர்வாதங்களைப் பெறவே ஜெபிக்கின்றனர். அதற்காகவே தேவனைத் தேடுகின்றனர். அவர் இரக்கமுள்ள தகப்பனாக இருப்பதால் நமது வேண்டுகோளை ஏற்று நமது ஜெபத்துக்குப் பதில் அளிக்கலாம். ஆனால் அது ஊதாரி மைந்தன் பெற்ற செல்வத்தைப்  போலவே இருக்கும். தேவன் இந்தத் தகப்பனைபோல  நமக்காக காத்திருக்கின்றார். நாம்  அவரோடு நீடித்த உறவில் வாழ வேண்டுமென விரும்புகின்றார்.எப்போது நீ என்னை விரும்பி வருவாய்? என ஏக்கத்தோடு காத்து இருக்கிறார். 

அப்படி நாம் வரும்போது அவர் மகிழ்ச்சியுடன் மூத்த மகனிடம் கூறியதுபோல நம்மைப் பார்த்தும் கூறுவார். " மகனே, மகளே , நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது"

தேவனது மெய்யான மொத்த ஆசீர்வாதத்தையும் பெறுவதே நமது நோக்கமாக இருக்கவேண்டும். இதனால்தான் இயேசு கிறிஸ்துக் கூறினார், "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்." (  மத்தேயு 6 : 33 ) தேவனைத் தேடினாலே அவரது ஆசீர்வாதங்கள் தாமாக நம்மைத் தேடிவரும்.

நாமாக பாகம் பிரித்து தேவனிடம் கேட்டு அற்ப ஆசீர்வாதங்களை பெற்று வருந்துவதைவிட சகல ஆசீர்வாதங்களுக்கும் ஊற்றாகிய அவரையே பற்றிக்கொள்வோம். கர்த்தர்தாமே நம்மை இம்மை மற்றும் மறுமைக்குரிய ஆசீர்வாதங்களால் நிரப்புவார். 


ஆதவன் - ஆகஸ்ட் - 16,  2020 ஞாயிற்றுக் கிழமை
இன்றைய  வேதாகமச் சிறு செய்தி

                                                                  - சகோ. எம். ஜியோ பிரகாஷ் 

"ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வர பலவந்தம் பண்ணினால் அவனோடு இரெண்டு மைல் தூரம் போ " (மத்தேயு -5:41)

இந்த வசனத்தின் உள்ளான கருத்து  ஒருவன் உன்னிடம் எதையாவது கேட்டால் அவனுக்கு அதனைக் கொடுத்துவிடு என்பதாகும். மட்டுமல்ல அவன் விரும்பியதற்கும் அதிகமாகவும்  அவனுக்குக்  கொடு. இது நடைமுறையில் கடைபிடிக்க மிகவும் சிரமமான செயல். ஆனால் தேவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழும்போது அப்படி நாம் கொடுப்பதை தேவன் நமக்குத் திருப்பித் தருவார். இந்த விஷயத்தில் நான் இன்னும் முழுமை அடையவில்லை.  அதாவது நான் அப்படிக் கொடுப்பதில்லை. என்றாலும் தேவன் இந்த வசனம் உண்மை என்பதை எனது ஆவிக்குரிய வாழ்வின் ஆரம்ப காலத்தில்  எனக்கு மெய்பித்துக் காட்டினார்.     

1994 ஆம் ஆண்டில் நடந்த சம்பவம் இது . அப்போது நான் ஒரு பழைய ராஜ்தூத் பைக் வைத்திருந்தேன்.  லிட்டருக்கு பதினெட்டு அல்லது இருபது கிலோமீட்டர்தான் அது ஓடும். தவிர எனக்கும் அப்போது வேறு வருமானம் கிடையாது.  எனவே மிகச் சிக்கனமாகவே அதனைப் பயன்படுத்துவேன். நாகர்கோவில் வேப்பமூடு அருகிலுள்ள ஒரு சர்ச் காம்பவுண்டினுள் அதனை நிறுத்திவிட்டு அருகிலுள்ள பிற இடங்களுக்கு பேருந்தில் செல்வேன். திரும்பிவந்து அதனை எடுத்து வீட்டிற்குச் செல்வேன். ஒருமுறை அப்படி பைக்கை நிறுத்திவிட்டுச் செல்லும்போது எனது ஆவிக்குரிய  நண்பர் ஒருவர் வந்து உங்கள் பைக்கில் பெட்ரோல் இருக்கிறதா? என்று கேட்டார். அவர் கேட்ட தோரணை அவர் வேறு எங்கோ செல்லத் திட்டமிட்டு கேட்பதுபோல இருந்தது. 'பெட்ரோல் இல்லை என்று கூறிவிடுவோமா?' என எண்ணினேன். பின்னர் ஒரு நிமிடம் யோசித்துவிட்டு, "பெட்ரோல் இருக்கிறது"  என்றேன். அப்படியானால் பைக்கை எடுங்கள் எனக்கு சமீபத்தில் ஒரு இடம்வரைப் போகவேண்டும் என்றார்.  எனக்கு மனமில்லை. ஆனால் அவரோ விடவில்லை.

இறுதியில் அவரது வற்புறுத்தலை மறுக்க முடியாமல்,  சரி,' தேவன் பார்த்துக்கொள்வார்' எனும் எண்ணத்தில்  பைக்கை எடுத்துவிட்டு இருவரும் சென்றோம். திரும்பிவந்தபின் வீட்டிற்குச் செல்லுமுன் அருகிலுள்ள பெட்ரோல் நிலையத்தில் சென்று ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டேன். பைக்கை நிறுத்திவிட்டு கவுண்டரில் சென்று ஒரு லிட்டருக்கான பணத்தைச் செலுத்திவிட்டுத் திரும்பிவந்தேன். (அப்போதெல்லாம் கவுண்டரில்தான் பெட்ரோலுக்கு பணம் செலுத்த வேண்டும்)  அப்போது அந்த பெட்ரோல் நிலைய பணியாளர்  ஒரு சிறிய அளவையில் பெட்ரோலை வைத்துக்கொண்டு என்னிடம் , "சார் பெட்ரோல் டேங்கை திறவுங்கள் இதனை ஊற்றவேண்டும் என்றார். எனக்கு எதுவும் புரியவில்லை. "ஏன்? முதலில் அளவு குறைவாக ஊற்றிவிட்டீர்களா?" என்றேன். 

அவர் கூறினார், "இல்லைசார் ஒரு புல்லட்க்காரர் வந்து பெட்ரோல் போட்டார். டேங்க் நிரம்பிவிட்டது. அவர்தான் உங்களது பைக்கைக் குறிப்பாகக்  காண்பித்து மீதமுள்ள பெட்ரோலை இந்த பைக்கிற்கு போடுங்கள் என்று கூறிச் சென்றார்"  என்று கூறினார். எனக்கு அப்போது ஒன்றும் தோன்றவில்லை. ஆனால் வீட்டிற்கு வரும்போது தேவன் என் உள்ளத்தில் உணர்த்தினார். " பார்த்தாயா? இந்தச் சின்ன விஷயத்தில் கூட நான் உனக்கு உதவிடவில்லையா? இதுபோல தொடர்ந்து உண்மையாய் இரு" 

ஒருவேளை நான் அந்த  நண்பர் என்னை அழைத்தபோது "பெட்ரோல் இல்லை" என்று கூறி அவருடன் அவர் அழைத்த இடத்திற்குச் செல்லாமல் இருந்திருந்தால் இந்த அனுபவம் எனக்கு கிடைத்திருக்காது என எண்ணிக்கொண்டேன். மேலும்,  மறுநாள் இந்த சம்பவத்தை அந்த நண்பரிடம் நான் கூறியபோது அவர் சொன்னார், "உங்களிடம் பெட்ரோல் இல்லை என்று நீங்கள் கூறியிருந்தால் உங்களுக்கு ஒருலிட்டர் பெட்ரோல் நான் போடலாம் என்றுதான் கேட்டேன்" என்றார்.  

எப்படியிருந்தாலும் நான் "எனது பைக்கில் பெட்ரோல் இல்லை" என்று ஒரு சிறிய பொய்யை நான் அந்த நண்பரிடம் சொல்லியிருந்தால் இந்த அனுபவம் எனக்குக்  கிடைத்திருக்காது. ஆம் சிறு விஷயங்களில் நாம் உண்மையாய் இருப்பதைக்கூட தேவன் பார்த்து நம்மைக்  கனம் பண்ணுகிறார். சிறிய விஷயம்தான் ஆனால்  தேவன் ஒரு பெரிய பாடத்தை கற்பித்துவிட்டார்.

வாக்குமாறாத தேவன் நாம் பேசும் ஒவ்வொரு பேச்சையும், நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் பார்த்துக்கொண்டிருக்கிறார். அதற்கேற்ற கைமாறும் செய்கிறார். 

அன்பானவர்களே! வேதத்திலுள்ள ஒவ்வொரு கட்டளையும் இதுபோல உண்மையுள்ளவை, ஜீவனுள்ளவை . அவை ஏட்டுச் சுரைக்காய் அல்ல. இச் சம்பவம்போல பல சம்பவங்களை தேவன் எனது வாழ்வில் நிகழ்த்தியுள்ளார். வேத வசனங்களை  விசுவாசித்து தேவனது கற்பனைகளுக்கு உண்மையாய் நாம் கீழ்ப்படியும்போது தேவனது அதிசய அற்புதங்களை நமது அன்றாட வாழ்வில் ருசித்து மகிழலாம். 

தேவனுக்குமுன் உண்மையாய் வாழ்வோம் மெய்யான அதிசயங்களை வாழ்வில் பெற்று தேவ வார்த்தைகளுக்கு சாட்சிபகிர்வோம் . 

ஆதவன் - ஆகஸ்ட் - 15,  2020 சனிக்கிழமை
இன்றைய  வேதாகமச் சிறு செய்தி
                                                                       - சகோ. எம். ஜியோ பிரகாஷ் 


"நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும்," (  எபேசியர் 3 : 16 )

"That he would grant you, according to the riches of his glory, to be strengthened with might by his Spirit in the inner man;" (  Ephesians 3 : 16 )

நாம் ஆவிக்குரிய வாழ்வில் பலப்படவேண்டியது மிகவும் அவசியம். நாம் தேவனை அறியும் ஆரம்ப நாட்களில் ஆரம்பப் பள்ளியில் படிப்பதுபோன்ற ஒரு அனுபவத்தினுள் வாழ்கின்றோம். அங்கு அப்போதுதான் எழுத்துச் சொல்லித் தருவார்கள். ஆனால் நாம் அப்படியே இருப்பதில்லை. படிப்பில் ஒவ்வொரு வகுப்பாக படித்து எம்.எ., எம்.பி .பி .எஸ் ., பொறியியல் படிப்பு என ஒரு மேலான படிப்பு நிலைக்கு வருகின்றோம். 

அதுபோலவே ஆவிக்குரிய வாழ்வும். நாம் கிறிஸ்துவை அறிந்த ஆரம்ப நிலையிலேயே இருந்துவிடக் கூடாது. கிறிஸ்து  இயேசுவில்  நாம் பலப்படவேண்டும் . பவுல் அடிகள் கூறுகிறார்,  "கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்." (  எபேசியர் 6 : 10 )

வல்லமை என்றதும் கிறிஸ்தவர்கள் பலரும் நினைப்பது அதிசயங்கள் அற்புதங்கள் செய்வதும், நோய்களைக் குணமாக்கும்   வரம் கிடைப்பதும்தான் என்று எண்ணிகொண்டிருக்கிறார்கள்.  இதற்கு காரணம் இன்றைய  ஊழியர்கள்தான். அதிசயம் அற்புதம் என மக்களை மயக்கி வைத்துள்ளனர். ஆனால் உண்மையான வல்லமை என்பது பாவத்திலிருந்தும் பாவ பழக்கங்களிலிருந்தும்  முற்றிலும் நாம் விடுதலை பெறுவதுதான். 

