இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Saturday, October 09, 2021

இடுக்கமான வழியில் நுழைவோம்

 

                                              - சகோ. எம். ஜியோ பிரகாஷ் 

 

"நாங்கள் மனுஷருக்கல்ல, எங்கள் இருதயங்களைச் சோதித்தறிகிற தேவனுக்கே பிரியமுண்டாகப் பேசுகிறோம்' (1 தெசலோனிக்கேயர் -2;4)

இந்த வசனம் இன்றைய ஊழியர்களை நம் கண்முன் நிறுத்துகிறது. இன்று பிரபலமான ஊழியர்கள் மற்றும் கன்வென்சன் பிரசங்கிகள் யாரை பிரியப்படுத்தப் போதிக்கின்றார்கள்தேவனுடைய வார்த்தைகளைப் பிரசங்கிப்பதைவிட தங்களை, தங்கள் மகிமையை பிரசங்கிக்கும் போதகர்களே அதிகம். இவர்களது கூட்டங்களில் ஆசீர்வாத மழை பொங்கிப் பொழிவதைக் காணலாம். "கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கிறார், இன்று முதல் நீ அசீர்வாதமாக இருப்பாய்..." என அலறுவதும் ஆசீர்வாத உபதேசங்களும் இன்றைய கிறிஸ்தவக் கூட்டங்களில் நிரம்பி வழிவதைக் காணலாம்

வியாபாரிகள் ஆசீர்வாத கூடுகைகள், திரைப்பட நடிகர்கள் ஆசீர்வாதக் கூடுகைகள் என காணிக்கைகள் அதிகம் அளிக்கக்கூடிய மக்களைக் குறிவைத்து  திட்டமிட்டு   ஆசீர்வாத  ஜெபக் கூட்டங்கள்  அமர்க்களப்படுகின்றன.   

பொதுவாக மனிதர்கள் தங்கள் குறைகளை, குற்றங்களை பிறர் சுட்டிக்காட்டுவதை விரும்புவதில்லை. மாறாக அவர்களுக்குச் சாதகமாகப்  பேசினால் ரசிப்பார்கள். எனவே, பாவ வழிகளை விட்டு மனம் திரும்புவதை போதிக்காமல் ஆசீர்வாதங்களையே இந்த ஊழியர்கள்  போதிக்கின்றனர். மேலும்  எல்லோருக்கும்  வாழ்க்கையில்    பிரச்சனைகள்    பலப்  பிரச்சனைகள்        இருக்கும்.   இந்தப்  போதகர்கள்  மனோதத்துவ முறையில் அவர்களுக்கு  ஆறுதல்   அளிக்க  முயலுகிறார்கள்.  

ஆனால் தேவன் கூறும் ஆசீர்வாத முறை இதுவல்ல. இயேசு கிறிஸ்து தனது ஊழியத்தைத் தொடங்கியது குறித்து மத்தேயு நற்செய்தி கூறுகிறது, "அதுமுதல் இயேசு " மனம்திரும்புங்கள், பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது என்று பிரசிங்கிக்கத் துவங்கினார்" (மத்தேயு - 4:17). மனம்திரும்புதலே ஆசீர்வாதத்தின் முதல் படிஆனால் அதனைப் போதித்தால் தங்களது வரும்படி பாதிக்கும் என இந்தப் போதகர்கள் நினைப்பதே அவர்கள் பாவ மன்னிப்பைக் குறித்து பேசாததற்குக் காரணம்

இந்தப் போதகர்கள் தாங்கள் சரியாக போதிப்பதுபோன்ற ஒரு மாயத்  தோற்றத்தை உருவாக்கிட ஜெபியுங்கள், வேதம் வாசியுங்கள், உபவாசியுங்கள் என்று அறிவுறுத்துவார்கள். இவை பார்வைக்குச் சரிபோலத் தெரியும். ஆனால் ஒருவன் மனம் திரும்பாமல் இருந்துகொண்டும் இப்படிப்பட்டச் செயல் பாடுகளைச் செய்யலாம்.  

