நாற்பது நாட்கள் நாடகமாடி



நாற்பது நாள் நடிப்பு தேவனை மகிழ்வூட்டுமா?


- எம்.ஜியோ பிரகாஷ் 


கிறிஸ்தவ வாழ்க்கை என்பது வேறு பிரிக்கப்பட்ட வாழ்க்கை முறை. உலகத்தில் நாம் இருந்தாலும் உலகத்தானாக   வாழாமல் நமது வித்தியாச வாழ்க்கை முறையால் நாம் கிறிஸ்துவுக்குச் சான்று பகர்ந்து வாழ வேண்டியது நமது கடமை.

"நீங்கள் இந்த பிரபஞ்சத்துக்கு ஒத்த வேஷம் தரியாமல்..." (ரோமர் - 12:2) என்று வேதம் கூறுகின்றது. ஆனால் கிறிஸ்தவர்களது பல செயல்பாடுகள் பெரும்பாலும் வேடிக்கையானதாக பிற மத சகோதரர்களின் பழக்க வழக்கங்களிலிருந்து காப்பியடிக்கப்பட்ட  செயல்பாடுகளைக் கொண்டதாக இருப்பது வருந்தத்தக்கது.

வேதம் கூறிய மேலான காரியங்களை விட்டுவிட்டு உடலைப் பேணும் அற்பமான செயல்பாடுகளில் ஈடுபட்டு  கிறிஸ்தவர்கள் இன்று லெந்து கால அல்லது தபசு கால கடமையினைச் செய்து முடித்தத் திருப்தி அடைந்து தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்கின்றனர்.

வேதத்தில் இப்படி குறிப்பிட்டக்  காலம் என்று ஒரு காலமோ அல்லது அப்படி குறிப்பிட்ட காலத்தில் மட்டும் சில செயல்களை செய்வது நமது ஆன்மீக முன்னேற்றத்துக்கு ஏற்றது என்றோ கூறப்படவில்லை. கிறிஸ்து நம்மை ஒரு சீடத்துவ வாழ்க்கை வாழவே அழைத்துள்ளார். "நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருப்பதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள். என்கிற புதிதானாக்  கட்டளையை உங்களுக்கு கொடுக்கிறேன். நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருந்தால் அதனால் நீங்கள் என்னுடையச் சீடர்களென்று எல்லோரும் அறிந்துகொள்வார்கள்."  (யோவான் - 13:34)
கிறிஸ்து கூறிய சீடத்துவ வழக்கை பற்றி பலரும் நினைப்பதில்லை . ஆனால் இன்று உலகதோடு ஒத்து வாழ்ந்துகொண்டு உலக மக்கள் செய்யும் அனைத்துச் செயல்களையும் செய்துகொண்டு தபசு காலத்தில் மட்டும் சில பக்தி முயற்சிகளில் ஈடுபட்டு தங்களைத் தாங்களே உத்தம வாழ்க்கை வாழ்பவர்களாக எண்ணி பல கிறிஸ்தவர்கள் நிறைவடைத்து கொள்கின்றனர். 

சரி இந்தச் செயல்பாடுகள் தான் என்ன? இவை வேத அடிப்படையிலானவை தானா? சிந்தித்துப் பார்ப்போம் 

1. கிறிஸ்துவின் பாடுகளை எண்ணி கண்ணீர்விட்டு அழுவது  / புலம்புவது 

கிறிஸ்து தனது பாடுகளை எண்ணி மக்கள் அழுது புலம்புவதை விரும் பியதில்லை. கிறிஸ்துவின் பாடுகள் நமக்காக அவர் பட்ட  வேதனைகள் எப்போதும் நமக்குள் இருக்கவேண்டியது அவசியம் தான். நமக்காக அவர் நொறுக்கப்பட்டார். ஆனால் அதற்காக இந்த நாற்பது நாளும் அழ வேண்டுமென்று அர்த்தமல்ல. கிறிஸ்து விரும்பும் ஒரு வாழ்க்கையை வாழ்வதே - ஒரு சீடத்துவ வாழ்க்கை வாழ்வதே அவர் விரும்புவது. கிறிஸ்துவின் பாடுகளும் மரணமும் தான் நமக்கு மேலான ஒரு வாழ்க்கைக்கு வழி வகுத்தன. அதற்காக அழ வேண்டியதில்லை. இயேசு கிறிஸ்துவும் சிலுவை சுமந்துசெல்லும்  போது அவருக்குப் பின் அழுது கொண்டுவந்தப் பெண்களை பார்த்து ," எருசலேமின் குமாரத்திகளே நீங்கள் எனக்காக அழாமல் உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்" (லூக்கா - 23:28) என்றுதானே கூறினார்?