எனவேதான் பவுல் அடிகள் "அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும்" என்று கூறுகிறார். நாம் பார்ப்பது ஒவ்வொரு மனிதனின் வெளி நிலைமையைத்தான். ஆனால் தேவன் பார்ப்பது நமது உள்ளான நிலைமையை. அந்த உள்ளான மனிதன் தேவ வல்லமையினால் பலப்படவேண்டும். ஆவியின் வல்லமை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாய் இருக்கிறது. நமது மனது வாஞ்சிக்கும் அளவுக்கும் தேவனது சித்தத்தின்படியும்  தேவன் நம்மை தமது வல்லமையினால் நிரப்புவார். 

நாம் இன்னும் நமது மாம்ச எண்ணங்களிலேயே இருந்தால் நாம் பலம் அடையவில்லை என்று பொருள். பவுல் அடிகள் கூறுகிறார், "நீங்கள் பெலனில்லாதவர்களானதால், உங்களுக்குப் போஜனங்கொடாமல், பாலைக் குடிக்கக்கொடுத்தேன்; இன்னமும் நீங்கள் மாம்சத்துக்குரியவர்களாயிருக்கிறபடியால், இப்பொழுதும் உங்களுக்குப் பெலனில்லை." (  1 கொரிந்தியர் 3 : 2 )

"பொறாமையும் வாக்குவாதமும் பேதகங்களும் உங்களுக்குள் இருக்கிறபடியால், நீங்கள் மாம்சத்திற்குரியவர்களாயிருந்து மனுஷமார்க்கமாய் நடக்கிறீர்களல்லவா? (  1 கொரிந்தியர் 3 : 3 )

மாம்ச எண்ணங்களான இச்சை, பொறாமை, காய்மகாரம், போன்றவை அழிந்து நாம் கிறிஸ்துவின் வல்லமையினால் பலப்படவேண்டும். நாம் பல  விதங்களில் சுவிஷேசம் அறிவிக்கலாம். தேவ வார்த்தைகளை அற்புதாமாகப் பேசலாம், எழுதலாம் ஆனால், "தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்ல, பெலத்திலே உண்டாயிருக்கிறது." (  1 கொரிந்தியர் 4 : 20 ) ஆம் மெய்யான வல்லமை தேவனுடைய ஆவியின் பலத்தினால் உண்டாயிருக்கிறது. அன்பானவர்களே, தேவனுடைய ஆவியின் பலம் நம்மைத் தாங்கி வழிநடத்த வேண்டுவோம். அப்போதுதான் நாம் கிறிஸ்துவை உலகுக்கு அறிவிக்கிறவர்களாக மாற முடியும்.   






ஆதவன் - ஆகஸ்ட் - 14,  2020 வெள்ளிக்கிழமை
இன்றைய  வேதாகமச் சிறு செய்தி

                                                                               - சகோ. எம். ஜியோ பிரகாஷ் 

"அவர்கள் என்னைப் பற்றும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய சுதந்தரத்தையும் பெற்றுக்கொள்ளும்படியாக, அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டு தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டு, இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார்." (  அப்போஸ்தலருடைய நடபடிகள் 26 : 18 )

To open their eyes, and to turn them from darkness to light, and from the power of Satan unto God, that they may receive forgiveness of sins, and inheritance among them which are sanctified by faith that is in me.
(  Acts 26 : 18 )

தேவன் அப்போஸ்தலனாகிய பவுல் அடிகளை ஊழியத்துக்கு அழைத்தபோது கூறிய வார்த்தைகள்தான் இவை. ஒரு உண்மையான ஊழியக்காரரது பணி  என்ன என்பதை தேவன் தெளிவாக இங்குக்  குறிப்பிடுகின்றார். அதாவது தேவனை அறியாமை எனும் இருளிலிருந்து தேவனை அறியும் ஒளிக்கு நேராக மக்களை வழி நடத்தவேண்டும்.  சாத்தானுடைய செயல்பாடுகளில் சிக்கிக் கிடைக்கும் அவர்களைத் தேவனது வழிகளுக்கு நேராகத் திருப்பவேண்டும். 

ஆனால் பெரும்பாலான ஊழியர்கள் இந்தப் பணியைச் செய்யவில்லை.
இன்று இந்தியாவிலும் தமிழகத்திலும் சுவிஷேசம் அறிவிக்கும் பல ஊழியர்களும் மக்களை இருளிலிருந்து மேலும் அந்தகார இருளுக்கும், சாத்தானுடைய செயல்பாடுகளில் இருந்து மேலும் அதிக சாத்தானுடைய செயல்பாட்டுக்கும் நேராக நடத்துகிறார்கள்.  

இயேசு கிறிஸ்துக் கூறினார், " நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்." (  யோவான் 8 : 12 ) ஒருவன் கிறிஸ்துவை அறிந்தால்தான் அவன் ஒளியில் நடக்க முடியும். ஆனால் கிறிஸ்துவை அறிவிப்பதைவிட உலக ஆசீர்வாதங்கள் தான் இன்று சுவிசேஷமாக் அறிவிக்கப்படுகின்றன. எனவே மக்கள் ஒளியை அறிய முடியவில்லை. 

ஒளியினை அறிந்த மனிதனிடம் மாபெரும் வித்தியாசம் காணப்படும். அவனால் உலக மக்களைப்போல வாழ முடியாது. ஆனால் இன்று சுவிசேஷம் அறிவிக்கும் ஊழியர்களும் சரி அவர்களை பின்பற்றும் மக்களும் சரி உலக மனிதர்களைவிட மிக மோசமானவர்களாக வாழ்கின்றனர். கிறிஸ்தவ சபைகளுக்கு இடையே  சண்டை , சபைக்குள்ளே சண்டை, சொத்துச் சண்டை , மட்டுமல்ல இந்த சண்டைக்கு நியாயம் கேட்டு கோர்ட் வாசற்படியை மிதிக்கிறார்கள் ஊழியர்கள்.  இதுதான் இன்று நாம் காணக்கூடிய காட்சி.

உண்மையான நல்ல ஊழியர்கள் இல்லாமலில்லை . ஆனால் அவர்கள் மிகச் சொற்பபேர்தான். ஆனால் பிற மக்களுக்கு கண்களில் யார் தெரிவார்? வெள்ளை ஆடையில் கருப்பு ஒரு துளியாக  இருந்தாலும் அதுதான் பிறர் கண்களுக்கு பளிச்சென்று  தெரியும்.

முதல் முதல் அந்தியோக்கியாவில் சீஷர்களுக்கு கிறிஸ்தவர்கள் எனும் பெயர் வழங்கலாயிற்று என அப்போஸ்தலர் பணியில் வாசிக்கின்றோம் (அப்போஸ்தலர் - 11:26). அதாவது ஒரு சீடத்துவ வாழ்வு வாழ்ந்தவர்களைத்தான் பிறர் கிறிஸ்தவர்கள் என்று அழைத்தனர். அத்தகைய வாழ்வு வாழவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம். இதற்கு நேராக மக்களை வழிநடத்துபவன்தான் உண்மையான ஊழியக்காரன். அப்போஸ்தலனாகிய   யோவான் கூறுகிறார், 'தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை;  "இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு, உங்களுக்கு அறிவிக்கிற விசேஷமாயிருக்கிறது. (  1 யோவான் 1 : 5 ) எவ்வளவேனும் இருளில்லாத தேவனுக்கு நேராக மக்களை அதுபோல மாற்றி நடத்துபவன்தான் மெய்யான தேவ ஊழியன்.  

இன்று சினிமா நடிகர்களுக்கு ரசிகர்களாக இருப்பதுபோல பல் கிறிஸ்தவர்கள் குருட்டுத்தனமாக சில பிரபல ஊழியர்களுக்கு அடிமையாகி உள்ளனர். இவர்களுக்கு இந்த ஊழியன் என்ன கூறினாலும் அது வேதவாக்கு போல இருக்கிறது. 

அன்பானவர்களே, வேதாகமத்தை நீங்களே சுயமாக தேவ வழிநடத்துதலோடு படியுங்கள். அதில் கூறியுள்ள சத்தியத்தின்படி  ஊழியர்கள் போதிக்கிறார்களா என்று பாருங்கள். அவர்களது செயல்பாடுகளைப்  பாருங்கள். நான் உங்களை ஒவ்வொரு  ஊழியரையும் பார்த்து நியாயம் தீர்க்கச் சொல்லவில்லை. ஆனால் பரிசுத்த ஆவியின் வழிநடத்துதல் உங்களுக்கு இருக்குமானால் சரியான சத்தியத்தையும் சரியான ஊழியர்களையும் இனம் கண்டுகொள்வீர்கள். 

ஆதவன் - ஆகஸ்ட் - 13,  2020 வியாழக் கிழமை
இன்றைய  வேதாகமச் சிறு செய்தி

                                                                            - சகோ. எம். ஜியோ பிரகாஷ் 

"சாத்தானாலே நாம் மோசம்போகாதபடிக்கு அப்படிச் செய்தேன்; அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே."
(  2 கொரிந்தியர் 2 : 11 )

சில ஆண்டுகளுக்குமுன் நான் ஒரு தொண்டு நிறுவனத்தில் பணியாற்றியபோது ஒரு வித்தியாசமான அனுபவம் கிடைத்தது. அது இந்த வேத வசனத்தை எனக்கு நினைவு படுத்தியது.

அந்தத் தொண்டு நிறுவனத்தில் எய்ட்ஸ் தடுப்பு மற்றும்  கட்டுப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கு எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு கல்வி அளிப்பது இத்திட்டத்தின் ஒரு பகுதியாகும். அதன்படி இத்தகைய பெண்கள் அலுவலகத்துக்கு வருவதுண்டு. அவர்களுக்கு பாலியல் தொழிலாளர்கள் (Commercial Sex Workers - CSWs)      என்று பெயர். அப்படி வரும் பெண்களிடம் நான் சிலவேளைகளில் தேவனைப் பற்றி பேசுவதுண்டு.

ஒருமுறை ஒரு பெண்ணிடம் அப்படிப் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது பாவம் பற்றி பேச்சு வந்தது. அந்தப் பெண் என்னிடம், "நான் பாவி என்று கூறுகிறீர்களா?" என்று கேட்டார். நான் சொன்னேன், "நீங்கள் பாவி என்று நான் கூறவில்லை. உலகில் பிறக்கும் அனைவருமே பாவ சுபாவத்தோடுதான் பிறக்கின்றோம். தேவனது பார்வையில் நாம் அனைவருமே பாவிகள்தான்..ஆனால் தேவனிடம் நம்மை ஒப்படைக்கும்போது அவர் நம்மை  புதுப் படைப்பாக மாற்றி பயன்படுத்துவார்" என்றேன். 

இப்போது அந்தப் பெண் நான் கூறுவதைக் கவனமாகக் கேட்க ஆரம்பித்தார். நான் கூறுவதை ஆமோதிப்பதைப்போல தலையை ஆட்டி ஆட்டி கவனித்தார். நான் உள்ளுக்குள் மகிழ்ச்சி அடைந்தேன். இந்தப் பெண் தேவனுடைய வார்த்தைகளை இருதயத்தினில்   வாங்கிக்கொண்டிருக்கிறார் என மகிழ்ந்தேன். அந்தப் பெண் அடிக்கடி சில சந்தேகக் கேள்விகளையும் கேட்டார். அது எனது நம்பிக்கையை அதிகமாகியது. சிறிது நேரத்துக்குப் பின் அந்தப்பெண் என்னிடம் , "பிரதர், நீங்கள் எனக்கு நல்ல விஷயங்களையெல்லாம் சொல்லித் தந்துளீர்கள்...உங்களுக்குக்  கொடுக்க என்னிடம் எதுவும் இல்லை.  வேண்டுமானால் இன்று இரவு என்னோடு தங்குங்கள். நீங்கள் எனக்குப் பணம் ஒன்றும் தரவேண்டாம்"   என்றார். இந்தப் பதில் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

அன்பானவர்களே! இதுதான் சாத்தானுடைய தந்திரம். நாம் பேசுவது நல்ல விஷயம் என்று ஒரு மாயத்தை உண்டுபண்ணி நம்மைப் பாவத்துக்கு நேராக நடத்துவதில் சாத்தானுக்கு நிகர் சாத்தான்தான். எனவேதான் இயேசு கிறிஸ்துக் கூறினார், " அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான். (  யோவான் 8 : 44 )

நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையே சோதித்துப் பார்த்தவன் சாத்தான். நம்மை அவன் சோதிப்பது ஒன்றும் புதிதல்ல. நன்மையானவைகளைப் பேசுவதுபோல பேசி நம்மைத் தீமைக்கு நேராக நடத்துவது அவனது தந்திரம். ஆவிக்குரிய மனிதர்களை சாத்தான் பிற உலக மனிதர்கள் மூலமும் சோதனைக்கு உள்ளாக்குவான். எனவேதான் அப்போஸ்தலரான பவுல் நமக்கு ஒரு எச்சரிப்புக்காக  இந்த வசனத்தைக் குறிப்பிடுகின்றார். 