"மனந்திரும்புங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; சாகிறவனுடைய சாவை நான் விரும்புகிறதில்லை என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்." (  எசேக்கியேல் 18 : 32 )

மனம்திரும்பாமல் செத்து நரகத்துக்குச் செல்லக்கூடிய மக்களைப்  பற்றியக் கவலையே  இல்லாமல் "அதிசயம் ...அற்புதம்என மக்களை மயக்கி தங்களது வயிற்றுப பிழைப்பை தேடும் போதகர்களை நோக்கி பேதுரு கூறுகின்றார்:-  ஒருவன் போதித்தால் தேவனுடைய வாக்கியங்களின்படி போதிக்கக்கடவன் " (1 பேதுரு - 4:11)

என் மேய்ச்சலின் ஆடுகளைக் கெடுத்துச் சிதறடிக்கிற மேய்ப்பர்களுக்கு ஐயோ! என்று கர்த்தர் சொல்லுகிறார். (  எரேமியா 23 : 1 )

"Woe be unto the pastors that destroy and scatter the sheep of my pasture! saith the LORD." (  Jeremiah 23 : 1 )

இயேசு கிறிஸ்து உலக ஆசீர்வாதங்களைத் தருவதற்கு இந்த உலகத்தில் மனிதனாக வரவில்லை. மனிதர்களது பாவத்துக்குக் கழுவாயாக தனது உயிரைக்  கொடுக்கவும் மக்களை பாவத்திலிருந்து இரட்சித்து  நித்திய ஜீவனுக்கு நேராக நடத்தவுமே  வந்தார். அப்போஸ்தலரான யோவான் சுவிசேஷம் எழுதப்பட்ட நோக்கத்தைக் குறிப்பிடும்போது பின்வருமாறு கூறுகின்றார்:

" இயேசு தேவனுடைய குமாரனகிய  கிறிஸ்து என்று  நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே  நித்திய ஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப் பட்டிருக்கின்றன."  (யோவான் - 20:31) 

ஆம், நித்திய ஜீவனைப் பெறுவதற்கே நாம் அழைக்கப்பட்டுள்ளோம். நித்திய ஜீவனை நாம் பெறுவதற்கு கிறிஸ்துவின்மேல் நாம் கொள்ளும் விசுவாசமே முக்கியம். அதுவே நமது வாழ்வின் குறிக்கோளாக இருக்காவேண்டும்.  

கிறிஸ்துவின்மேல் கொள்ளும் விசுவாச வாழ்வு செழிப்பான உபதேசத்தினால் வருவதல்ல, மாறாக அது உபத்திரவங்களினாலும், அனுதினம் கிறிஸ்துவுக்காகச் சிலுவை சுமப்பதினாலும் வரும் ஒரு இடுக்கமான வழி. இந்த இடுக்கமான வழியாய் பிரவேசிக்க பலர் முயன்றாலும் அவர்களால் அதனுள் பிரவேசிக்கமுடியாது என்று இயேசு கூறினார். 

"இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள், அநேகர் உட்பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( லுூக்கா 13 : 24 ) காரணம் அப்படி முயலும் பலரும் கிறிஸ்துவினிமித்தம் வரும் சிலுவையினை சுமக்க விரும்பாததால்தான். 

கிறிஸ்துவினிமித்தம் வரும் பாடுகளையும், உபத்திரவங்களையும் சகித்து கிறிஸ்துவின் இரத்தத்தால் வரும் மீட்பு அனுபவத்தைப் பெற்றவர்கள் மட்டுமே இடுக்கமான வழியாய்ப் பரலோகத்தில்  பிரவேசிக்கமுடியும். இதனை நாம் வெளிடுத்தின விசேஷத்தில் வாசிக்கின்றோம்.      "இவர்கள் மிகுந்த உபத்திரவத் திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்." ( வெளிப்படுத்தின விசேஷம் 7 : 14 )


அன்பானவர்களே அதிசய அற்புத ஆசீர்வாதங்களை போதிக்கும் போதகர்களுக்கு மக்கள் கூட்டம் அதிகம் கூடலாம். ஆனால் வேதம் கூறுகிறது, "கேட்டுக்குச் செல்லும் வாசல் விசாலமானது, அதன் வழியே நுழைபவர்களும் அதிகம்". 