2. உணவு கட்டுப்பாடு எனும் எண்ணத்தில் அசைவ உணவுகளை சாப்பிடாமல் இருப்பது 

இதுவும் பிற மத சகோதர்களை பார்த்து வந்தப்பழக்கம்தான். உண்ணும் உணவு ஒருவரைத் தீட்டுப் படுத்தாது. அசைவ உணவு உண்பதோ காய்கறி உணவுகளை உண்பதோ முக்கியமல்ல. நமது உள்ளமும் வாயிலிருந்து வரும் வார்த்தைகளும் தூய்மையானவையாக, பிறரைக் காய படுத்தாதனவாக இருக்க வேண்டியதே முக்கியம். எனவே தான் இயேசு கிறிஸ்துக்கு கூறினார், "வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப் படுத்தாது, வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப் படுத்தும்" (மத்தேயு - 15:11)

மேலும் இயேசு கிறிஸ்து கூறினார், "வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டு வரும். அவைகளே மனுஷனைத் தீட்டுப் படுத்தும். எப்படியெனில் இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலை பாதகங்களும், விபச்சாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டு வரும். இவைகளே மனுஷனைத் தீட்டுப் படுத்தும் ...." (மத்தேயு - 15: 18-20)

அப்போஸ்தலரான பவுல் அடிகள் இதனைத் தெளிவாக   இப்படிக்  கூறுகிறார், " போஜனமானது நம்மை தேவனுக்கு உகந்தவர்களாக்க மாட்டாது. புசிப்பதனால் நமக்கு ஒரு மேன்மையுமல்ல, புசியாதிருப்பதனால் நமக்கு ஒரு குறையுமல்ல" 1கொரி - 8:8)

 ஆம், பவுல் அடிகள் கூறுவதுபோல, "தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினால் வரும் சந்தோஷமுமாயிருக்கிறது" (ரோமர் - 14:17)

அன்பானவர்களே பவுல் அடிகள் கூறும் நீதி, சமாதானம், சந்தோஷம் நமக்கு இருக்கிறதா? அதனை பிறருக்கு நாம் கொடுக்கிறோமா ?

3. திருயாத்திரை என்று ஒரே நாளில் பதினான்கு  கோவில்களை சந்திப்பது

சுற்றுலா போல கோவில்களை சந்திப்பது பலரது வாடிக்கையாக இருக்கிறது.  சந்திக்கும் கோவில்களை பொறுத்து தேவ பெலன் ஒருவருக்கு அதிகம் வந்துவிடுவதில்லை. சுற்றிச் சுற்றி கோவில்களுக்கு அலைவதைவிட ஒரு இடத்திலிருந்து தேவனை வழிபட முடியாதா? பிதாவை எங்கும் தொழுது கொள்ளலாம் என்று இயேசு கிறிஸ்துவே கூறுகின்றார். "நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மட்டுமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளும் காலம் வருகிறது" (யோவான்  4:21) 

தேவனை உண்மையான ஆத்துமாவோடு அன்போடு தொழுதுகொள்ளவேண்டுமே தவிர அலைந்து திரிந்து தொழுதுகொள்ள வேண்டாம். "தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுது கொள்ளவேண்டும்" (யோவான்  4:24) 

மேலும் நமது உடலே தேவன் வாழும் ஆலயமாயிருக்கிறது. நமது உடலை பாவக கறைகள் இல்லாமல் பரிசுத்தமாக வைத்துக் கொள்வதே மெய்யான ஆராதனை

"நீங்கள் உங்கள் சரீரங்களை பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமான ஜீவ பலியாக ஒப்புக் கொடுக்கவேண்டுமென்று தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக் கொள்கிறேன். இதுவே நீங்கள் செய்யத் தக்க புத்தியுள்ள ஆராதனை"  (ரோமர் - 12:1) 

"உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியுமிருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும் நீங்கள் உங்களுடையவர்களல்ல என்றும் அறியீர்களா?" (1 கொரி  - 6:19) 


  4. முகச் சவரம் செய்யாமல் இருப்பது, வெள்ளை உடை அணிவது  
     
இவற்றுக்கும் கிறிஸ்தவ அடிப்படிப் போதனைகளுக்கு ஒரு சம்பந்தமும் இல்லை. இவை பிற மத சகோதரர்களை பார்த்து பின்பற்றக் கூடிய செயல்களே. இவற்றால் எந்த ஆன்மீக பயனும் ஏற்படாது 

அன்பானவர்களே  கிறிஸ்துவின் தியாக அன்பை நினைத்து சில நல்லச் செயல்களை செய்வது நல்லதுதான். ஆனால் அது வெறும் நாற்பது நாட்களுக்கல்ல அனுதினமும் செய்யவேண்டும். 

வேதம் கூறும்  செயல்பாடுகள் கிறிஸ்து கூறியதுபோல அனுதினமும் சிலுவை சுமக்கும் அனுபவமாகும். அதைவிட மேற்கூறியவை எளிதாக இருப்பதால் இவற்றை கடைபிடித்து நாம் உத்தம வாழ்க்கை வாழ்வதாக எண்ணி ஏமாந்து விடக் கூடாது. வேதம் சொல்லாத விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாம் வேதம் கூறும் அறிவுரைகளை பின்பற்ற முயற்சிப்போம். அதுவும் வெறும் நாற்பது நாட்களுக்கல்ல ...நமது ஆயுளுக்கும். 

தேவன் மனிதனல்ல.... அவரை வெறும்   நாற்பது நாட்கள்  நாடகமாடி ஏமாற்றிட முடியாது.  

       


  

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்