அன்பானவர்களே, ஒரு ஆண்  பிற பெண்ணோடோ  பெண் பிற  ஆணோடோ பேசும்போது கவனமாக இருக்கவேண்டியது அவசியம். எனக்குத் தெரிந்து பல பாஸ்டர்கள் , சுவிசேஷகர்கள் ஜெபிக்கச் செல்கிறேன் என்று சில வீடுகளுக்குத் தனியே ஜெபிக்கச் சென்று விபச்சாரப்  பாவத்தில் விழுந்துள்ளார். கிறிஸ்தவ ஊழியர்களுக்கு எனது அறிவுரை இதுதான்: வீடுகளுக்கு ஜெபிக்கச் செல்லும்போது தனியாகச் செல்லாதீர்கள். மற்றும் ஜெபிக்கச் செல்லும் வீடுகளில் வேறு நபர்களும் இருக்கும்போது செல்லுங்கள்.       

மேலும் வேதம் கூறுவதைப்போல , " நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள். (  எபேசியர் 6 : 11 )

தனது சுய பலத்தின்மேல் நம்பிக்கைகொண்டு இருப்போர் சாத்தானுடைய தந்திரத்தில் விழுவது நிச்சயம். அன்பானவர்களே, பரிசுத்த ஆவியின் அபிஷேகம் இருந்தால் மட்டுமே நாம் அவனை மேற்கொள்ள முடியும். தேவனிடம் நம்மை ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம் ..தேவனுடைய ஆவியார் நம்மை தூய வழியில் நடத்துவார். 

ஆதவன் - ஆகஸ்ட் - 12,  2020 புதன் கிழமை
இன்றைய  வேதாகமச் சிறு செய்தி
🎚️                                                                          - சகோ. எம். ஜியோ பிரகாஷ் 

"ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்கமனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு, சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்". (  2 தீமோத்தேயு 4 : 2, 3 )

அப்போஸ்தலரான பவுல் அடிகள் தீர்க்கதரிசனமாகக் கூறிய வசனம் இது . "மக்கள் தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களை தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு", என்கிறார். அதாவது தேவனது ஆசை அல்லது விருப்பம் ஒன்று உள்ளது ஆனால் மக்களோ  அதற்கு மாறாக தங்களது விருப்பத்துக்கேற்ற போதகர்களைத் தெரிந்து கொள்வார்கள். இதுதான் இன்று நடந்துகொண்டிருக்கிறது. 

தேவனது விருப்பம் அல்லது திட்டம் என்ன? அதனை அப்போஸ்தலனான யோவான் பின்வருமாறு கூறுகிறார். சுவிசேஷம் எழுதப்பட்டதன் நோக்கமும் அதுதான் :-

"இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கின்றன" (  யோவான் 20 : 31 )

ஆதாவது நாம் தேவனுடைய குமாரனான இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதன்மூலம் நித்திய ஜீவனை அடையவேண்டும் என்பதற்காகவே சுவிசேஷம் எழுதப்பட்டது. ஆனால் இன்றுள்ள பெரும்பாலான   போதகர்களும், பிரபல ஊழியர்களும் இதுபற்றி பேசுவது கிடையாது . அவர்கள் என்ன போதிக்கின்றனர் என்றால் வெறும் உலக ஆசீர்வாதங்களே . "கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார், நீ மேலும் மேலும் விருத்தியாவாய், நீ தசமபாக காணிக்கையைச் செலுத்தினால் பத்து மடங்காக அதனைத் திருப்பித் தருவார் .." இதுபோன்ற போதனைகள்தான் இன்றய சுவிஷேச அறிவிப்பு!

மக்கள், ஆரோக்கியமான இரட்சிப்பின் சுவிஷேசத்தைவிட இந்த ஆசீர்வாத போதனைகளைத்தான் கேட்க ஓடுகிறார்கள்.  மெய்யான சுவிசேஷம் அவர்களுக்குக் கசப்பாக இருக்கின்றது. 

நாம் எத்தனை விரும்புகிறோமோ அதுதான் நமக்கு கிடைக்கும். ஆசீர்வாத உபதேசத்தைக் கேட்க ஓடுபவனுக்கு அதுதான் கிடைக்கும் . நித்திய ஜீவனுக்கும் அவனுக்கும் சம்மந்தமில்லை. ஆனால் நித்திய ஜீவனை வாஞ்சித்து வேண்டுபவனுக்கு அதற்கேற்ற போதகர்களை தேவன் கொடுப்பார் .

"உங்களுக்கு என் இருதயத்துக்கு ஏற்ற மேய்ப்பர்களைக் கொடுப்பேன், அவர்கள் உங்களை அறிவோடும் புத்தியோடும் மேய்ப்பார்கள்."
(  எரேமியா 3 : 15 ) என்கிறார் தேவன். தேவனது இருதய விருப்பத்துக்கேற்ப நாம் வாழ விரும்பும்போது தேவன் தனது இதயத்துக்கு  ஏற்ற மேய்ப்பர்களை நமக்கு கொடுப்பார். அவர்கள் நம்மை அறிவோடும் புத்தியோடும் மேய்ப்பார்கள்.

 ஆனால் தங்கள் சுய இச்சைகளை நிறைவேற்ற விரும்பும் அற்ப விசுவாசிகளுக்கு தேவன் அதற்கேற்ற அற்பமான போதகர்களைக் கொடுப்பார். அவர்கள்,  "சத்தியத்துககு மக்களது செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகச் செய்யும் காலம் வரும் " என்று பவுல் அடிகள் சொல்வதுபோல மக்களை கட்டுக்கதைகளை ஆசீர்வாதம் எனப் போதித்து அழிவுக்கு நேராக நடத்துகிறார்கள். 

இது இன்று அல்ல, பழைய ஏற்பாட்டுக் காலத்திலும் நடந்துள்ளது . இதனைக் கண்டு மன வேதனையில் சங்கீதம் ஆக்கியோன் கூறுகிறார், 
"உம்முடைய வேதத்தை மனுஷர் காத்து நடவாதபடியால், என் கண்களிலிருந்து நீர்த்தாரைகள் ஓடுகிறது." (  சங்கீதம் 119 : 136 ) மனுஷர் தேவனது விருப்பதின்படி நடவாதபடி அக்கால போதகர்களும் அவர்களைக் கெடுத்துள்ளனர்.

அன்பானவர்களே, இன்று பிரபல ஊழியர்கள் எல்லோருமே இப்படி  தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதனைகளைக் கொடுகிறார்களே  தவிர தேவனது விருப்பத்துக்கேற்ற போதனைகளைக் கொடுக்கவில்லை.  இவர்களது பிரசங்கங்களைக் கேட்க  அதிக அளவில்  மக்கள் கூடலாம். ஆனால் தேவன் கூறுகிறார்  கேட்டுக்குச் செல்லும் வாயில் அகன்றது அதன் வழியே நுழைபவர் அநேகர்.  

இன்று நாம் செய்யவேண்டியது மக்களை அழிவுக்கு நேராக நடத்தும்  இந்தப் பிரபல ஊழியர்கள் மனம் திரும்ப ஜெபிக்கவேண்டியது தான். இந்த ஊழியர்கள் மனம் திருந்திட ஜெபிப்போம் .  

ஆதவன் - ஆகஸ்ட் - 11,  2020 செவ்வாய்க் கிழமை
இன்றைய  வேதாகமச் சிறு செய்தி
                                                                              - சகோ. எம். ஜியோ பிரகாஷ் 

"தன் ஜீவனை இரட்சிக்க வகைதேடுகிறவன் அதை இழந்துபோவான்; இழந்துபோகிறவன் அதை உயிர்ப்பித்துக்கொள்ளுவான்."
(  லுூக்கா 17 : 33 )

"Whosoever shall seek to save his life shall lose it; and whosoever shall lose his life shall preserve it. (  Luke 17 : 33 )

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் வாழ்ந்த சாது சுந்தர் சிங் அவர்களது வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை அவர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த வசனம் எப்படி தனது வாழ்வில் நிறைவேறியது என்பதே அது.

ஒருமுறை சாது சுந்தர்சிங் அவர்களும் அவருடன் இன்னொரு துறவியும் திபெத்திலுள்ள ஒரு கிராமத்துக்கு சுவிசேஷம் அறிவிக்க பனிமலை பாதை வழியே நடந்து சென்று கொண்டிருந்தனர்.  இரவுக்கு முன் சென்றுவிடவேண்டும் என அவர்கள் துரிதமாக நடந்துகொண்டிருந்தனர் . கடுமையான குளிர். கை விரல்களும் காது மடல்களும் மரத்துப்போனதுபோல இருந்தன. குளிர் மிக அதிகமாக இருந்தது. அப்போது அவர்கள் சென்ற பாதையில் ஒரு மனிதன் குளிர் தாங்க முடியாமல் விழுந்துகிடந்தான். சாது சுந்தர்சிங் அவன் அருகே சென்று உயிர் இருக்கிறதா என்று பார்த்தார். அவன் மெதுவாக மூச்சு விட்டுக்கொண்டிருந்தான். 

சாது சுந்தர்சிங் தன்னுடன் வந்த துறவியிடம்,  "வாருங்கள் நாம் இருவரும் சேர்ந்து இவரைத் தூக்கிக் கொண்டு போவோம்" என்றார். ஆனால் மற்ற துறவியோ, "உமக்குப் பைத்தியமா பிடித்துள்ளது? நாம் தப்பிப்  பிழைப்பதே கடினமாக இருக்கிறது இவனையும் தூக்கிச் சுமந்து சென்றால் மூவரும் சாகவேண்டியதுதான் என்றார்".  சாது சுந்தர்சிங் அவரிடம், " அப்படியல்ல, இவருக்கு உயிர் இருக்கிறது. ஒரு மனித உயிரை நாம் காப்பாற்றாமல் செல்லக் கூடாது"  என்றார். ஆனால் அந்தத் துறவியோ சம்மதிக்கவில்லை. "என்னால் உம்மோடு சேர்ந்து இவனைத் தூக்கிச் சுமந்து சாக முடியாது. நீர் வேண்டுமானால் அவனைத் தூக்கி வாரும்"  என்று கூறி நடையைக் காட்டினார். 

சாது சுந்தர்சிங் அந்த மனிதனைத் தனது தோளில் தூக்கிபோட்டுக்கொண்டு நடந்து சென்றார்.  நாம் கடின வேலை செய்யும்போது நமது உடல் சூடு அடையுமல்லவா? அப்படி சூடு உடம்பில் வந்து சாது சுந்தர்சிங் தெம்படைந்துவிட்டார். சிறிது தூரம் நடக்கவே தோளில் கிடந்த மனிதனிலும்  அசைவு தெரிந்தது. மீண்டும் கொஞ்ச நேரத்தில் அவன் ஓரளவு உயிர்பெற்றுவிட்டான். நடந்தது என்ன? உடலும் உடலும் உரசியதால் வந்த வெப்பம் அந்த மனிதனையும் உயிர் பெறச் செய்துவிட்டது. 