கேட்டுக்கான வாசலை விசாலமாகத் திறந்துவிடும் போதகர்களைப் புறக்கணித்து வேதம் கூறும் இடுக்கமான சரியான வழியில் நடப்போம்கிறிஸ்துவின்மேல் மெய்யான அன்புகொண்டு, எனக்கு கிறிஸ்து போதும் என வாழ்வோமெனில் பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவியாகத் துணை நிற்பார். 


Thursday, October 07, 2021

நமது பிரதான ஆசாரியர்

    

                                        - சகோ. எம். ஜியோ பிரகாஷ் 


"ம்முடையபலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்." ( எபிரெயர் 4 : 15 )


"தனக்கு வந்தால்தான் தெரியும் தலைவலியும் காய்ச்சலும்" என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதாவது மற்றவர்களுக்கு அறிவுரைகூறுவதிலும், மற்றவர்கள் செய்யும் செயல் தவறு என நிரூபிப்பதிலும்  தீவிரம் காட்டுபவர்கள்  தங்களுக்கு அதேபோன்ற பிரச்னை வரும்போது தாங்கள் மற்றவர்களை குறைகூறிய  அதே தவறைச் செய்வர்ஆம் சொல்லுவது எல்லோருக்கும் எளிது ஆனால் சொல்லியபடி வாழ்ந்துகாட்டுவதுதான் கடினம்


திருவள்ளுவரும் இதுபற்றிக் கூறும்போது, "சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணஞ் செயல்" (குறள் - 664) என்று கூறியுள்ளார்


நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நாம் பூமியில் வாழ்வதற்கும் , மறுமை இன்பத்தை அடைவதற்கும் பல அறிவுரைகளைக் கூறினார். ஆனால்,  இன்று  பலர்  'இயேசு கிறிஸ்துவின் போதனைகள்படி யாரும் வாழ முடியாது' என்று கூறுகின்றனர். கிறிஸ்தவ ஊழியர்களில் சிலர்கூட இப்படிக் கூறுவதுண்டு. ஆனால் ஓன்று நாம் கவனிக்கவேண்டும்,  இயேசு கிறிஸ்து வெறும் போதனை செய்ததோடு நிற்கவில்லை, தனது போதனையின்படி வாழ்ந்து நமக்கு முன்மாதிரி காட்டியுள்ளார். அதனையே எபிரெய நிருப ஆசிரியர், " எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்" என்று குறிப்பிட்டுகின்றார்


எந்த ஒரு தகப்பனோ தாயோ தங்களது இரெண்டு வயது குழந்தையை ஐந்து இட்லி சாப்பிட வற்புறுத்துவதில்லை. அல்லது ஒரு குடம் தண்ணீரைத் தெருநல்லியில் போய் பிடித்துவரும்படிக் கூறுவதில்லை. காரணம் அவர்களுக்கு தங்களது குழந்தையால் எது முடியும் அல்லது முடியாது என்று தெரியும். இதுபோலவே, தேவனுக்கும் நம்மால் எது முடியும் எது முடியாது என்று தெரியும். முடியாத எதனையும் இயேசு கிறிஸ்து போதிக்கவில்லை. 