 சாது சுந்தர்சிங் தொடர்ந்து நடந்து சென்றார் . சற்று தொலைவில் ஒரு மனிதன் விழுந்து கிடைப்பதைப் பார்த்தார். கிட்டே சென்று பார்த்தபோது அது தன்னோடு வந்த அந்த இன்னொரு துறவி என்று தெரிந்தது. அவரோ குளிர் தாங்க முடியாமல் இரத்தம் உறைந்து செத்துக்  கிடந்தார். அப்போது தேவன் சாது சுந்தர்சிங்கிடம்  இந்த வசனத்தால் பேசினார். "தன் ஜீவனை இரட்சிக்க வகைதேடுகிறவன் அதை இழந்துபோவான்; இழந்துபோகிறவன் அதை உயிர்ப்பித்துக்கொள்ளுவான்." எத்தனை உண்மையான தேவ வார்த்தைகள்.

அன்பானவர்களே! நமது சுகத்தை மட்டுமே பார்த்து அல்லது நாம் மட்டும் எப்படியாவது இந்தச் சிக்கலான சூழலில்  இருந்து தப்பிவிடவேண்டும் பிறர் எக்கேடு கெட்டுப் போனாலும் கவலை இல்லை என்று வாழ்வோருக்கு இது ஒரு எச்சரிக்கை. பிறருக்கு உதவுதல் எப்படியாவது நமக்கு நன்மையாக முடியும். மாறாக நாம் மட்டும் தப்பிவிடவேண்டும் எனும் எண்ணத்தோடு செயல்படும்போது அது நமக்கே சிக்கலாகக் கூட முடியும்.  

இயேசு கிறிஸ்து கூட  மக்களது இரட்சிப்புக்காக தனது உயிரைத்  தியாகம் செய்தார். ஆனால் தேவனோ அவரை உயிர்தெழச் செய்து எல்லா நாமத்துக்கும்  மேலான நாமத்தை அவருக்கு அளித்தார். இதனைப் பிலிப்பியர் நிருபத்தில் இவ்வாறு வாசிக்கின்றோம்:-  

"ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி,
இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய அவருக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார். (  பிலிப்பியர் 2 : 9 -11 )

தன்னலத்தை மட்டுமே நோக்காமல் நமக்கு துன்பம் வந்தாலும் பிறருடைய நலத்தையும் நோக்குவோம். கர்த்தர்தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.  

ஆதவன் - ஆகஸ்ட் - 10,  2020 திங்கள் கிழமை
இன்றைய  வேதாகமச் சிறு செய்தி

                                                                             - சகோ. எம். ஜியோ பிரகாஷ் 

"ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், உங்களைச் சுற்றிலும் இருக்கிற புறஜாதிகளுடைய நீதிநியாயங்களின்படியாவது நடவாமலும் போனபடியினாலே,...."
(  எசேக்கியேல் 5 : 7 )

ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள் என்று தங்களைக்  கூறிக்கொள்ளும் பல கிறிஸ்தவர்களும் ஜெபிப்பதும் வேதம் வாசிப்பதும்தான் ஆவிக்குரிய வாழ்க்கை என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். பல ஆவிக்குரிய கிறிஸ்தவர்களிடம் உலக மக்களிடம் உள்ள நீதியோ நியாயங்களோ இருப்பதில்லை. கிறிஸ்தவ ஊழியர்கள்  பலர் கூட ஜெபத்தையும் வேதம் வாசித்தலையும் வலியுறுத்துகிறார்களே  தவிர உண்மை, நீதி, நியாயத்தோடு வாழவேண்டிய வாழ்க்கையை வலியுறுத்துவதில்லை.

பிற மத சகோதரர்களும் கடவுள் மறுப்பு எண்ணம்கொண்ட சகோதரர்களும் பலர்  எனக்கு உண்டு. ஆனால் அவர்களில் பலர் ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் மக்களைவிட பல விதங்களில் நீதி நியாயம் உள்ளவர்களாக இருக்கின்றனர். எனது ஆரம்பகால கிறிஸ்தவ வாழ்க்கையில் என்னை அதிகம் குழப்பியது இந்த நிலைதான். பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ளேன் எனக் கூறிக்கொள்ளும் பலரும்,  பல ஊழியர்களும்கூட ஏமாற்று பித்தலாட்டம், காமவிகாரச்   செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்..

எனக்குத் தெரிந்த தாசில்தார் ஒருவர் ஊழியம் செய்துவந்தார். அவரது அலுவலகத்திலேயே வருகிறவர்களிடம் ஆண்டவரைப்பற்றி பேசி ஜெபித்தார் என்று அவர்மேல் குற்றச்சாட்டு உண்டு. அவருக்கு எதிராக புகார் மனுக்கள் மேலதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டன. ஆனால் இந்த மனிதன் பெரிய ஏமாற்றுப்  பேர்வழி என்பது பலருக்குத் தெரியாது. இந்த மனிதர் ரிட்டயர்டு ஆனபின்பு முழுநேர ஊழியத்தில் ஈடுபட்டுவந்தார்.

எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் இவரிடம் நிலம் ஒன்று விலைக்கிராயம் செய்து முடித்தார். ஆனால் தாசில்தாராக இருந்ததால் பல முறைகேடுகளைப் பயன்படுத்தி அவர் ஏமாற்றி விற்பனைசெய்த நிலம் என்பது நிலம் வாங்கிய நண்பர் நிலத்துக்கு வேலிபோட சென்றபோதுதான்  தெரியவந்தது.  பிரச்னை பெரிதாகவே தாசில்தார் தலைமறைவாகிவிட்டார். அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுவிட்டது. 

ஒரு மூன்றாம் ரக அயோக்கியனைப்போல செயல்படும் இவரைவிட தேவனை அறியாத பலர் உண்மையும் உத்தமுமாக வாழவில்லையா? இது ஒரு உதாரணம் மட்டுமே . என்னால் இப்படிப்  பல ஊழியர்களை உதாரணம் கூறமுடியும்.

அதேநேரம் கடவுள் மறுப்புக் கொள்கைகொண்ட எனது ஆசிரிய நண்பர் ஒருவர் 100% உண்மையுள்ளவராக இருக்கிறார். மிகச் சிறிய காரியமாக இருந்தாலும் அவர் உண்மையோடு வாழ்கின்றார். உதாரணமாக, நமது வீட்டுக்கு யாராவது திருமண அழைப்பிதழ் தந்தால்  நாம் என்ன சொல்வோம்? கண்டிப்பாக வருகிறேன் என்றுதானே? ஆனால் அவரோ அதில்கூடப் பொய் சொல்லக்கூடாது என எண்ணுபவர். காலண்டரைப் பார்த்து விட்டு, எனக்கு அன்று வேறு ஒரு பணி  இருக்கிறது எனவே வர வாய்ப்பு இல்லை" என்பார். பலரும் அவரை அதிகப்  பிரசங்கி என்பார்கள். பள்ளியில்கூட அவரது செயல்பாடு நிர்வாகத்துக்குப் பிடிக்காததால் ரிட்டயர்டு ஆகும்வரை அவருக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை.  

அன்பானவர்களே, தேவனுக்கு ஊழியம் செய்யும் ஏமாற்று தாசில்தார் தேவனுக்கு ஏற்புடையவரா? இல்லை இந்த கடவுள் மறுப்புக்கு கொள்கை கொண்ட இந்த ஆசிரியர் ஏற்புடையவரா?

எனவேதான் , உங்களைச் சுற்றிலும் இருக்கிற புறஜாதிகளுடைய நீதி நியாயங்களின்படியாவது நடவாமலும் போனபடியினாலே உங்களை நிர்மூலமாக்குவேன் என்று கூறுகிறார் தேவன்.  

அன்பானவர்களே, கண்ணை மூடி முட்டாள்தனமாக இராமல் நம்மைச் சுற்றியுள்ள பிற மக்களைப் பார்த்து கற்கவேண்டிய விஷயங்கள் பல உள்ளன. அந்த நீதி நியாயங்களின்படியாவது வாழ்ந்து காட்டினால்தான் நம்மை அவர்கள் ஏற்றுக்கொள்வார்களே தவிர வெள்ளை உடை தரித்து வேதாகமத்தைத் தூக்கிக்கொண்டு அலைவதால் நாம் கிறிஸ்துவை அறிவிக்க முடியாது. ஜெபிப்பதோடு நீதி நியாயங்களோடு வாழவும் செய்வோம். அதுவே நற்செய்தி அறிவித்தல்தான்.


ஆதவன் - ஆகஸ்ட் - 9,  2020 ஞாயிற்றுக்கிழமை
இன்றைய  வேதாகமச் சிறு செய்தி

                                                                      - சகோ. எம். ஜியோ பிரகாஷ் 

"தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்."
(  நீதிமொழிகள் 28 : 13 )
"He that covereth his sins shall not prosper: but whoso confesseth and forsaketh them shall have mercy." (  Proverbs 28 : 13 )

பொதுவாக மனிதர்கள் தங்கள் பாவங்களை ஒத்துக்கொள்வதில்லை. மட்டுமல்ல அவர்களது தவறுகளை  சுட்டிக்காட்டினால்  கோபப்பட்டு அப்படிச் சுட்டிக்காட்டிய அந்த மனிதரிடம்  பேசுவதையே நிறுத்திவிடுவார். ஆனால் எந்தப் பாவமாக இருந்தாலும் தேவனுக்குமுன் அதனை  மறைந்திட  முடியாது. நமது பாவங்களை தேவனிடம் அறிக்கையிட்டு ஒத்துக்கொண்டு மன்னிப்பு கேட்டால் இரக்கம் பெறுவோம்.

"நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்."
(  1 யோவான் 1 : 9 )

நான் தேவனை அறிந்த ஆரம்பகாலத்தில் ஒருமுறை எனது தந்தையின் வயதுடைய ஒரு ஆசிரியர் என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். அவரிடம் பேசும்போது எப்படியோ வேதாகமம் பற்றிய விஷயத்துக்குப் பேச்சுத் திரும்பியது. அவர் என்னிடம்,  "என்ன தம்பி பாவம் பாவம் என்று எப்போதும் கூறுகிறீர்களே, பாவம் என்றால் என்ன? என்று கேட்டார். நான், " தேவனுடைய கட்டளைகளை மீறுவது பாவம்" என்று கூறினேன். அவர் என்னிடம் கிண்டலாக, " பத்துக் கட்டளைகளா , திருச்சபைக் கட்டளைகளா ? , பங்கு சாமியாருடைய கட்டளைகளா?" என்றார்.

நான் அவரிடம் வேதாகமத்தில் பல்வேறு பாவப்  பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது , உதாரணமாக, 1 கொரிந்தியர் 6:9,10 இப்படிக் கூறுகிறது , "அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும்....." என்று கூறவும் அவர் கோபத்தின் உச்சத்துக்குச் சென்றுவிட்டார்.

" சின்னப் பயலே உனக்கு என்னைப்பற்றி என்னடா தெரியும், ஆண்புணர்ச்சி அது இது என என்னென்னவோ பேசுறாய்?  ..நீ பார்த்தியாடா? பார்த்தியாடா ? உன் அப்பன் வயசுடா எனக்கு. ..சின்னப்பயலிடம் பேசியது என்  தப்பு " என்றபடி கோபமாக சென்றுவிட்டார். பின்னர்தான் தெரியும் அவருக்கு அந்தப் பாவப்  பழக்கம் இருந்தது என்று. 

இப்படித்தான் பலரும் அவர்களது பாவங்களைப் பிறர் கூறும்போது கோபப்படுகிறார்கள் .

நமது சில பாவங்களை பிறர் நம்மிடம் கூறுகிறார்கள் என்றால் அது உண்மையா என்று நாம் தேவனுடைய முன்னிலையில் ஆராய்ந்து பார்க்கவேண்டும் . உண்மையானால் திருத்திக்கொண்டு தேவனிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும். தேவன் சில வேளைகளில் பிறர் மூலம் நம்மிடம் பேசி நமது பாவங்களை உணர்த்துவார்.  

இன்றைய வசனம் மிகக் கடுமையாக,  "பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்" என்று கூறுகிறது. அதாவது இது ஒரு சாபம் போல இருக்கிறது. தேவன் வாழ்வடையமாட்டான் என்று ஒருவனைப் பார்த்துக் கூறினால் அவன் வாழ்வடையவே மாட்டான். 

அன்பானவர்களே ! நமது பாவங்களை பிறரிடம் மறைக்கலாம்.  ஆனால் தேவனிடம் மறைக்க முடியாது. உண்மையான மனதுடன் நமது பாவங்களை தேவனிடம்  அறிக்கைசெய்வோம். யாருக்கும் தெரியாத மறைமுக பாவங்கள் இருந்தாலும் அதனை தேவனிடம் அறிக்கையிட்டு மன்னிப்புக் கேட்கும்போது அதனை தேவன் நிச்சயம் மன்னிப்பார். மட்டுமல்ல அந்தப் பாவங்களை நாம் மீண்டும் செய்யாதபடி நம்மை அந்தப் பாவ பழக்கத்திலிருந்து விடுதலையும் ஆக்குவார். 

"ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்," (  யோவான் 8 : 36 )

ஆதவன் - ஆகஸ்ட் - 8,  2020 சனிக்கிழமை
இன்றைய  வேதாகமச் சிறு செய்தி

                                                                            - சகோ. எம். ஜியோ பிரகாஷ் 

"சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்." (  யாக்கோபு 1 : 12 )

"Blessed is the man that endureth temptation: for when he is tried, he shall receive the crown of life, which the Lord hath promised to them that love him." (  James 1 : 12 )

ஒருமுறை கோலார் தங்கச் சுரங்கத்தில் வேலைபார்க்கும் நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். அவரிடம் பேசும்போது சில விஷயங்களைத் தெரிந்துகொண்டேன்.  தங்கம் குகையிலிருந்து வெட்டி எடுக்கும்போது நாம் பார்க்கும் தங்கத்தைப்போல பளபளப்பாக அழகாக இருக்காது . மாறாக வெறும் மண்ணாகத்தான் இருக்கும். சாதாரண மண்ணுக்கும் அதற்கும் வித்தியாசமில்லாமல் வெறும் மண்போலவே இருக்கும். அதாவது மண்ணோடு மண்ணாக இருக்கும். அதனை பிரித்தெடுக்க உலையில் சூடாக்கி உருக்கி பல பல்வேறு கட்டங்களுக்கு உட்படுத்தி அதிலுள்ள மண்ணைப் பிரித்தெடுப்பார்கள். பின்னர் அது நகையாக மாறவேண்டுமானால் மீண்டும் தங்க ஆசாரி அதை நெருப்பிலிட்டு உருக்கி சுத்தியலால் அடித்து வளைத்து நகையாக மாற்றுகின்றார். நகைக்கடையில் அலமாரிகளில் இருக்கும் பளபள தங்க நகைகள் அதுவரை கடந்து வந்த பாதை நமக்குத் தெரியாது. 

பழைய ஏற்பாட்டு பக்தனான யோபு இதனை தெளிவாக அறிந்திருந்தார். எனவேதான், "ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்." (  யோபு 23 : 10 ) என்று கூறுகின்றார்.

தேவன்  மனிதர்களைத் தம்மைப்போல மாற்றிட அவர்களைப்  புடமிடவேண்டியது அவசியமாகிறது. தங்கம் எப்படி மண்ணிலிருந்து பிரித்து எடுக்கப்படுகிறதோ அதுபோல தேவன் தமக்கு ஒருவரை ஏற்புடையவராக மாற்றிட உலக மனிதர் மத்தியிலிருந்து பிரித்தெடுத்து புடமிட்டு மாற்றுகிறார். தேவன் அப்படி நம்மைப் பிரித்தெடுப்பது தான் நமது உலக துன்பங்களுக்குக்  காரணமாக இருக்கிறது. மண்ணிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட தங்கம் பிற்பாடு எப்படி மண்ணோடு ஒட்டாதோ அதுபோல தேவனால் உலக மக்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட மனிதனால் அவர்களோடு ஒத்துப்போக முடியாது, அவர்கள் செயல்படும் முறையில்  செயல்பட முடியாது. இதுவே தேவனுக்கு ஏற்புடையவர்களாக வாழ விரும்புபவர்களது துன்பத்துக்குக்  காரணம்.  

"நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது." (  யோவான் 15 : 19 ) என்று இயேசு கிறிஸ்து கூறியது இதனால்தான். 

அன்பானவர்களே! நான் தேவனுக்கு ஏற்புடையவனாகத் தானே வாழ்கிறேன் எனக்கு ஏன் இந்தத் துன்பம் எனக் கலங்குகிறீர்களா? துன்மார்க்கமாக வாழும் மனிதர்கள் செழிப்போடு மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள் என எண்ணி உங்கள் உத்தமத்திலிருந்து விலகிட எண்ணுகிறீர்களா? தேவன் உங்களை புடமிடுகிறார் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். துன்மார்க்கன் செழிப்பான் என்று வேதம் கூறுகிறது.  (சங்கீதம் - 73:3-7) அது புல்லைப்  போன்ற  செழிப்பு. ஆனால் "நீதிமான் பனையைப்போல செழித்து லீபனோனிலுள்ள கேதுருவைப்போல வளருவான்" (சங்கீதம் -92:12)

"வெள்ளியைக் குகையும், பொன்னைப் புடமும் சோதிக்கும்; இருதயங்களைச் சோதிக்கிறவரோ கர்த்தர்." (  நீதிமொழிகள் 17 : 3 ) சோதனைகளைக் கண்டு துவண்டிடாமல் இருதயங்களைச்  சோதிக்கும் கர்த்தருக்குமுன் உண்மையுள்ளவர்களாக வாழ்வோம் . கர்த்தர்தாமே நம்மை பொன்னாக மாற்றி பயன்படுத்துவார். 

ஆதவன் - ஆகஸ்ட் - 7,  2020 வெள்ளிக்கிழமை
இன்றைய  வேதாகமச் சிறு செய்தி

                                                                        - சகோ. எம். ஜியோ பிரகாஷ் 

"கர்த்தரை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப்போல் இருப்பார்கள்".
(  சங்கீதம் 125 : 1 )

"They that trust in the LORD shall be as mount Zion, which cannot be removed, but abideth for ever." (  Psalms 125 : 1 )

சிறுவயதில் புவியியல் வகுப்பில் இந்தியாவின் வடஎல்லை இமய மலைத் தொடர்களால் பாதுகாக்கப்பட்டுள்ளது என நமக்குச் சொல்லித் தந்துள்ளார்கள். மலைகள் இயற்கை பாதுகாப்பு அரண்கள். பெரு வெள்ளமோ, புயலோ மலைகளை நகர்த்திட முடியாது. நமது நாட்டின் இமயமலையைப் போல இஸ்ரவேல் நாட்டில் சீயோன் மலை சிறப்புவாய்ந்த மலையாக  உள்ளது. இந்தமலை ஜெருசலேம் நகரைச் சுற்றி மதில்போல அமைந்துள்ளது. எனவேதான் அடுத்த வசனம் கூறுகிறது:-

"பர்வதங்கள் எருசலேமைச் சுற்றிலும் இருக்குமாப்போல், கர்த்தர் இதுமுதல் என்றென்றைக்கும் தம்முடைய ஜனத்தைச் சுற்றிலும் இருக்கிறார்." (  சங்கீதம் 125 : 2 )

கர்த்தர் தம்முடைய ஜனங்களைச் சுற்றிலும் பாதுகாப்பாக இருக்கிறார். இன்று  பிரபல அரசியல்வாதிகளும் தலைவர்களும் தங்களைப்  பாதுகாக்க கறுப்புப் பூனைப் படை வீரர்களை வைத்துள்ளனர். அதற்காகக் கோடிக்கணக்கானப் பணத்தையும் செலவழிக்கின்றனர். ஆனால் ஒருவனைக் கர்த்தர் பாதுகாக்காவிட்டால் எந்தப் பாதுகாப்பும் அவனைப் காக்க முடியாது. "கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலர் விழித்திருக்கிறது விருதா " (சங்கீதம் - 127:2). நம் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்களது மரணம் எப்படி சம்பவித்தது தெரியுமா? தனது பாதுகாப்புக்காக அவர் வைத்திருந்த ஒரு ராணுவ வீரன்தான் அவரைச் சுட்டுக் கொன்றான்.  ஆம் மனிதன் நம்பும் பாதுகாப்பு இப்படித்தான் விபரீத பாதுகாப்பாக இருக்கும்.

நமது தேவன் நம்முடைய தாழ்மையிலும் நம்மை நினைகின்றவர். நாம் வறுமையிலோ, நோயிலோ, அல்லது எதிரிகள் குறித்த பயத்தாலோ பாதிக்கப்பட்டிருக்கலாம்.  ஆனால் நமக்கு நிச்சயம் விடுதலை உண்டு. மனிதர்கள் நாம் செல்வந்தர்களையும் நல்ல வசதி படைத்தவர்களையும்தான் நமது நினைவில் வைத்திருப்போம். யாராவது நம்  வீட்டிற்கு அடிக்கடி பிச்சைக் கேட்டு வரும் பிச்சைக்காரரை நினைவில்வைத்துக் கொண்டிருப்போமா? அவர்கள் பிச்சைக் கேட்கும்போது கொடுத்துவிட்டு அப்படியே அவர்களை மறந்து விடுவோம். 

ஆனால் தேவன் அப்படியல்ல. அவர் நமது எந்தவித தாழ்மையிலும் நம்மை நினைகின்றவர். நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. (  சங்கீதம் 136 : 23 ) என வேதம் கூறவில்லையா? 

தேவன் நம்மை நினைப்பதால், அவரோடு நெருங்கிய தொடர்பில் நாம் இருப்போமானால் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப்போல் இருப்போம். எந்த விதப் பிரச்சனைகள், துன்பங்கள், நோய்கள், வந்தாலும் நமது உள்ளம் கலங்காது , அசையாது.

நமக்கு நித்திய ஜீவனை வாக்களித்து, அதனை நாம் உரிமையாக்கிக்கொள்ள இரட்சிப்பின் வழியையும் தந்துள்ள மீட்பராம் இயேசு கிறிஸ்துவை அறிந்துள்ள நாம் பாக்கியமுள்ளவர்கள். ஆம், 
கர்த்தரைத் தெய்வமாகக் கொண்டிருக்கிற ஜனம் பாக்கியமுள்ளது.
(  சங்கீதம் 144 : 15 ) மலைபோன்ற பாதுகாப்பு நிச்சயம் நமக்கு உண்டு.

ஆதவன் - ஆகஸ்ட் - 6,  2020 வியாழக்கிழமை
இன்றைய  வேதாகமச் சிறு செய்தி

                                                                         - சகோ. எம். ஜியோ பிரகாஷ் 

"முதிர்ந்தவயதில் என்னைத் தள்ளிவிடாமலும், என் பெலன் ஒடுங்கும்போது என்னைக் கைவிடாமலும் இரும்." (  சங்கீதம் 71 : 9 )

"Cast me not off in the time of old age; forsake me not when my strength faileth."
(  Psalms 71 : 9 )

இன்று நாட்டில் முதியோர் இல்லங்கள் பெருகிவிட்டன.  வளர்த்து ஆளாக்கின பெற்றோரை கவனிப்பது ஒரு  சுமையாகத் தெரிவதால்  அவர்களை முதியோர்  இல்லத்தில் சேர்த்துவிட்டுவிடுகின்றனர் சிலர். அந்தப் பெற்றோரது மன நிலையை எவரும் சிந்தித்துப் பார்ப்பதில்லை.  இப்படி பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்டு  தவிக்கும் முதியோர்களுக்கு வாழ்க்கையில் என்ன நம்பிக்கைதான் இருக்கும்? எதிர்காலமே சூனியமாகி ஏதோ வாழ்கிறோம் என்று வாழ்கிறார்கள். 

தினசரி பத்திரிகையில் சமீபத்தில் படித்தச் செய்தி ஒன்று முதியோர்களது  நிலையை விளக்குவதாக உள்ளது. "பிள்ளைகள் கவனிக்காததால் பெற்றோர் தற்கொலை. எங்களது இறுதிச் சடங்கை எங்களது பிள்ளைகள் செய்யக்கூடாது எனக் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்த பரிதாபம் ! " என்று கூறியது அந்தச் செய்தி.