நாம் மேலே பார்த்த வசனத்தில், எல்லா விதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும் என்று கூறும்போது, நமக்கு இன்று உலகினில் வரக்கூடிய அனைத்து வித சோதனைகளும் அவருக்கும் வந்தன  என்று பொருள். பண ஆசையினால் விழக்கூடிய சோதனை, பதவி ஆசையில் விழக்கூடிய வாய்ப்பு, இச்சையில் அகப்படும் வாய்ப்பு போன்ற சோதனைகள் அவருக்கும் வந்தது. ஆனால் அவர்  அவற்றில் அகப்படாமல் பாவமில்லாதவராய் இருந்தார். அதனால்தான் அவரால் நம்மையும் பாவத்திலிருந்து விடுக்க முடியும் என்று இந்த நிருப ஆசிரியர் கூறுகின்றார்.


"ஆதலால், அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்". (  எபிரெயர் 2 : 18 )


ஒரு புதிய காட்டுவழிப் பாதைஅதனைக் கடந்து செல்லவேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்படுகின்றது என்று வைத்துக்கொள்வோம். முன்பின் தெரியாத அந்தக் காட்டில் நமக்கு வழிகாட்ட அங்கு அந்த காட்டைப் பற்றியும் அங்குள்ள வழிகள், நீரோடைகள், பழ மரங்கள் பற்றியும் , ஆபத்தான இடங்கள் பற்றியும் தெரிந்த ஒரு மனிதன் நமக்கு வழிகாட்டக் கிடைத்தால் எப்படி இருக்கும் ? அன்பானவர்களே, அத்தகைய மனிதன் தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.


நாம் வெட்டிப்பேச்சு பேசும் அரசியல்வாதியைப்போல  உள்ள ஒரு தலைவரை நமக்குத் தலைவராகப் பெறவில்லை. நாம் பயணம் செய்யும் பாதையில் அவர் ஏற்கெனவே பயணம் செய்துவிட்டார். எனவே நமக்கு உதவி செய்ய அவரால் முடியும். இதுவே நமது கிறிஸ்தவ நம்பிக்கை.   


"நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல்" என்று இந்த வசனம் கூறுகின்றது. அதாவது நமது பலவீனங்கள் அவருக்குத் தெரியும். அவற்றைக்குறித்து அவரும் பரிதாபப்படுகின்றார். நாம் செய்யவேண்டியது நமது பலவீனங்களை அவரிடம் ஒத்துக்கொண்டு அவரது உதவியை நாடுவதே. 'ஆணடவரே என்னால் இந்தக் குறிப்பிட்டப் பாவ பழக்கத்தை விட முடியவில்லை, ஆண்டவரே பொருளாசை, பதவி ஆசை, இச்சை, பெருமை, பொறாமை என்று நம்மை அடிமைப்படுத்தும் பாவங்களை அவரிடம் அறிக்கையிட்டு அவரது உதவியை நாடுவோம். நமக்கு எல்லா விதத்திலும் உதவிசெய்ய அவர் வல்லவராயிருக்கிறார்


மேலும், அப்போஸ்தலனாகிய யோவான் கூறுகின்றார், "தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கின்றது" (1 யோவான் 3:9). தேவனுடைய வித்து நமக்குள் இருந்தால் அது  நம்மைப் பாவம் செய்ய விடாது. அன்பானவர்களே, உலக ஆசீர்வாதங்களுக்காகவே ஜெபித்துக் கொண்டிருந்தோமானால் ஒருவேளை நாம் ஜெபித்த காரியத்தைப் பெற்றுக்கொள்ளலாம்  ஆனால் பாவ மன்னிப்பைப் பெற்றுக்கொள்ளமுடியாது.


அப்போஸ்தலனாகிய யோவான் கூறுவதுபோல முதலில் பாவ மன்னிப்பைப் பெற்று தேவனால் பிறந்த அனுபவத்தைப் பெறவேண்டும். அப்போது அவரது வித்து நமக்குள் இருக்கும். அது நம்மைப் பாவம் செய்யவிடாது. பாவத்தின்மேல் வெற்றிபெற்ற ஒரு வாழ்க்கையை  வாழ நம்மால் முடியும்.