எனவேதான் வேதத்தின் மத்திய வசனம் கூறுகிறது, "மனுஷனை நம்புவதைப் பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்.(  சங்கீதம் 118 : 8 ) 

பிள்ளைகளாய் இருந்தாலும் மனுஷனான அவர்களை நம்புவதைவிட கர்த்தர்பேரில் பற்றுதலாய் இருப்பது நல்லது. நமது மகனோ மகளோ எப்போதும் நம்மீது ஒரே அளவு பற்றுதலாய்  இருப்பார்கள் என எதிர்பார்க்கக் கூடாது. அளவுக்கு மிஞ்சி அப்படி நம்பிக்கைவைத்தால் அந்த நம்பிக்கை பொய்யாகப் போகும்போது தாங்கமுடியாத சோகத்தைக் கொண்டுவந்து விடுகிறது. ஆனால் நமது தேவன் அப்படி நம்மைக்  கைவிட்டுவிடுபவரல்ல.

"மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்." (  ஏசாயா 54 : 10 )

ஒருவேளை பிள்ளைகளும் உறவினர்களும் நம்மைக் கை விடலாம் . ஆனால் வாக்கு  மாறாத கர்த்தர் அப்படிக் கைவிட்டுவிடுபவரல்ல . எனவேதான் இன்றைய சிந்தனைக்குரிய வசனம் நாம் நமது வயதான காலத்துக்காகவும் தேவனிடம் ஜெபிக்கவேண்டுமென நமக்கு உணர்த்துகிறது. இங்கு சங்கீதக்காரன் முதிர் வயதில் என்னைத்  தள்ளிவிடாமலும், என் பெலன் ஒடுங்கும்போது என்னைக் கைவிடாமலும் இரும் என வேண்டுகிறார்.

எவ்வளவு பலசாலியாக இருந்தாலும் ஒரு வயதுக்குப் பின் பெலன் ஒடுங்கும்போது சிறு பிள்ளைகளைப்போல மாறி அனைத்து காரியங்களுக்கும் பிறரை நம்பித்தான் வாழவேண்டும். 

பிரபல வங்கி ஒன்றின் டயரக்டராக இருந்த ஒருவர் , பகட்டாக காரில் வலம் வந்தவர்,  பிள்ளைகள் எல்லாம் வெளிநாட்டில். வேலைக்காரர்கள் பராமரிப்பில் அவரை விட்டிருந்தனர். அவரைப் பார்க்கச் சென்றிருந்தபோது இயற்கை உபாதைகளைக் கூட கட்டிலிலேயே கழித்து  துர்நாற்றமுடன் அனாதைபோல படுத்திருந்தார். நம்பமுடியாத சோகம்தான் . 

அன்பானவர்களே! இதுபோன்ற மனிதர்களை நீங்களும் பல  வேளைகளில் சந்தித்திருக்கலாம். தேவனை நாம் சார்ந்து கொள்ளவேண்டும் என்பதற்கு இவர்கள் நமக்கு ஒரு எச்சரிப்பு. மட்டுமல்ல, நமது முதிர் வயதுக்காகவும் நாம் ஜெபிக்கவேண்டுமென்பதற்கு நமக்கு ஒரு உதாரணம். எதிர்காலத்துக்கு என சொத்து சேர்த்துவைப்பதைவிட இது  முக்கியமான காரியம். 

நமது முதிய வயது பராமரிப்புக்காகவும் தேவனிடம் நமது ஜெபத்தில் வேண்டுவோம். கர்த்தர் நம்மோடு இருந்து நமது பிள்ளைகள் உறவினர்கள் கண்களில் தயவு கிடைக்கும்படிச் செய்வார்.  

ஆதவன் - ஆகஸ்ட் - 5,  2020 புதன்கிழமை
இன்றைய  வேதாகமச் சிறு செய்தி
 
                                                                      - சகோ. எம். ஜியோ பிரகாஷ் 

"நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?"
(  1 கொரிந்தியர் 3 : 16 )
Know ye not that ye are the temple of God, and that the Spirit of God dwelleth in you?
(  1 Corinthians 3 : 16 )

ஒருமுறைப் பேருந்தில் பயணம் செய்தபோது எனக்கு முன் இருக்கையில் அமர்ந்திருந்த இருவர் சப்தமாக அவர்களுக்குள் பேசிக்கொண்டிருந்தது எனக்கு கேட்டது. அவர்கள் உறவினர் ஒருவரைப்பற்றி தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர். அவரைப்பற்றி  மோசமாக பேசியதுமட்டுமல்லாமல் அடிக்கடி கெட்ட வார்த்தைகளையும் உச்சரித்துக்கொண்டனர். ஆனால் பேருந்து செல்லும் வழியில் தேவாலயங்களைக் கண்டவுடன் பேச்சை நிறுத்தி ஆலயத்தைப்  பார்த்து வணக்கம் செலுத்தினர். நெற்றியில் சிலுவை வரைந்துகொண்டனர். பின் தொடர்ந்து தங்கள் அவலட்சணக் கதைகளைத் தொடர்ந்தனர்.  எனக்கு அவர்களது செயல்பாடு விசித்திரமாய் இருந்தது . இப்படி ஆலயங்களைப் பார்த்து வணங்கும் கிறிஸ்தவர்களையும் , இந்து கோவில்களை பார்த்து வணங்கும் இந்து சகோதரர்களையும் பல முறைப் பார்த்துள்ளேன். 

இப்படி வணங்குவது ஒரு பக்தி செயல்பாடாக மட்டும் இருக்கிறதே தவிர அவர்களது வாழ்க்கையில் அது எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. காரணம் இத்தகைய மனிதர்கள் ஏதோ தொலைவிலிருக்கிற ஆலயத்திலோ, கோவிலிலோ தேவன் இருக்கிறார் என நம்புகின்றனர். ஆனால் வேதம் கூறுகிறது,  "உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார்.(  அப்போஸ்தலருடைய நடபடிகள் 7 : 48 ) அண்ட சராசரங்களையும் படைத்தாளும் உன்னதமான தேவன் நான்கு சுவர்களுக்குள் இருப்பவரல்ல.   

தேவன் மக்களோடு மக்களாக வாழ விரும்புபவர். ஏதேனில் ஆதாம் ஏவாளுடன் பகலின் குளிர்ச்சியான நேரங்களில் உலாவிய தேவன் , அவர்களோடு பேசிய தேவன், இஸ்ரவேல் மக்களது பாளையத்தில் மக்களோடு மக்களாக உலாவியவர். இன்றும் அதுபோல மக்களோடு மக்களாக இணைந்து வாழவே விரும்புகிறார். அவருக்கு ஏற்புடையோராய் வாழ்வோமானால் நாமே அவரது ஆலயமாய் இருப்போம். "ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக்கெடுத்தால், அவனை தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்." (  1 கொரிந்தியர் 3 : 17 )

இன்று கிறிஸ்தவர்கள் என்றுத் தங்களைக் கூறிக்கொள்ளும் பலர் பல்வேறு பாவச் செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர். விபச்சாரம், கற்பழிப்பு, பொய், களவு, லஞ்சம், ஊழல், கொலை, பிறருக்கு எதிரான அவதூறு, மொட்டைக் கடிதம் எழுதி பிறரைக் கெடுப்பது, அநியாய சொத்துச் சண்டைக்காக கோர்ட் வாசலுக்கு அலைவது, தற்பெருமை,  போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டு ஆலயத்துக்கு வந்து முழந்தாழ்ப்படியிட்டு  வணங்கி, பின் தொடர்ந்து அதே செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர். ஒரு மன உறுத்தலோ,தாங்கள் செய்வது தவறு எனும் மனச்சாட்சியோ இவர்களுக்கு இருப்பதில்லை. இதுதான் தேவனது ஆலயத்தைக் கெடுப்பது.    

"அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைப் பண்ணுகிறார்கள், கிரியைகளினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்; அவர்கள் அருவருக்கப்படத்தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும், எந்த நற்கிரியையுஞ்செய்ய ஆகாதவர்களுமாயிருக்கிறார்கள். (  தீத்து 1 : 16 )  

அன்பானவர்களே, வெளிச்செயல்பாடுகள் மனிதர்கள்முன் நம்மை பரிசுத்தவானாகக் காட்டலாம் ஆனால் உள்ளங்களைப் பார்க்கும் தேவனுக்கு முன் நாம் அருவருக்கத்தக்கவர்களாக இருப்போம். தேவனை நமக்குள் இருப்பவராக உணரும்போது மட்டுமே நாம் இதுபோன்ற தேவனுக்கு ஏற்பில்லாத செயல்பாடுகளில் இருந்து விடுபடமுடியும். தேவன் நமது உள்ளத்தில் வந்து அமர்ந்து நமது உடலையே ஆலயமாக மாற்ற விரும்புகிறார். ஆனால் அவர் மனிதனது தனித் தன்மையையும் சுதந்திரத்தையும் மதிப்பதால் நமது அனுமதிக்காகக் காத்திருக்கின்றார். 

"இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்." (  வெளிப்படுத்தின விசேஷம் 3 : 20 )

கதவைத் தட்டும் தேவனது குரலுக்குச் செவி கொடுத்து அவரை உள்ளத்தில் அழைப்போம். ஆண்டவரே நீர் என் பாவங்களை  மன்னித்து, என்னைப்  புதுப்பிறப்பாக மாற்றும். என்று அழைப்போம். தேவன் நமது உள்ளத்தில் வந்து நம்மோடு உணவருந்தும் அனுபவத்தைப் பெறும்போது நாம் அவரது ஆலயமாக மாறுவோம். பழையன எல்லாம் ஒழிந்து எல்லாம் புதிதாகும் .

ஆதவன் - ஆகஸ்ட் - 4,  2020 செவ்வாய்க்கிழமை
இன்றைய  வேதாகமச் சிறு செய்தி

                                                                             - சகோ. எம். ஜியோ பிரகாஷ் 

."....பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்."
(  சகரியா 4 : 6 )

"Not by might, nor by power, but by my spirit, saith the LORD of hosts." (  Zechariah 4 : 6 )

மனிதன் அற்பமான பிறவி. நமது உடல் கூட அற்பமானதுதான். இந்த அற்பமான உடலை வைத்துக்கொண்டு மனிதன் ஆட்டம்போடுகிறான்.  சராசரி மனிதனது  உடல் சூடு 98.6 டிகிரி F. இந்த உடல் சூடு 0.4 டிகிரி அதிகரித்து 99 டிகிரியாகிவிட்டால் நம்மால் எழுந்து நடமாட முடியாது. காய்ச்சல் என்று சோர்ந்து படுத்துவிடுவோம். இவ்வளவுதான் நமது பலம். 

ஆனால் மனிதர்கள் இதனை எண்ணுவதில்லை. தாங்கள் நினைத்தால் எதனையும் சாதிக்கலாம் என எண்ணி இறுமாப்பாய் அலைகிறார்கள். இப்படி இறுமாப்பாய் இருந்த நமது அரசியல் தலைவர்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டதை நாம் கண்கூடாகப் பார்த்துள்ளோம். 

முதல் முதலாக, ஆதியாகம சம்பவங்களில் தேவன் வலிமை மிக்க மனிதர்களது கைக்கு  வலிமை அற்றவர்களை விடுவித்து என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்பதை மனிதர்களுக்குப் புரிய வைத்தார்.  மோசே எனும் ஒற்றை மனிதனைக் கொண்டு பார்வோன் மன்னனின் பெரிய ராணுவத்தைக் கவிழ்த்துப்  போட்டார். 

பார்வோனின் படை வீரர்களும் குதிரைகளும் போர் செய்வதற்குப் பழக்கப்பட்டவை. பல போர்களை சந்தித்து வெற்றிகண்டவை. ஆனால் அந்தச் சேனையின் பலம் பார்வோனுக்கு வெற்றியைக் கொடுக்கவில்லை.  தேவனுடைய ஆவியைப் பெற்று இருந்த மனிதனாகிய மோசேயின் முன் அந்தச் சேனையால் நிற்க முடியவில்லை.  ஆம் பலத்தினாலும் பராக்கிரமத்தினாலும் அல்ல, தேவனுடைய ஆவியினாலே எல்லாம் கூடும் என்பதற்கேற்ப வெற்றி மோசே மூலம் இஸ்ரவேல் மக்களுக்கு கிடைத்தது.

அன்பானவர்களே, எந்தச் சூழ்நிலையிலும் நாம் இதனை மறந்துவிடக் கூடாது. நமக்குவேண்டுமானால் நமது பிரச்சனைகள்  மலைபோலத் தெரியலாம். தேவனிடம் அதனை ஒப்புவித்துவிடும்போது அது அற்பமான பிரச்னையாக மாறி நமக்கு வெற்றி கிடைக்கும். வேலை செய்யும் இடங்களில் பிரச்னை , குடும்பத்தில் பிரச்னை, தொழிலில் பிரச்னை......ஐயோ நான் இதனை எப்படிச் சமாளிக்கப் போகிறேன் எனப் புலம்பிப்  பயப்படவேண்டாம். தேவனுடைய ஆவியினால் நம்மை  விடுவிக்க முடியும்.

அப்போஸ்தலனாகிய பவுல் அடிகள் இதனால்தான் துணித்து கூறுகிறார், "என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு." (  பிலிப்பியர் 4 : 13 ) எந்தச் சூழ்நிலையிலும் வெற்றியும் பலமும் தந்து தேவன் நம்மை நிலை நிறுத்த வல்லவர்.

தேவனுடைய எண்ணங்களுக்கும் மனிதர்களுடைய எண்ணங்களுக்கும் வித்தியாசம் உண்டு மனிதர்கள் பலம்தான் வெற்றிதரும் என எண்ணுகிறார்கள். ஆனால் தேவன் பலவீனமானவைகளையும் அற்பமாய் எண்ணப்படுபவைகளையும் தான் பயன்படுத்துகின்றார். 

மீதியானியர் கைகளுக்கு இஸ்ரவேல் மக்களை விடுவித்தக் கிதியோன் மேலும் ஒரு உதாரணம். மீதியானியர் போரில் வல்லவர்கள். ஆனால் கிதியோனிடம் இருந்த மக்களோ அற்பமான சாதாரண மனிதர்கள். ஆனால் மீதியானியரை எதிர்த்துப் போரிடச் செல்லும்போது தேவன் கிதியோனிடம் போரிடச் செல்லும் மக்களது எண்ணிக்கையைக் குறைக்கச் சொல்லுவதை பார்க்கலாம். உன்னுடன் வரும் மக்கள் மிகுதியாக இருக்கிறார்கள் நீங்கள் வெற்றிபெற்றால் எங்கள்  கை பலம்தான் எங்களுக்கு வெற்றி தந்தது என மக்கள் தேவனுக்கு விரோதமாகப் பேசுவார்கள். எனவே உன்னோடுகூட  போரிட  வரும் உன் மக்களது  எண்ணிக்கையைக்  குறை என்கிறார் தேவன். இறுதியில் 300 பேரைத் தேவன் கிதியோனோடு செல்ல அனுமதித்தார். அந்த 300 பேரைக் கொண்டு கிதியோன் மீதியானியரை வெற்றி கொண்டார். (நியாயாதிபதிகள் -7) எண்ணிக்கை தேவனுக்குப் பெரிதல்ல , பிரச்சனையின் அளவு தேவனுக்குப் பெரிதல்ல.

"ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்." (  1 கொரிந்தியர் 1 : 27 )

ஆம் அன்பானவர்களே, உங்கள் பகுதியில், உங்கள் ஊரில் நீங்கள் பொருளாதாரத்திலோ, பதவியிலோ, பிறரைவிட அற்பமானவர்களாக இருக்கலாம்.  ஆனால் தேவன் உங்களைத் தெரிந்துகொண்டு பயன்படுத்தப் போகிறார். அப்போது உங்களை ஏழனமாய்ப் பார்த்தவர்கள் உங்களைப்  பார்த்து ஆச்சரியத்தால் வாய்பிழப்பார்கள்.

வண்ணத்துப் பூச்சி அற்பமான புழுவாக, அவலட்சணமானக் கூட்டுப் புழுவாக இருந்துதான் அழகிய கண்கவரும் வண்ணத்துப் பூச்சியாக வானில் பலரும் பார்க்கும்படி சிறகடித்துப் பறக்கின்றது. மனம் சோர்ந்துபோக  வேண்டாம். 

ஆம், "என்னுடைய ஆவியினாலேயே ஆகும்"  என்று சேனைகளின் கர்த்தர் உங்களைப் பார்த்துச் சொல்லுகிறார்." 


ஆதவன் - ஆகஸ்ட் - 3,  2020 திங்கள்கிழமை
இன்றைய  வேதாகமச் சிறு செய்தி
                                                                                - சகோ. எம். ஜியோ பிரகாஷ் 

"ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள்." (  சங்கீதம் 65 : 2 )

"O thou that hearest prayer, unto thee shall all flesh come." (  Psalms 65 : 2 )

நமது தேவன் ஜெபத்தைக் கேட்கிற தேவன். இதுவே நம்மை கிறிஸ்தவ விசுவாசத்தில் நிலை நிற்கச் செய்கிறது. நமது தேவன் ஊமையான ஒரு விக்கிரகம் அல்ல. "கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார்." (  சங்கீதம் 72 : 12 )

ரேடியோவை கண்டுபிடித்த மார்கோனி சிறுவயதாய் இருந்தபோது ஒறுநாள் தன்னுடைய தகப்பனார் ஜெபித்துக்  கொண்டிருப்பதை பார்த்து சிரித்துகொண்டு இருந்தார். தகப்பனார் மகனை பார்த்து ஏன் சிரிக்கிறாய் என்று கேட்டார். அதற்கு மார்கோனி, அப்பா... நீங்கள் பரமண்டலங்களில் இருக்கும் எங்கள்பிதாவே என்று ஜெபித்தீர்கள்  அந்த பரமண்டலம் எங்கேஇருக்கிறது? என்று கேட்டார். அதற்கு தந்தை மேலே கை காண்பித்தார்.மேலே பரமண்டலத்தில் இருக்கிற பிதாவுக்குஇங்கு இருந்து நீங்க செய்கிற ஜெபம் எப்படிகேட்கும்? பக்கத்திலிருக்கிற எனக்கே கேட்கமாட்டேங்கிறது என்று  பரியாசமாய் கேட்டார். அதற்கு தந்தை என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் மறுபடியும் முழங்கால் போட்டு, "ஆண்டவரே நீரே என் மகனுக்கு புரியவையும்" என்று ஜெபித்துவிட்டு போய்விட்டார். 

மார்க்கோனி ரேடியோ கண்டுபிடித்தபின் தன்னுடைய சொந்த ஊரிலே நடந்த பாராட்டு விழாவில் பேசும்போது பின்வருமாறு கூறினாராம்:-

"என்னுடைய சிறுவயதிலே என் தந்தையிடம் நான் கேட்ட ஒரு கேள்விக்கு ஆண்டவர் என் வழியாகவே எனக்கு பதில் சொல்லிவிட்டார். எப்படியெனில் நான் கண்டுபிடித்த இந்த ரேடியோவை ரோமில்  வைத்து கேட்கும்போது  முன்னூற்றுஇருபது கி.மீ தொலைவில் இருக்கும் மிலனிலிருந்து ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை எந்த நேரத்தில் ஒளிபரப்பப்படுகிறதோ அதே நேரத்தில் ரோமிலும் கேட்கமுடியும். சாதாரண  ஆறறிவுள்ள மனிதனாகிய நான் கண்டுபிடித்த இந்த ரேடியோவே இப்படிகேட்கும்போது என்னை படைத்த ஆண்டவர் ஜெபத்தைக் கேட்கமாட்டாரா? நிச்சயமாகக் கேட்பார். என் தகப்பன் செய்த ஜெபத்தைக் கேட்டு என்னைத்  தன்னை அறியவைத்தாரே?   

தேவனோடு நாம் நெருங்கிய ஒரு உறவு வைத்திருந்தோமானால் அவர் நமது ஜெபத்துக்குப் பதில் தருவதை நமது வாழ்வில் அனுதினமும் கண்டு மகிழலாம். 

நான் மார்க்சீய இயக்கத்தில் இருந்து பல்வேறு இடதுசாரி சிந்தனை நூல்களைப் படித்தவனாதலால் எனது ஆவிக்குரிய வாழ்வின் ஆரம்பக்  காலத்தில் தேவனைக்  குறித்தும் வேதாகம சத்தியங்களைக் குறித்தும் பல்வேறு சந்தேகங்கள் அடிக்கடி எழுவதுண்டு. சில நேரங்களில், "நாம்தான் கடவுள் கடவுள் எனக் கூறிக் குழம்பிப்போயுள்ளோம் ஒன்றுமே கிடையாது " எனப் பழைய எண்ணங்கள் எனக்குள் வருவதுண்டு. ஆனால் நான் அப்படி சந்தேகங்களும் குழப்பங்களும் வரும்போது எந்த மனிதனிடமோ, பாஸ்டர்களிடமோ விளக்கம் கேட்காமல்  வேதாகமத்தை ஒதுக்கி வைத்துவிடுவேன். குறைந்தது ஐந்து முறையாவது இப்படி நடந்துள்ளது. எனக்கு இந்த குழப்பத்துக்கு "நீர் பதில் தரும்வரை நான் இந்த வேதாகமத்தைப் படிக்கமாட்டேன்." என வைராக்கியமாக இருப்பேன். ஆனால் இரண்டு நாட்கள்கூட அப்படி தொடர முடியாதவாறு தேவன் எனக்குப் பதில் தருவார். 

பல்வேறு சிக்கலான குழப்பமான சந்தேகங்கள். ஆனால் தேவன் அனைத்து சந்தேகங்களுக்கும் குழப்பங்களுக்கும் பதில் தந்தார். 18.11.1993 அன்று தேவனை எனது வாழ்வில் அறிந்தேன். இந்த 27 ஆண்டுகளாக தேவன் என்னை வழிநடத்துவதைஉணர்ந்து வருகிறேன். 

அன்பானவர்களே! தேவனை விட்டு எந்த சூழ்நிலையிலும் நான் பிரிந்திடக் கூடாது எனும் எண்ணம் உண்மையாகவே உங்கள் மனதில் இருந்தால் தேவன்  கைவிடமாட்டார். நம்முடைய ஆண்டவர் ஜெபத்தை  கவனித்து கேட்கிறவர் என்பதில் நிச்சயம் கொண்டவர்களாக இருப்போம்! வெறும் உலக காரியங்களுக்காக அவரைத் தேடாமல் அவருக்காக அவரைத் தேடுவோம். தேவன்தாமே நம்மைத் தொடர்ந்து வழிநடத்துவாராக. 

தொடர்புக்கு :-                                 
சகோ.எம்.ஜியோ பிரகாஷ்  96889 33712
Website - www.aathavanmonthly.blogspot.com


ஆதவன் - ஆகஸ்ட் - 2,  2020 ஞாயிற்றுக்கிழமை
இன்றைய  வேதாகமச் சிறு செய்தி
🎚️                                              - சகோ. எம். ஜியோ பிரகாஷ் 

"ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை."
(  கலாத்தியர் 5 : 22, 23 )

 "But the fruit of the Spirit is love, joy, peace, long suffering, gentleness, goodness, faith, Meekness, temperance: against such there is no law." (  Galatians 5 : 22, 23 )

ஒருமுறை ஹோட்டல் ஒன்றில் மாலை உணவருந்த சென்றிருந்தபோது ஒரு கிறிஸ்தவ ஊழியரும் தனது குடும்பத்துடன் வந்திருந்தார். "பேமிலி ரூம்" என தனியே குறிக்கப்பட்டிருந்த அந்த அறையினுள் பலர் குடும்பம் குடும்பமாக அமர்ந்திருந்தனர். ஊழியர் ஆர்டர் செய்த உணவுப் பொருட்கள் வந்ததும்  அவர் எல்லோரும் பார்த்திருக்க ஜெபம் செய்யத் துவங்கிவிட்டார். அதனை எல்லோரும் கவனித்தனர். உணவு பரிமாற அங்கு நின்று கொண்டிருந்த  ஹோட்டல் பணியாளர்களும் கவனித்துக் கொண்டிருந்தனர். ஜெபம் முடிந்தபின் பின் சாப்பிட ஆரம்பித்தனர். நான் அந்த ஊழியரைக் கவனித்துக்கொண்டிருந்தேன்.  அந்த  ஊழியர்  உணவு பரிமாறக்கூடிய பணியாளர்களிடம் கடுகடுப்பாகவே பேசிக்கொண்டிருந்தார். நானும் இந்த ஊழியர் இப்படி சப்தம்போட்டுக் கொண்டிருக்கிறாரே எண்ணிக்கொண்டிருந்தேன்.

ஒருகட்டத்தில் திடீரென்று பெரிய சத்தம் கேட்டு சாப்பிட்டுக்கொண்டிருந்த அனைவரும் திடுக்கிட்டோம். அந்த ஊழியர் தனது ஜிப்பாவின் கையைச் சுருட்டிவைத்துக்கொண்டு எழுந்துநின்று ஒரு ஹோட்டல் பணியாளரை அடிப்பதற்குப் பாய்வதுபோல நின்றுகொண்டு  இருந்தார். பெரிய சத்தத்தில் திட்டிக்கொண்டிருந்தார். காரணம், அந்தப் பணியாளர் சாம்பாரை ஊற்றியபோது கவனக்குறைவாக சிறிது சாம்பார் ஊழியரது ஆடையில் பட்டுவிட்டது.  பிறகு அங்கு பணியிலிருந்த மேலாளர் வந்து சமாதானப் படுத்தினார்.

பல மதங்களிலுள்ள மக்களும் அங்கு இருந்தோம். இந்த ஊழியர் முதலில் ஜெபிக்காமல் சாப்பிட்டிருந்தால்கூட யாருக்கும் இவரை யார் என்று தெரிந்திருக்காது. முதலில் ஜெபித்துத் தன்னை ஒரு கிறிஸ்தவன் என்றுக் காண்பித்து தனது சாட்சியற்ற செயலால் மற்றவர்கள் முன் கிறிஸ்துவை அவமானப்படுத்திவிட்டார் இவர். !

ஒரு ஆவிக்குரிய மனிதன் என்பது நமது வெள்ளை ஆடையிலோ, ஜிப்பாவிலோ அல்ல, நமது சாட்சியுள்ள செயல்களில் விளங்கவேண்டும். இந்த சாட்சியுள்ள குணங்களையே கனிகள் என்று  வேதம் கூறுகிறது. நல்ல மரம் நல்ல கனிகளைக் கொடுக்கும், கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும்...கனிகளால் மரத்தை அறிவர் என்று இயேசு கிறிஸ்து கூறவில்லையா?.

உள்ளான மனிதனில் மாற்றம் வராமல், வெளி அலங்காரங்களும், ஆவிக்குரிய மனிதன் என நம்மைக் காண்பிக்க நாம் எடுக்கும் முயற்சிகளும் தோல்வியாகவே முடியும். நல்ல குணம் என்பது இயற்கையாக வெளிவரும். அதற்கு முயற்சிகள் தேவையில்லை. நான் மேலே குறிப்பிட்ட ஊழியரைவிட அமைதியாக சாந்தமாக செயல்படும் கிறிஸ்துவை அறியாத மக்கள் பலரை நான் பார்த்திருக்கிறேன்.

நான் இடதுசாரி ஈடுபாட்டாளனாக இருந்தபோது பல கம்யூனிஸ்ட் இயக்க நண்பர்களுடன் பழகியிருக்கிறேன். உண்மையிலேயே அவர்களில் பலர் நான் மேலே குறிப்பிட்ட ஊழியரைவிட நூறு சதம் நல்லவர்கள், அமைதியானவர்கள். குறிப்பாக அவர்கள் ஹோட்டல் பணியாளர் போன்ற இம்மாதிரியான அடித்தட்டு பணியாளர்களிடம் இன்னும் அதிக அன்போடு செயல்படுவார்கள்.

அன்பானவர்களே ! நமது வாழ்க்கையே சுவிசேஷ அறிவிப்பு. பக்கம் பக்கமாக எழுதுவதாலேயோ,  நீண்ட சொற்பொழிவுகளை கவர்ச்சியான முறையில் செய்வதாலேயே கிறிஸ்துவை அறிவிக்க முடியாது. இன்று கிறிஸ்தவ ஊழியர்களைவிட மக்களைக் கவரக்கூடிய முறையில் பேசக்கூடிய அரசியல்வாதிகள் பலர் நமது நாட்டில் உள்ளனர்.

ஆவிக்குரிய மனிதன் என்பது நமது செயல்களால் மக்களுக்குத் தெரிய  வேண்டும்.  உதாரணமாக 50 பேர் பணிபுரியும் இடத்தில இருக்கிறீர்களா ? நீங்கள் ஆவிக்குரிய மனிதனானால் உங்கள் குணம் அந்த 50 பேரிலிருந்து வேறுபட்டுத் தெரியவேண்டும்.

"ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும். (  எபேசியர் 5 : 9 )"

கனி நிறைந்த ஒரு வாழ்க்கை வாழ தேவனிடம் நம்மை ஒப்படைத்து ஜெபிப்போம். நமது கனிகளைக் கொண்டு பிறரை ஆதாயமாக்கிக்கொள்வோம் !

ஆதவன் - ஆகஸ்ட் - 1,  2020 சனிக்கிழமை
இன்றைய  வேதாகமச் சிறு செய்தி

                                                                    - சகோ. எம். ஜியோ பிரகாஷ் 

"சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக் குறித்தும் மேன்மைபாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம்."
(  சங்கீதம் 20 : 7 )

"Some trust in chariots, and some in horses: but we will remember the name of the LORD our God." (  Psalms 20 : 7 )

வேதாகமம் எழுதப்பட்டக் காலங்களில் இப்போதுள்ளதுபோல வாகனங்கள் கிடையாது. போக்குவரத்துக்கு  மிருகங்களையே அவர்கள் நம்பி இருந்தனர். ஏழைகள் வசதி குறைந்தவர்கள் கழுதைகளைப் பயன்படுத்தினர். கொஞ்சம் வசதி படைத்தவர்கள் ஒட்டகங்களையும், குதிரைகளையும் பயன்படுத்தினர். பிரபுக்களும் அரச குடும்பத்தினரும் ரதங்களைப் பயன்படுத்தினர். இப்போது சொந்தக் கார் வைத்திருப்பவர்களைப்  போல குதிரைகளையும் ரதங்களையும் வைத்திருப்பவர்கள் இருந்தனர். வசதி படைத்தவர்கள் சிலரிடம் ஒன்றுக்கு மேற்பட்டக் குதிரைகளும் ரதங்களும் இருந்தன. அது அவர்களுக்குப் பெருமைக்குரிய காரியமாக இருந்தது.

தேவனோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த தாவீது ராஜா இதனைக் கண்டதால் இப்படிக் கூறுகின்றார். நீங்கள் உங்களது செல்வச் சிறப்புகளை எண்ணிப் பெருமை பாராட்டுங்கள், நாங்களோ தேவனை அறிந்திருப்பதை நினைத்தே பெருமைப்படுவோம்.

தேவனை அறியும் அனுபவம் மிக உன்னதமான அனுபவம். அது வெறும் ஜெபத்தினாலோ, வேதம் படிப்பதாலோ, ஆலயங்களுக்குத் தவறாமல் செல்வதாலோ, ஜெபக் கூட்டங்களில் கலந்து கொள்வதாலேயோ கிடைத்திடாது. ஒருவர் வேதாகமக் கல்லூரியில் பல ஆண்டுகள் படித்துக் குருவாக ஆகிவிட்டதால் அவர் தேவனை அறியும் அறிவினைப் பெற முடியாது. அவர்கள் தேவனைப் பற்றி வேண்டுமானால் அறியலாம்.

தேவனை அறிவதற்கும் தேவனைப்  பற்றி அறிவதற்கும் வித்தியாசம் உண்டு. இதனை சிறு உதாரணம் மூலம் விளக்கலாம். கண் பார்வையற்ற மனிதர்கள் நிறங்களின்  பல்வேறு பெயர்களை அறிந்திருக்கலாம். சிகப்பு, நீலம், மஞ்சள், கருப்பு என நிறங்களின்  பெயர்களை மட்டும்  சொல்லலாம். ஆனால் அது நிறத்தைப் பற்றி அறிவது மட்டுமே. பல்வேறு  நிறங்களையும் அவற்றின் அழகின் மகிமையையும்  அறிய ஒரு கண் பார்வை கொண்ட மனிதனுக்கே முடியும். இதுவே நிறங்களை அறிவது. அதாவது கண் பார்வை இல்லாத மனிதர்கள் நிறத்தைப் பற்றி அறிந்துள்ளனரே தவிர நிறத்தை அறியவில்லை. இதுபோலவே தேவனை அறிவதும் தேவனைப்  பற்றி அறிவதும்.

வேதாகமம் முழுவதும் படித்துப் பார்த்தால் அனைத்து இடங்களிலுமே "தேவனை அறியும் அறிவு" எனும் வார்த்தைகள் பயன்படுத்தப் பட்டிருக்குமே தவிர "தேவனைப் பற்றி அறியும் அறிவு" என்று குறிப்பிடப்பட்டிருக்காது.

அன்பானவர்களே ! நாம் ஒருவேளை வசதி வாய்ப்புக்கள் இல்லாத நிலையில் இருக்கலாம். ஆனால், நமது பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிச்சயம் உடையவர்களாகி ,  மீட்பின் அனுபவம் பெற்றிருந்தோமானால் அந்தத் தேவனை அறியும் அறிவு,  செல்வங்கள் தரும் மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியை நமக்குக் கொண்டு வரும். எனவேதான் தாவீது கூறுகிறார், " அவர்களுக்குத் தானியமும் திராட்சரசமும் பெருகியிருக்கிற காலத்தின் சந்தோஷத்தைப் பார்க்கிலும், அதிக சந்தோஷத்தை என் இருதயத்தில் தந்தீர்." (  சங்கீதம் 4 : 7 )

ஆம், மீட்பு அனுபவத்தைப் பெற்றிருப்பவர்கள் உலக செல்வதில் குறைவாக இருந்தாலும் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள். ஆனால் தங்களிடம் அதிக பொருள் இருப்பதால் பெருமை அடைந்து தேவ வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியாமல் வாழ்வோர் பரிதபிக்கத்தக்கவர்கள்.  எனவேதான் ஏசாயா தீர்க்கதரிசி,

"சகாயமடையும்படி இஸ்ரவேலுடைய பரிசுத்தரை நோக்காமலும், கர்த்தரைத் தேடாமலும், எகிப்துக்குப்போய், குதிரைகள்மேல் நம்பிக்கைவைத்து, இரதங்கள் அநேமாயிருப்பதினால் அவைகளை நாடி, குதிரைவீரர் மகா பெலசாலிகளாயிருப்பதினால் அவர்களை நம்பிக்கொண்டிருக்கிறவர்களுக்கு ஐயோ!" (  ஏசாயா 31 : 1 ) என்று குறிப்பிடுகிறார். இங்கு எகிப்து என்பது பாவ வாழ்க்கையைக் குறிக்கிறது.

அன்பானவர்களே, எகிப்து எனும் பாவ வாழ்க்கையை விட்டு இஸ்ரவேலின் பரிசுத்தரான கர்த்தரை நோக்கிப் பார்ப்போம். நமது பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுவோம். தேவன் தன்னை அறியும் அந்த உன்னத  அனுபவத்தை நமக்குத் தருவார். நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு தேவனை அறியும் அறிவில் வளர்வோம்.  

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்